Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

மியான்மார் முஸ்லிம்களின் உரிமைகள் பாதுகாக்கப் பட வேண்டும் :ஆங் சான் சூகி


மியன்மார் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ கீ "சிறுபான்மையினரின் உரிமைகள் பாதிகாக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தித் தன்னுடைய கன்னி உரையை நிகழ்த்தினார்.
மியன்மாரின் 'மக்களாட்சிக்கான தேசிய லீக்' கட்சித் தலைவரும், 1991 ஆம் ஆண்டில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான சூகீ, இராணுவ அடக்குமுறை ஆட்சியாளர்களால் சுமார் 15 வருடகாலம் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.2010 நவம்பர் 13 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்ட சூ கீ, "மியன்மாரில் வாழும் நிராயுதபாணிகளான சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், நாட்டில் சட்டமும் ஒழுங்கும் பேணப்பட வேண்டும்" என்று தனது முதலாவது நாடாளுமன்ற உரையில் வலியுறுத்திப் பேசியுள்ளார்.

"மியன்மாரில் உண்மையான ஜனநாயகம் கட்டியெழுப்பப்பட வேண்டுமாயின், நாட்டில் வாழும் சகல இன மக்கள் மத்தியிலும் சம உரிமை, பரஸ்பர நன்மதிப்பு என்பன கட்டியெழுப்பப்படவும், பாதுகாக்கப்படவும் வேண்டும். சிறுபான்மையினருக்கு எதிரான பாரபட்சமான அத்துமீறல் நடவடிக்கைகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அது தொடர்பான சட்டப் பிரேரணைகள் உருவாக்கப்படுவது தொடர்பில் நாடாளுமன்ற அங்கத்தவர்கள் அனைவரும் கலந்துரையாட முன்வர வேண்டும்" என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செயற்திறன் மிக்க வறுமையொழிப்பு நடவடிக்கைகள், இனங்களுக்கிடையிலான பரஸ்பர நல்லுறவு கட்டியெழுப்பப்படல், சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படல் முதலான பல்வேறு விடயங்கள் குறித்து அவர் தனது உரையில் வலியுறுத்திப் பேசியுள்ளார்.
"இரும்புத்திரை நாடு" என்று பெயர்பெற்ற மியன்மாரில் அண்மைக் காலமாக முஸ்லிம் சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள காட்டுமிராண்டித்தனமான படுகொலை நடவடிக்கைகள் தொடர்பில் உலகெங்கிலும் பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்துள்ள நிலையில், சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது தொடர்பில் தன்னுடைய முதலாவது நாடாளுமன்ற உரையிலேயே எதிர்கட்சித் தலைவி ஆங் சான் சூ கீ குரல் எழுப்பி இருக்கின்றமை ஒரு நல்ல திருப்பம் என அரசியல் அவதானிகள் கருத்துரைத்துள்ளனர்.


கடையநல்லூர் சமூக சேவை அறக்கட்டளையின் வேண்டுகோள்

ஏழை மாணவர்கள் கல்விக்காக செலவிடப்படும் என்று உறுதி கூறி ,உங்கள் ஜகாத்தை அளித்து ஏழை  மாணவர்கள் வாழ்வில் ஒழி ஏற்றிட கடையநல்லூர் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாகத்தினர் வேண்டுகிறார்கள். நாமும் ,நம் ஜகாத்தை அளித்து அல்லாவின் பொருத்தத்தை பெறுவோமாக !

யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். - (அல்குர்ஆன் 2:277 )

கடையநல்லூர் சமூக சேவை அறக்கட்டளை


காமடி நடிகரின் கண்ணிய சேவை

காமெடி நடிகர் கஞ்சா கருப்புக்கு விரைவில் வெளிவர இருக்கும் கீரிப்புள்ள 50 வது படம். தற்போதும் பத்து படங்களை கையில் வைத்திருக்கிறார். இவருக்கும் சிவகங்கையைச் சேர்ந்த சங்கீதாவுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது கருப்பு&சங்கீதா தம்பதிகளுக்கு தருண் காந்தி என்ற ஒண்ணரை வயது மகன் இருக்கிறான். பிசியோதெரபி டாக்டரான சங்கீதாவுக்கு மருத்துவ சேவை செய்ய ஆசை. அதனால் மனைவிக்காக கஞ்சா கருப்பு மதுரை அருகே உள்ள மேலூரிலும், மதகுபட்டியிலும் மருத்துவமனை கட்டி வருகிறார். கைதேர்ந்த மருத்துவர்களை பணியில் அமர்த்தி இரண்டு மருத்துவமனைகளையும் சங்கீதா நிர்வகிக்க இருக்கிறார். இதில் ஒன்று ஏழைகளுக்காக குறைந்த கட்டண மருத்துவமனையாகவும், மற்றது உயர் தொழில்நுட்பங்களை கொண்ட சொகுசு மருத்துவமனையாகவும் உருவாக்க இருவரும் திட்டமிட்டிருக்கிறார்கள். இதுதவிர கஞ்சா கருப்புவும் சமூக சேவையில் இறங்கியிருக்கிறார். மணப்பாறையில் உள்ள சாந்தி வனம் என்ற அநாதை இல்லத்தில் வளரும் 13 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அநாதை இல்ல குழந்தைகளின் உணவுச் செலவையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். விரைவில் பள்ளிக்கூடம் கட்டும் திட்டம் ஒன்றையும் வைத்திருக்கிறார்.

புதன், 8 ஆகஸ்ட், 2012

தமிழக முஸ்லிம்களின் ஒரே நாளிதழுக்கு வெள்ளி விழா ஆண்டில் சர்வதேச அங்கீகாரம் !

துபையில் வருடந்தோறும் ரமலான் மாதத்தில் நடைபெற்று வரும் துபை சர்வதேச திருக்குர்ஆன் மாநாட்டினையொட்டி திருக்குர்ஆன் மனனப் போட்டி நடைபெற்று வருகிறது. 16 ஆவது ஆண்டாக நடைபெற்று வரும் இப்போட்டி கடந்த 27.07.2012 வெள்ளிக்கிழமை முதல் துபை சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஆடிட்டோரியத்தில் நடைபெற்று வருகிறது.

மணிச்சுடருக்கு சர்வதேச அங்கீகாரம்
துபை சர்வதேச திருக்குர்ஆன் மாநாடு குறித்த செய்திகளை சிறப்புற வெளியிட்டு வரும் ஊடகங்களுக்கு மாநாட்டின் நிறைவு நாளுக்கு முன்னதாக விருது வழங்கி கௌரவிப்படுத்துவது வழக்கம். இவ்வாண்டு திருக்குர்ஆன் மனனப் போட்டி குறித்த செய்திகளை சிறப்புற வெளியிட்டு வரும் மணிச்சுடர் நாளிதழுக்கு விருது வழங்கப்பட்டது.

இவ்விருதினை மணிச்சுடர் நாளிதழின் இயக்குநர்களில் ஒருவரும், அமீரக காயிதெமில்லத் பேரவையின் தலைவருமான குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி அவர்களிடம் விருது வழங்கும் குழுவின் தலைவர் இப்ராஹிம் பு மெல்ஹா வழங்கினார்.

துபை சர்வதேச திருக்குர்ஆன் மாநாட்டுக் குழு மணிச்சுடர் நாளிதழுக்கு வழங்கிய விருதினைப் பெற்ற குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி தெரிவித்ததாவது :

மணிச்சுடர் நாளிதழை சிராஜுல் மில்லத் மர்ஹும் அல்ஹாஜ் ஏ.கே. அப்துஸ் ஸமது சாஹிப் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் உலகெங்கிலும் வாழ்ந்து வரும் தமிழக முஸ்லிம் சமுதாயம் சமுதாயச் செய்திகளை அறிந்து கொள்ள உதவும் வகையில் நாளிதழின் அவசியத்தை உணர்ந்து ’உண்மை சொல்வோம் நன்மை செய்வோம்’ எனும் கருத்தினை மையமாகக் கொண்டு துவக்கினார்.
சிராஜுல் மில்லத்தின் மறைவுக்குப் பின்னர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மணிச்சுடர் நாளிதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்று சிறப்புற நடத்தி வருகிறார்.
மணிச்சுடர் நாளிதழின் வெள்ளி விழா ஆண்டாம் இருபத்தந்தாம் ஆண்டில் இவ்விருது கிடைத்துள்ளது இதன் சமுதாயப் பணிக்கு மட்டுமல்ல சர்வதேச அங்கீகாரமாகும் என்றார்.

இவ்விருதினை மணிச்சுடர் நாளிதழின் நிர்வாகத்திற்கும், நாளிதழ் வளர்ச்சியில் உறுதுணையாக இருந்து வரும் புரவலர்கள், விளம்பரதாரகள், செய்தியாளர்கள், ஏஜெண்டுகள் உள்ளிட்ட அனைவருக்கும் சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.
 
தகவல் :முதுவை ஹிதாயத் 

சுவர்க்கமும் நரகமும் செய்த தர்க்க வாதம்

சுவர்க்கமும் நரகமும் ஒரு முறை தர்க்கவாதத்தில்இறங்கின.
நரகம் நவின்றது: “உன்னத தலைவர்களும் பிரபல பிரமுகர்களும் வீற்றிருப்பது என்னிடம்தான்!”
தன்னிடம் தங்கியிருக்க வருபவர்களின் சமூக அந்தஸ்தைக் கண்டு அகங்கரித்து நரகம் இவ்வாறு சொன்னது. சக்கரவரத்திகளும், பிரபுக்களும், தலைவர்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தனர்.
தன்னிடம் தங்கியிருக்க வருபவர்களை நோக்கியது சுவர்க்கம். அறிமுகமில்லாதவர்களும், ஊரில் இருக்கிற இடமே தெரியாதவர்களும், ஊரில் அவர்களைக் காணவில்லையென்றால் அவர்கள் எங்கே சென்றார்கள் என்று கேட்கப்படாதவர்களும், ஊரில் இருந்தால் கூட ஒரு நிகழ்ச்சிக்கும் அழைக்கப்படாதவர்களும்தான் சுவர்க்கத்தில் இருந்தனர்.
சுவர்க்கம் சொன்னது: “எனக்கு என்ன ஆனது? மக்களில் பலஹீனமானவர்களும், ஒடுக்கப்பட்டவர்களும் தானே இங்கே இருக்கிறார்கள்!”
இந்த விவாதத்தில் அல்லாஹ் குறிக்கிட்டான்.
சுவர்க்கத்திடம் அல்லாஹ் கூறினான்:”நீ என்னுடைய கருணை! என்னுடைய அடிமைகளில் நான் தேர்ந்தெடுத்தவர்களுக்கு உன் வழியாககருணை புரிவேன்.”
நரகத்திடம் அல்லாஹ் இவ்வாறு நவின்றான்: “நீ என்னுடைய தண்டனை! என்னுடைய அடிமைகளில் நான் தேர்ந்தெடுத்தவர்களுக்கு உன் வழியாக நான் தண்டனை கொடுப்பேன்.”
வாழ்க்கையில் ஏற்படும் தோல்வியின் இறுதி உருவம்தான்  நரகம். அங்கீகாரமும், புகழும் தனக்கு உள்ளது என்ற எண்ணம், இருள் கொண்ட மனங்களில் திமிரையும் பெருமையையும் உண்டு பண்ணும். இத்தகைய தீய எண்ணங்கள் இறுதித் தோல்விக்கு ஒரு மனிதனை இழுத்துச் செல்லும் என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
நூஹ் நபி (அலை) அவர்களின் சமூகத்தில் பெரும்பாலோர் அவர்களை நிராகரித்தனர். அடித்தட்டு மக்களாகிய தொழிலாளிகள் சிலர் மட்டும்தான் அவர்களைப் பின்பற்றினர். இந்த நிலையைச் சுட்டிக்காட்டி நிராகரிப்பாளர்கள் நூஹ் நபியை கேலி செய்தனர். ஏகடியம் பேசி எக்களித்தனர். நாங்கள் உம்மை விசுவாசிக்கவா? தரம் தாழ்ந்த ஒரு சிலரல்லவா உம்மோடு இருக்கிறார்கள் என்று அவர்கள் நையாண்டி பேசினர்.
அவர்களைப் பார்த்து அமைதியாக நூஹ் நபி அவர்கள் கூறினார்கள்: “என்னை பின்பற்றுபவர்கள் என்ன தொழில் செய்கின்றார்கள் என்று பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அவர்களது கணக்குகளை பார்க்க வேண்டியது அல்லாஹ் ஒருவன்தான். எனது பணி எத்தி வைப்பது ஒன்றே”
இது நூஹ் நபி (அலை) அவர்களுக்கு மட்டும் நேர்ந்த அனுபவமல்ல. விறகு வெட்டிகளும், துணி துவைப்பவர்களும் இன்னும் இது போன்ற தொழில் செய்பவர்களும் தான் ஈஸா (அலை) அவர்களிடம் சீடர்களாக இருந்தார்கள். மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்த முஹாஜிர்களை இரண்டாவது குடிமக்களாக சித்தரிக்க முனைந்தார்கள் முனாஃபிக்குகள். அல்லாஹ் அவர்களது சூழ்ச்சிகளுக்கு பதிலடி கொடுத்தான்.
வாழ்க்கையின் யதார்த்தங்களை அனுபவித்தறிந்த சாதாரண மக்கள்தான் இறைவனின் கட்டளைகளை ஏற்று நன்மையின் முன்வரிசையில் நிற்பார்கள்.
--கே.எஸ்.அப்துல் காதர்
     சவூதி அரேபியா

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

மீண்டும் துணை ஜனாதிபதியாக ஹமீது முஹம்மது அன்சாரி


தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும்  ஹமீது முஹம்மது  அன்சாரியின் பதவிக் காலம் வருகிற 10-ந்தேதியோடு முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடந்தது.
காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக அமீது அன்சாரி மீண்டும் களமிறங்கினார். அவரை எதிர்த்து பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த்சிங் போட்டிட்டார். பாராளுமன்றத்தின் இரு அவைகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிக்கக்கூடிய இத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள 63-ம் எண் அறையில் செய்யப்பட்டிருந்தன.
காலை 10 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. 

மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே அன்சாரி முன்னணியில் இருந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் அன்சாரி 490 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரைத் எதிர்த்து போட்டியிட்ட ஜஸ்வந்த் சிங் 238 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 8 வாக்குகள் செல்லாதவையாகும்.
இந்த வெற்றியின் மூலம்  ஹமீது முஹம்மது அன்சாரி 2-வது முறையாக துணை ஜனாதிபதியாகிறார். இதற்கு முன் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இரண்டு முறை துணை ஜனாதிபதியாக இருந்துள்ளார்.
வெற்றி பெற்ற அன்சாரி 14-வது துணை ஜனாதிபதியாக 11-ம் தேதி பதவியேற்கிறார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். துணை ஜனாதிபதி பதவியில் அன்சாரி 2017-ம் ஆண்டு வரை நீடிப்பார்.

 நாட்டின் குடியரசு துணைத் தலைவராக 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹமீத் அன்சாரி சிறந்த கல்வியாளராக- எழுத்தாளராக பன்முகத் திறமை கொண்டவர்..
உத்தரப்பிரதேசத்தில் உள்ள காசிப்பூர்தான் சொந்த ஊர். ஆனால் இவர் பிறந்தது கொல்கத்தாவில். 1937ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி பிறந்த ஹன்சாரியின் மாமா முக்தார் அகமத் அன்சாரி காங்கிரஸ் கட்சியில் 1927-ம் ஆண்டு தலைவராக இருந்தார்.
1961ல் இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று வெளியுறவுத் துறையில் பணியில் சேர்ந்தார். ஆஸ்திரேலியாவிற்கான இந்திய தூதர், ஐக்கிய அரபு நாடுகள், ஆப்கானிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கான இந்திய தூதர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர் அன்சாரி. ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்த பிரதிநிதியாகவும் இருந்தார் அன்சாரி.
1984-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார்..மேலும் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 2000-ம் ஆண்டு மே மாதம் முதல் 2002 மார்ச் வரை துணை வேந்தராகப் பணியாற்றினார். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியாமில்லா இஸ்லாமிய பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கவுரவ பேராசிரியராகவும் பணியாற்றினார். தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவராகவும் இருந்தவர் அன்சாரி.
மேற்காசிய விவகாரங்களில் மிகுந்த ஆர்வமுடைய அன்சாரி, பாலஸ்தீனம் உட்பட பல்வேறு மேற்காசிய நாடுகளின் வெளியுறவு விவகாரங்கள் குறித்துப் புத்தகங்கள் எழுதியுள்ளார். ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்ட முன்வரைவு மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது அதன் மீதான விவாதத்தை நள்ளிரவு வரை நீட்டித்து, பின், வாக்கெடுப்பு நடத்தாமலேயே அவையைக் கால வரையின்றி ஒத்திவைத்தார் அன்சாரி. இதற்காகத்தான் ஹமீத் அன்சாரியை மீண்டும் குடியரசு துணைத் தலைவராக்கியிருப்பதாக கூறப்படுவதும் உண்டு.

நெல்லையில் தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம்

நெல்லை மாநகரில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஆழ்குழாய் கிணறுகளும் வறண்டு வருவதால் தண்ணீருக்காக மக்கள் தவிக்கின்றனர். தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் பருவ மழை தொடர்ந்து பொய்த்து வருகிறது. மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்யும் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் நீர்மட்டம் குறைந்து விட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பாபநாசம் அணையில் 80 அடி முதல் 90 அடி வரை தண்ணீர் நிரம்பி காணப்படும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்டதால் அணையில் 35 அடி தண்ணீரே உள்ளது. இந்த தண்ணீரை கொண்டு குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்ய வேண்டியிருப்பதால் முறை வைத்தே தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நெல்லை மாநகருக்கு குடிநீர் விநியோகிக்கும் சுத்தமல்லி, மணப்படைவீடு, திருமலைக்கொழுந்துபுரம்   நீரேற்று நிலையங்களுக்காக ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகளுக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துவிட்டது. இதனால் நெல்லையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகள் முழுமையாக நிரம்புவதில்லை. குறிப்பாக என்ஜிஓ காலனி, பெருமாள்புரம், தியாகராஜநகர், கேடிசிநகர் போன்ற பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் பாதியளவு தண்ணீர்கூட நிரம்புவதில்லை. மேற்கண்ட பகுதிகளில் 4 நாள் 5 நாளைக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

மாநகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, பரணிநகர், கொக்கிரகுளம் உள்ளிட்ட ஆற்றங்கரையோரப்பகுதி மக்களும் குடிநீருக்காக மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே குடிநீர் பிரச்னையை தீர்க்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து கவுன்சிலர் ஜோசப் கூறியதாவது: என்ஜிஓ காலனி பகுதியில் 5 நாளைக்கு ஒரு முறையே குடிநீர் வழங்கப்படுகிறது. லாரி தண்ணீரும் சரியாக கிடைக்கவில்லை. நெல்லை மாநகர பகுதியை சுற்றி முன்பு வயல்வெளிகள் அதிகம் இருந்தன. இதனால் நிலத்தடிநீர் போதிய அளவு கிடைத்தது. தற்போது வயல்வெளிகள் எல்லாம் கட்டிடங்களாக மாறிவிட்டன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து ஆழ்குழாய் கிணறுகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டன. குறிப்பாக என்ஜிஓ காலனி, பெருமாள்புரம் பகுதிகளில் 300 அடி ஆழம்வரை ஆழ்குழாய் கிணறு அமைத்தாலும் தண்ணீர் கிடைக்கவில்லை.
நிலத்தடி நீர் குறைந்து வருவதால் எதிர்காலத்தில் தண்ணீர் உப்புத்தன்மையாக மாறவும் வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாநகராட்சி உரிய திட்டங்களை தீட்டினால்தான் குடிநீர் பஞ்சத்தில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.