Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 3 மார்ச், 2013

பாபநாசம் அணையில் விரைவில் படகுபோக்குவரத்து மீண்டும் துவங்க முடிவு


திருநெல்வேலி மாவட்டம்  காரையார் பாபநாசம் அணையில் கடந்த சுமார் 6 மாதங்களுக்கு முன் பல்வேறு காரணங்களால் படகுபோக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் படகு தொழிலை நம்பியிருந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து படகு உரிமையாளர்கள் அரசாங்கம் மற்றும் வனத்துறையினரிடம் பாபநாசம் அணையில் படகு இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று தொடர்ந்துகோரிக்கை வைத்தனர். இந்நிலையில்நேற்று இது தொடர்பான இரண்டாவது உள்ளூர் ஆலோசனைக்குழு கூட்டம் முண்டந்துறை வனச்சரக அலுவலகத்தில் நடந்தது.

புலிகள் காப்பகம் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மல்கானி தலைமை வகித்தார். கூட்டத்தில் அம்பை எம்.எல்.ஏ., சுப்பையா, மாவட்ட டிஆர்ஓ உமாமகேஸ்வரி, கன்னியாகுமரி கலெக்டர் நாகராஜன், நெல்லை மாவட்ட புலிகள் காப்பக கள இயக்குநர் சுப்ரதமகாபத்ரா, மாவட்ட வன அலுவலர் பத்மா, கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் ரிட்டோதிரியாஸ்,சேரன்மகாதேவி சப்-கலெக்டர்ரோகிணி, அம்பை தாசில்தார் சரஸ்வதி, உதவி வனப்பாதுகாவலர் ஆனந்த்குமார், அம்பை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் குருசாமி, களக்காடு புலிகள் காப்பகம் துணை இயக்குநர்சேகர், ஆலங்குளம் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், வி.கே.புரம் நகராட்சி தலைவி மனோன்மணி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் நலத்துறை முகம்மது ஹைதர்அலி, மணிமுத்தாறு பஞ்.,தலைவர் சிவன்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் படகு உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலன்கருதி பாபநாசம் அணையில் படகு இயக்குவது என்றும், படகை இயக்கும்போது அணைப்பகுதி தண்ணீரில் டீசல் கசிவு கூடாது, படகில் சைலன்சரை பொருத்தி இயக்கவேண்டும், மண்ணெண்ணெய் ஊற்றி படகு இயக்க கூடாது, படகு அணையில் ஓட இருப்பதால் தண்ணீருக்குள் கழிவு ஏதும் கலக்காமல் இருக்கவேண்டும் உட்பட பல்வேறு நிபந்தனைகளுடன் பாபநாசம் அணையில் படகுபோக்குவரத்து இன்னும் சில நாட்களில் தொடரலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் குதிரைவெட்டி வரை சுற்றுலா பயணிகளை அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மல்கானி , மாவட்ட டிஆர்ஓ உமாமகேஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது:- நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி நதி உற்பத்தியாகி மக்களுக்கு பயன்பட்டுக் கொண்டிருப்பது கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். அதேநேரத்தில் தண்ணீரும் மிகவும் மதிப்பு மிக்கது. இப்பகுதியில் வாழும் மக்களின் பிரச்னைகளையும் முக்கியமாக கருத்தில் கொண்டு பாபநாசம் அணையில் படகுபோக்குவரத்து துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கு வாழும் மலை வாழ் மக்களுக்கும் அணையில் படகு இயக்க நியாயமான வாய்ப்பு கொடுக்கவேண்டும். மொத்தம் 24 படகுகள் ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கின்றன. இன்னும் சுமார் 3 நாட்களில் அணையில் படகுபோக்குவரத்து துவங்கப்படும். அப்போது படகு உரிமையாளர்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கூட்ட முடிவில் காரையார் காணிக்குடியிருப்பு பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் அம்பை எம்.எல்.ஏ.,சுப்பையாவை முற்றுகையிட்டு பாபநாசம் அணையில் இயக்கப்படும் படகுகளில் எங்களுக்கும் உரிமைவேண்டும். இதுகுறித்து நீங்கள் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கூறினர். இதனை தொடர்ந்து ஏற்கனவே அணையில் படகுபோக்குவரத்து நடத்தும் உரிமையாளர்களுக்கும், பழங்குடி காணியின மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டம் எம்.எல்.ஏ., சுப்பையா தலைமையில் நடந்தது.

அப்போது இரு தரப்பினரும் ஒருவருக்குகொருவர்பேசி நல்ல முடிவு எடுக்கவேண்டுமென்று எம்.எல்.ஏ., சுப்பையாகேட்டுக் கொண்டார். இந்நிலையில் பழங்குடியின மக்களுக்கு படகு ஓட்டுவதற்கு உரிமை கிடைக்கவில்லை என்றால் நாங்கள் அணையில் படகை ஓட்டவிமாட்டோம் என்றும் காணியின மக்கள் தெரிவித்தனர்.

இந்திய நாட்டின் மிகப்பெரிய "ஷாப்பிங் மால்" கொச்சியில் 25 லட்சம் சதுரடியில் ரெடி


நாட்டின், மிகப் பெரிய வணிக வளாகம், 25 லட்சம் சதுரடி பரப்பளவில், கொச்சியில் தயாராகி விட்டது. இந்த வளாகம், வரும், 10ம் தேதி திறக்கப்படுகிறது. கேரளாவின் வர்த்தக தலைநகரான, கொச்சி, எடப்பள்ளி பகுதியில், "லூலு மால்" என்ற பெயரில், வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் செயல்படும், மிகப் பெரிய வணிக நிறுவனமான, "லூலு' சென்டர்களின், நிர்வாக இயக்குனர், யூசுப் அலிதான், இந்த வணிகவளாகத்தை கட்டியுள்ளார். மொத்தம், 17 ஏக்கர் நிலத்தில், 25 லட்சம் சதுரடியில், 1,600 கோடி முதலீட்டில், மூன்று தளங்களுடன் இந்த வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, நகைகள், துணிகள், மின்னணு சாதனங்கள், காலணிகள், வங்கி கிளைகள், ஏ.டி.எம்., மையங்கள், ஒன்பது தியேட்டர்கள், 27 உணவகங்கள், குழந்தைகள் விளையாட, 55 ஆயிரம் சதுரடியில் கம்ப்யூட்டர் விளையாட்டுக்கள் உட்பட பல வகையான, பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த வணிக வளாகத்தில், மாநிலத்திலேயே அதிகளவி லான, ஒன்பது தியேட்டர்களை, பி.வி.ஆர். நிறுவனம் அமைத்துள்ளது. தினமும் ஒரு லட்சம் பார்வையாளர்கள் இங்கு வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. பிரமாண்டமான இந்த வணிக வளாகம், வரும், 10ம் தேதி திறக்கப்படுகிறது.

ஆசிரியர்களுக்கான பயிற்சி ரத்து: மத்திய அரசின் திட்ட நிதியை வீணாக்கும் தமிழக அரசு


அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட இருந்த பயிற்சிகள் ரத்து செய்யப்பட்டதால், அதற்கான நிதி வீணாகும் நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தில் மத்திய அரசின் நிதியுதவியுடன், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, அனைவருக்கும் கல்வி இயக்ககமும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இதில் ஆசிரியர்களுக்கு பயிற்சி, கட்டமைப்பு வசதி, கல்வி முறையில் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

கடந்த ஜனவரி கடைசி வாரத்தில் துவங்கி, ஃபிப்ரவரி மூன்றாம் வாரம் வரை, ஒன்பது, பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பாடவாரியாகவும், நடுநிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகளும் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.

அரசு பள்ளிகளில், ஒன்பது, பத்தாம் வகுப்புக்கு செய்முறை தேர்வும், பொதுத்தேர்வும் நடத்தப்பட உள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி கல்வித்திறனை பாதிக்கும் என்பது குறித்து காலைக்கதிரில் செய்தி வெளியானது.இதனால் தமிழக அரசு அனைத்து பயிற்சிகளையும் ரத்து செய்து உத்தரவிடப்பட்டது.

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில், 40 கோடி ரூபாய்க்கும் அதிக அளவில் ஆசிரியர் பயிற்சிக்கென நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை மார்ச் 31ம் தேதிக்குள் பயன்படுத்தாவிட்டால், மீண்டும் மத்திய அரசுக்கு திரும்ப வழங்க வேண்டியிருக்கும்.

அரசு பள்ளியில், எட்டாம் வகுப்பு வரை, உள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சியை ரத்து செய்திருக்க வேண்டியதில்லை எனவும், அதனால், அதற்கான நிதி விரயமாவதாகவும் கல்வி அலுவலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கல்வித்துறை அலுவலர் கூறியதாவது:திட்ட நிதியை பொறுத்தவரை, அந்த நிதியாண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மார்ச், 31ம் தேதிக்குள் செலவழிக்காவிட்டால், அவற்றை மீண்டும் பயன்படுத்த முடியாது. இதை கருத்தில் கொண்டு, ஆசிரியர்களுக்கான பயிற்சியை ஜூன் மாதம் முதல், டிசம்பர் மாதத்துக்குள் வழங்காமல், தேர்வு நேரத்தில் நடத்த திட்டமிடுவதும், அதை ரத்து செய்வதும் என, அதற்கான நிதியை பயன்படுத்தவே முடியாத நிலை ஏற்படுகிறது.

அடுத்த ஆண்டிலாவது முன்கூட்டியே பயிற்சியை நடத்தி, நிதி வீணாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சனி, 2 மார்ச், 2013

முறையான பயன்பாட்டுச் சான்று இல்லாததால் எம்.பி. தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி ரூ. 3,003.5 கோடி நிறுத்திவைப்பு


மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வியொன்றுக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் மத்திய திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் ஸ்ரீகாந்த்குமார் ஜேனா கூறியது: 2013-ஆம் ஆண்டு மார்ச் இறுதிவரையிலான எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் ரூ. 3,003.5 கோடி மதிப்பிலான நிதி வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள் தொடர்பாக அளிக்கப்பட வேண்டிய பயன்பாட்டுச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால் நிதி வழங்குதல் நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.

எம்.பி. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு எம்.பி. தமது தொகுதியில் ஏதேனும் ஒரு திட்டத்தைப் பரிந்துரை செய்யலாம். அதனை செயல்படுத்துவது அந்த தொகுதி உட்பட்ட மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பாகும்.

ஒரு மக்களவைத் தொகுதி உறுப்பினர் தமது தொகுதியில் ஆண்டுக்கு ரூ.5 கோடி வரையிலான மேம்பாட்டுத் திட்டம் எதையேனும் மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்யலாம். மாநிலங்களவை உறுப்பினரைப் பொருத்தவரை, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்தின் ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பரிந்துரை செய்ய இயலும்.

மாநிலங்களவை, மக்களவைக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர் நாட்டின் எந்தப் பகுதியிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அவருக்கு விருப்பமான மேம்பாட்டுத் திட்டம் ஒன்றை பரிந்துரை செய்யலாம்.

 மேம்பாட்டுத் திட்ட நிறைவேற்றம் குறித்து பயன்பாட்டுச் சான்றிதழை அந்த உறுப்பினர் வழங்க வேண்டும். ஒரு பணி குறித்துப் பயன்பாட்டுச் சான்று வழங்கப்படாவிட்டால் பின்னர் அந்த உறுப்பினர் அடுத்துப் பரிந்துரைக்கும் வேறு திட்டங்களுக்கு நிதி வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படும்.

நீலகிரி அணைகளில் தண்ணீரின் அளவு குறைகிறது : மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்


நீலகிரியில், மின்சாரம் உற்பத்தி செய்ய பயன்படும் முக்கிய அணைகளில், தண்ணீரின் அளவு குறைந்து வருவதால், மின் உற்பத்திக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள, 13 மின் நிலையங்கள் மூலம், தினமும், 833 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்தாண்டு, போதுமான மழை பெய்யாத நிலையில், தென்மேற்கு
மற்றும் வடகிழக்கு பருவமழையும் பொய்த்தது. இதனால், மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும், அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட முக்கிய அணைகளில், தண்ணீர் அளவு வெகுவாக குறைந்து காணப்படுகிறது.

மழை இல்லையே! : இந்த அணைகளை நம்பியுள்ள, குந்தா, கெத்தை, பரளி, பில்லூர் உள்ளிட்ட மின் நிலையங்களில், தினமும், 515 மெகா வாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.

தற்போது, அணைகளில், தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே வருவதால், மின் உற்பத்தியின் அளவும் குறைந்துள்ளது. அதே போல், பைக்காரா மின் உற்பத்தி திட்டத்தின் கீழ் உள்ள முக்கிய அணைகளிலும், தண்ணீர் அளவு குறைந்து வருகிறது. இதனால், அங்கும் மின்சாரம் உற்பத்தி செய்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ""மழை இல்லாததால், அணைகளில், தண்ணீர் அளவு வெகுவாக குறைந்து, மின் உற்பத்தியில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. அணைகளில் உள்ள தண்ணீரின் அளவு, இன்னும் ஓரிரு வாரத்திற்கு மட்டுமே தாங்கும். வரும் நாட்களில் மழை பெய்தால் தான், தடைஇல்லாமல் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்'' என்றார்.

பார்சன்ஸ் வேலியால் பாதகம் வருமா?:
 மின் உற்பத்திக்கு பயன்படும் அணைகளில், பார்சன்ஸ் வேலி அணையின் தண்ணீர், ஊட்டி குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. இந்த அணையில், தற்போது, 40 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. வரும் நாட்களில், இதில் இருந்து, மின்சார உற்பத்திக்காக தண்ணீர் எடுத்தால், ஊட்டியில் குடிநீர்தட்டுப்பாடு ஏற்படும். இன்னும் இரண்டு வாரங்களில், கோடை சீசன் துவங்கவுள்ள நிலையில், உள்ளூர் மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் குடிநீர் வழங்கு வதில், நகராட்சி நிர்வாகம் திணற வேண்டிய நிலை ஏற்படும். இதை உணர்ந்து, "பார்சன்ஸ்வேலி அணையில், குறைந்தபட்சம், 30 அடி தண்ணீரை தொடர்ந்து இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், மின் வாரியத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதே வேளை, தண்ணீரை எடுக்காமல் இருந்தால், மின்சார உற்பத்தி பாதிக்கும் அபாயமும் உள்ளது. மழை வந்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

50 கிராம மக்களை மிரட்டி வரும் யானைக் கூட்டம்!


திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியில் இருந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு யானைக் கூட்டம் கீழ் பகுதிக்கு இறங்கியது. கல்வராயன் மலையடிவாரமான ரெங்கப்பனூர் கிராமத்தில் இறங்கிய யானைக்கூட்டம் பாப்பாத்தி மூலை, மூணாம் சுனை, மல்லாபுரம், பாவளம், அரசம்பட்டு, புதுப்பாளப்பட்டு, செட்டியாறு, பாச்சேரி, மட்டப்பாறை, எருத்தவாய் நத்தம், பரிகம், அக்ராபாளையம், மூங்கில்பாடி, சின்னசேலம் இந்த கிராமங்களில் ஆங்காங்கே கடந்த 15 நாட்களாக கரும்பு, வாழை, வெங்காயம், நெல் போன்ற விவசாய பொருட்களை சேதப்படுத்தியது.

    எடுத்தவாய் நத்தம் கிராமத்தில் விஜயா என்பவர் வீட்டினை இடித்தது. வாட்டர் டேங்கில் உள்ள தண்ணீரை குடித்துவிட்டு டேங்கை சேதப்படுத்தியது. மாற்றுத்திறனாளியான ஹரிதாஸ் தனது வயலை கண்காணிக்க சென்றுள்ளார். அப்போது யானைக் கூட்டம் நிற்பதை பார்த்து அலறி சத்தம் போட்டுள்ளார். பொதுமக்கள் வருவதற்குள் யானைக் கூட்டம் அவரை மிதித்து கொன்றது.

    இதையடுத்து டாக்டர் மனோகரன் தலைமையிலான மாவட்ட வன அலுவலர் ஜெயராமன், வனபாதுகாவலர் கருணைப்ரியா, ரேஞ்சர், கொளஞ்சியப்பன், சேகர் உட்பட 11 பேர் கொண்ட குழுவினர் யானைக் கூட்டத்தை பின்தொடர்ந்தனர். யானைக் கூட்டம் மக்கள் வாழும் பகுதிக்கு வந்தது ஏன் என்றும், அதனை திருப்பி காட்டுக்குள் கொண்டு சென்று விடுவதை பற்றியும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    கோமுகி ஆற்றைக் கடந்து பொட்டியம் என்ற கிராமத்தை நோக்கி யானைக் கூட்டம் வந்தது. பரிகம் கிராமத்தில் வசிக்கும் வசந்தி என்பவர் வீட்டை முற்றிலும் சேதப்படுத்தியது. பீரோ, கட்டில், டிவியை நொறுக்கியது. சாமிதுரை என்பவர் களத்தில் வைத்திருந்த நெல் மூட்டைகளை சேதப்படுத்தியது. மேலும் 8 பசுமாடுகள், கன்றுக்குட்டிகளை மிதித்து கொன்றது. பின்னர் அக்கராபாளையம் நோக்கி சென்றது. அங்கு பொதுமக்கள் யானைக் கூட்டத்தை உள்ளே நுழையக் கூடாது என்பதற்காக வெடி வெடித்தனர்.

    பின்னர் அந்த யானைக் கூட்டம் சின்னசேலம் நோக்கி வந்தது. அங்கும் பொதுமக்கள் வெடி வெடித்தனர். இதையடுத்து மூங்கில்பாடி நோக்கி சென்றது.

    யானையை பின் தொடர்ந்து சென்ற வனத்துறையினரிடம் நாம் விசாரித்தபோது, காட்டுக்குள் தண்ணீர் இல்லை. பசுமை இல்லை. அதனால்தான் வெளியே வருகிறது. மூத்த யானைகள் கடந்த காலங்களில் சென்ற வழியை ஞாபகப்படுத்தி தற்போது அதே பாதையில் தான் செல்கிறது. காலப்போக்கில் யானை வழிதடத்தில் நம் மக்கள் விவசாயம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். நாங்கள் யானையை திருப்பிக்கொண்டு போய் காடுகளில் விட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோ என்றனர்.

வெள்ளி, 1 மார்ச், 2013

எஸ்.பி.,க்கு வெடிகுண்டு மிரட்டல் : இன்ஜினியர் செண்பகராஜ் கைது


குமரி மாவட்ட எஸ்.பி.,க்கு, தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கம்ப்யூட்டர் இன்ஜினியரை, போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்ட எஸ்.பி., மணிவண்ணனுக்கு,நேற்று முன்தினம் வந்த இ-மெயிலில், நாகர்கோவில், கன்னியாகுமரியில், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, அப்பகுதிகளில் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

அடுத்த சிறிது நேரத்தில், மற்றொரு இ-மெயில் வந்தது. அதில், நாகர்கோவில் ஸ்டேட் பேங்க்கில், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், எந்த நேரத்திலும், அது வெடிக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதை தொடர்ந்து, டி.எஸ்.பி. ரத்னவேல் தலைமையில் போலீசார், ஸ்டேட் பேங்க் சென்றனர். ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை வெளியேற்றினர். மோப்பநாய் உதவியுடன், வெடிகுண்டு நிபுணர்கள், வங்கி முழுவதும் சோதனை செய்தனர். எனினும், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. மிரட்டல் விடுத்தவர் பற்றி, போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இ-மெயில், மொபைல் போன் மூலம் வந்துள்ளதை, சைபர் கிரைம் போலீசார் கண்டு பிடித்தனர். பின், பூதப்பாண்டி அருகே, அழகியபாண்டிபுரம் டவரில் இருந்து வந்துள்ளதை உறுதி செய்த போலீசார், சம்பந்தப்பட்ட நபரை, உடனடியாக கைது செய்தனர்.

விசாரணையில், மிரட்டல் விடுத்தவர் செண்பகராஜ், 22, என்றும், கம்ப்யூட்டர் இன்ஜினியரான, இவர் நண்பரை சிக்க வைக்க, அவரது இ-மெயில் முகவரியில் இருந்து மிரட்டல் விடுத்துள்ளதாக, முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இவரிடம், விசாரணை நடைபெற்று வருகிறது.