Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 11 ஜூலை, 2012

என்ன கொடுமை இது ? எந்த உலகத்தில் வாழ்கிறோம் ?

பெரம்பலூரில் எம்எல்ஏ வீட்டில் தங்க வைத்து படிக்க வைப்பதாக கேரளாவில் இருந்து அழைத்துச் வரப்பட்ட பிளஸ் 1 மாணவி, மர்மமான முறையில் இறந்தார். அவருடைய உடலில் விஷம் இருந்ததால், பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீருமேடு பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி சுசீலா. தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள். இவர்களின் மகள் சத்யா (16). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். வறுமை காரணமாக சத்யாவை படிக்க வைக்க முடியாமல் சந்திரன் சிரமப்பட்டார்.

சில நாட்களுக்கு முன்பு சந்திரனை அணுகிய பீருமேடு பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம், ஹரி கிருஷ்ணன் ஆகியோர், ‘சத்யாவை பெரம்பலூரில் உள்ள ஒரு எம்எல்ஏ வீட்டில் தங்க வைத்து படிக்க வைக்கலாம், படிப்பு, சாப்பாடு செலவை எம்எல்ஏ.வே பார்த்துக் கொள்வார். அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்கிறோம்’ என்று கூறியுள்ளனர். இதை சந்திரனும் நம்பியுள்ளார்.

இதன்படி கடந்த வாரம் சத்யா, சந்திரன், சுசீலாவை பன்னீர் செல்வமும், ஹரி கிருஷ்ணனும் பெரம்பலூருக்கு அழைத்து சென்றுள்ளனர். ஒரு வீட்டுக்கு அழைத்து சென்று இதுதான் எம்எல்ஏ வீடு என்று கூறியுள்ளனர். சந்திரனும், சுசீலாவும் சத்யாவை அந்த வீட்டிலேயே விட்டு விட்டு வந்தனர். அப்போது, சந்திரனுக்கு பன்னீர் செல்வம் ரூ.5 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். பிறகு, சந்திரனும் சுசீலாவும் பீருமேடு திரும்பினர். 2 நாட்களுக்கு பின்னர் சந்திரனுக்கு சத்யா போன் செய்து, தன்னால் இங்கு இருக்க முடியாது என்றும் உடனே வந்து அழைத்துச் செல்லும்படியும் கூறியுள்ளார்.

பின்னர் 2 நாட்களுக்கு பிறகு பெரம்பலூரில் இருந்து போனில் பேசிய ஒருவர், சத்யாவுக்கு உடல்நலம் சரியில்லை என்றும் உடனடியாக புறப்பட்டு வரும்படியும் கூறியுள்ளார். சந்திரன் அங்கே சென்ற போது, சத்யா அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். அவர் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறினர்.
பின்னர் மேல் சிகிச்சைக் காக தேனி மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி 7ம் தேதி சத்யா இறந்தார். அவருடைய உடல் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது.

சத்யாவின் உடல் பீருமேடுக்கு கொண்டு வரப்பட்டது. இறுதி அஞ்சலி செலுத்த வந்த பக்கத்து வீட்டினர், சத்யாவின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த பீருமேடு போலீசார் மற்றும் எம்எல்ஏ பிஜிமோள் ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர். சத்யாவின் உடல் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அதில், அவருடைய உடலில் விஷம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. எனவே, சத்யா பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சத்யாவை அழைத்து சென்ற பன்னீர் செல்வம், ஹரி கிருஷ்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக