Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 28 ஜனவரி, 2013

இளைஞர்களே நாட்டின் பலம்: பிரதமர் மன்மோகன் சிங்

இளைஞர் சக்தியை சரியான வழியில் பயன்படுத்தினால், நாடு சந்திக்கும் பல்வேறு சவால்களை எளிதாக சமாளிக்கலாம் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

 டில்லியில் என்.சி.சி., மாணவர்களிடையே பேசிய அவர், "இந்தியா இளைஞர்களின் தேசம். இளைஞர்களே நமது நாட்டின் மிகப்பெரிய பலம். முன்னெப்போதும் இல்லாத வகையில், இன்று இளைஞர்கள் தங்களது உரிமைகள் குறித்து நன்றாக அறிந்து வைத்துள்ளனர்.

இன்றைய இளைஞர்களிடையே, நாட்டை சீர்படுத்த வேண்டும் என ஆசை மிக அதிகமாக உள்ளது. இத்தகைய இளைஞர் சக்தியை நாம் முறையாக சரியான வழியில் பயன்படுத்தினால், நாடு இன்று சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளை, சவால்களை எளிதாக சமாளிக்கலாம்" என்று தெரிவித்தார்.

நேதாஜி விஷயத்தில் உண்மைகள் வெளிவரவில்லை


"நேதாஜி மாயமானது குறித்து, விசாரிப்பதற்காக, அமைக்கப்பட்ட குழுக்களுக்கு, மத்திய அரசிடமிருந்து, ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்காததால், இந்த விஷயத்தில், உண்மைகள் வெளிவரவில்லை,'' என, சுதந்திர போராட்ட வீரர், நேதாஜியின் மகள், அனிதா போஸ் கூறியுள்ளார்.இந்திய சுதந்திர போராட்ட வீரர், நேதாஜி சுபாஸ் சந்திர போஸ். நாட்டின் விடுதலைக்காக, இந்திய தேசிய ராணுவம் என்ற படைப் பிரிவை உருவாக்கியவர். 1945, ஆக., 18க்கு பின், நேதாஜியை பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை.

விமான விபத்தில் இறந்து விட்டதாக, ஒரு தரப்பினர் தெரிவித்தனர். ஆனாலும், நேதாஜி எங்கு இருக்கிறார், அவரது நிலை என்ன என்ற விவரங்கள், மர்மமாகவே இருந்தன. இதையடுத்து, இது தொடர்பாக விசாரிப்பதற்காக, 1956, 1970 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில், விசாரணை கமிட்டிகள் அமைக்கப்பட்டன.முதல் இரண்டு விசாரணை கமிட்டிகளும், நேதாஜி, விமான விபத்தில் இறந்து விட்டதாக தெரிவித்தன. மூன்றாவது கமிட்டி, இதுதொடர்பாக, தைவானில் சென்று விசாரணை நடத்தியதாகவும், குறிப்பிட்ட நாளில், அப்படி ஒரு விமான விபத்து எதுவும் நிகழ வில்லை என்றும், தைவான் அரசு தெரிவித்துள்ளதாக கூறியிருந்தது.

இந்நிலையில், நேதாஜியின் மகள், அனிதா போஸ், கூறியுள்ளதாவது:நேதாஜி மாயமானது குறித்து, விசாரிப்பதற்காக, மூன்று விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த மூன்று விசாரணை குழுக்களுக்கும், அப்போது ஆட்சியில் இருந்த, மத்திய அரசுகளால், போதிய அளவில் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கவில்லை என்ற, முடிவுக்கு வர வேண்டியுள்ளது.
அரசின் ஆதரவு கிடைத்திருந்தால், நேதாஜி எங்கு சென்றார், அவருக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றிய, விவரங்கள் தெரிந்திருக்கும்.இவ்வாறு அனிதா போஸ் கூறினார்.

"மிஸ்டு கால்' அழைப்பு கொடுப்பதன் மூலம், 500 கோடி ரூபாய் அளவுக்கு, வர்த்தகம் நடக்கிறது


"மிஸ்டு கால்' என்ற வார்த்தையே பலருக்கு, வேம்பாக கசக்கும். அழைத்து பேசினால், காசு வீணாக போய்விடும் என நினைத்து, "மிஸ்ட் கால்' கொடுத்து, பேசும் சிக்கன நபர்கள் ஏராளமாக உள்ளனர். அத்தகைய நபர்களின் அழைப்புகளை ஏற்க, தயக்கம் காட்டுபவர்களும் உண்டு."மிஸ்டு கால்' கொடுப்பவர்களின் மனநிலையை மட்டுமே அடிப்படையாக வைத்து, இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகள் பலவற்றில், கோடிக்கணக்கில் வர்த்தகம் நடக்கிறது.இந்த புதிய முறை, 2011ம் ஆண்டில் தான் இந்தியாவில் பரவலானது. லோக்பால் மசோதா கோரி, சமூக ஆர்வலர், அன்னா ஹசாரே மேற்கொண்ட போராட்டங்களுக்கு ஆதரவாக, "மிஸ்டு கால்' கொடுக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டனர்.

"மொபைல் போன்களில் முறையான அழைப்பு அளித்தால் பணம் செலவாகும்; "மிஸ்டு கால்' அழைப்புக்கு பணம் செலவாகாது' என்பதால், ஏராளமானோர், "மிஸ்டு கால்' கொடுத்தனர். 6 மாதங்களில், 2.5 கோடி பேர், அன்னா ஹசாரே போராட்டத்திற்கு, "மிஸ்டு கால்' மூலம் ஆதரவு அளித்தனர்.இதையடுத்து, பல முன்னணி நிறுவனங்களும், தங்கள் பொருட்களை விளம்பரபடுத்துவதற்கும், வாடிக்கையாளர்களின் கருத்தை அறியவும், "மிஸ்டு கால்' முறையை பின்பற்ற துவங்கி விட்டன.ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி வாடிக்கையாளர்கள், குறிப்பிட்ட எண்ணுக்கு, "மிஸ்டு கால்' கொடுத்தால், அவர்கள் கணக்கில் உள்ள பணம் விவரம், மொபைல் போனில் கிடைக்கும்.பெரிய பன்னாட்டு நிறுவனங்களான, எச்.யு.எல்., மைக்ரோ சாப்ட் போன்ற நிறுவனங்களும், "மிஸ்ட் கால்' மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்கின்றன.

மராத்தி மொழி நாளிதழ் ஒன்று, தன் சந்தாதாரர்களுக்கு, மொபைல் போன் எண்ணை கொடுத்துள்ளது. அந்த எண்ணுக்கு, "மிஸ்ட் கால்' கொடுத்தால், மாத சந்தா விவரம், மொபைல் போனுக்கு வந்து விடும்.பிரபல சினிமா தியேட்டர் நிறுவனத்துக்கு, "மிஸ்டு கால்' கொடுத்தால், டிக்கெட் விவரம் தெரிய வருகிறது. விமான நிறுவனங்கள், மருந்து பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் என, 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், "மிஸ்ட் கால்' மூலம், வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு வருகின்றன.இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஒரு சில கோடி ரூபாய் அளவிற்கு இருந்த, "மிஸ்டு கால்' வர்த்தகம், இப்போது, 500 கோடி ரூபாயை தாண்டி விட்டதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

திட்ட மேலாண்மை துறை - உலகெங்கிலும் பணி வாய்ப்புகள்


ஒரு பிரமாண்டமான பாலத்தையோ அல்லது விமான நிலையத்தையோ அல்லது கட்டடத்தையோ பார்க்கையில், நமக்கு பிரமிப்பாக தோன்றுவது இயற்கையே. இதுபோன்ற கட்டுமானத் திட்டங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க, திறமையான திட்ட மேலாண்மையே காரணம்.

Project management எனப்படும் இந்த செயல்பாட்டில், ஆதி முதல் அந்தம் வரை திட்டமிடுதல் மட்டுமே இடம் பெறாது.

மாறாக, செயல்படுத்தும்போது எழும் பிரச்சினைகளை சமாளித்தல், குறிப்பிட்ட நேரத்திற்குள் மற்றும் திட்டமிட்ட செலவுக்குள் அந்த வேலையை நிறைவு செய்தல் உள்ளிட்ட அனைத்தையும் யோசித்து தயாராக வேண்டும். பல பெரிய திட்டங்களின் வெற்றிகளும், தோல்விகளும், மேற்கூறிய அம்சங்களை கையாள்வதிலும், தேவையான, கடைசிநேர மாற்றங்களை செய்வதிலும் அடங்கியுள்ளன.

ஒரு முழுநீள தொழில்
திட்ட மேலாண்மை என்பது ஒரு முழுமையான தொழில். இத்தொழிலில், சவால்கள், ஆச்சர்யம் மற்றும் அபரிமித சம்பளம் போன்றவை கிடைக்கின்றன. இத்துறை வல்லுநர்கள், ஐடி/ஐடிஇஎஸ், கட்டுமானம், பொறியியல், நிதி, சுகாதாரம், டெலிகாம், கன்சல்டன்சி மற்றும் உற்பத்தி தொழில்துறை உள்ளிட்ட பலவிதமான துறைகளுக்கு, திட்ட மேலாண்மை நிபுணர்களின் தேவை அதிகளவில் உள்ளது.

உலகெங்கிலும் திட்டமிடப்பட்டுள்ள ஏராளமான பணிகளுக்கு, 2013ம் ஆண்டு வாக்கில், மொத்தம் 60 லட்சம் திட்ட மேலாளர்கள் தேவைப்படுகிறார்கள். அதேசமயம், இவர்களை பணி நியமனம் செய்கையில், இவர்களின் தகுதிகள் மற்றும் திறமைகளும் சோதிக்கப்படுகின்றன.

வணிகப் பள்ளிகளில் கற்பிக்கப்படுதல்
நடைமுறையில், அனைத்து ஐஐஎம்.,களும், திட்ட மேலாண்மை தொடர்பாக, குறிப்பிட்ட வகையான பாடங்களை கற்பிக்கின்றன. பொதுவாக, எம்பிஏ பாடத்திட்டங்களில் இந்த Project Management பாடத்தின் அம்சங்கள் இடம்பெற்றாலும், ஒரு முழு நீள பாடமாக இது கற்பிக்கப்படுவதில்லை.

எனவே, Specialist courses மட்டுமே, இந்தக் குறையை தீர்ப்பனவாக உள்ளன. ஆனால், எம்பிஏ படிப்புகளில் இவை பரவலாக காணப்படுவதில்லை. மேலும், கட்டுமானம், பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளிலும், இப்பாடத்தின் அம்சங்கள் கலந்துள்ளன.

இத்தொழில் நிபுணர்களுக்கான தேவைகள்
தற்போது, சென்னை ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்கள், சிறந்த திட்ட மேலாளர்களை உருவாக்குவதற்கான அம்சங்களை, தனது கல்வித் திட்டத்தில் வைத்துள்ளன. சென்னை ஐஐடி வழங்கும் எம்பிஏ படிப்பில், திட்ட மேலாண்மையானது, மைய பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு, பலவிதமான விருப்பப் பாடங்களால்(electives) அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது, திட்ட மேலாளர்களுக்கான தேவைகள், உலகளவில் அதிகரித்துள்ளதால், அவற்றை ஈடுசெய்ய, மேலாண்மைப் பள்ளிகள், அத்துறை தொடர்பான படிப்புகள் வழங்குவதை உறுதிசெய்து, நிலைமையை சரிசெய்ய வேண்டியுள்ளது.

தகுதி சான்றிதழ்
ப்ராஜெக்ட் பயிற்சி பெறுநர்களுக்கு, அனைத்து வகையான கல்வி மற்றும் திறன் நிலைகளில், ஒரு விரிவான நிலையிலான சான்றிதழை, திட்ட மேலாண்மை கல்வி நிறுவனம் வழங்குகிறது. தற்போது 6 Credential -களை தன்னகத்தே கொண்டிருக்கும் இந்தப் படிப்பு, ஒருவரின் தொழில்ரீதியான அர்ப்பணிப்பு மற்றும் நிபுணத்துவத்தையும் சோதிக்கிறது.

ப்ராஜெக்ட் மேலாளர்களால் மேம்படுத்தப்பட்டு, உங்களின் செயல்பாட்டு திறனின் சிறப்பை, PMI சான்றிதழ் உறுதி செய்கிறது. இந்த செயல்பாடானது, ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் ப்ரொபஷனல்(PMP) மூலமாக விவரிக்கப்படுகிறது. மேலும், தர மேலாண்மை அமைப்புகளுக்காக, ISO 9001:2000 நிலையில், PMP பதிவு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அங்கீகாரம்
PMI Certification, சர்வதேச அளவில் அங்கீகாரமும், மதிப்பும் பெற்றவையாக உள்ளன மற்றும் முறைமைகள், தர நிலைகள் மற்றும் தொழிற்கூடங்கள் ஆகியவற்றுக்கு இடையில், மாற்றத்தக்க வகையில் உள்ளன. இதன்மூலம், திறமையை அளவிடுவதில், இதுவொரு நம்பத்தகுந்த அம்சமாக உள்ளது.

திட்ட மேலாளர்களுக்கான தேவைகள்
இன்றைய உலகின் மொத்த உற்பத்தில் 5ல் 1 பங்கு, அதாவது, 12 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள், திட்டங்களுக்காக செலவிடப்படுகின்றன. எனவே, இத்துறைக்கு, திறன்வாய்ந்த நபர்கள் தேவைப்படுகிறார்கள்.

நாளுக்கு நாள், திட்டப்பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் பெருகி வருவதாலும், அத்துறையிலுள்ள பலபேர் ஓய்வுபெற்று செல்வதாலும், இத்துறைக்கு தேவையான மனிதவளம் அதிகரித்து வருகிறது.

வேலைவாய்ப்பை அதிகரித்தல்
இத்துறையில் வாய்ப்புகள் அதிகரித்துவரும் அதேநேரத்தில், PMI Certification என்பது, உங்களின் தயார்நிலையை மேலும் உறுதிபடுத்துகிறது. மருத்துவம், தொலைதொடர்வு, நிதி, ஐடி மற்றும் கட்டுமானம் ஆகிய பல்வேறான துறைகளில், ஏற்கனவே, PMI Credential பெற்ற 4 லட்சத்து 66 ஆயிரம் பேர் உள்ளனர். இத்துறையில், நுழைய, உங்களுக்கான நேரமிது.

ஏனெனில், காலிப்பணியிடங்கள் மிக அதிகமாக உள்ளன. திட்ட மேலாண்மை திறனைக் கொண்டிருந்து, திட்ட மேலாளர் பணியை நீங்கள் விரும்பவில்லை என்றாலும், நெரிசல் மிகுந்த வேலைவாய்ப்பு சந்தையில், உங்களுக்கு விருப்பமான பணிகளை பெற முடியும் என்பதை மறக்க வேண்டாம்.

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

இரண்டு கைகள் இழந்தவர்களுக்கு எளிதாக ஓட்டும் மூன்று சக்கரவாகனம் என்ஜினீயரிங் மாணவரின் புதிய கண்டுபிடிப்பு


இரண்டு கைகள் இல்லாத மாற்று திறனாளிகள் எளிதாக ஓட்டிச்செல்லும் வகையில் 3 சக்கர மோட்டார் வாகனம் ஒன்றை என்ஜினீயரிங் மாணவர் ஒருவர் கண்டு பிடித்து கோவை கல்லூரி கண்காட்சியில் செயல் விளக்கம் அளித்தார்.

கைகள் இல்லாமல்...
கால்களை இழந்த மாற்று திறனாளிகள் இருகைகளை கொண்டு, 3 சக்கர சைக்கிள், மற்றும் 3 சக்கர மோட்டார் வாகனங்களை இயக்கி வாழ்க்கையில் நம்பிக்கை பயணம் மேற்கொள்கின்றனர். இதுபோன்று ஒரு கையை இழந்தவரும், செயற்கையாக கையை பொருத்திக் கொண்டு வாகனங்களை ஓட்ட முயற்சிப்பது உண்டு.

இதில் பலர் தோற்று போவதால் வேறு வழியில்லாமல் தவிக்கும் நிலை ஏற்படும். இதைவிட இருகைகளையும் இழந்தவர்களால் எதுவுமே முடியால் முடங்கி கிடக்கும் நிலையே ஏற்படுகிறது. ஆகவே ஒரு கையில்லாத, இரு கைகள் இல்லாத மாற்று திறனாளிகள் எளிதாக வாகனத்தில் சென்று, வாழ்க்கை பயணத்தை இன்பமாய் கழிக்க வழியை ஏற்படுத்தி உள்ளார். சென்னையை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தருண்ரெட்டி.

முதலிடம் பெற்றது
இவர் கோவை சி.ஐ.டி தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த தேசிய தொழில்நுட்ப கண்காட்சியில் மெக்கானிக் துறை சார்பில் தங்களுடைய கண்டுபிடிப்பான கைகள் இல்லாமல் இயக்கும் 3 சக்கர மோட்டார் வாகனத்தை காட்டி செயல் விளக்கம் அளித்தார். இதனால் மொத்தம் கலந்து கொண்ட 60 பேரில் இவருடைய கண்டுபிடிப்பு முதல் இடத்தை பிடித்தது. அதற்கு ரொக்க பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு குறித்து தினத்தந்தி நிருபரிடம் அவர்கள் கூறியதாவது:–

மாற்று திறனாளிகள் ஓட்டுகின்ற 3 சக்கர மோட்டார் வாகனத்தை வாங்கி, அதில் கைகள் இல்லாத மாற்று திறனாளிகள் ஓட்டுவதற்காக புதிய மெக்கானிசம் முறையில் வடிவமைத்தேன். இதற்கு ஹேண்ட் ப்ரீ பைக் (கைகள் பிடிக்காமல் ஓட்டுதல்) என்று பெயர். கைகளுக்கு வேலை இல்லாததால் அனைத்தையும் கால்கள் மூலம் இயக்கும்படி செய்துள்ளேன்.

செயின் இணைப்பு
இதில் பிரேக் பிடிப்பது, ஆக்ஸிலேட்டரை அழுத்துவது, இடபுறம், வலபுறம் திருப்பது, நேராக செலுத்துதல் போன்ற செயல்பாடுகளை செயின் இணைப்பு மூலம் செய்யப்பட்டு உள்ளது. இது தவிர ஹெட்லைட், இண்டிகேட்டர், ஹாரன் போன்றவற்றை கால்கள் மூலம் செய்வதற்கு ஏற்ப சுவிட்ச் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. எனக்கு உறுதுணையாக என்னுடன் படிக்கும் முத்துக்குமார் இருந்து வருகிறார்.

அடுத்த கட்டமாக முற்றிலும் தானியங்கி முறையில் இயக்க சென்சார் முறையை பயன்படுத்த உள்ளோம். இதை கண்டுபிடிக்க 10 மாதங்கள் ஆகியது. இதுபோன்ற கண்டுபிடிப்பு மாற்று திறனாளிகளுக்கு புது நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதால் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

அதிக மைலேஜ் கருவி
மேலும் இந்த கண்டுபிடிப்பு குறித்து காப்புரிமை பெற விண்ணப்பித்து உள்ளோம். இதுபோன்ற கண்டுபிடிப்பை உலக அளவில் யாரும் கண்டுபிடிக்க வில்லை. ஆகையால் இந்த மெக்கானிசம் எங்களின் திறமைக்கு கிடைத்த பரிசாக கருதுகிறோம். இந்த கண்டுபிடிப்பை நாங்கள் கோவையில் நடந்த தேசிய தொழில்நுட்ப கண்காட்சியில் சமர்ப்பித்த போது எங்களுக்கு முதல் பரிசு கிடைத்தது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த 3 சக்கர மோட்டார் சைக்கிள் வாகனத்தில் கோவையை சேர்ந்த வர்க்கீஸ், ராஜன் ஆகியோரது கண்டுபிடிப்பான வி.மெர்ஜ் என்ற அதிக மைலேஜ், புகை மாசு குறைக்கும் கருவியை பொருத்தி உள்ளோம். இதனால் எங்கள் வாகனம் தற்போதைய மைலேஜில் இருந்து 25 கிலோ மீட்டர் வரை கூடுதலாக கிடைக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

வேட்பாளரை நிராகரிக்கும் உரிமை வாக்காளர்களுக்கு வேண்டும்: துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி


"ஓட்டளிக்கும் வாக்காளர்களுக்கு, பட்டியலில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களை பிடிக்கவில்லை என்றால், அவர்களை நிராகரிக்கும் உரிமையும் வழங்க வேண் டும்,'' என, துணை ஜனாதிபதி, ஹமித் அன்சாரி கூறினார்.

டில்லியில் நடந்த தேசிய வாக்காளர் நாள் விழாவில், அன்சாரி பேசியதாவது:கடந்த, 60 ஆண்டுகளில், 15 லோக்சபா தேர்தல் களையும், 350 மாநில சட்டசபை தேர்தல்களையும் தேர்தல் ஆணையம் நடத்தியுள்ளது.ஓட்டளிப்பது அனைவரின் கடமை. அனைவரும் ஓட்டளிப்பதில்லை என்பது வருத்ததற்குரியது. ஓட்டுரிமையை அனைவரும் பயன்படுத்த வேண்டும். அதிக பெரும்பான்மை பெற்றவர் மட்டுமே வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும். ஏனெனில், வெற்றி பெற்றவர் களில் பலர், மிகக் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெறுகின்றனர்.

தனக்கு விருப்பமான வேட்பாளரை தேர்வு செய்யும் வாக்காளர், அவரின் செயல்பாடு பிடிக்கவில்லை என்றால், அவரை நிராகரிக்கவும் வேண்டும். அதுபோல, வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் யாரையும் தனக்கு பிடிக்கவில்லை என, தெரிவிக்கும் உரிமையும் வழங்க வேண்டும்.இவ்வாறு ஹமித் அன்சாரி கூறினார்.

வரும் கல்வியாண்டில் தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே பாடத்திட்டம்


அனைத்துக் கல்லூரிகளிலும், ஒரே பாடத் திட்டத்தை அமல் செய்யும் முறை, வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான, பணிகளை, பல்கலைக் கழக பாடத் திட்டக் குழுக்கள் துவங்கியுள்ளன.

தமிழகத்தில், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட, 10 பல்கலைக் கழகங்களில், பாடத் திட்ட வளர்ச்சி குழு அமைக்கப்பட உள்ளது. பல்கலைக்கழக பாடத் திட்டங்களை, உலக தரத்திற்கு உயர்த்துவதே, இக்குழுவின் நோக்கம். ஒரு பல்கலைக்கு, ஒரு கோடி என, 10 கோடி ரூபாய், இதற்காக, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், சமூக அறிவியல், உயிரி அறிவியல், உயர் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், கணினி மற்றும் வர்த்தக அறிவியல், இந்திய மொழி, அயல்நாட்டு மொழி உள்ளிட்ட, 10 துறைகளின் கீழ் உள்ள பாடத் திட்டங்களில், என்னென்ன மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்பது குறித்து, இக்குழு ஆராயும்.

ஒவ்வொரு துறைக்கும் பேராசிரியர் குழு அமைக்கப்பட உள்ளது. இக்குழு, இன்றைய வேலை வாய்ப்புகளுக்கேற்ப, பாடத் திட்டத்தில் கொண்டு வர வேண்டிய மாற்றங்கள் குறித்து அறிக்கையை சமர்ப்பிக்கும். பல்கலைக்கழக துறை பாடத் திட்டங்களை பதிவு செய்யும் வகையில், தனி இணையதளம் அமைக்கப்பட உள்ளது.

மாற்றம் செய்யப்படும் பாடத் திட்டங்கள், இதில் பதிவு செய்யப்படும். இந்த இணையதளம், உலக அளவில் உள்ள பேராசிரியர்களை ஒருங்கிணைக்கிறது. இணையதள தொடர்பு மூலம், துறை பேராசிரியர்கள் வெளிநாட்டில் உள்ள அதே துறை பேராசிரியர்களுடன் கலந்துரையாடி, கல்வி கற்கும் முறைகள், பாடத்திட்டம் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்து விவாதித்து, சர்வதேச தரத்திற்கு கல்வி மேம்பாட்டு வழிகளை மேற்கொள்வர்.

உலகளவில் துறை வாரியாக உள்ள பேராசிரியர்கள் பற்றிய, அடிப்படை புள்ளிவிவரங்களும் சேகரிக்கப்படுகிறது. ஒரு ஊரிலிருந்து, மற்றொரு ஊருக்கு இடமாறும் மாணவர்கள், தங்கள் படிப்பை தொடர்வதில் சிக்கல் ஏற்படுகிறது. பாடத்திட்டங்களே, இதற்கு அடிப்படையாக அமைகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து பாடத் திட்டங்களையும் முறைப்படுத்தி, ஒரே பாடத் திட்டம் கொண்டு வரப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே, ஒரே பாடத்திட்ட முறையால், மாணவர்கள் பெரும் பயனடைவர். தொழில் வல்லுனர்கள், வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், நூலகர்கள், விளையாட்டு இயக்குனர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, பாடத்திட்ட மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளை வழங்க உள்ளனர்.

சென்னை பல்கலைக்கழக பாடத்திட்ட வளர்ச்சி குழு இயக்குனர் சீனிவாசன் கூறுகையில், "சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் பாடத் திட்டத்தால், மாணவர்களுக்கு உலக தரமான கல்வி கிடைக்கிறது. வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இடமாற்றத்தில் செல்லும் மாணவர்கள், கல்வி தொடர உதவும். அடுத்தாண்டு முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வரும், என்றார்.