Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 31 ஜனவரி, 2013

6 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை : நீதிபதி வேதனை


திண்டுக்கல்லில் இளம் சிறார்களுக்கான நீதிக்குழுமம் நேற்று தொடங்கப்பட்டது. 18 வயதிற்குட்பட்ட சட்டவிரோதச் செயலில் சிக்கியுள்ள இளம் சிறார்கள் இதுவரை மதுரையில் உள்ள இளம் சிறார் நீதி குழுமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வந்தனர். இதைத் தவிர்க்கும் வகையில் தற்போது திண்டுக்கல்லில் இளம் சிறார்களுக்கான நீதிக்குழுமம் தொடங்கப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த தொடக்க விழாவில் சென்னை நீதிமன்ற நீதிபதி ராமசுப்பி ரமணியன் நீதி குழுமத்தைத் திறந்து வைத்தார். மாவட்ட செசன்ஸ் நீதிபதி பாலசுந்தரகுமார் வரவேற்றுப் பேசி னார். கலெக்டர் வெங்கடாசலம், எஸ்.பி. ஜெயச்சந்திரன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.


உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியம் பேசியதாவது: ஒரு குழந்தை தவறு செய்வது அவரது குடும்பச் சூழலின் காரணமாகத்தான். தற்போது தாய், தந்தையர்கள் குழந்தைகளைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். தொலைக்காட்சி, சினிமாக்களை பார்த்து கெட்டுப் போகின்ற சூழல் உள்ளது.

குழந்தைகளை நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டியது பெற்றோரின் கடமை. காலச்சூழலைப் பொறுத் துதான் ஒரு குழந்தையின் வாழ்க்கை மாறுகிறது. புத்துயிர் தருவதில் கட்டாயத்தை உணர்த்துவதுதான் இந்தக் குழுமம். நாட்டின் 1.80 குழந்தைகள் தெருக்குழந்தைகளாக உள்ளனர். 100 மில்லியன் குழந்தைகள் குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர்.

6 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். 6 முதல் 16 வயது வரை உள்ள 2 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆரம்ப கல்வியைக்கூட எட்ட முடியவில்லை. 2.70 கோடி குழந்தைகளில் ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் குழந்தைகள் முதல் பிறந்தநாளைக்கூட கொண்டாட முடிவதில்லை. 5 வயதிற்கு மேல் சுமார் 27 லட்சம் குழந்தைகள் வாழ முடியாமல் இறக்கின்றனர்.

இது வேதனையாக உள்ளது.குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறார்கள் விடியலைத் தேடித்தான் நம்மிடம் வருகிறார்கள். அவர்களுக்கு வாழ்வின் புதிய பரிமாணத்தை தரும் வகையில் காவல்த்துறை, நீதித்துறை, சமூகம் இவை அனைத்தும் ஒன்றிணைந்து உதவ வேண்டும்''என்று பேசினார்.

கிணறை காணவில்லை தாசில்தார் மனைவி புகார்

கரூர் அருகே தனது நிலத்தில் இருந்த கிணறை காணவில்லை என்று ஓய்வு பெற்ற தாசில்தார் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின¢றனர்.ஒரு சினிமா படத்தில் கிணறை காணவில்லை என நடிகர் வடிவேலு போலீசில் புகார் செய்வார். அதேபோன்ற ஒரு சம்பவம் கரூர் அருகே நடந்துள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு: கரூர் மாவட்டம் தாந்தோணிமலையை சேர்ந்தவர் முருகேசன். ஓய்வுபெற்ற தாசில்தார். இவரது மனைவி இந்திராணியின் பூர்வீக நிலம் அருகில் உள்ள மோளபாளையத்தில் உள்ளது. இந்த நிலத்தில் கிணறு இருந்தது. இந்த நிலத்தை இந்திராணியின் பங்காளிகள் அனுபவித்து வந்தனர். நிலம் தொடர்பாக இந்திராணிக்கும், பங்காளிகளுக்கும் பிரச்னை ஏற்பட்டு வழக்கு நடந்து வந்தது. வழக்கில் இந்திராணிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதையடுத்து, அந்த நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ளவும், கிணற்றில் பம்புசெட் அமைக்கவும் முடிவு செய்த இந்திராணி நிலத்தை போய் பார்த்தார். அப்போது அங்கு இருந்த கிணறு தகர்க்கப்பட்டு மூடி கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து பரமத்தி போலீசில் இந்திராணி நேற்று முன்தினம் புகார் செய்தார். அதில் தனது நிலத்தில் இருந்த கிணறை காணவில்லை. இதுபற்றி கேட்டபோது எனது தாய் மாமாவின் மனைவி ராமாத்தாள், அவரது மருமகள் பர்வதம் (47), உறவினர் சண்முகம் (45) ஆகியோர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர் என மனுவில் கூறி இருந்தார். இந்திராணியின் புகார் மனு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஸ்வரூபம் விவகாரம்: முஸ்லீம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை

முஸ்லிம் அமைப்புகளும், கமல்ஹாசன் இருதரப்பும் அமர்ந்து சுமுக உடன்பாடு ஏற்பட பேசிக் கொண்டால் அதற்கு இந்த அரசு உறுதுணையாக இருக்கும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகளூடன் இன்று மாலை 4.30 மணிக்கு பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்றும்,இந்த பேச்சு வார்த்தையில் கமலஹாசன் சகோதரர் சந்திரஹாசன் கலந்து கொள்கிறார் என்று இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.

ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


நெல்லை மாவட்டத்தில் உள்ள இந்து நடுநிலைப்பள்ளி, பொன்னுச்சாமி ஆரம்பப்பள்ளி, அரிஜன் ஆரம்பப்பள்ளி ஆகியவற்றின் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–கடந்த 2011–2012–ம் கல்வி ஆண்டில் எங்களது பள்ளியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அனுமதி கேட்டு மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்திருந்தோம். அந்த சூழ்நிலையில் தமிழக அரசு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களையே நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.இதனால் பணி நியமனத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில் அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

தரமான கல்வி அளிக்காத அரசு உதவி பெறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.பள்ளிகளில் மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையிலும், அதன்பின் மாநில பதிவு மூப்பு அடிப்படையிலும் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். பின்னர் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெறுபவர்களை மட்டுமே நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் முடிவை பின்பற்றியே தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

மனு தள்ளுபடி
மேலும் மாணவர்களுக்கு கட்டாய, தரமான கல்வி அவசியம். எனவே இத்தகைய கல்வியை அவர்களுக்கு வழங்க பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள் தகுதியானவர்களாக இருக்க மாட்டார்கள். எனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெறுபவர்களே கல்வி கற்பிக்க தகுதியானவர்கள்.கடந்த 2010–ம் ஆண்டிற்கு பின் வேலையில் சேர்ந்தவர்கள் 5 வருடங்களுக்குள் தகுதித்தேர்வில் வெற்றி பெற வேண்டும் என அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது. படிப்பை மட்டும் தகுதியாக கொண்டு வேலையில் சேர்க்க முடியாது. தகுந்த திறமையுடன் உள்ளவர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.இவ்வாறு கூறிய நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

விஸ்வரூபம் பிரச்சினையை இருதரப்பும் பேசி தீர்த்துக் கொண்டால் அரசு ஒத்துழைக்கும்: முதல்வர் ஜெயலலிதா


கடந்த சிலநாட்களாக விஸ்வரூபம் படப்பிரச்சினை தமிழகத்தில் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், இப்பிரச்சினை குறித்து சென்னை கோட்டையில் முதலமைச்சர் ஜெயலலிதா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த இரண்டு வாரங்களாக ‘விஸ்வரூபம்’ படம் சம்பந்தமாக பல்வேறு செய்திகள் ஊடகங்கள் வாயிலாக வெளியாகி வருகிறது. ஊடகங்களும், தனிநபர்களும் அரசு மீது பல்வேறு தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர்.

இப்படத்திற்கு 24 முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதுதவிர, தவ்கீத் ஜமாத் அமைப்பும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

விஸ்வரூபம் படம் வெளியாகியிருந்தால் தமிழ்நாட்டில் வன்முறை வெடிக்கும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. அரசு உளவுத்துறையை நம்பியே உள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை கவனிக்க வேண்டிய அரசு கடமையை யாரும் புரிந்து கொள்ளவில்லை. படத்தை தடை செய்ய அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. ஆனால், தமிழக அரசு அதை செய்யவில்லை.

இப்படம் 524 தியேட்டர்களில் வெளியிடுவதாக இருந்தது. இப்படத்திற்காக பாதுகாப்பு அளிப்பதற்கு 56,440 காவலர்கள் தேவை. போதுமான காவலர்கள் இல்லாததால் பாதுகாப்பு அளிப்பது சாத்தியமில்லை. பல்வேறு பணிகளுக்கிடையே காவலர்களால் போதிய பாதுகாப்பு அளிக்க முடியாது.

தனிப்பட்ட காரணங்களுக்காக இப்படத்திற்கு தடை விதித்தது என்பது தவறான கருத்து. ஒரு தனியார் தொலைக்காட்சி நலனுக்காக தடை விதிக்கப்பட்டது என்பதும் வெறும் புகார்தான்.

விஸ்வரூபம் பிரச்சினையில் கருணாநிதியின் குற்றச்சாட்டு அர்த்தமற்றது. ‘விக்ரம்’ பட விவகாரத்தில் எம்.ஜி.ஆருக்கும் நான் கடிதம் ஏதும் எழுதவில்லை. எம்.ஜி.ஆரை தினமும் சந்தித்த நான் எதற்கு கடிதம் கொடுக்க வேண்டும். எனவே, கருணாநிதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

வேட்டி கட்டிய ஒருவர் பிரதமராக வரவேண்டும் என்று கமலஹாசன் சொன்னது அவரது கருத்து சுதந்திரம். கமலஹாசன் பிரதமரை தேர்வு செய்யமுடியாது. இந்த பிரச்சினையால் கமல் மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் இல்லை. கமலஹாசன் பெரிய முதலீட்டில் படம் எடுத்ததற்கு தமிழக அரசு பொறுப்பாகாது.

இப்பிரச்சினையை இருதரப்பும் பேசி இப்பிரச்சினையை தீர்த்துக் கொண்டால் அதற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்.

புதன், 30 ஜனவரி, 2013

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணி இடங்கள், தேர்வு மூலம் நிரப்பப்படும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் பேட்டி


இந்த ஆண்டு அரசு பணியில் எத்தனை காலி இடங்களுக்கு என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும்? என்ற விவரங்கள் அடங்கிய ஆண்டு தேர்வுபட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ், வருடாந்திர தேர்வுபட்டியலை வெளியிட்டார். பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது நட்ராஜ் கூறியதாவது:–

இந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. மூலமாக 10 ஆயிரத்து 105 காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 27 துறைகளில் 37 விதமான பதவிகள் அடங்கும். அதிகபட்ச காலி இடங்கள் எண்ணிக்கை என்று பார்த்தால் குரூப்–2 தேர்வு மூலமாக 2,714 இடங்களும், குரூப்–2 தேர்வு மூலம் 1,300 பணி இடங்களும், 1,500 வி.ஏ.ஓ. இடங்களும், தொழில்நுட்ப பணியைப் பொருத்தவரையில், அதேபோல், 2,790 டாக்டர் பணி இடங்களும் 1,800 கால்நடை மருத்துவர்கள் இடங்களும் நிரப்பப்படும், இந்த காலி இடங்களின் எண்ணிக்கை தோராயமானதுதான். இந்த எண்ணிக்கை அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

தேர்வுமுறை–பாடத்திட்டம் மாற்றம்
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பாக உறுப்பினர் எம்.ஷோபினி தலைமையில் ஒரு கமிட்டியும், பாடத்திட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து உறுப்பினர் கே.லட்சுமணன் தலைமையில் தனியாக ஒரு கமிட்டியும் போடப்பட்டது. இந்த இரு கமிட்டிகளின் பரிந்துரைஅடிப்படையில், தேர்வுமுறையிலும், பாடத்திட்டத்திலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

அதன்படி, இதுவரை குரூப்–2 தேர்வில் இடம்பெற்றிருந்த நகராட்சி கமிஷனர், சார்–பதிவாளர், உதவி வணிகவரி அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி மற்றும் தனித்தேர்வாக நடத்தப்பட்டு வந்த மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) ஆகிய பதவிகள் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்படுகின்றன. முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு கொண்ட குரூப்–1 தேர்வில் விண்ணப்பதாரர் எடுக்கிற மதிப்பெண் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் பதவிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

தனித்தனி தேர்வுகள்
குரூப்–1 தேர்வில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், இதுவரை மெயின் தேர்வுக்கு தேர்வுசெய்யப்படுவோரின் எண்ணிக்கை ஒரு காலி இடத்திற்கு 20 பேர் என்ற விகிதாச்சாரத்தில் இருந்து வந்தது. இனிமேல் ஒரு காலி இடத்திற்கு 50 பேர் என்ற வீதத்தில் மெயின் தேர்வுக்கு தேர்வர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.

இதுவரை நேர்முகத்தேர்வு கொண்ட சார்நிலை பதவிகளும், நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளும் குரூப்–2 தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. இனிமேல், நேர்முகத்தேர்வு கொண்ட பதவிகள் தனியாக நடத்தப்படும். அதில் முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவை இடம்பெற்றிருக்கும். நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு தற்போது இருப்பது போல் ஒரேதேர்வுதான். மெயின் தேர்வு கிடையாது.

வி.ஏ.ஓ. தேர்வில் அதிரடி மாற்றம்
மேலும், வி.ஏ.ஓ. தேர்வில், பணிக்கு தேவையாக கருதப்படும் கிராம நிர்வாகம், வி.ஏ.ஓ. பணிகள் தொடர்பான கேள்விகளும் இடம்பெறும். இதுவரை, மருத்துவம், கால்நடை மருத்துவம், என்ஜினீயர், வேளாண் அதிகாரி போன்ற தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பணிகளுக்கான தேர்வில் சம்பந்தப்பட்ட பாடத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டன.

இனிமேல், கூடுதலாக பொதுஅறிவு, தமிழ் மொழி, தமிழ் கலாசாரம், தமிழ்ப்பண்பாடு தொடர்பான வினாக்களும், பொது விழிப்புத்திறன் (ஆப்டிடியூடு) கேள்விகளும் கூடுதலாக இடம்பெறும்.

நடப்புகால நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம்
பொதுவாகவே, டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் நடப்புகால நிகழ்ச்சிகள் குறித்த கேள்விகள் அவ்வளவாக இடம்பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. இனிமேல், பொதுஅறிவு தாளில் நடப்பு கால நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதற்காக தனியாக வினா வங்கி தயாரிக்கப்படும்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட குரூப்–2 தேர்வின் முடிவு பிப்ரவரி மாதம் 1–ந் தேதி வெளியிடப்பட்டு அதற்கான கவுன்சிலிங் 18–ந் தேதி தொடங்கும்.

இவ்வாறு நட்ராஜ் கூறினார்.

டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் கூறியதாவது;–

இப்போது வெளியிடப்பட்டுள்ள ஆண்டு தேர்வு பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்திலும் உடனடியாக வெளியிடப்படும்.

நகராட்சி கமிஷனர், சார்–பதிவாளர் போன்ற பதவிகள், குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்படுவதால் வயது வரம்பு விதிமுறையால் பாதிப்பு வருமே என்று கேட்கிறீர்கள். அதுபோன்று பாதிப்பு ஏதும் வராத வகையில், புதிதாக சேர்க்கப்பட்ட இந்த குரூப்–2 பதவிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படும். இதுதொடர்பாக தனியாக அறிவிப்பு வெளியிடப்படும். மேலும், மாவட்ட கல்வி அதிகாரி பணி இடம் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்படுவதால் அதற்கு விண்ணப்பிப்பவர்கள் கல்வியியல் தொடர்பாக கூடுதலாக ஒரு தாள் எழுத வேண்டும்.

இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

6,000 புதிய ஆசிரியர்களுக்கு டிசம்பர் சம்பளம் வழங்கப்படவில்லை


புதிதாக பணியில் சேர்ந்த, 21 ஆயிரம் ஆசிரியர்களில், 6,000 ஆசிரியர்களுக்கு, டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்படவில்லை. மத்திய இடைநிலைக் கல்வி திட்ட நிதி - ஆர்.எம்.எஸ்.ஏ.,வில் இருந்து, சம்பளம் வழங்க வேண்டியிருப்பதால், கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஆண்டு, டிச., 13ம் தேதி, இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் என, 21 ஆயிரம் ஆசிரியர்கள், புதிதாக நியமிக்கப்பட்டனர். இவர்களில், 6,000 பட்டதாரி ஆசிரியர் தவிர, மற்ற அனைவருக்கும், டிசம்பர் மாதத்தில், பாதி நாள் சம்பளம் வழங்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும், 6,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும், சம்பளம் வழங்கப்படவில்லை என, ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி வட்டாரத்தினர் கூறுகையில், "இவர்களுக்கு சம்பளம் வழங்க, மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். இதனால், சற்று கால தாமதம் ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாளில், அனைவருக்கும், சம்பளம் வழங்கப்படும்" என்றனர்.