Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

வியாபாரம் ஆகும் கல்வி : ப.சிதம்பரம் வேதனை


நாட்டில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் வெறும் கல்வி கடைகளாகவே உள்ளதாக குற்றம்சாட்டி உள்ள மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், மாணவர்கள் இந்தியாவை முன்னேற்ற பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.மொகாலியில் இந்திய தொழில் பள்ளியின் துவக்க விழாவில் கலந்து கொண்ட சிதம்பரம் இவ்வாறு தெரிவித்துள்ளார். பல்கலைகழகங்களின் தரமும், உள்கட்டுமான வசதிகளும், பழமை பேசும் பாட திட்டங்களைக் கொண்டதாகவும் இருப்பதாக சிதம்பரம் தெரிவித்துள்ளார். கல்வி நிறுவனங்கள் குறித்து சிதம்பரம் விமர்சித்துள்ளது கல்வியாளர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

சிதம்பரம் பேச்சு:
பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் தரம் குறைவான உள்கட்டமைக்கள், மோசமான அறிவியல் மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் மற்றும் போதிய பயிற்சி இல்லாத ஆசிரியர்கள் ஆகியவற்றை கொண்டதாக உள்ளது என சிதம்பரம் தெரிவித்து உள்ளார். பஞ்சாப்பில் 8 பல்கலைக்கழகங்கள் மற்றும் 17 கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 18 பல்கலைக்கழகங்களுக்கு பதிலாக 8 பல்கலைக்கழகங்களே உள்ளன எனவும், வரும் காலங்களில் அவற்றின் கல்வி கட்டமைப்புக்களை உயர்த்துவது அத்தியாவசியமாகிறது எனவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு வேண்டுகோள்:
மாணவர்கள் தங்களின் படிப்பபை முடித்த பிறகு வளர்ந்த நாடுகளில் பணிபுரிய ஆர்வம் கொள்ள வேண்டும்; அது போன்ற வெளிநாட்டு வாய்ப்புக்களை பெற மாணவர்கள் முயற்சி மேற்‌கொள்ள வேண்டும்; மாணவர்களின் தங்களின் வேலை திறனை வளர்த்து கொள்ள வேண்டும்; குடும்பத்தை முன்னேற்ற வேண்டும்; பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற வேண்டும் ; அதற்கு பிறகு இந்தியாவிற்கு திரும்பி வந்து இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். இவ்வாறு சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் கல்வி தரம் குறித்த பேச்சை தொடர்ந்து விழாவில் பேசிய பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பண்டல், நேஷனல் ஃபுட் பயோ-டெக்னாலஜி மற்றும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நேனோ டெக்னாலஜி ஆகிய இரு கல்வி நிறுவனங்களும் ஐஎஸ்பி வளாகத்தில் விரைவில் துவங்க உள்ளதாக அறிவித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வு !


இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர்  இ. அகமது மீண்டும் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தற்போது பதவி வகிக்கும் பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன் தேசிய பொதுச் செயலாளராகவும், கேரள மாநில தொழில் துறை மந்திரி பி.என்.குஞ்சலிக்குட்டி தேசிய பொருளாராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த இக்பால் அகமது எம்.பி., கர்நாடகாவை  சேர்ந்த தஸ்தகீர் ஆகா ஆகியோர் துணைத் தலைவர்களாவும், இ.டி.முகமது பஷீர் எம்.பி ,அப்துஸ்ஸமது சமதானி எம்.எல்.ஏ. (கேரளா), குர்ரம் அனிஸ் உமர் (டெல்லி), நயீம் அக்தர் (பீகார்), ஷகீன்ஷா ஜகாங்கிர் (மேற்கு வங்காளம்) ஆகியோர் புதிய செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஷமீம் சாதிக் (மகாராஷ்டிரா), மதீன் கான் (உ.பி.), சிராஜ் இப்ராகீம் சேட் (கர்நாடகம்), அப்துல் பாசித் (தமிழ்நாடு) சர்புதீன் அன்சாரி (ராஜஸ்தான்) ஆகியோர் உதவி செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நன்றி :மாலைமலர்

சனி, 1 டிசம்பர், 2012

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்டம்

கேரளா மாநிலம் கோழிக்கோடில் இரண்டு நாள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்டம் நடக்கின்றது ;இன்று (டிச - 1 ) முதல் நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் தேசியத் தலைவர் இ.அஹமது சாஹிபு தலைமையில் நடை பெற்றது .

தொடரும் இஸ்ரேலின் அத்துமீறிய அடாவடி .................!


ஐ.நா., சபையில் சமீபத்தில் , பலஸ்தீனை அங்கீகரித்து கொண்டு வரப்பட்ட  தீர்மானம்  193 நாடுகள் ஆதரவுடன் நிறைவேறியது. மசோதாவுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 9 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அமைச்சரவையை நேற்று கூட்டி இது தொடர்பாக விவாதித்தார். அப்போது, பாலஸ்தீனத்திற்கு சொந்தமான,  மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் பகுதிகளில் புதிய குடியிருப்புகளை கட்டுவது என முடிவெடுக்கப்பட்டது. அப்பகுதியில் யூதர்களை பெருமளவில் வசிக்க வைப்பதற்காக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இஸ்ரேலின் இந்த முயற்சிக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விக்டோரியா நூலண்ட், இஸ்ரேலின் இந்த நடவடிக்கை வருங்காலத்தில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைக்கும், சுமூக முடிவுக்கு எதிரானதாகும் என்று தெரிவித்துள்ளார்.

அந்தரத்தில் மிதக்கும் கூண்டு படுக்கை


சுற்றுலா பயணிகளை ஈர்க்க கடற்கரை பகுதியில் குடில்கள் மற்றும் மரத்தின் மீது வீடுகள் அமைப்பது போன்ற யுக்திகள் கையாளப்படுகிறது. பிரான்சு நாட்டை சேர்ந்த பெர்னி டூ பய்ராட் என்பவர் வித்தியாசமான கூண்டு படுக்கையை உருவாக்கி இருக்கிறார். இது பார்வைக்கு பெரிய பட்டுப்புழு கூடு அல்லது நெருப்பு கோழியின் முட்டை போல காட்சி தருகிறது.

அலுமினிய கம்பிகள், கயிறு ஆகியவற்றை கொண்டு தயாரித்து மரங்களில் கட்டி அந்தரத்தில் மிதக்க விட்டுள்ளார். இந்த கூண்டிற்குள் படுக்கை மெத்தை, தலையணைகள் இருக்கும். இளம் காதல் ஜோடி அல்லது ஒரு குழந்தையுடன் தம்பதி தங்கியிருக்கவும், படுத்து ஓய்வு எடுக்கவும் வசதிகள் இருக்கிறது.

இதை அமைக்க ரூ.2 லட்சம் முதல் ரூ.7 லட்சம் செலவாகும் என கூறும் பெர்னி, வரும் காலத்தில் சூரிய ஒளி, காற்று ஆகியவை மூலம் மின்சாரத்தை தயாரித்து ஏ.சி. வசதியை ஏற்படுத்த இருக்கிறேன் என்றும் கூறுகிறார்.

1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயில் சொந்த வீடு ரெடி!

ஏழைகள் வீடு கட்டுவது என்பதே கனவு என்றாகிவிட்ட நிலையில், அந்தக் கனவு இல்லத்தை மிக மிகக் குறைந்த செலவில் கட்டித் தருகிறார் ஓர் என்ஜினீயர்

‘லோ காஸ்ட் பில்டிங் டெக்னாலஜி’ என்ற புதிய தொழில்நுட்பத்தின் மூலம், வெறும் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயில் 25 நாட்களிலேயே தரமான வீடுகளை கட்டிக்கொடுத்து வருகிறார், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த என்ஜினீயர் ர
விச்சந்திரன்.

எப்படி இது சாத்தியம்? விவரிக்கிறார் ரவிச்சந்திரன்...

நான் டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் வரைக்கும் படிச்சிருக்கேன். கடந்த 22 வருஷங்களாக 100 க்கும் மேற்பட்ட கட்டிடங்களைக் கட்டிக் கொடுத்திருக்கேன். மழைக்காலம் ஆரம்பிச்சாலே எங்க கடலூர் மாவட்டத்துல அதிக வெள்ளச் சேதம் உண்டாகும். கான்க்ரீட் வீடுகள்ல வாழுற மக்களுக்கு சேதம் மிகக் குறைவுதான். ஆனா, குடிசைவாசிகளோட நிலைமை ரொம்பப் பரிதாபமா இருக்கும். வீடுகளுக்குள்ள தண்ணி புகுந்து குடிசையே இடிந்து போவதோடு, எங்காவது மண்டபங்களில் தங்கற கொடுமையும் அடிக்கடி நடக்கும். ஏழை மக்களுக்கு கான்க்ரீட் வீடு என்பது எட்டாமலேயே இருக்கிறது. அப்படியே கான்க்ரீட் வீடு கட்டலாம்ன்னு சிலர் முயற்சி பண்ணினாலும் கட்டுமானப் பொருட்களோட விலை உயர்வால் பல லட்சங்களுக்கு கடனாளியாக மாறி கஷ்டப்படுகிறார்கள். இந்நிலையைப் போக்கி நடுத்தர வர்க்கத்தினர் பயன் பெற வேண்டும் என்ற அக்கறையில், மிகக் குறைந்த செலவில் குறைந்த நாட்களில், அஸ்திவாரத்துல கம்பியே இல்லாம புதிய தொழில்நுட்பத்தில் தரமான வீடுகளை கட்டித் தரணும்ன்னு கடந்த 10 வருஷங்களாய் செயல் திட்டம் தீட்டினேன். கடந்த 6 மாதங்களாக என்னுடைய செயல்திட்டம் வீடுகளாக முழுமையடைந்து வெற்றி பெற்றுள்ளது. தற்போது 220 சதுர அடியில் 11 அடி உயரத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயில் 25 நாட்களிலேயே பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தி தரமான வீடுகளைக் கட்டி வருகிறேன். இதே அளவில் மற்ற கட்டிடப் பொறியாளர்கள் வீடுகளைக் கட்டினால், 3 லட்சம் ரூபாய்க்குமேல் செலவாவதோடு 60 நாட்கள் வரை இழுக்கும்" என்றவர் தொடர்ந்து,

பொதுவாக வீட்டின் அடியிலும் மேல் பகுதியிலும் கான்க்ரீட் மோல்டுகளை தனித்தனியாகப்போடுவதால், ஆட்கள் கூலியும் அதிக நாட்களும் பிடிக்கும். ஆனால், நான் கட்டும் வீடுகளுக்கு மொத்தமாக இரண்டு மோல்டுகளை மட்டுமே பயன்படுத்துகிறேன். பிளிந்திபீம், காலம், ராஃப்ட் போன்றவற்றை ஒரே மோல்டாக இணைச்சி, வீட்டுக்கு அடியிலும் ரூஃப் ஸ்லாப் (Roof Slap), காலம், லின்டெல் கம்சன்ஷெட் (Lintel Cumsunshede) ஆகியவற்றை வீட்டின் மேற்கூரையிலும் போட்டு, தேவையான இடத்தில் மட்டுமே கம்பிகளை வைத்து வீட்டிற்கு வலு சேர்க்கிறேன். இப்படிக் கட்டும் வீடுகள் 75 ஆண்டுகளுக்கும் மேலே தரமானதாகவும் வலுவானதாகவும் இருக்கும். இதனால், வீடு கட்ட ஆரம்பித்த நாளிலிருந்து சரியாக 25ம் நாள் முழு வீட்டையும் கட்டி முடித்து, சாவியை உரிமையாளரிடம் ஒப்படைத்து விடுவோம். கட்டிடங்களுக்கான மெட்டிரியல் கலெக்‌ஷன், கடக்கால் எடுத்தல், மணல் பரப்புதல்,பேஸ்மெண்ட் போடுதல், சென்ட்ரிங் அடித்தல் போன்ற வேலைகளை முதல் 10 நாட்களிலேயே முடித்து, மீதமுள்ள 15 நாட்களில் பார்ட்லி ஃப்ரேம்டு ஸ்ட்ரக்ச்சர் மற்றும் முழுமையான ஃப்ரேம்டு ஸ்ட்ரக்ச்சர் என்ற இரண்டு முறைகளில் சுவர் எழுப்பி வீட்டை முழுமைப்படுத்தறோம்" என்று கூறும் ரவிச்சந்திரன், தான் கட்டும் வீடுகளில் ஒரு ஹால், கிச்சன், டாய்லெட், செஃப்டிக் டேங்க், மழைநீர் சேகரிப்புத் தொட்டி போன்ற வசதிகளை செய்து தருகிறார்.

லோ காஸ்ட் பில்டிங் டெக்னாலஜிக்காக தமிழ்நாடு அறிவு சார்ந்த பொருட்கள் கழகத்திடம் காப்புரிமையும் பெற்றுள்ளார். மேலும் ரவிச்சந்திரன் இதுவரை லோ காஸ்ட் பில்டிங் டெக்னாலஜியில் 5 வீடுகளை கட்டிக் கொடுத்திருக்கிறார். அதில் ஒரு வீட்டைப் பார்வையிட்டபோது, அந்த வீட்டின் உரிமையாளரான கோவிந்தராஜன், இத்தனை வருஷமா நாங்க கூரை வீட்டுலதான் வாழ்ந்துக்கிட்டு வந்தோம். இந்த நிலையிலதான், எங்களுக்கு வீடு கட்ட அரசு மூலமா 1 லட்சம் ரூபாய் மானியம் வந்துச்சி. தெரிஞ்ச கட்டிட மேஸ்திரிங்க கிட்டபோய் கான்க்ரீட் வீடு கட்டித் தரச் சொன்னதுக்கு 3 லட்சம் ரூபாய்க்குமேல செலவாகும்னு சொல்லி, கைய விரிச்சிட்டாங்க. அதுக்கப்புறம் ரவிச்சந்திரன் சார், குறைஞ்ச செலவுல சீக்கிரமா வீடு கட்டித் தர்றாருனு கேள்விப்பட்டு அவருகிட்டப் போனோம். மொத்தமா 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் குடுத்து, வீட்டுக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் ரவிச்சந்திரன் சாரு கூடவே போய் வாங்கனோம். இருபத்தி அஞ்சே நாளில் புது வீட்டைக் கட்டிக் குடுத்த அவரை எங்க ஆயுசுக்கும் மறக்க மாட்டோம்" என்று நெகிழ்கிறார்.

குடிசைகளில் வாழ்கிற ஏழை மக்களுக்கு கான்க்ரீட் வீடுகள் கட்டித்தர திட்டமிடுகிற தமிழக அரசு, ரவிச்சந்திரனின் ‘லோ காஸ்ட் பில்டிங் டெக்னாலஜி’யைப் பயன்படுத்த ஆவன செய்யலாமே!

Contact Information
T.ravichainthrin
27, Anna Nagar,
Kurinjipadi – 607 302.
Ellappanpettai Roadway,
Near Sugarcane Office,
Cuddalore Dt.
Telephone :04142-258783
Cell Phone : : 9865622974
Email : ravichainthrin.lee@gmail.com


---பூ. சர்பனா

வெள்ளி, 30 நவம்பர், 2012

நெல்லையில் காய்கறிகளின் விலைகள் குறைவு!


நெல்லை டவுன் நயினார் குளம் மார்க்கெட்டில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மொத்த கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு ஆந்திரா, கர்நாடகா, விருதுநகர், சிவகாசி, ஒட்டன்சத்திரம், பொள்ளாச்சி, தேனி, கம்பம், ஓசூர் போன்ற வெளியூர்களில் இருந்து தக்காளி, கத்திரிக்காய், கோஸ், உருளைக் கிழங்கு, பல்லாரி, பீட்ரூட் போன்ற காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. இதுபோல் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை, திருப்பணி கரிசல்குளம், திடியூர், செங்குளம், மானூர், ரஸ்தா போன்ற உள்ளூர் கிராமங்களில் இருந்து கத்தரி, பொடி உள்ளி, தக்காளி போன்ற காய்கறி வகைகளும் விற்பனைக்கு வருகின்றன. இந்த மார்க்கெட்டில் இருந்து தான் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் பருவமழை பொய்த்துவிட்டதால், தண்ணீர் இல்லாமல் விவசாயம் கடும் வறட்சியை சந்தித்துள்ளன. இதன் காரணமாக விளைச்சல் இல்லாமல் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

உள்ளூர் காய்கறிகளின் வரத்துகள் அதிகம் இல்லாததால் நெல்லை மார்க்கெட்டில் காய்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் ஏற்றமும், இறக்கமும் கண்டுவருகின்றன.

நெல்லை டவுன் மார்க்கெட்டில் நேற்றைய நிலவரப்படி, உருளைக் கிழங்கு கிலோ ரூ.24க்கும், தக்காளி ரூ.15க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கத்தரிக்காய் 15, வெண்டைக்காய் 18, கோஸ் 10, பீன்ஸ் 25, முருங்கைக்காய் 40, கேரட் 20, மிளகாய் 15, பல்லாரி 20, சேனைக்கிழங்கு 15, பொடி உள்ளி 15, பூசணி 8, பீட்ரூட் 12, புடலங்காய் 15, பாகற்காய் 15, அவரைக்காய் 30, கருணை கிழங்கு 18, எழுமிச்சை 40க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக கார்த்திகை மாதங்களில் காய்கறிகளின் விலைகள் அதிகரிப்பது வழக்கம். வழக்கத்திற்கு மாறாக நேற்று பெரும்பாலான காய்கறிகளின் விலைகள் வெகுவாக குறைந்துள்ளன.உள்ளூர்களில் இருந்து மொத்த கடைக்கு வரும் காய்கறிகளின் வரத்துகள் குறைந்த போதிலும், வெளியூர்களில் இருந்து காய்கறிகளின் வரத்துகள் அதிகமாக வந்துகொண்டிருக்கின்றன. இதனால் காய்கறிகளின் விலைகள் குறைந்துள்ளன. இன்னும் ஓரிரு நாட்கள் இதே நிலை நீடிக்கும் என மார்க்கெட் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.