Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 26 ஜூலை, 2012

சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி : மணிமுத்தாறு ,பாபநாசம் அருவிகளுக்கு தடை


புலிகள் சரணாலயம் அமைந்துள்ள இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்ககூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதையடுத்து நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தேசிய விலங்கினமான புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் புலிகள் சரணாலய பகுதியை சுற்றுலா தலமாக பயன்படுத்தகூடாது என சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

இதையடுத்து களக்காடு, முண்டன்துறை புலிகள் காப்பக எல்லையில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவி, காரையார் பாணதீர்த்த அருவி ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும், பாபநாசம் மலையில் படகு சவாரி செய்யவும் வனத்துறை நேற்று முதல் தடை விதித்துள்ளது.

இதேபோல் களக்காடு செங்கல்தேரி, கோதையாறு கன்னிக்கட்டி, கொடமாடி போன்ற இடங்களுக்கும் சுற்றுலா பயணிகள் செல்லக்கூடாது என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் மிகச்சிறந்த சுற்றுலா தலங்களாக திகழும் பாணதீர்த்தம், மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவிகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும். இங்கு சுற்றுலா பயணிகள் எல்லா மாதமும் வருவார்கள். இப்போது அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எனவே சுப்ரீம் கோர்ட்டு இந்த முடிவில் குறிப்பிட்ட சுற்றலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல நிபந்தனைகள் பேரில் அனுமதி வழங்க வேண்டும் என்கின்றனர். 

இதுகுறித்து புலிகள் காப்பக துணை இயக்குனர் சேகர் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையடுத்து புலிகள் காப்பக பகுதியில் அமைந்துள்ள அருவிகள் உள்ளிட்ட சுற்றலா தலங்களுக்கு பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாபநாசம் அணையில் படகு போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் புலிகள் காப்பக பகுதியில் உள்ள காரையாறு சொரிமுத்தையனார் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், காணிக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக