Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 2 ஜூன், 2013

தா.பாண்டியனை ராஜ்யசபா வேட்பாளராக்க தியாகி நல்லகண்ணு கடும் எதிர்ப்பு

ராஜயசபா தேர்தலுக்கான வேட்பாளரை முடிவு செய்வதில், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களிடையே நேரடி மோதல் வெடித்தது. இதனால், முடிவெடுக்காமல், மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் முடிந்தது.

காலியாகும், ஆறு எம்.பி., பதவிகளில், நான்கு எம்.பி.,க்களை அ.தி.மு.க., எளிதாக தேர்வு செய்துவிடும். ஒரு எம்.பி., பதவியை, கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்வு செய்ய வேண்டும். இந்நிலையில், எம்.பி.,யாக இருந்து பதவி காலம் முடியும், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி.ராஜாவை, மீண்டும் தேர்வு செய்ய வேண்டும் என, அக்கட்சிக்குள் பரவலான கருத்து நிலவுகிறது. ஆனால், கட்சியின் தமிழக செயலர் தா.பாண்டியன் போட்டியிட விரும்பியதால், யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதில், கட்சிக்குள் சிக்கல் ஏற்பட்டது. இதனால், கடந்த வெள்ளிக்கிழமை நடந்த, கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில், வேட்பாளரை முடிவு செய்யும் பிரச்னை, முக்கிய இடம் பிடித்தது.

அ.தி.மு.க., விரும்பம்: நிர்வாகக் குழுக் கூட்டம் குறித்து, இந்திய கம்யூ., மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கூட்டத்தில், மாநில செயலர் தா.பாண்டியன், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். அதற்கு, சில காரணங்களையும் அவர் கூறினார். தன்னை, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்ததாகவும், அப்போது, "பார்லிமென்ட் தேர்தலில், தமிழகம் முழுவதும் நான் சுற்றுப் பயணம் செய்ய வேண்டும் என, முதல்வர் ஜெயலலிதா விரும்புகிறார். எனவே, ராஜ்யசபா தேர்தலில் என்னை போட்டியிடுமாறு, பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்தார்' என கூறினார்.

கடும் எதிர்ப்பு: பாண்டியனின் பேச்சுக்கு, கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு, கம்யூனிஸ்ட் கட்சியை, மாநிலக் கட்சியொன்று வழி நடத்த முடியாது என, காட்டத்தோடு கூறினர். கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு, பாண்டியனின் கருத்தை கடுமையாக ஆட்சேபித்தார். "தேசிய செயலரான டி.ராஜா, ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார். அவரது பதவிக்காலம் முடிவதால், அவரை மீண்டும் தேர்வு செய்ய வேண்டும். கட்சியின் வேட்பாளரை, கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். தனிப்பட்டவர்களின் விருப்பு, வெறுப்புகளுக்காக, ஒருவரை வேட்பாளராக நிறுத்த முடியாது' என்றும் நல்லக்கண்ணு தெரிவித்தார். இவ்வாறு, அந்த மூத்த நிர்வாகி கூறினார்.



ஆதரவு கேட்க குழு: நல்லக்கண்ணுவின் கருத்துக்கு, கட்சி நிர்வாகிகள் மத்தியில் வரவேற்பு நிலவியதால், ராஜ்யசபா வேட்பாளரை முடிவு செய்யாமல், இந்திய கம்யூ., மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் முடிந்ததாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், வேட்பாளரை முடிவு செய்யாமல், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, ராஜ்யசபா தேர்தலில் இந்திய கம்யூ., வேட்பாளரை ஆதரிக்குமாறு கேட்க, முடிவு செய்துள்ளனர். முதல்வரை சந்திக்க, கட்சியின் மூத்த நிர்வாகிகள் கொண்ட குழுவை அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே, ஜெயலலிதாவை சந்திக்கும் குழுவில் இடம்பெற, தா.பாண்டியன் மறுத்து விட்டதாக, இந்திய கம்யூ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாநில செயலர் என்ற முறையில், முதல்வரை சந்திக்கும் குழுவில், இடம் பெற வேண்டியது பாண்டியனின் கடமை என, சில மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும் தெரிகிறது. இப்பிரச்னைகளால், இந்திய கம்யூ.,வில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக