Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 29 டிசம்பர், 2012

நடந்தால் சுறுசுறுப்பு விர்ர் கொழுப்பு போயே போச்சு


பல லட்சம் செலவில் உடற்பயிற்சி சாதனங்கள் எல்லாம் வாங்கத் தேவையில்லை. சிறிது தூரம் நடந்தாலே போதும். ஆரோக்கியமான உடலமைப்பை தந்துவிடும். நடைப்பயிற்சி என்பது இயற்கையானது மட்டுமல்ல, பிற உடற்பயிற்சியை விட எளிதானதும், செலவில்லாததும் ஆகும்.

இதய நாளங்களுக்கு உரிய வேலை கொடுத்து தேவையான உந்து சக்தியை ஏற்படுத்தி இதயத்தில் உள்ள கொழுப்பை வெளியேற்ற நடைப்பயிற்சி உதவுவது எல்லோருக்கும் தெரிந்திருக்காது. நமது உடலில் மிகப்பெரிய தசை காலில்தான் உள்ளது. நடைப்பயிற்சியானது அந்த தசைகளை வலுவுள்ளதாகவும் உறுதியானதாகவும் ஆக்குகிறது.

சாதாரணமான நேரங்களில் கை தசைகளுக்கு வேலை இருக்காது. ஆனால் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது நம்மை அறியாமல் கைகளை அசைப்பதால் கை தசைகளும் முறுக்கேறுகின்றன. உடலில் வீணாக சேர்ந்துள்ள கொழுப்புகளை கரைக்கிறது.

நடைப்பயிற்சி செய்வதால் நுரையீரல் சுறுசுறுப்படைகிறது. ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மூளையின் சக்தியை அதிகரிக்கிறது. நிம்மதியான உறக்கத்தை கொடுக்கிறது. இதயநோயுடன் உயர் ரத்த அழுத்தம், இரண்டாம் தர நீரிழிவு நோய், பித்தகற்கள், ஆஸ்டியோ போரோசிஸ் பாதித்த நோயாளிகளுக்கு நடைப்பயிற்சி மிகவும் நல்லது.

வயதானவர்களுக்கு ஏரோபிக்ஸ், சைக்கிளிங், ஓட்டப்பயிற்சி ஆகியவை உகந்ததல்ல. ஆனால் அனைத்து வயதினருக்கும் நடைப்பயிற்சி ஏற்றது. நடைப்பயிற்சியே மனிதனுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது என்றால் அது பொய்யில்லை.

வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவுக்கு 40 பேர் பலி


வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில், கடும் பனி பொழிவு காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் குளிரை தாங்க முடியாமல் பலியானோர் எண்ணிக்கை, 40 ஆக உயர்ந்துள்ளது.இதில், உ.பி., மாநிலத்தில் கடும் பனி காரணமாக, 30 பேர் பலியாகியுள்ளனர். ஆக்ராவில் தொடர்ந்து அதிக குளிர் நிலவுகிறது. இங்கு, குறைந்த பட்ச வெப்பநிலை, 2.6 டிகிரி செல்சியசுக்கும் கீழே இருந்தது. மாநிலத்தில், பெரும்பாலான பகுதிகளில், அதிக பட்ச வெப்ப நிலை, 8 முதல், 10 டிகிரி செல்சியசுக்கும் கீழ் இருந்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், கடும் குளிர் நிலவியது. நேற்று முன்தினம் மாலை, பனிபொழிவு அதிகமாக இருந்தது. அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளில், கடும் பனி மூட்டம் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த சில நாட்களாக, பனி மூட்டத்தால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்ட, டில்லி, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், நேற்று விமான போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இரண்டு நாட்களாக, நிலவும் மிதமான பனிமூட்டம், விமான சேவையை பாதிக்கவில்லை.நேற்று முன்தினம் இரவு, பனி மூட்டம் இருந்தது. ஆனால், காலையில் விமான சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை.

