Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

கல்வி-திருமண சான்றிதழ்களில் அத்தாட்சி: பொது மக்களை அலைக்கழிக்கும் தமிழ்நாடு அரசின் பொதுத் துறை


வெளிநாடுகள் செல்வதற்காக, கல்வி-திருமண சான்றிதழ்களில் அத்தாட்சி பெறுவதற்காக தலைமைச் செயலகத்தில் உள்ள பொதுத்துறைக்கு வரும் பொது மக்களை அலுவலர்களும், அதிகாரிகளும் தினமும் அலைய விடுகின்றனர்.

போதுமான விவரங்களைத் தெரிவிக்க தனியாக கவுன்சிலர்கள் நியமிக்கப்படாததால் அந்தப் பிரிவு முழுவதிலும் லஞ்சம் பெருக்கெடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

உயர் கல்வியை முடித்தவர்கள், குடும்பத்துடன் வெளிநாட்டில் பணிபுரிய நினைக்கும் பெண்கள் என அனைவரும் தங்களது கல்விச் சான்றிதழ்கள், திருமண பதிவுச் சான்றிதழ்களை பொதுத்துறையில் உள்ள வெளிநாட்டினர் பிரிவில் சமர்ப்பித்து உரிய அத்தாட்சியைப் பெறுவது அவசியம். இந்தப் பணியை முடித்த பிறகே வெளிநாடு செல்வதற்கு உரிய அனுமதியைப் பெற முடியும்.

இந்த அத்தாட்சியை உடனடியாகப் பெற விரும்புவோர் நேரடியாக தலைமைச் செயலகத்துக்கே வந்து பொதுத்துறையில் அதற்கான பிரிவை அணுகுகிறார்கள். அவ்வாறு செல்லும் பொது மக்களுக்கு உரிய முறையில் வழிகாட்டுவதற்கு யாரும் இல்லை. அத்தாட்சியைப் பெற என்னென்ன வழிகளைக் கையாள வேண்டும். எந்தெந்த  விண்ணப்பத்தை இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட எந்தத் தகவலும் கிடைப்பதில்லை.


இடைத்தரகர்கள் ராஜ்யம்: அத்தாட்சி பெறுவோருக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக எந்தத் தகவல்களும் கிடைக்காத நிலையில், துறையில் உள்ள அலுவலர்களைக் கேட்கும் போது, உரிய முறையில் அவர்களும் பதில் தருவதில்லை. இதனால், வேறு வழியின்றி துறைக்குத் தொடர்பில்லாத அதே சமயம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் உள்ள இடைத்தரகர்களை பொது மக்கள் நாட வேண்டியுள்ளது.

இடைத்தரகர்கள் ஒவ்வொரு சான்றுக்கும் மக்களின் அவசரத் தேவைக்கு ஏற்ற வகையில், பணம் வசூலிக்கின்றனர். ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை ஒவ்வொரு சான்றிதழுக்கும் வசூலிக்கப்படுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இந்த இடைத்தரகர்களுக்கும், பொதுத்துறையில் வெளிநாட்டினர் பிரிவில் கீழ் நிலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

எந்த சான்றிதழில் அத்தாட்சி பெற வேண்டுமென அந்த சான்றிதழின் அசலானது, அதை வழங்கிய தமிழக அரசுத் துறைக்கு அனுப்பப்படும். அது எந்த ஊராக இருந்தாலும் அந்த ஊரின் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு உண்மைத் தன்மை ஆராயப்படும்.


பொது மக்கள் தங்களது அசல் சான்றிதழை அத்தாட்சிக்காகக் கொடுத்துச் செல்வதால் அதற்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் இடைத்தரகர்களை அணுகி விரைவாகப் பெற்றுச் செல்ல முனைகின்றனர்.

தகவல் அளிப்பவர் இல்லாதது ஏன்? தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோரின் கல்வி மற்றும் திருமண பதிவின் அசல் சான்றிதழ்கள் அனுப்பப்படும் சூழலில், அதுகுறித்த நிலையை தெரிவிக்க தகவல் அளிப்பவர் அந்தப் பிரிவில் இல்லாதது ஏன் என கேள்வி எழுப்பப்படுகிறது.

வெளிநாடு செல்லும் கனவுகளுடன் தலைமைச் செயலகம் வந்து சான்றிதழ்களில் அத்தாட்சி பெற வரும் பொது மக்களை அலைக்கழித்து வெறுத்து ஓடச் செய்கிறது பொதுத்துறை.


வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

* சுற்றுலா பயணிகளை கவர குடில்கள்* வால்பாறையில் அமைத்தது வனத்துறை


வால்பாறை பகுதியில் வனத்துறையினர் குடில்கள் அமைத்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில் பசுமை மாறாக்காடுகளும், பசுமையான தேயிலை தோட்டங்களும் அதிக அளவில் காணப்படுகின்றன.

இயற்கை அன்னையின் படைப்பில் உருவான, வால்பாறையில் உள்ள தேசியப்பூங்காவான அக்காமலை கிராஸ் ஹில்ஸ், நீர்வீழ்ச்சிகள், அணைகள், பிரசித்தி பெற்ற கோவில்கள், பல்வேறு வகையான வனவிலங்குகள் போன்றவை சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன.

இவர்களை கவரும் வகையில், வால்பாறையில் தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் மே மாதம் "கோடைவிழா' நடத்தப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் கலந்து கொண்டு, மலர் கண்காட்சி, நாய்கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசிப்பர்.

இவர்களை கவரும் வகையில் வனத்துறை, நகராட்சி, சுற்றுலாத்துறை சார்பில் தங்கும் விடுதிகளும், வால்பாறை டவுன் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் தனியார் தங்கும் விடுதிகள் (காட்டேஜ்) அதிக அளவில் கட்டப்பட்டுள்ளன.

இது தவிர, தமிழகத்தின் சிரபுஞ்சி என்றழைக்கப்படும் சின்னக்கலார் நீர்வீழ்ச்சிக்கும், நல்லமுடி பூஞ்சோலை, கூழாங்கல்ஆறு ஆகிய பகுதிகளுக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

ஆழியாரிலிருந்து வால்பாறை வரும் வழியில் பல்வேறு இடங்களில் சுற்றுலாப்பயணிகள் தங்கி ஓய்வெடுக்க, அங்காங்கே பல இடங்களில் மூங்கில்களால் வேயப்பட்ட குடில்கள் உள்ளன.

வனத்துறை சார்பில், அட்டகட்டி சோதனை சாவடி அருகே மூன்று குடில்கள் கட்டப்பட்டுள்ளன. வால்பாறை வரும் வழியில், வனவிலங்குளுக்கு சுற்றுலாப்பயணிகள் எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது, பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது, மது மற்றும் சிகரெட் குடிக்கக்கூடாது போன்ற வாசகங்கள் அடங்கிய எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளன.

பள்ளிகளில் இணைய சேவை துண்டிப்பு: ஹால் டிக்கெட் கொடுப்பதில் சிக்கல்


திருவள்ளூர் மாவட்டத்தில், அரசு மேல்நிலை பள்ளிகளில் உள்ள இணைய சேவைக்கான நிலுவை தொகை கட்டப்படாததால், சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், அடுத்த மாதம் நடக்க உள்ள, பொது தேர்வுக்கான, ஹால் டிக்கெட் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில், 167 உயர்நிலை பள்ளிகளும், 107 மேல்நிலை பள்ளிகளும் உள்ளன. இவற்றில் பயிலும், 52,208 பத்தாம் வகுப்பு மாணவர்களும், 35,688 பிளஸ் 2 மாணவர்களும், பொது தேர்வு எழுத உள்ளனர்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும், மார்ச் 1ம் தேதி தொடங்கி, 25ம் தேதி வரை தேர்வு நடக்க உள்ளது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 27ம் தேதி, தொடங்கி ஏப்., 15ம் தேதி, வரை தேர்வு நடக்க உள்ளது.

இலவச சேவை பள்ளிகளின் அனைத்து நிர்வாக வேலைகளும், கணினிமயமாக்க முடிவான பின், 2009ம் ஆண்டு, எல்காட் நிறுவனம் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும், இலவச இணைய சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

தற்போது, பள்ளி கல்வித்துறை அறிவிப்புகள், துறை அதிகாரிகளின் கடிதங்கள், தலைமை ஆசிரியர்களுக்கான கூட்ட அறிவிப்புகள் உள்ளிட்ட தகவல்கள் இணையம் மூலம் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

மேலும், பொது தேர்வுக்கான, ஹால் டிக்கெட்டுகள் இணையம் மூலம் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றன. அதை பள்ளி நிர்வாகம் அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

இந்த நிலையில், கடந்த ஜன., 18ம் தேதி, அனைத்து மேல் நிலை பள்ளிகளுக்கும், எல்காட் நிறுவனத்தில் இருந்து கடிதம் வந்தது. அதில், "2010-11 மற்றும் 2011-12 ஆகிய இரு ஆண்டுகளுக்கு, இணைய சேவை பயன்படுத்தியதற்காக, 12 ஆயிரம் ரூபாய் வரை, பில் தொகை செலுத்த வேண்டும். ஜனவரி மாதம் இறுதிக்குள், பில் தொகை செலுத்தாத பட்சத்தில் இணைப்பு துண்டிக்கப்படும்" என, குறிப்பிடப்பட்டு இருந்தது.

பெரும்பாலான பள்ளிகள் பில் தொகையை செலுத்தாததால், கடந்த, 1ம் தேதி முதல் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், விரைவில் நடக்கவுள்ள பொது தேர்வுக்கான, ஹால் டிக்கெட்டுகளை எப்படி கொடுப்பது என, தெரியாமல் தலைமை ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்.

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத, தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "துப்புரவு தொழிலாளர் சம்பளம், மின் கட்டணம் போன்ற இதர செலவுகள், பெற்றோர் கழக நிதியில் இருந்து கொடுத்து வருகிறோம்" என்றார்.

மேலும், "தற்போது, இணைய சேவைக்கான தொகை, 12 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என, எல்காட் நிறுவனம் கடிதம் அனுப்பியது. முதலில் இலவசம் என்று சொல்லி, பின் இப்படி பணம் கேட்டால், எங்கிருந்து கொடுக்க முடியும்" என்றனர்.

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத, எல்காட் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த தி.மு.க., ஆட்சியில், இணைய சேவை இலவசமாக வழங்கப்பட்டது. தற்போது உள்ள, அ.தி.மு.க., அரசு கட்டணம் வசூலிக்கும் படி தெரிவித்து உள்ளது. இந்த கட்டணத்தை ஒரே தவணையில் செலுத்தாமல், இரண்டு மூன்று தவணைகளில் செலுத்தும்படி, பள்ளிகளுக்கு தெரிவித்து உள்ளோம்" என்றார்.

இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாகராஜ முருகன் கூறுகையில், "இணைய சேவை துண்டிக்கப்பட்டது குறித்த விவரம் அளிக்கும்படி, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவரம் கிடைத்தவுடன், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் உள்ள நிதியை கொண்டு, இணையதள சேவைக்கான கட்டணம் செலுத்தப்படும்" என்றார்.

சென்னை ஐ.ஐ.டி.,யில் கோடைகால பெல்லோஷிப் திட்டம்


1959ல் இந்திய ஜெர்மனி உடன்பாட்டின் அடிப்படையில் நிறுவப்பட்ட சென்னை ஐ.ஐ.டி., சாதனைகளில் முத்திரை பதித்து வருகிறது. இந்தப் பெருமைமிகு கல்வி நிறுவனத்தில் மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை கோடைகால பெல்லோஷிப் புரோகிராம் நடத்தப்படும்.

தேவை என்ன?
சென்னை ஐ.ஐ.டி.,யின் கோடைகால பெல்லோஷிப் படிப்பில் பின்வரும் தகுதி உடையவர்கள் இணையலாம் : தற்போது பி.இ., பி.டெக்.,பி.எஸ்சி., (இன்ஜினியரிங்) ஆகிய படிப்புகளில் மூன்றாவது ஆண்டு படிப்பவர்கள், இன்டகரேடட் எம்.இ., எம்.டெக்., படிப்பவர்கள், எம்.இ.,எம்.டெக்., எம்.எஸ்சி., எம்.ஏ.,எம்.பி.ஏ., ஆகிய படிப்புகளில் பல்கலைக் கழக அளவில் முதன்மை பெற்றவர்கள், கணித ஒலிம்பியாட் போன்ற முக்கிய கருத்தரங்கங்களில் தங்களது படைப்புகளை வழங்கியவர்கள், மற்றும் இதர சிறப்பு பெற்ற
சாதனையாளர்கள். ஐ.ஐ.டி.,யில் படித்து வரும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது.

ஊக்கத் தொகை எவ்வளவு?
இந்த பெல்லோஷிப் திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அதிக பட்சம் இரண்டு மாதங்களுக்குத் தலா ரூ.6,500 ஸ்டைபண்டாகப் பெறலாம்.

என்னென்ன பிரிவுகள் ?
சென்னை ஐ.ஐ.டி., நடத்தும் கோடைகால பெல்லோஷிப் திட்டத்தில் ஏரோஸ்பேஸ், அப்ளைடு மெக்கானிக்ஸ், பயோ டெக்னாலஜி, கெமிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஜினியரிங் டிசைன், எலக்ட்ரிகல், மெக்கானிகல், மெட்டலர்ஜிகல் அண்டு மெட்டீரியல்ஸ், ஓஷன் ஆகிய இன்ஜினியரிங் துறைகளும், இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட அறிவியல் துறைகளும், ஹியூமானிடிஸ் அண்டு சோசியல் சயின்ஸ் மற்றும் நிர்வாகவியல் துறைகளும் பங்கு பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை ஐ.ஐ.டி.,யின் பெல்லோஷிப் திட்டத்திற்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் தேவைப்படும் இணைப்புகளையும் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். முழு விபரங்கள் அறிய இணைய தளத்தைப் பார்க்கவும்.

முகவரி 
The Head of the Department,
Department of (Concerned Dept),
Indian Institute of Technology Madras,
Chennai - 600036.

வியாழன், 14 பிப்ரவரி, 2013

ஆதார் அடையாள அட்டையில் தவறான முகவரி, எங்கு திருத்துவது என தெரியாமல் மக்கள் குழப்பம்


திட்டக்குடி பகுதியில் அரசால் வழங்கப்பட்டு வரும் ஆதார் அடையாள அட்டையில் பெயர் குளறுபடியால் மாற்று அட்டை பெறுவது எப்படி என தெரியாமல் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

திட்டக்குடி பகுதியில் சில மாதங்களுக்கு முன் ஆதார் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கப்பட்டது. இதில் பொதுமக்களின் போட்டோ, கைரேகை, கண்விழி ஆகியவைகளை புகைப்படம் எடுத்தனர். இதற்கான அடையாள அட்டை கடந்த சில தினங்களாக தபால் மூலம் பொது மக்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

 இந்த அட்டைகள் பலவற்றில், பயனாளியின் பெயர், தந்தை பெயர் மற்றும் முகவரி தவறுதலாக குறிப்பிட்டுள்ளதால், இந்த அடையாள அட்டையை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
திட்டக்குடி அடுத்த கூடலூர் கிராமத்தை சேர்ந்த அனந்தசயனம் மகன் தினேஷ், முதுகலை பொறியியல் பட்ட படிப்பு படித்து வரும் இவருக்கு தபாலில் வந்த ஆதார் அடையாள அட்டையில் தந்தை பெயர் ஒரு இடத்தில் சரியாகவும், மற்றொரு இடத்தில் தவறுதலாக ஜெயக்குமார் பாண்டுரங்கன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தவறுகளை திருத்தம் செய்ய, யாரை அணுக வேண்டும் எனத் தெரியாமல் குழப்பமடைந்துள்ள பொதுமக்கள், ஆதார் அடையாள அட்டையில் உள்ள தவறுகளை திருத்தம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு


சுற்றுச்சூழல் சந்திப்பு நிகழ்ச்சியில், தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளி மாணவர்களின் செயல்முறை விளக்கத்தை பார்வையிட்டு முதல்வர் ஷீலா தீட்சித் பாராட்டினார்.

தில்லி தல்கடோரா மைதானத்தில் இரு நாள் வருடாந்திர சுற்றுச்சூழல் சந்திப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

நிகழ்ச்சியை தொடங்கிவைத்த தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், பல்வேறு பள்ளி மாணவர்களின் சுற்றுச்சூழல் தொடர்பான செயல்விளக்க அரங்குகளைப் பார்வையிட்டார்.

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் பூசா பள்ளியின் சார்பில் 15 மாணவர்கள் அமைத்திருந்த அரங்குக்குச் சென்ற முதல்வர், கழிவுப் பொருள்கள் மூலம் மாணவர்கள் உருவாக்கிய படைப்புகளை பார்வையிட்டார்.

அதில், சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான பல்வேறு செயல்முறைகளை மாணவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர். அவர்களது முயற்சிக்கு ஷீலா தீட்சித் பாராட்டு தெரிவித்தார்.

தேவையற்ற பொருள்களில் இருந்து காளான் செய்யும் முறையை பார்வையாளர்களுக்கு மாணவர்கள் விளக்கினர். பள்ளியில் உற்பத்தி செய்யப்பட்ட பலவித காளான்களையும் காட்சிக்கு வைத்திருந்தனர்.

மூலிகைப் பயன்கள் பற்றியும், தரிசு நிலங்களை பசுமைப்படுத்துதல், பழைய காகிதங்ளை மறுசுழற்சி முறை மூலம் பயனுள்ள அட்டைகள் தயாரித்தல் ஆகியவை குறித்தும் விளக்கினர்.

குப்பைகளாக வீசப்படும் பொருள்களில் இருந்து சமையலறை உடைகள், வண்ண கைபேசி உறைகள், பரிசுப் பொருள்களை பேக் செய்யும் உறைகள் ஆகியவற்றையும் பார்வைக்கு வைத்திருந்தனர். கண்ணாடித் துண்டுகள், காகிதங்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஓவியங்கள் ஆகியவற்றையும் பார்வைக்கு வைத்திருந்தனர்.

முன்னதாக, நிகழ்ச்சியில் பேசிய ஷீலா தீட்சித், ""தலைநகரை பசுமை நகரமாக உருவாக்குவதில் பள்ளிகளில் செயல்படும் சுற்றுச்சூழல் மன்றங்களின் பங்களிப்பு பாராட்டுகுரியது.

இம்மன்றங்களின் உதவியுடன் சுற்றுச்சூழல் குறித்த பல்வேறு விழிப்புணர்வுப் பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இது மேலும் தொடர வேண்டும்' என்று கூறினார்.

இந்தியாவில் மனித வளம் கிடைப்பதில் சிரமம்


இந்தியாவில் மனிதவளம் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக, பிடிசி இந்தியா நிறுவன தேசிய மேலாளர் ஜெப்ரி வில்மாட் தெரிவித்தார்.

 பெங்களூரில் செவ்வாய்க்கிழமை வாகன உதிரிப் பாகங்கள் மற்றும் மென்பொருள் கண்காட்சியைத் தொடக்கி வைத்த அவர், பின்னர் பேசியது:
 இந்தியாவில் பொறியியல் கல்வியைப் படிப்பதில் மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்து வருகிறது. கணினி தொடர்பான பட்டப்படிப்பு படித்துவிட்டு, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிக்குச் செல்வதை பெரும்பாலான மாணவர்கள் விரும்புகின்றனர். அதனால், பல்வேறு வாகனத் தயாரிப்பு தொழில்சாலைகளில் பல பணியிடங்கள் காலியாக உள்ளன.
 மனித வளம் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், வாகனத் தொழில்சாலைகளை இந்தியாவில் தொடங்குவதைவிட சீனாவில் தொடங்குவதையே பெரும்பாலான முதலீட்டாளர்கள் விரும்புகின்றனர். எனவேதான் மாணவர்கள் பயனடையும் வகையில், பெங்களூரில் வாகன உதிரிப் பாகங்கள் மற்றும் அதற்கான மென்பொருள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 கடந்த ஆண்டுகளில் மும்பை, சென்னையில் இந்தக் கண்காட்சிகள் நடைபெற்றன. புதன்கிழமை (பிப்.13) புணேவில் இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.