Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 13 ஜூலை, 2012

திருப்பமோ திருப்பம் , அதிரடி திருப்பம்

ஆந்திர அரசியலில் திடீர் திருப்பமாக ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். இதையடுத்து மாநில முதல்வராக உள்ள கிரண்குமார்ரெட்டி மாற்றப்பட்டு காங்கிரஸ் ஆதரவுடன் ஜெகன் முதல்வராகலாம் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், பா.ஜ., ஆதரவோடு சங்மாவும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஜூனில் ஆந்திராவில் 18 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனால் ஆந்திராவில் அடுத்த ஆட்சி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தான் என அரசியல் நோக்கர்கள் கணித்தனர்.
இடைத்தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு சிபிஐயால் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெகன் மோகன்ரெட்டி கைது செய்யப்பட்டதால் எழுந்த அனுதாப அலை தான் ஒய்எஸ்ஆர் காங்கிரசின் வெற்றிக்கு காரணம் என்று காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.

இதற்கிடையே ஜெகன்மோகன் ரெட்டியின் தாய் விஜயம்மா பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் மூலம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் நெருங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக இரு கட்சித் தொண்டர்களும் கூறினர். இந்நிலையில் உ.பி., மாநிலத்தில் அரசியலில் இரு துருவங்களாக இருக்கும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் சிபிஐ வழக்குகளுக்காக காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பது, ஒய்எஸ்ஆர் கட்சி நிர்வாகிகளை யோசிக்க வைத்தது.

வீணாக காங்கிரஸ் கட்சியை பகைத்துக் கொள்வதை விட அனுசரித்து சுமூகமாக போவது நல்லது என்று ஜெகன்மோகன் ரெட்டிக்கு நெருக்கமானவர்கள் அவருக்கு யோசனை கூறியுள்ளனர். மேலும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால் காங்கிரசுக்கு ஓரிடம் கூட கிடைக்காது என்பதால் அக் கட்சியினரும் ஜெகன்மோகன்ரெட்டி நெருங்கி வந்தால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று காங்., மேலிடத்தில் தெரிவித்தாக கூறப்படுகிறது. ஜனாதிபதி தேர்தல் இரு கட்சியினருக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. எனவே பிரணாப்புக்கு ஆதரவாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆதரவளிக்கும் முறையான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜெகன்மோகன்ரெட்டிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்ததாவது: ஜூனில் நடந்த இடைத்தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதற்கு அக் கட்சிக்கு கணிசமாக முஸ்லிம்கள் வாக்களித்ததுதான் காரணம். மதச்சார்பற்ற கொள்கையில்தான் ஜெகனுக்கு பற்றும், நம்பிக்கையும் உண்டு. 2014 நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியையோ அல்லது மூன்றாவது அணியையோ தான் ஆதரிக்க வேண்டும் என்று ஜெகன் ஏற்கனவே முடிவெடுத்திருந்தார். ஜனாதிபதி தேர்தல் ஒரு கட்சி சாரா பதவியாகும். எனவே அப்பதவிக்கு பொருத்தமானவராக திகழும் பிரணாப்பை ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ளார் என்றனர்.

ஜனாதிபதி தேர்தலில் பிரணாப்பை ஆதரிப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சியிடம் நெருங்கி வர தான் தயார் என்பதை ஜெகன் சூசகமாக உணர்த்துவார் என்று தெரிகிறது. எனவே ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி மாற்றப்பட்டு காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்களிடையே எழுந்துள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக