Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 30 மே, 2013

ராஜ்யசபா தேர்தலால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உட்கட்சி சண்டை?

ஜூலை மாதம் நடக்க உள்ள ராஜ்யசபா தேர்தலால், இந்திய கம்யூ., கட்சியில், உட்கட்சி சண்டை உருவாகியுள்ளது. கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியனின், அணுகுமுறையால், இந்நிலை ஏற்பட்டுள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.,க்கள், தி.மு.க., - கனிமொழி, திருச்சி சிவா, அ.தி.மு.க., - இளவரசன், மைத்ரேயன், காங்., - ஞானதேசிகன், இ.கம்யூ., - டி.ராஜா ஆகியோரது பதவிக் காலம், ஜூலை, 24ம் தேதியுடன் முடிகிறது. காலியாகும், 6 ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கான தேர்தலில், அ.தி.மு.க., 4 எம்.பி.,க்களை பெற்று விடும்; கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், 5 வது எம்.பி.,யையும் வென்று விடும்.
கூட்டணிக் கட்சிகள் பலத்துடன் வெற்றி பெறும், எம்.பி., பதவியை, இந்திய கம்யூ., தேசிய செயலர் டி.ராஜாவுக்கு அளித்து, அவரை மீண்டும் எம்.பி., ஆக்க வேண்டும் என்பது, அக்கட்சியில், பரவலாக உள்ள கருத்து. ஆனால், தனக்கு, எம்.பி., பதவி வேண்டும் என, மாநில செயலர் தா.பாண்டியன் விரும்புவதாக, அக்கட்சி நிர்வாகிகள் சிலர் கூறுகின்றனர்.

கைவிடப்பட்ட ஜெ., சந்திப்பு: ராஜ்யசபா எம்.பி., ஒருவரை தேர்வு செய்ய, 34 எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுக்கள் தேவை. இந்திய கம்யூ., கட்சிக்கு, 8 எம்.எல்.ஏ.,க்கள் தான் உள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியின், 10 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை திரட்டினாலும், மேலும், 16 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை. இதற்கு, அ.தி.மு.க.,வின் ஆதரவு அவசியம். எனவே, அ.தி.மு.க., பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதாவை, இம்மாதம், 20ம் தேதி சந்திக்க, இந்திய கம்யூ., பொதுச் செயலர் பரதன் திட்டமிட்டிருந்தார். இதற்காக, ஜெயலலிதாவைச் சந்திக்க, நேரம் வாங்கித் தர, நேரம் கேட்டிருந்தார். ஆனால், தா.பாண்டியன், வெளிநாடு சென்று விட்டதால், ஜெயலலிதாவை சந்திக்கும் முயற்சியை, பரதன் கைவிட்டார்.

மாநிலக்குழு கூட்டம்: இந்திய கம்யூ., கட்சியின், தமிழ் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம், நாளை, சென்னையில் நடக்கிறது. இக்கூட்டத்தில், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை முடிவு செய்து, மத்திய தலைமைக்கு பரிந்துரைக்க உள்ளதாக, கட்சியின் மூத்த மாநில நிர்வாகி ஒருவர் கூறினார்.
கட்சியின், மத்திய நிர்வாகக் குழுக் கூட்டம், ஜூன், 2 ல், டில்லியில் நடக்கிறது. இதில், தமிழ் மாநில நிர்வாகக் குழு பரிந்துரைக்கும் வேட்பாளரை ஏற்று, இறுதி அறிவிப்பு வெளியாகும் என, தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக