Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 26 ஜூலை, 2012

கடையநல்லூர் திராட்சையை காணவில்லையே !

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திராட்சைகள் விளைந்தாலும் தித்திப்பிற்கும், தேன் சுவைக்கும் பெயர் பெற்றது கடையநல்லூர் பகுதியில் விளையும் கருப்பு நிற திராட்சைகள்தான். 

கைத்தறிக்கு பெயர்பெற்ற கடையநல்லூரின் புகழ் இந்த கருப்பு திராட்சைகளினால் மேலும், மேலும் சிறப்புற்றது. 1970ம் ஆண்டில் கடையநல்லூர் பகுதியில் கால்களம் பதித்த இந்த கருப்புநிற பன்னீர் ரக திராட்சை மெல்ல, மெல்ல படிப்படியாக கடையநல்லூர், கிருஷ்ணாபுரம், குமந்தாபுரம், முத்துசாமியாபுரம், சின்னபனையங்குளம், காசிதர்மம், கம்பனேரி என விரிந்து சுமார் ஆயிரம் ஏக்கரில் அமோகமாக விளைச்சலானது. 

நெல், கம்பு, சோளங்களை மட்டுமே பயிர் செய்து போதிய வருவாய் ஈட்ட முடியாமல் திணறி வந்த விவசாயிகளுக்கு திராட்சை விவசாய வரவு மகிழ்ச்சியை தந்ததுடன் அப்பகுதியினுள் சுமார் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பையும், பொருளாதார மேன்மையையும் ஏற்படுத்தியது. 

ஒரு காலகட்டத்தில் இவ்வட்டாரத்தில் விளையும் திராட்சைகள் மாநிலம் விட்டு மாநிலமும், ஏன் மாலத்தீவு, பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. 

இப்படி ஓஹோவென திராட்சை உற்பத்தியில் கொடி கட்டிப்பறந்த கடையநல்லூரில் இன்று அரசு சரியான ஊக்கத்தையும், வேளாண் சலுகைகளையும் கொடுக்காததால், ஆயிரம் ஏக்கரில் பயிரான திராட்சை விவசாயம் இன்று வெறும் 30 ஏக்கரில் கூட சீரான திராட்சை விவசாயம் இன்றியுள்ளது. 

இதுகுறித்து ராமநாதன் என்ற விவசாயி கூறும்போது:- 

வேளாண் இடுபொருட்கள், பூச்சி மருந்து உரம் விலை உயர்வு, கூலி வேலை உயர்வு இதற்கும் மேலாக உற்பத்தி செய்யப்படுகிற திராட்சையை பாதுகாக்க குளிர்சாதன வசதி, போதிய விலையில்லாமை என பல வகையிலும் விவசாயிகள் நசுக்கப்பட்டு வருவதாலும், அரசும் திராட்சை விவசாயிகளிடம் போதிய சலுகைகள் காட்டாததாலும் திராட்சை விவசாயம் பரிதவித்து நிற்கிறது. 

கிலோ பத்து ரூபாய்க்கு கடையநல்லுர் வீதிகளில் கூவி, கூவி விற்கப்பட்ட திராட்சை இன்று கடைகளில் கிலோ ஒன்றுக்கு 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது என்றார். 

காணாமல் போன கடையநல்லூர் திராட்சை உற்பத்தி மீண்டும் உயிர் பெற அரசு கவனம் செலுத்துமா? என்பதே திராட்சை விவசாயிகளின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக