Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

பகுதி நேர பொறியியல் படிப்பு


தமிழக அரசு, பகுதி நேர பி.இ/ பி.டெக்., படிப்புகளுக்கு சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேரமாக இப்படிப்பு வழங்கப்படுகிறது.

விண்ணப்ப படிவத்தை அரசு தொழில்நுட்பக்கல்லூரி, கோவை, தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை, அரசு பொறியியல் கல்லூரி, சேலம், அரசு பொறியியல் கல்லூரி, நெல்லை, அழகப்பா பொறியியல் கல்லூரி, காரைக்குடி, பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, வேலூர், அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர், பி.எஸ்.ஜி., பொறியியல் கல்லூரி, கோவை, கோவை தொழில்நுட்ப கல்வி நிறுவனம், கோவை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், சென்னை ஆகிய இடங்களில் ஏப்.1 முதல் ஏப்.15 வரை பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணமாக எஸ்.சி/ எஸ்.டி., பிரிவினருக்கு 150 ரூபாயும், மற்றவர்களுக்கு 300 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதை “Secretary, Part time B.E. / B.Tech. Admissions,Coimbatore" என்ற முகவரியில் கோவையில் மாற்றத்தக்க வகையில் டிடி யாக எடுத்து, அத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, "The Secretary, Part time B.E. / B.Te-ch. Admissions, Coimbatore Institute of Technology, Coimbatore - 641 014." என்ற முகவரிக்கு ஏப்ரல் 15க்குள் அனுப்ப வேண்டும்.

கல்வி உதவித் தொகை இணையதளங்கள்


மாணவர்கள் தங்கள் படிப்பிற்கு ஆகும் செலவை பல்வேறு முறைகளில் ஈடு செய்கின்றனர். அதில் ஒன்றாக கல்வி உதவித் தொகை விளங்குகிறது.

படிக்கும் மாணவர்களின் கல்வித் திறன், இனம், நாடு, எடுத்திருக்கும் படிப்பு ஆகியவற்ற்ற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு உதவித் தொகைகள் வழங்கபடுகின்றன.

பெரிய பெரிய நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் கூட கல்வி உதவித் தொகையை வழங்கி வருகின்றன. அந்த வகையில் கல்வி உதவித் தொகை குறித்த தகவல்களை தரும் சில இணையதளங்களைப் பற்றி இங்கு அறிவோம்.

www.scholarshipsinindia.com

www.education.nic.in

www.scholarship-positions.com

www.studyabroadfunding.org

www.scholarships.com

www.scholarshipnet.info

www.eastchance.com

www.financialaidtips.org

இந்த இணையதளங்களில், கல்வி உதவித் தொகை குறித்த தகவல்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

"தென் மாநில அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் முதலிடம்"


"உயர்கல்வி சேர்க்கையில், தென் மாநிலங்கள் அளவில், 19 சதவீதத்துடன், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதை, 25 சதவீதமாக உயர்த்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.

சட்டசபையில், விவாதங்களுக்கு பதிலளித்து, அமைச்சர் பழனியப்பன் பேசியதாவது: கடந்த, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில், 18 வயது முதல், 23 வயதிற்கு உட்பட்டவர்கள் எண்ணிக்கை, 13.8 கோடியாக உள்ளது. உயர்கல்வி சேர்க்கை சதவீதம், மேற்கண்ட வயதிற்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

13.8 கோடி பேரும், உயர்கல்வியில் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், 2.07 கோடி பேர் மட்டுமே, உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். இது, இந்திய அளவில், 15 சதவீதமாக உள்ளது. இவர்களில் மாணவர், 17.1 சதவீதமும், மாணவியர், 12.7 சதவீதமாகவும் உள்ளனர்.

உலகளவில், உயர்கல்வி சேர்க்கை சராசரி, 23 சதவீதமாகவும், வளர்ந்த நாடுகளின் சராசரி, 54 சதவீதமாகவும் உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில், 83 சதவீதமும், ரஷ்யாவில், 77 சதவீதமும், இங்கிலாந்தில், 57 சதவீதமும் உள்ளது. சீனாவில், 23 சதவீதம் பேர், உயர்கல்வி பயில்கின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, 72.8 லட்சம் பேர், 18 முதல், 23 வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர். இவர்களில், 13.8 லட்சம் பேர், உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்; இது, 19 சதவீதம். இவர்களில், மாணவர், 20.7 சதவீதமாகவும், மாணவியர், 17.2 சதவீதமாகவும் உள்ளது. இதை, 25 சதவீதமாக உயர்த்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அண்டை மாநிலங்களான கேரளாவில், 13.1 சதவீதமாக உயர்கல்வி சேர்க்கை உள்ளது. இதுவே, கர்நாடகாவில், 18.1 சதவீதமாகவும், ஆந்திராவில், 12.3 சதவீதமாகவும் உள்ளது. தென்னிந்திய மாநில அளவில், 19 சதவீதத்துடன், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. வட மாநிலங்களில் கூட, இந்த சதவீதம் குறைவாகவே உள்ளது.

பீகார் மாநிலத்தில், 11 சதவீதம் பேர், குஜராத்தில், 15.9 சதவீதம் பேர், ராஜஸ்தானில், 9.6 சதவீதம் பேர், உ.பி.,யில், 10.9 சதவீதம் பேர், உயர்கல்வி பயில்கின்றனர். மேற்கு வங்கத்தில், 11.9 சதவீதம் பேர், உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், தமிழகத்தின் உயர்கல்வி சேர்க்கை, 18 சதவீதமாக இருந்தது.

கடந்த இரு ஆண்டுகளில், இலவச, "லேப்-டாப்", ஆண்டு வருவாய் மிக குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, அரசு கல்லூரிகளில், இலவச கல்வி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததால், உயர்கல்வி சேர்க்கை, ஒரு சதவீதம் அதிகரித்து உள்ளது. இவ்வாறு, அமைச்சர் பழனியப்பன் பேசினார்.

வியாழன், 4 ஏப்ரல், 2013

பல்கலை கல்லூரி மாணவர்களுக்கும் "லேப்டாப்" : மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு


சிவகங்கை திருப்பாச்சேத்தி செந்தில்குமார் தாக்கல் செய்த மனு: மதுரை காமராஜ் பல்கலை கல்லூரியில் பி.சி.ஏ.,படிக்கிறேன். மாணவர்களுக்கு இலவச "லேப்டாப்' வழங்க தமிழக அரசு 2011 ஜூன் 3 ல் உத்தரவிட்டது. இதன்படி, 2011-12 ல் எங்கள் கல்லூரி மாணவர்களுக்கு "லேப்டாப்' வழங்கவில்லை. கலெக்டரிடம் மனு அளித்தோம். "லேப்டாப்'கள் வழங்க, மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்.
நீதிபதி கே.கே.சசிதரன் முன், விசாரணைக்கு மனு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், அரசு வக்கீல் என்.எஸ்.கார்த்திகேயன், மனுதாரர் வக்கீல் ஜின்னா ஆஜராயினர்.

அரசு வக்கீல்கள்: பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளில் "லேப்டாப்'கள் வழங்கும் திட்டம், படிப்படியாக செயல்படுத்தப்படுகிறது. பல்கலை கல்லூரி மணவர்கள் இத்திட்டத்தில் இடம் பெறவில்லை. இதுபற்றி தற்போது அரசு ஆலோசிக்கிறது. பல்கலை கல்லூரி மாணவர்களின் விபரங்களை அரசு கோரியுள்ளது. முடிவெடுக்க, அரசுக்கு அவகாசம் தேவை, என்றனர்.

நீதிபதி: மாணவர்களுக்கு உதவ, "லேப்டாப்' திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. அரசு உத்தரவுப்படி, உதவி பெறும் கல்லூரிகளில் படிப்படியாக வழங்கப்படுகிறது. திட்டத்தில், பல்கலை கல்லூரிகளை சேர்க்கவில்லை. திட்டத்தில் சேர்க்க, மதுரை கலெக்டர் பரிந்துரைத்துள்ளார். அரசும் விபரங்கள் கோரியுள்ளது. அவர்களுக்கும் "லேப்டாப்' வழங்க, அரசு பரிசீலித்து வருகிறது. பல்கலை கல்லூரி மாணவர்களுக்கு வழங்க முடியாது என கூறவில்லை. இதில், முடிவெடுக்க அரசுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். ஏனெனில், இது நிதி சம்பந்தப்பட்ட முடிவு.

ஏற்கனவே, அண்ணா பல்கலை மற்றும் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பல்கலை கல்லூரி மாணவர்களுக்கு "லேப்டாப்' வழங்குவது பற்றி உயர்கல்வித்துறை செயலாளர், சிறப்புத்திட்ட அமலாக்கத்துறை செயலாளர் ஏப்.,30 க்குள் முடிவெடுக்க வேண்டும். மதுரை காமராஜ் பல்கலை கல்லூரி மாணவர்களுக்கு கலெக்டர் உதவி செய்வார் என, இக்கோர்ட் நம்புகிறது, என உத்தரவிட்டார்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழி பி.எட். படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம்


தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அஞ்சல்வழியில் பி.எட். படிப்பை வழங்கி வருகிறது. மொத்தம் உள்ள ஆயிரம் இடங்களில் 500 இடங்கள் தமிழ்வழிக்கும், எஞ்சிய 500 இடங்கள் ஆங்கிலவழிக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஜூலை மாதம் 26–ந்தேதி வரை வழங்கப்படும்.

விண்ணப்பங்களை தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட கல்வியியல் கல்லூரிகளில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.500. விண்ணப்பங்களை தபால் மூலம் பெற விரும்புவோர் ‘‘தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை–15 என்ற பெயரில் ரூ.550–க்கான டிடி. எடுத்து சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு கோரிக்கை கடிதத்துடன் அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூலை 26–ந்தேதி ஆகும் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ஆகஸ்டு மாதம் 25–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெறும். வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும். இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய 044–24306658, 24306657 ஆகிய டெலிபோன் எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவில் வேலை இழக்கும் கேரளமாநிலத்தொழிலாளர்களை அழைத்து வர இலவச விமான சேவை


"சவுதி அரேபிய அரசின், புதிய சட்டத்தால், அங்கு பணியாற்றும் இந்திய தொழிலாளர்கள், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேலை இழந்தவர்கள், கேரளாவுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கான விமான பயண கட்டணத்தை, மத்திய அரசே, செலுத்த முன்வந்துள்ளது,'' என, கேரள முதல்வர், உம்மன் சாண்டி கூறினார்.

புதிய சட்டம்:
கேரள முதல்வர், உம்மன் சாண்டி கூறியதாவது, சவுதி அரேபிய அரசு, புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, அங்குள்ள நிறுவனங்கள், வேலை வாய்ப்புகளில், 10 சதவீதத்தை, அந்த நாட்டை சேர்ந்தவர்களுக்கே ஒதுக்க வேண்டும்.

அபாயம்: சவுதி அரேபிய அரசின், இந்த புதிய சட்டத்தால், அங்கு பணிபுரியும் ஏராளமான இந்தியர்கள், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேலை இழக்கும் இந்திய தொழிலாளர்கள், இந்தியா திரும்புவதில், பல்வேறு பிரச்னைகள் உள்ளன. கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான், சவுதி அரேபியாவில், அதிக அளவில் பணிபுரிகின்றனர்.

இதுகுறித்து, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சர், வயலார் ரவியிடம், ஆலோசித்தோம். இதையடுத்து, வேலை இழக்கும் தொழிலாளர்கள், கேரளா திரும்ப விரும்பினால், அவர்களுக்கான விமான பயண கட்டணத்தை, மத்திய அரசே ஏற்கும் என, அவர் தெரிவித்து உள்ளார்.

உதவி மையம்: இந்த விவகாரம் குறித்து, கேரள அமைச்சக கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. கேரளாவைச் சேர்ந்தவர்கள், சவுதியில், வேலை இழந்து திரும்பினால், அவர்களுக்கான மறு வாழ்வு பணிகளை மேற்கொள்வது குறித்தும், அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஒவ்வொரு மாவட்ட, கலெக்டர் அலுவலகங்களிலும், உதவி மையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, உம்மன் சாண்டி கூறினார்.


மாற்றுத்திறனாளி பொறியியல் மாணவர்களுக்கு என்.டி.பி.சி. உதவித்தொகை


என்.டி.பி.சி. நிறுவனம், பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் என 35 பொறியியல் மாணவர்களை தேர்வு செய்து ஆண்டு தோறும் கல்வி உதவித் தொகை வழங்குகிறது.

பாடப்பிரிவு : பொறியியல்

சமூக நோக்கோடு, படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது என்.டி.பி.சி. முழு நேர படிப்பாக பொறியியல் படிக்கும் மாணவர்களை தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் இந்த கல்வி உதவித் தொகையை வழங்கி வருகிறது.

உதவித் தொகை பெறத் தகுதி  : எஸ்.சி./எஸ்.டி., அல்லது உடல் ஊனமுற்ற அல்லது கிராமத்தில் வாழும் மாணவர்கள், இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், பொறியியல் துறையில், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை எடுத்துப் படிக்கும் மூன்றாமாண்டு மாணவர்கள் இந்த உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

முதல் ஆண்டிலும், இரண்டாம் ஆண்டிலும் எந்த அரியர்சும் இல்லாமல் தேர்ச்சி பெற வேண்டும். வேறு எந்த உதவித் தொகையும் பெறாத மாணவராகவும் இருக்க வேண்டும்.

உதவித் தொகை : இரண்டாமாண்டில் இருந்து இறுதி ஆண்டு வரை இந்த உதவித் தொகை வழங்கப்படும். உதவித் தொகை பெற தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும். 20 எஸ்.சி., 10 எஸ்.டி. மாணவர்களுக்கும், 5 உடல் ஊனமுற்ற மாணவர்களுக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : இதற்கு தகுதியான மாணவர்கள், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழை இணைத்து அவரவர்கள் படிக்கும் கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிலையம், இந்த உதவித் தொகையை பெற மாணவர் தகுதியானவர் என்பதை உறுதி செய்து நிறுவனத்திற்கு அனுப்பும்.

மேலும் விபரங்களுக்கு  www.ntpc.co.in என்ற இணையதளத்தை காணவும்.