பள்ளி வளர்ச்சி திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் தாமதம்


அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில், ஆண்டுதோறும் வளர்ச்சிப் பணிகளாக, கூடுதல் வகுப்பறை கட்டடம், கழிப்பறை வசதி, சுற்றுச்சுவர் கட்டப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில், இத்திட்டத்திற்கு அனுமதி கிடைத்து, அந்த கல்வியாண்டிற்குள் திட்டம் நிறைவேற்றப்படும். கிராமக் கல்விக்குழு, தலைமையாசிரியர் இணைந்து இத்திட்டத்தை நிறைவேற்றுவர்.

இந்த கல்வியாண்டில் திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, பல மாதங்களாகியும், நிதி அனுமதி கிடைக்கவில்லை. இனிமேல், அனுமதி கிடைத்தாலும், இந்த கல்வியாண்டிற்குள் இத்திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை.
கால தாமதத்தால், திட்ட மதிப்பீட்டு தொகை அதிகரிப்பதாலும், திட்டப்பணிகளை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படும். இதனால், மாநிலம் முழுவதும் இத்திட்டம் கிடப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தில் சோதனை

பல்வேறு மாநிலங்களில் இருந்து வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்ட 84 பேரை போலீசார் மீட்டனர். அவர்களில் 64 பேர் மைனர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஜார்கண்ட் போலீசார் நேற்று முன்தினம் டெல் லிக்கு வந்தனர். அங்குள்ள கிராமங்களில் இருந்து சட்டவிரோதமாக சிறுவர், சிறுமிகளை வீட்டு வேலைக்காக டெல்லிக்கு கடத்தி வந்துள்ளதாகவும், அவர் களை மீட்பதற்காக வந்துள்ளதாகவும் டெல்லி போலீசுக்கு தெரிவித்தனர்.

இதையடுத்து டெல்லி மற்றும் ஜார்கண்ட் போலீசார், சக்திவாகிணி தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன், டெல்லியில் உள்ள தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களின் விவரங் களை சேகரித்தனர். அப்போது 24 தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்களின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் 7 தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வேலைக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 84 பேரை மீட்டனர். அவர்களில் 64 பேர் மைனர்கள் என்று தெரியவந்தது. மீட்கப்பட்டவர்களில் 54 பேர் பெண்கள். மீட்கப்பட்ட 84 பேரும், ஜார்கண்ட், மேற்கு வங்கம், சட்டீஸ்கர், ஒடிசா மற்றும் அசாமில் இருந்து வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்டவர்கள். இதுதொடர்பாக 7 பேரை பிடித்து, பல்வேறு மாநிலங்களில் இருந்து எப்படி ஆட்களை வேலைக்கு அழைத்து வருகிறார்கள் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த நடவடிக்கை மற்ற தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்களிலும் தொடர்ந்து நடக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

வியாழன், 27 டிசம்பர், 2012

வெளிநாட்டில் மருத்துவ பட்டபடிப்பு படித்த இந்தியர்கள் 10,000 பேர் பாதிப்பு


வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் அமீர் ஜகான் கூறியதாவது: வெளிநாடுகளில், இளநிலை மருத்துவப் பட்டம் பெறும் இந்தியர்களை, இந்தியாவில் மருத்துவம் செய்ய அனுமதிக்க, 2002ம் ஆண்டு முதல், தகுதி தேர்வு முறை நடைமுறையில் உள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதியின்றி, அதன் வரையறைக்குள் வராத, வெளிநாட்டு மருத்துவ கல்லூரிகளில், பட்டம் பெறுவோரை அடையாளம் காண, இத்தேர்வு கொண்டு வரப்பட்டது.

இதனால், எம்.சி.ஐ., அனுமதியுடன், முறையாக, வெளிநாட்டில் மருத்துவ பட்டம் பெற்ற, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ பட்டதாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நிலவும், மருத்துவர்கள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, தகுதி தேர்வு முறையை ரத்து செய்து, எம்.சி.ஐ., அனுமதியுடன், வெளிநாடுகளில் மருத்துவப் பட்டம் பெற்றவர்களுக்கு, நேரடியாக மருத்துவம் செய்ய, அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அமீர் ஜகான் கூறினார்.

உச்சத்தை தொட்ட வெங்காயம் விலை உயர்வு

டில்லியில் வெங்காயத்தின் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.20 முதல் 25 ஆக உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தை விட 60 முதல் 80 சதவீதம் வரை தற்போது உயர்ந்துள்ளது.

வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை உயர்ந்ததால் சில்லறை விலையும் உயர்ந்துள்ளது மக்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. நடப்பு ஆண்டின் பிப்ரவரி முதல் டிசம்பர் மாதம் வரை வெங்காயத்தின் விலை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இதே நிலை நாடு முழுவதும் நிலவி வருகிறது. டிசம்பர் மாதத்தில் ஒரு குவிண்டால் வெங்காயத்தின் விலை ரூ.1211 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரூ.650 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னையில் ஒரு குவிண்டால் வெங்காயம் ரூ.2000 ஆக உள்ளது. வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் இந்த விலை ஏற்றம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஓராண்டாகியும் திறக்கப்படாத அரசு பள்ளி கட்டடம்: ரூ.2 கோடி வீண்


எண்ணூர் - கத்திவாக்கம் நெடுஞ்சாலையில், கத்திவாக்கம் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு வரை, 2,000 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

எண்ணூர், கத்திவாக்கம் சுற்று வட்டாரத்தில், நடுநிலை பள்ளியில் படிப்பை முடிப்போர், கத்திவாக்கம் மேல்நிலைப் பள்ளியில் தான் சேர வேண்டும். இந்த பள்ளியை விட்டால் வேறு வழியில்லை. இந்த பள்ளியில், மாணவ, மாணவியரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதால், இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு, நபார்டு வங்கி நிதி உதவியோடு, 19 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், கழிவறைகள், குடிநீர் வசதி மற்றும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் ஆகியவை கட்ட, 2008 - 2009ம் ஆண்டு, இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

பொதுப்பணித்துறை மேற்பார்வையில், இந்த பணிகள் நடந்தன. மாணவ, மாணவியருக்கு தனித் தனியாக வகுப்புகள் நடத்த போதிய இடம் இல்லை என, பள்ளி நிர்வாகம், பொதுப்பணி துறையிடம் வற்புறுத்தியது. இதனால், பள்ளி கட்டடத்தை விரைந்து கட்டி, பள்ளி நிர்வாகத்திடம், 2011, டிசம்பர் மாதத்தில், பொதுப்பணி துறை ஒப்படைத்தது.

ஆனால், சுற்றுச்சுவர் மற்றும் கழிவறைகள் கட்டப்படவில்லை. புதிய பள்ளி கட்டடத்தை, கல்வி அமைச்சர் திறந்து வைப்பார் என, பொன்னேரி கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறியதால், பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது. இதனால், புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டடம் பயன்படுத்தப்படாமல், பாழடைந்து வருகிறது.

சுற்றுச்சுவர் இல்லாததால், புதிய கட்டடத்தில் உள்ள குடிநீர் குழாய் இணைப்புகள், ஜன்னல் கதவுகளை, சமூக விரோதிகள் உடைத்து நாசப்படுத்தி உள்ளனர். இதே நிலை தொடர்ந்தால், புதிய கட்டடம் யாருக்கும் பயன்படாமல், பாழடைந்த கட்டடமாக மாறிவிடும் என, பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகள் வருந்துகின்றனர்.

இதுகுறித்து, பொதுப்பணி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய கட்டடம், பள்ளி நிர்வாகத்திடம் ஓராண்டுக்கு முன் ஒப்படைக்கப்பட்டு விட்டது. மாணவ, மாணவியருக்கு என, தனித்தனி கழிவறை மற்றும் பள்ளி சுற்றுச்சுவர் கட்டாமல், ஒப்பந்தாரர் மாயமாகி விட்டார்.

ஒப்பந்தாரரை நீக்கிவிட்டு, புதிதாக 22 லட்சம் ரூபாய்க்கு, வரும் ஜனவரி இரண்டாவது வாரம், மறு ஒப்பந்தம் கோரப்படுகிறது.
புதிய ஒப்பந்ததாரர், கழிவறைகள் மற்றும் சுற்றுச்சுவரை கட்டி கொடுத்து விடுவார். எனவே, எங்களால் எந்த தாமதமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.