Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 24 டிசம்பர், 2012

பள்ளி வகுப்பறையிலேயே மாணவர்களுக்கு பல் சிகிச்சை


வகுப்பறைகளுக்கே சென்று அரசு பள்ளி மாணவர்களுக்கு பல் நோய் சிகிச்சை அளிக்க, சுகாதாரத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதே இடத்தில் சிகிச்சை அளிக்கின்றனர். முடியாத பட்சத்தில், அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் 3 முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பல் தொடர்பான நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆரம்ப சுகாதாரத்துறை இணை இயக்குனர்கள் தலைமையில் டாக்டர், நர்சுகள் அடங்கிய குழுவினர், ஒவ்வொரு அரசு பள்ளியின் வகுப்பறைகளுக்கு செல்ல வேண்டும்.

குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி,பரிசோதிக்க வேண்டும். பல் ஓட்டை, சொத்தை பல் உட்பட பிரச்னைகளை கண்டறிந்து, அதே இடத்தில் சிகிச்சை அளிக்கின்றனர். முடியாத பட்சத்தில், அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைப்பர்.

சிவகங்கை சுகாதார பணிகள் துணை இயக்குனர் அகல்யா கூறுகையில், "அரசின் இந்த புதிய சிகிச்சை முறையால் மாணவர்களின் பல் நோய் சரி செய்யப்படும். பற்களை சுத்தமாக வைத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறோம். பெற்றோர்களும் தங்களது குழந்தைகளின் பற்களை சுத்தமாக வைப்பதற்கு அறிவுரை கூற வேண்டும்' என்றார்.

மதவாத சக்தியான ஜெயலலிதாவிடமிருந்து எந்த நன்மையும் சமுதாயத்திற்கு விளையப்போவதில்லை -- பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன்


நேற்று (23/12/2012)  லால்பேட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகத் தலைவர் பேராசிரியர் .கே.எம்.காதிர் மொஹிதீன் நிருபர்களிடம் கூறும்போது ,

இன்று இளம்பெண்கள் கற்பழிகப்படுவது அதிகரித்துள்ளது வேதனையளிக்கிறது,கற்பழிப்புக்கு தூக்கு தண்டனை என்று மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் அதை நாங்கள் முதலில் வரவேற்போம். கற்பழிப்புக்குரிய இஸ்லாமிய தண்டனையை நாங்கள் சொன்னபோது அதை காட்டுமிராண்டித் தனம் என்று சொன்னார்கள் பலர்.ஆனால் இன்று கற்பழிப்பவனுக்கு மரண தண்டனை தர வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்துவதை பார்க்கும் போது நாங்கள் சொன்ன கருத்துக்கு வலிமை கிடைத்திருப்பதாகவே கருதுகிறோம்.

டெல்லியில் இடிக்கப்பட்ட பள்ளிவாசல் மீண்டும் கட்டப்படும் என்று அறிவித்த டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் போன்று ,இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜிதை,இடிப்பதற்கு காரணமான அத்வானி,முரளி மனோகர் ஜோஷி போன்றவர்கள்  கட்டித்தர முன் வர வேண்டும் .

மேலும்,உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் கோவை சிறைவாசி அபுதாகிரை நீதிமன்ற உத்தரவு வந்தபின்பும் பரோலில் விட மறுக்கும் தமிழக அரசை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வன்மையாக கண்டிக்கிறது .

மதவாத சக்தியான ஜெயலலிதாவிடம் இருந்து எந்த நன்மையும் சமுதாயத்திற்கு விளையப்போவதில்லை என்பதை அடிக்கடி கூறி வருகிறோம்.ஆனால் சிலர் அதை மறைக்க முயல்வதை வேடிக்கையாகவே கருதுகிறேன்.

காவேரி தண்ணீர் பிரச்சனைக்கு இரு மாநில முதல்வர்கள் மக்களின் நலன் கருதி பேசினால் தான் நல்ல முடிவு கிடைக்கும் என்றும் கூறினார்.


தகுதி தேர்வை கைவிட வலியுறுத்தி 27ம் தேதி ஆசிரியர்கள் பேரணி


தமிழ்நாடு பதிவுமூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம், சேலத்தில் நேற்று நடந்தது. இதில்மாநிலத் தலைவர் ரத்தினக்குமார் சிறப்புரை ஆற்றினார்.

கூட்ட முடிவில் அவர் கூறியதாவது:தமிழகத்தில், கடந்த 2010ம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் 26 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அதில், 16 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர். மீதமுள்ள 8 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்குள், தமிழக அரசு திடீரென்று தகுதித்தேர்வு அடிப்படையில்தான் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தது.

அரசாணை 169, 170, 175 ஆகியவற்றின்படி, தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன் சான்றிதழ் சரி பார்ப்பு நடத்தி முடிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு இத்தேர்வு பொருந்தாது என தெளிவாக கூறப்பட்டு உள்ளது. ஆனால், அரசு இந்த அரசாணைகளை அமல்படுத்தாமல் உள்ளது.டிஆர்பி, தகுதித்தேர்வு மூலம் நியமிக்கப்படும் இளம் ஆசிரியர்களால் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முடியாது.

2001 முதல் 2007ம் ஆண்டு வரை டிஆர்பி நடத்திய போட்டித் தேர்வு மூலம் ஏராளமான இளம் ஆசிரியர்கள் நேரடியாக நியமிக்கப்பட்டனர். அதனால், தகுதித்தேர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதை அரசு உடனடியாக கைவிட வேண்டும். மீண்டும் பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர் நியமனங்களில் 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. இது கண்டனத்துக் குரியது. கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 27ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் பேரணி நடத்தப்படுகிறது. 5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

தமிழகத்தில் 7-ம்வகுப்பு மாணவி கற்பழித்து கொலை : டெல்லியில் கூப்பாடு போடுவோருக்கு இந்த ஏழை சிறுமியின் கொலை ஒரு பொருட்டாக தெரியவில்லை ?


தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கிளாக்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்து பெருமாள். இவரது மகள் பேச்சியம்மாள். இவருக்கும் கருங்குளத்தை சேர்ந்த சவுந்தர் ராஜன் என்பவருக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி இருவரும் கருங்குளத்தில் வசித்துவந்தனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சவுந்தர்ராஜன் திடீரென இறந்துவிட்டார்.அதன்பிறகு பேச்சியம்மாள் தனது 2மகள்களுடன் கிளாக்குளத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். மூத்த மகள் புனிதா (வயது13), நாசரேத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். இளையமகள் மற்றொரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துவருகிறாள்.

மாணவி புனிதா தினமும் பள்ளிக்கு ரெயிலில் சென்று வந்தாள். இதற்காக கிளாக்குளத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தாதன்குளம் ரெயில் நிலையத்திற்கு நடந்து சென்று, பின்பு அங்கிருந்து திருச்செந்தூர் பயணிகள் ரெயிலில் தனது தோழிகள் சிலருடன் நாசரேத் செல்வார். அதேபோல் மாலையில் திருச்செந்தூரில் இருந்து நெல்லை வரும் ரெயிலில் நாசரேத்தில் இருந்து தாதன்குளத்திற்கு வந்து, அங்கிருந்து நடந்து வீட்டிற்கு வருவாள்.

நேற்று(20-ந்தேதி) காலை வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்ற மாணவி புனிதா மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அவளை அவளது தாய் பேச்சியம்மாள் மற்றும் தாத்தா முத்துபெருமாள் ஆகியோர் பலஇடங்களில் தேடினர். ஆனால் அவளைப்பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. இதனைத்தொடர்ந்து அவர்கள், புனிதாவுடன் தாதன்குளம் ரெயில்நிலையத்தில் இருந்து பள்ளிக்கு உடன்செல்லும் அவளது தோழிகளிடம் சென்று விசாரித்தனர்.

அப்போது நேற்று காலை புனிதா, பள்ளிக்கு வராதது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புனிதா மாயமானது குறித்து புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாணவி மாயமானது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தாதன்குளம் ரெயில் நிலையத்திற்கு அருகே முள்செடிகள் அடர்ந்து வளர்ந்திருந்த பகுதியில் ஒரு சிறுமி பிணமாக கிடப்பதை இன்று காலை அவ்வழியாக சென்ற சிலர் பார்த்தனர். அவர்கள் இதுபற்றி செய்துங்க நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணமாக கிடந்த சிறுமி பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர்.

அப்போது அந்த சிறுமி பள்ளிக்கு சென்றபோது மாயமான புனிதா என்பது தெரியவந்தது. மாணவி புனிதாவின் வாய் மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது. ஆடை அவிழ்ந்தநிலையில் கிடந்தது. சுடிதார் துப்பட்டாவால் கழுத்து இறுக்கப்பட்டிருந்தது. மாணவி புனிதா உடல், அவர் வழக்கமாக நடந்துசெல்லும் காட்டுப்பகுதி நடைப்பாதைக்கு தென்புறம் முள்செடிகள் இருந்தபகுதியில் கிடந்தது.

ஆகவே அவளை காமவெறி பிடித்த மர்ம நபர்கள்சிலர், நடைபாதை உள்ள பகுதியில் இருந்து ஆள்நடமாட்டம் இல்லாத தென்பகுதிக்கு தண்டவாளத்தை கடந்து தூக்கிச்சென்று மறைவிடத்தில் வைத்து கொடூரமாக கற்பழித்து விட்டு, சுடிதார் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது தெரியவந்தது.

புனிதாக கொலை செய்யப்பட்டு கிடப்பது குறித்து அவரது தாய் பேச்சியம்மாளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரும் மற்றும் குடும்பத்தினரும் சம்பவ இடத்திற்கு வந்து மாணவி உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இத்தகவலை அறிந்ததும் கிளாக்குளம் மற்றும் தாதன்குளத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் சம்பவ இடத்தில் திரண்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மனாபபிள்ளை தலைமையில் கூடுதல் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். பள்ளி மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டது குறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் சம்பவஇடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

எஸ்.பி. விசாரணை நடத்தியதை தொடர்ந்து மாணவி புனிதாவின் உடல் அங்கிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவியை கொடூரமாக கற்பழித்து கொன்றவர்கள் யார்? என்பது தெரியவில்லை. ஆகவே சம்பவ இடத்திற்கு மோப்பநாயும், தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் சம்பவ இடத்திலிருந்து முள்ளுக்காட்டு வழியாக சிறிது தூரம் ஓடிவிட்டு நின்றது.

ஆகவே கொலையாளிகள் அந்த வழியாகத்தான் தப்பித்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.   ஆகையால் அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் நேற்று காலை முதல் மதியம் வரை யாரேனும் சந்தேகப்படும் வகையில் வந்து சென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் சம்பவம் நடந்த பகுதியில் வழக்கமாக ஏதாவது கும்பல் நடமாட்டம்  இருக்குமா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். அதனடிப்படையில் கொலையாளிகள்குறித்து துப்புதுலக்கும் நடவடிக் கையில் போலீசார் தீவிர மாக ஈடுபட்டுள்ளனர்.

கொலை யாளிகளை கண்டுபிடிக்க ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.  தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பரபரப்பு பள்ளிக்கு சென்றமாணவி கற்பழித்து கொலை செய்யப் பட்ட சம்பவம் கிளாக்குளம், தாதன்குளம் கிராமங்களில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 டெல்லியில் பேருந்தில் நடந்த கொடுஞ்செயலான கற்பழிப்பு சம்பந்தமாக போராட்டம் நடத்தும் ,கூப்பாடு போடும் கூட்டத்தார்களுக்கு தமிழகத்தில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட இந்த ஏழை சிறுமியின் கொலை ஒரு பொருட்டாக தெரியவில்லையோ என்று தமிழக மக்கள் பேசிக்கொள்கின்றனர் .


பேச்சுக் கலையில் வல்லவர் ஆக வேண்டுமா?


* உங்களின் பேச்சை கேட்கவிருக்கும் பார்வையாளர் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.

* திறன்வாய்ந்த பார்வையாளர்கள் எண்ணிக்கைப் பற்றிய ஒரு தோராயமான தகவலைப் பெறவும்.

* உங்களின் பேசு பொருள் குறித்து, பார்வையாளர்கள் கேள்வியெழுப்பி விடாமல் இருத்தல் முக்கியம்.

* பேச்சினூடே, பொருத்தமான நகைச்சுவையை இடம்பெற செய்தால், பார்வையாளர்களின் கவனத்தை கவர்வது எளிதாக இருக்கும்.

* பார்வையாளர்களின் நடவடிக்கையின் மூலமாக, நீங்கள் எந்த விதத்திலும், தொந்தரவு அடைந்துவிடக்கூடாது.

* பார்வையாளர்கள், தங்களின் சந்தேகங்களைக் கேட்கும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

கண்களின் வழியாக பேசுதல்:
நீங்கள் பேசுகையில், உங்களது பார்வையாளர்களின் கண்களைப் பார்த்து பேசுவது மிகவும் சிறந்தது. ஏனெனில், இதன்மூலம் அவர்கள் உங்களை ஆர்வமுடன் கவனிக்கத் தொடங்குவர்.

சைகைகள்:
உரையாற்றும்போது, கையசைவு மற்றும் தேவையான முக பாவனைகளை வழங்க வேண்டும். அப்போதுதான், உரை சிறப்படையும்.

உடல் மொழி:
வார்த்தை ஒரு விஷயத்தை விளக்குவதை விட, உடல்மொழியானது சில சமயங்களில், நன்றாக விளக்கிவிடும். பொருத்தமற்ற உடல் மொழியானது, உங்களின் உரையையே சிதறடித்துவிடும். எனவே, சரியான உடல் மொழியை வெளிப்படுத்த பழகிக் கொள்ளுங்கள்.

உங்களின் பண்பு:
பொறுமை, கண்ணியம், நேர்மறை எண்ணம், ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை போன்ற பண்புகள் உங்களின் உரையாடலில் இருப்பது மிகவும் அவசியம். அப்போதுதான், உங்களின் நன்மதிப்பு அதிகரிக்கும்.

சரியான வார்த்தைப் பிரயோகம்:
சரியான அர்த்தம் விளங்காத வார்த்தைகளைப் பிரயோகிப்பதை தவிர்க்க வேண்டும். நன்கு பரிச்சயமான வார்த்தைகளை உபயோகப்படுத்துவதன் மூலமே, உங்களின் கருத்து, எளிமையாகவும், வலுவாகவும் உரியவர்களை சென்றடையும்.

சிறப்பான உச்சரிப்பு:
வார்த்தைகளை சரியான முறையில் உச்சரிப்பது ஒரு தனிக்கலை. எங்கே அழுத்தம் கொடுக்க வேண்டும், எங்கே மிதமாக உச்சரிக்க வேண்டும் என்பதை முறையாக செய்தால், கேட்போர் கவரப்படுவர்.

வேகம்:
கேட்பவர்கள், சரியாக புரியும்படியான வேகத்தில் பேசுவது அவசியம். எங்கே, வேகத்தை லேசாக அதிகரிக்க வேண்டும் மற்றும் எங்கே, வேகத்தை லேசாக குறைக்க வேண்டும் என்பதை தெளிவாக அறிந்துகொண்டால், வெற்றி உங்களுக்கே.

சத்தம்:
உரையாற்றும்போது, எந்தளவு சத்தத்தில் பேசினால் சரியாக இருக்கும் என்பதை அறிந்திருத்தலும் முக்கியம். பேச்சுக் கலையில், தேவையான அளவு சத்தம் என்பது ஒரு முக்கியமான அம்சம்.

மேற்கூறிய காரணிகளை நீங்கள் தெளிவாக கற்றுத் தேர்ந்துவிட்டால், பேச்சுக் கலையில் நீங்கள் ஒரு வல்லவராக ஜொலிப்பீர்கள்.

தமிழகத்தில் சாதிய தாக்குதல்களை தடுக்க வேண்டும்’ பிரதமரை சந்தித்து சாதி அமைப்பின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் வன்னிஅரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

22–12–2012 (நேற்று) அன்று பகல் 12 மணியளவில் பிரதமர் மன்மோகன்சிங்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, அண்மை காலமாக தமிழ்நாட்டில் தருமபுரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் குறித்து விளக்கி கூறியதுடன், இவை தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தார். மேலும், தருமபுரி வன்முறை சம்பவம் குறித்து மத்திய புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தினார்.

அத்துடன், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டில் விதிக்கப்பட்டுள்ள கிரீமிலேயர் வருமான உச்சவரம்பை தற்போதுள்ள 4½ லட்சம் ரூபாயில் இருந்து 12 லட்சம் ரூபாயாக உயர்த்தக்கோரி மனு கொடுத்தார்.

அதற்கு பிரதமர் மன்மோகன்சிங், இவை குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் வருமான உச்சவரம்பை உயர்த்துவது குறித்துப் பரிசீலனை செய்யப்படும் என்று உறுதியளித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சனி, 22 டிசம்பர், 2012

சிறுபான்மையின மாணவ–மாணவிகள் தொழிற்கல்வி உதவித்தொகை புதுப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்


சிறுபான்மையின மாணவ, மாணவிகள் தொழிற்கல்வி உதவித்தொகை புதுப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி படிப்புக்கு சிறுபான்மை மாணவ–மாணவிகள் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவிதொகை புதுப்பித்தல் ஆன்லைன் மூலம் வருகிற 31–ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள் கடந்த ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்று குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து மிகாமல் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் கீழ் கல்வி உதவித்தொகை பெற்றிருப்பின் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள் ஆவர்.

உறுதி செய்ய வேண்டும்:
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் புதுப்பித்தல் விண்ணப்பங்களை மாணவ–மாணவிகள் கல்வி நிறுவனங்களுக்கு தவறாமல் அனுப்புதல் வேண்டும். விண்ணப்ப படிவத்தையும் உடன் படியிறக்கம் செய்து கையொப்பமிட்டு அத்துடன் கடந்த ஆண்டு தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள், வருமான சான்று, வங்கி கணக்கு எண் விபரங்களுடன் கல்லூரி முதல்வர் அல்லது டீனுக்கு அனுப்ப வேண்டும்.

இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து ஆன்லைன் மூலமாகவும், அதன் விண்ணப்ப படிவங்கள் மேற்குறிப்பிட்ட ஆவணங்களுடன் முதல்வரின் அல்லது டீனின் கையொப்பத்துடன் சிறுபான்மை நல ஆணையர் முகவரிக்கு ஜனவரி மாதம் 10–ந்தேதிக்குள் அனுப்புதல் வேண்டும். மாணவ–மாணவிகளின் தங்களின் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு சிறுபான்மையினர் நல ஆணையருக்கு கல்லூரியில் இருந்து 10.1.2013–க்குள் அனுப்பப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.