Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 13 ஜூலை, 2012

முஸ்லிம் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படும் கொடுமை, நிரந்தரத் தீர்வு காண பிரச்சினையைக் கையில் எடுக்கிறது முஸ்லிம் லீக்!

பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு! எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக!

தினந்தோறும் பல்வேறு நிகழ்வுகளையும் சமூகப் பிரச்சினைகளையும் கண்டு வரும் நமக்கு சிலவற்றை மாத்திரம் கசப்பாகவே பார்க்க வேண்டியதாக அமைந்துவிடுகிறது. பிள்ளைகளைப் பெற்றெடுத்த பெற்றோர்கள் காணும் கனவுகளும், கனவுகளை நிஜமாக்கப் படும்பாடுகளும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. தன்னுடைய பிள்ளைகள் அவர்களின் வாழ்க்கையில் எல்லா தளங்களிலும் மிளிர வேண்டும்; தரம் உயர்ந்த நிலையில் ஒளிர வேண்டும் எனும் பிள்ளைகள் மீதுள்ள பாசம்தான் காரணம். இது இயற்கையாகவே உருவாகக்கூடிய மனநிலை. அதிலும் பெண் பிள்ளைகள் என்றாலே கொஞ்சம் செல்லம் அதிகம்தான்.

பெண் பிள்ளைகளை நினைத்து பெற்றோர்களுக்கு அடிக்கடி வந்து மறையும் கனவுக் காட்சிகள் உறங்கும்போது மட்டுமல்ல; பகலில் விழித்திருக்கும்போதும் வருவது இயற்கை. அதுதான் அந்த பிள்ளைகளுக்கு செய்து பார்க்க எண்ணிடும் திருமணம் சம்பந்தமான கற்பனை. பெண் பிள்ளைகளுக்கு நல்ல மாப்பிள்ளையும், ஆண் பிள்ளைகளுக்கு நல்ல பெண்ணும் அமைய வேண்டும் என்கிற ஆர்வமும், துடிதுடிப்பும் சதா எண்ண அலைகளில் ஓடிக்கொண்டே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதுதான் சரியும்கூட.

இவர்தான் மாப்பிள்ளை; இவர்தான் பெண் என்று நிச்சயித்த பிறகு ஏதோ ஒரு நாளில் திருமணமும் நடைபெறுகிறது. திருமணத்திற்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் இந்தப் பெற்றோர்கள் எடுக்கும் பெருமுயற்சிகள், 

அவர்களின் தனிப்பட்ட எந்த நோக்கத்திற்கும் அப்படி செயல்பட்டிருக்கமாட்டார்கள். அந்த அளவுக்குப் பெரும் எதிர்பார்ப்போடு நடந்திடும் திருமணங்கள் மகிழ்வோடு நிறைவுறுலதைப் பரவலாகக் காண்கிறோம். காண்கிற நமக்கும் மகிழ்ச்சிதான். சில பேர் சில குடும்பங்களுக்கு எதிராக, சில காழ்ப்புணர்ச்சிகளுக்கு பலியாகி, நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய திருமண நிகழ்ச்சியையே உருக்குலைக்கும் வகையில் காவல்துறை அதிகாரிகளை வரவழைத்து ��பெண்ணுக்கு 18 வயது இன்னும் ஆகவில்லை�� எனக் காரணம் சொல்லி திருமணத்தையே நிறுத்திவிடுகின்றனர். சில சமயங்களில் மாப்பிள்ளையும், மணப் பெண்ணையும் கைது செய்வதுகூட நடைமுறையாக்கப்பட்ட வழக்கமாகிவிட்டது.

இந்த நாட்டில் ஓரு பெண் 18 வயதையும், ஓர் ஆண் 21 வயதையும் அடைந்திருந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும் என்று இந்திய சட்ட விதி கூறுகிறது. அப்படியானால் இந்த வயது வருவதற்குள் திருமணம் நடந்தால் அதனை �குழந்தை திருமணம் எனச் சொல்லி சட்டவிரோதம் என்கிறது காவல்துறை.

இஸ்லாமிய மார்க்க நெறிமுறைகளின்படி ஒரு பெண் பூப்பெய்திவிட்டாலே அதாவது பருவம் அடைந்துவிட்டாலே எவ்வளவு விரைவாக அவளுக்குத் திருமணம் செய்து வைக்க முடியுமோ அந்த அளவுக்கு அவளுடைய திருமணத்தில் கால விரைவும் அதிக கவனமும் செலுத்த வேண்டும் என வழிகாட்டுகிறது இஸ்லாம். இங்கே எந்த வயது வரம்பையும் குறித்துக் காட்டவில்லை. ஒரு பெண் பருவமடைவது என்றால் அது அவளின் வயது 12-ல்கூட நடக்கலாம். அப்படியானால், ஷரீஅத் விதிப்படி வயது பன்னிரெண்டிலேயே திருமணம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது. பொதுவான சட்டமாகிய 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்ற விதி, இந்த உரிமையை நம்முடைய ஷரீஅத் நெறிக்கு நேர் எதிரான சவாலாக அமைகிறது . வாழ்க்கைப் பயணத்தின் ஒழுக்க நிலையில் உச்சபட்ச மாண்பினை எல்லா தளங்களிலும் எடுத்தியம்பும் நிலையில்தான் ஒரு பெண் பருவமடைந்துவிட்டாலே திருமணம் செய்து வைப்பதை துரிதப்படுத்தச் சொல்கிறது இஸ்லாம்.

இந்தக் காலத்தில் பெண்பிள்ளைகள் கல்விச் சாலைகளுக்குச் செல்லுகிற நிலையில் அவர்களின் பள்ளிக்கூடப் படிப்பு, கல்லூரிப் படிப்பு என்று பார்க்கிறபோது பெரும்பாலும் 17, 18 வயதைக் கடந்துதான் திருமணங்கள் நடக்கின்றன. சில குடும்பங்களில் உள்ள சூழ்நிலைகளுக்கேற்ப 14, 15 வயதுகளில்கூட திருமணங்களை நடத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டு விடுகிறது. அது தவறல்ல என்பதால்தான் நமது சமுதாயத்தில் ஆங்காங்கே அத்தகைய திருமணங்கள் நடக்கின்றன. சில காழ்ப்புணர்ச்சிகளினால் சிலர் கொடுக்கும் புகார்களின் அடிப்படையில் காவல் துறையினர் இத்தகைய திருமணங்களைத் தடுத்து நிறுத்துகிறபோது ஏற்படும் அசாதாரண சூழ்நிலை உள்ளங்களை மிகவும் காயப்படுத்திவிடுகிறது.

சென்ற 25.06.2012 அன்று பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பெரியம்மாபாளையம் என்ற ஊரில் திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே காவல் துறையினர் உள்ளே புகுந்து பெண்ணுக்கு 17 வயதுதான் பூர்த்தியாகியிருக்கிறது; எனவே சட்டவிரோதமான இந்த திருமணம் நடக்கக்கூடாது எனச் சொல்லி மாப்பிள்ளையையும், மணப்பெண்ணையும் கைது செய்து திருச்சிக்குக் கொண்டு சென்று மணப்பெண்ணை அரசு பெண்கள் காப்பக முகாமிலும், மாப்பிள்ளையை சிறைச்சாலையிலும் வைத்துவிட்ட கொடுமை நிகழ்ந்திருக்கிறது. மணமக்களின் பெற்றோர்கள் எவ்வளவோ முறையிட்டும் பலனில்லை என்பதால் மாவட்ட கலெக்டரிடம் சென்றுள்ளனர். அவர் ஒரு முஸ்லிம் என்பதால் எளிதாக ஷரீஅத் சட்டப்படியான இந்த திருமணத்தைப் புரிந்து கொண்டு ஆவன செய்வார் என்ற எதிர்பார்ப்பும் சுக்கு நூறாக உடைந்து போனதுதான் வேதனையிலும் வேதனை.

உள்ளங்கள் பதறிய நிலையில், குடும்பங்களின் கவுரவமும் பாதிக்கப்பட்டச் சூழலில் பத்திரிகைகளிலும் இது செய்தியாக வெளிவர, சம்பந்தப்பட்டவர்கள் எந்த அளவுக்கு சோதனையின் உச்சகட்டத்திற்குத் தள்ளப்பட்டார்கள் என உணர முடிகிறது. இந்தச் செய்தியறிந்தவுடன் அந்த மணப்பெண்ணின் தந்தையாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் வெளிப்படுத்திய துயரமிக்க அந்த சம்பவம் எத்தகைய கல்நெஞ்சத்தையும் உருக வைக்கும். மாவட்ட கலெக்டர் ஒரு முஸ்லிமாக இருந்தும் ஷரீஅத்தின் உண்மை வெளிச்சத்தால்கூட உருகவில்லையே என்ற கேள்வியும் எழுகிறது. அதே சமயத்தில் ��சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படித்தானே நான் செயலாற்ற முடியும்�� என்று சொல்கிற அவரின் வாதத்தையும் நாம் புரியாமல் இல்லை. இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இதற்கு என்னதான் தீர்வு?

இந்திய சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். முஸ்லிம் தனியார் சட்டம் என்று நமக்கென தனியே ஷரீஅத் சட்டம் வகுக்கப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. அதன் வரிசையில் ஒரு பெண் பருவமடைந்துவிட்டாலே அவள் திருமணத்திற்குத் தகுதியுடையவள் ஆகிறாள் என்கிற விதியும் சட்டமாக்கப்பட வேண்டும். அதற்கு ஏதுவாக சென்ற 05.06.2012 அன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கின் தீர்ப்பு மிகத் தெளிவாக மறுநாள் செய்தித்தாளில் வெளிவந்திருக்கிறது. அதனைப் பார்க்க �டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கிலப் பத்திரிக்கையை வாங்கிப் படிக்கத் தொடங்கினேன். உயர்நீதிமன்றத் தீர்ப்புச் செய்தியைப் பார்ப்பதற்கு முன்பாக இன்னொரு இதே போன்ற ஒரு திருமணம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட செய்தி வெளியாகியிருந்தது. அதிர்ந்து போனேன். பிறைநெஞ்சே! இதோ அந்தச் செய்தியை அப்படியே இங்கே தருகிறேன். இப்படித்தான் ஆங்காங்கே திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. பெயர்கள் குறிப்பிடப்படாமல் வந்த செய்தி என்பதால் ஒரு தகவலுக்காகத் தருகிறேன். 

இதற்கு நிரந்தரமான தீர்வுதான் என்ன?

இதுபோன்ற சமூகப் பிரச்சினைகள் சட்டவடிவில் எழுந்து நின்றபோதெல்லாம் தீர்வு தேடித் தந்த வரலாறு தாய்ச்சபை முஸ்லிம் லீகிற்கு உண்டு. இப்போது இந்தப் பிரச்சினையையும் தன் கையில் எடுக்கிறது தாய்ச்சபை முஸ்லிம் லீக். இதன் தொடர்ச்சியாக டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பின் விபரத்தோடு அடுத்த இதழில் சந்திக்கிறேன்.

இன்ஷா அல்லாஹ்.

அன்புடன், எம். அப்துல் ரஹ்மான் ஆசிரியர்.



நன்றி :பிறைமேடை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக