Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

"தென் மாநில அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் முதலிடம்"


"உயர்கல்வி சேர்க்கையில், தென் மாநிலங்கள் அளவில், 19 சதவீதத்துடன், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதை, 25 சதவீதமாக உயர்த்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.

சட்டசபையில், விவாதங்களுக்கு பதிலளித்து, அமைச்சர் பழனியப்பன் பேசியதாவது: கடந்த, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில், 18 வயது முதல், 23 வயதிற்கு உட்பட்டவர்கள் எண்ணிக்கை, 13.8 கோடியாக உள்ளது. உயர்கல்வி சேர்க்கை சதவீதம், மேற்கண்ட வயதிற்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

13.8 கோடி பேரும், உயர்கல்வியில் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், 2.07 கோடி பேர் மட்டுமே, உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். இது, இந்திய அளவில், 15 சதவீதமாக உள்ளது. இவர்களில் மாணவர், 17.1 சதவீதமும், மாணவியர், 12.7 சதவீதமாகவும் உள்ளனர்.

உலகளவில், உயர்கல்வி சேர்க்கை சராசரி, 23 சதவீதமாகவும், வளர்ந்த நாடுகளின் சராசரி, 54 சதவீதமாகவும் உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில், 83 சதவீதமும், ரஷ்யாவில், 77 சதவீதமும், இங்கிலாந்தில், 57 சதவீதமும் உள்ளது. சீனாவில், 23 சதவீதம் பேர், உயர்கல்வி பயில்கின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, 72.8 லட்சம் பேர், 18 முதல், 23 வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர். இவர்களில், 13.8 லட்சம் பேர், உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்; இது, 19 சதவீதம். இவர்களில், மாணவர், 20.7 சதவீதமாகவும், மாணவியர், 17.2 சதவீதமாகவும் உள்ளது. இதை, 25 சதவீதமாக உயர்த்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அண்டை மாநிலங்களான கேரளாவில், 13.1 சதவீதமாக உயர்கல்வி சேர்க்கை உள்ளது. இதுவே, கர்நாடகாவில், 18.1 சதவீதமாகவும், ஆந்திராவில், 12.3 சதவீதமாகவும் உள்ளது. தென்னிந்திய மாநில அளவில், 19 சதவீதத்துடன், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. வட மாநிலங்களில் கூட, இந்த சதவீதம் குறைவாகவே உள்ளது.

பீகார் மாநிலத்தில், 11 சதவீதம் பேர், குஜராத்தில், 15.9 சதவீதம் பேர், ராஜஸ்தானில், 9.6 சதவீதம் பேர், உ.பி.,யில், 10.9 சதவீதம் பேர், உயர்கல்வி பயில்கின்றனர். மேற்கு வங்கத்தில், 11.9 சதவீதம் பேர், உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், தமிழகத்தின் உயர்கல்வி சேர்க்கை, 18 சதவீதமாக இருந்தது.

கடந்த இரு ஆண்டுகளில், இலவச, "லேப்-டாப்", ஆண்டு வருவாய் மிக குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, அரசு கல்லூரிகளில், இலவச கல்வி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததால், உயர்கல்வி சேர்க்கை, ஒரு சதவீதம் அதிகரித்து உள்ளது. இவ்வாறு, அமைச்சர் பழனியப்பன் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக