Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 25 டிசம்பர், 2012

குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள்... தொலைக்காட்சிகளுக்கு கிடுக்கிப்பிடி


"குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில், வயதுக்கு வந்தோரின் நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் வகையில், குழந்தைகள் நடனம் ஆடுவது, பாட்டு பாடுவது போன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கூடாது" என, தொலைக்காட்சி சேனல்களுக்கு, ஒளிபரப்பு குறை தீர்வு கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

தொலைக்காட்சி சேனல்களில், நெடுந்தொடர்கள் என்ற பெயரில் கலாசார சீர்கேடு; ரியாலிட்டி ஷோ என்ற பெயரில், பங்கேற்பவர்களை வேதனைப்படுத்துவது என, விமர்சனங்கள் எழுந்து கொண்டு இருக்கின்றன. பொழுதுபோக்கு சேனல்களில், குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், குழந்தைகளின் வயதுக்கு மீறிய நடவடிக்கைகளில், ஈடுபடுவது போல் காட்சிகள் வருவது கவலையளிக்கிறது.

வயதுக்கு வந்தோரின் நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் வகையில், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்டு, காதல் பாட்டுக்கு நடனம் ஆடுவது, பாட்டுப் பாடுவது போன்றவற்றில் பங்கேற்கச் செய்கின்றனர். பெரியவர்களுக்குரிய பாடலையும், நடனத்தையும் அதே போன்றே குழந்தைகள் பாடுவதும், ஆடுவதும் கவலையளிக்கிறது.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் சேனல்களில் வருவதைத் தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்பு சார்பில், மத்திய அரசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற புகார்களை களைவதற்காகவும், சேனல்களில் என்ன மாதிரியான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பலாம் என்பதற்கான ஆலோசனை வழங்குவதற்காகவும், ஒளிபரப்பு தொடர்பான குறைகள் தீர்வு கவுன்சில் அமைக்கப்பட்டது.

அனைத்து சேனல்கள் உறுப்பினர்களாக உள்ள, இந்திய ஒளிபரப்பு அறக்கட்டளையின் சார்பில் அமைக்கப்பட்டது தான் இந்த கவுன்சில். இந்த கவுன்சில், அனைத்து பொழுதுபோக்கு சேனல்களுக்கும் விடுத்துள்ள வேண்டுகோளில் கூறியிருப்பதாவது:

குழந்தைகள் தொடர்பான நிகழ்ச்சிகளில், குறிப்பாக, 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், வயதுக்கு மீறிய செயல்களில், குழந்தைகள் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும். வயதுக்கு வந்தோர் சம்பந்தப்பட்ட பாடல், ஆடல் காட்சிகளை போல், பிரதிபலிக்கும் வகையில் குழந்தைகள் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும்.

காதல் பாடல், குத்துப் பாட்டு போன்றவற்றில் குழந்தைகள் ஆடுவதையோ, பாடுவதையோ அனுமதிக்கக் கூடாது. பெரியவர்களை போன்று, குழந்தைகள் உடைகளை அணிவது, ஒப்பனை செய்வதைத் தவிர்க்க வேண்டும். வயது வந்தோர் மட்டுமே பங்கேற்கக் கூடிய நிகழ்ச்சிகளில், 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பங்கேற்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மன பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மற்றும் அவர்களின் தன்னம்பிக்கைக்கு ஊறு விளைவிக்கக் கூடிய ரியாலிட்டி ஷோக்களில், குழந்தைகள் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும். நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குழந்தைகளின் படிப்புக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில், நிகழ்ச்சிகளின் தயாரிப்புகளை வைத்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக அவர்களின் மன நலம், உடல் நலம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, தொலைக்காட்சி சேனல்களுக்கு, கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததால் கடும் பாதிப்பு கருகிய பயிர்களுடன் விவசாயிகள் கண்ணீர்


பருவ மழை பொய்த்ததால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கருகிய பயிர்களுடன் நெல்லையில் விவசாயிகள் குவிந்தனர்.

நெல்லையில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் திருவேங்கடம் புதுப்பட்டி பகுதி விவசாயிகள் பலர் கருகிய நெற் பயிர்களுடன் முற்றுகையிட்டனர். தொடர்ந்து அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
எங்கள் பகுதி விவசாயிகள் மானாவாரி விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலத்தில் மக்கா சோளம், பருப்பு வகைகள் உட்பட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தது. பருவ மழை பொய்த்ததால் பயிர்கள் வாடி கருகி விட்டன.

வயல்களில் இரண்டு முறை விதை விதைத்தும் பயிராகி மகசூல் வருவதற்கு முன்பே பயிர்கள் அனைத்தும் கருகி விட்டன. ஒரு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. இதனால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்ளுக்கு அரசின் வறட்சி நிவாரண நிதியை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டில்லியில் பாசிச சக்திகளின் பின்னணியில் நடைபெற்ற போராட்டத்தில் காயமுற்ற போலீஸ் சுபாஷ் தோமர் மரணம்


புதுடெல்லியில் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டதற்கு எதிராக என்ற போர்வையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் காயம் அடைந்த போலீசார் மரணம் அடைந்தார்.

கடந்த 16ந் தேதி அன்று டெல்லியில் ஓடும் பஸ்சில் 6 பேர் கும்பலால் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட மருத்துவ மாணவி, உயிருக்கு ஆபத்தான நிலையில் டெல்லி சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு என்ற போர்வையில் பாசிச சக்திகளின் பின்னணியில் டெல்லியில் இது தொடர்பாக தொடர்ந்து  பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்தது .

புதுடெல்லியில்,   இந்தியா கேட் பகுதியில் போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள், போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வெடித்தும்  போராட்ட குழுவினரை விரட்ட முயன்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் இரு தரப்பிலும் பலர் காயம் அடைந்தனர்.

இதில் சுபாஷ் தோமர் என்ற காவலரும் பலத்த காயம் அடைந்தார். உடனே அவர் மீட்கப்பட்டு டெல்லியில் உள்ள மனோகர் லோகியா என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும், உணர்வு திரும்பாத நிலையில் உள்ள காவலரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுபாஷ் தோமர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போராட்டத்தில் போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் விபரம் வீடியோ ஆதாரங்கள் மூலம் பெறப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், போலீசாரை காயப்படுத்தியவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இவரது மரணம் குறித்து மறைந்த போலீஸ்காரர் மகன் தீபக் கூறுகையில்: என்து தந்தை பொறுப்பானவர். இவர் மாணவர்களின் அமைதியை தான் நிலைநாட்ட முயற்சித்தார், ஆனால் அவர் மீது கொடும் தாக்குதல் நடத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். இவர் மரணத்திற்கு, போராட்டக்காரர்களே முழுப்பொறுப்பு. இத்துடன் இவரை போலீசாரை தவிர யாரும் வந்து ஆறுதல் கூற வரவில்லை. இது மிகவும் கவலையளித்தது. எனது தந்தையை திருப்பி தாருங்கள் என்றார் கண்ணீருடன்.

திங்கள், 24 டிசம்பர், 2012

பள்ளி வகுப்பறையிலேயே மாணவர்களுக்கு பல் சிகிச்சை


வகுப்பறைகளுக்கே சென்று அரசு பள்ளி மாணவர்களுக்கு பல் நோய் சிகிச்சை அளிக்க, சுகாதாரத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதே இடத்தில் சிகிச்சை அளிக்கின்றனர். முடியாத பட்சத்தில், அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் 3 முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பல் தொடர்பான நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆரம்ப சுகாதாரத்துறை இணை இயக்குனர்கள் தலைமையில் டாக்டர், நர்சுகள் அடங்கிய குழுவினர், ஒவ்வொரு அரசு பள்ளியின் வகுப்பறைகளுக்கு செல்ல வேண்டும்.

குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி,பரிசோதிக்க வேண்டும். பல் ஓட்டை, சொத்தை பல் உட்பட பிரச்னைகளை கண்டறிந்து, அதே இடத்தில் சிகிச்சை அளிக்கின்றனர். முடியாத பட்சத்தில், அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைப்பர்.

சிவகங்கை சுகாதார பணிகள் துணை இயக்குனர் அகல்யா கூறுகையில், "அரசின் இந்த புதிய சிகிச்சை முறையால் மாணவர்களின் பல் நோய் சரி செய்யப்படும். பற்களை சுத்தமாக வைத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறோம். பெற்றோர்களும் தங்களது குழந்தைகளின் பற்களை சுத்தமாக வைப்பதற்கு அறிவுரை கூற வேண்டும்' என்றார்.

மதவாத சக்தியான ஜெயலலிதாவிடமிருந்து எந்த நன்மையும் சமுதாயத்திற்கு விளையப்போவதில்லை -- பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன்


நேற்று (23/12/2012)  லால்பேட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகத் தலைவர் பேராசிரியர் .கே.எம்.காதிர் மொஹிதீன் நிருபர்களிடம் கூறும்போது ,

இன்று இளம்பெண்கள் கற்பழிகப்படுவது அதிகரித்துள்ளது வேதனையளிக்கிறது,கற்பழிப்புக்கு தூக்கு தண்டனை என்று மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் அதை நாங்கள் முதலில் வரவேற்போம். கற்பழிப்புக்குரிய இஸ்லாமிய தண்டனையை நாங்கள் சொன்னபோது அதை காட்டுமிராண்டித் தனம் என்று சொன்னார்கள் பலர்.ஆனால் இன்று கற்பழிப்பவனுக்கு மரண தண்டனை தர வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்துவதை பார்க்கும் போது நாங்கள் சொன்ன கருத்துக்கு வலிமை கிடைத்திருப்பதாகவே கருதுகிறோம்.

டெல்லியில் இடிக்கப்பட்ட பள்ளிவாசல் மீண்டும் கட்டப்படும் என்று அறிவித்த டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் போன்று ,இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜிதை,இடிப்பதற்கு காரணமான அத்வானி,முரளி மனோகர் ஜோஷி போன்றவர்கள்  கட்டித்தர முன் வர வேண்டும் .

மேலும்,உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் கோவை சிறைவாசி அபுதாகிரை நீதிமன்ற உத்தரவு வந்தபின்பும் பரோலில் விட மறுக்கும் தமிழக அரசை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வன்மையாக கண்டிக்கிறது .

மதவாத சக்தியான ஜெயலலிதாவிடம் இருந்து எந்த நன்மையும் சமுதாயத்திற்கு விளையப்போவதில்லை என்பதை அடிக்கடி கூறி வருகிறோம்.ஆனால் சிலர் அதை மறைக்க முயல்வதை வேடிக்கையாகவே கருதுகிறேன்.

காவேரி தண்ணீர் பிரச்சனைக்கு இரு மாநில முதல்வர்கள் மக்களின் நலன் கருதி பேசினால் தான் நல்ல முடிவு கிடைக்கும் என்றும் கூறினார்.


தகுதி தேர்வை கைவிட வலியுறுத்தி 27ம் தேதி ஆசிரியர்கள் பேரணி


தமிழ்நாடு பதிவுமூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம், சேலத்தில் நேற்று நடந்தது. இதில்மாநிலத் தலைவர் ரத்தினக்குமார் சிறப்புரை ஆற்றினார்.

கூட்ட முடிவில் அவர் கூறியதாவது:தமிழகத்தில், கடந்த 2010ம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் 26 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அதில், 16 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர். மீதமுள்ள 8 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்குள், தமிழக அரசு திடீரென்று தகுதித்தேர்வு அடிப்படையில்தான் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தது.

அரசாணை 169, 170, 175 ஆகியவற்றின்படி, தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன் சான்றிதழ் சரி பார்ப்பு நடத்தி முடிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு இத்தேர்வு பொருந்தாது என தெளிவாக கூறப்பட்டு உள்ளது. ஆனால், அரசு இந்த அரசாணைகளை அமல்படுத்தாமல் உள்ளது.டிஆர்பி, தகுதித்தேர்வு மூலம் நியமிக்கப்படும் இளம் ஆசிரியர்களால் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முடியாது.

2001 முதல் 2007ம் ஆண்டு வரை டிஆர்பி நடத்திய போட்டித் தேர்வு மூலம் ஏராளமான இளம் ஆசிரியர்கள் நேரடியாக நியமிக்கப்பட்டனர். அதனால், தகுதித்தேர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதை அரசு உடனடியாக கைவிட வேண்டும். மீண்டும் பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர் நியமனங்களில் 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. இது கண்டனத்துக் குரியது. கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 27ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் பேரணி நடத்தப்படுகிறது. 5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

தமிழகத்தில் 7-ம்வகுப்பு மாணவி கற்பழித்து கொலை : டெல்லியில் கூப்பாடு போடுவோருக்கு இந்த ஏழை சிறுமியின் கொலை ஒரு பொருட்டாக தெரியவில்லை ?


தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கிளாக்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்து பெருமாள். இவரது மகள் பேச்சியம்மாள். இவருக்கும் கருங்குளத்தை சேர்ந்த சவுந்தர் ராஜன் என்பவருக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி இருவரும் கருங்குளத்தில் வசித்துவந்தனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சவுந்தர்ராஜன் திடீரென இறந்துவிட்டார்.அதன்பிறகு பேச்சியம்மாள் தனது 2மகள்களுடன் கிளாக்குளத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். மூத்த மகள் புனிதா (வயது13), நாசரேத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். இளையமகள் மற்றொரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துவருகிறாள்.

மாணவி புனிதா தினமும் பள்ளிக்கு ரெயிலில் சென்று வந்தாள். இதற்காக கிளாக்குளத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தாதன்குளம் ரெயில் நிலையத்திற்கு நடந்து சென்று, பின்பு அங்கிருந்து திருச்செந்தூர் பயணிகள் ரெயிலில் தனது தோழிகள் சிலருடன் நாசரேத் செல்வார். அதேபோல் மாலையில் திருச்செந்தூரில் இருந்து நெல்லை வரும் ரெயிலில் நாசரேத்தில் இருந்து தாதன்குளத்திற்கு வந்து, அங்கிருந்து நடந்து வீட்டிற்கு வருவாள்.

நேற்று(20-ந்தேதி) காலை வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்ற மாணவி புனிதா மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அவளை அவளது தாய் பேச்சியம்மாள் மற்றும் தாத்தா முத்துபெருமாள் ஆகியோர் பலஇடங்களில் தேடினர். ஆனால் அவளைப்பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. இதனைத்தொடர்ந்து அவர்கள், புனிதாவுடன் தாதன்குளம் ரெயில்நிலையத்தில் இருந்து பள்ளிக்கு உடன்செல்லும் அவளது தோழிகளிடம் சென்று விசாரித்தனர்.

அப்போது நேற்று காலை புனிதா, பள்ளிக்கு வராதது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புனிதா மாயமானது குறித்து புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாணவி மாயமானது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தாதன்குளம் ரெயில் நிலையத்திற்கு அருகே முள்செடிகள் அடர்ந்து வளர்ந்திருந்த பகுதியில் ஒரு சிறுமி பிணமாக கிடப்பதை இன்று காலை அவ்வழியாக சென்ற சிலர் பார்த்தனர். அவர்கள் இதுபற்றி செய்துங்க நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணமாக கிடந்த சிறுமி பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர்.

அப்போது அந்த சிறுமி பள்ளிக்கு சென்றபோது மாயமான புனிதா என்பது தெரியவந்தது. மாணவி புனிதாவின் வாய் மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது. ஆடை அவிழ்ந்தநிலையில் கிடந்தது. சுடிதார் துப்பட்டாவால் கழுத்து இறுக்கப்பட்டிருந்தது. மாணவி புனிதா உடல், அவர் வழக்கமாக நடந்துசெல்லும் காட்டுப்பகுதி நடைப்பாதைக்கு தென்புறம் முள்செடிகள் இருந்தபகுதியில் கிடந்தது.

ஆகவே அவளை காமவெறி பிடித்த மர்ம நபர்கள்சிலர், நடைபாதை உள்ள பகுதியில் இருந்து ஆள்நடமாட்டம் இல்லாத தென்பகுதிக்கு தண்டவாளத்தை கடந்து தூக்கிச்சென்று மறைவிடத்தில் வைத்து கொடூரமாக கற்பழித்து விட்டு, சுடிதார் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது தெரியவந்தது.

புனிதாக கொலை செய்யப்பட்டு கிடப்பது குறித்து அவரது தாய் பேச்சியம்மாளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரும் மற்றும் குடும்பத்தினரும் சம்பவ இடத்திற்கு வந்து மாணவி உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இத்தகவலை அறிந்ததும் கிளாக்குளம் மற்றும் தாதன்குளத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் சம்பவ இடத்தில் திரண்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மனாபபிள்ளை தலைமையில் கூடுதல் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். பள்ளி மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டது குறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் சம்பவஇடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

எஸ்.பி. விசாரணை நடத்தியதை தொடர்ந்து மாணவி புனிதாவின் உடல் அங்கிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவியை கொடூரமாக கற்பழித்து கொன்றவர்கள் யார்? என்பது தெரியவில்லை. ஆகவே சம்பவ இடத்திற்கு மோப்பநாயும், தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் சம்பவ இடத்திலிருந்து முள்ளுக்காட்டு வழியாக சிறிது தூரம் ஓடிவிட்டு நின்றது.

ஆகவே கொலையாளிகள் அந்த வழியாகத்தான் தப்பித்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.   ஆகையால் அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் நேற்று காலை முதல் மதியம் வரை யாரேனும் சந்தேகப்படும் வகையில் வந்து சென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் சம்பவம் நடந்த பகுதியில் வழக்கமாக ஏதாவது கும்பல் நடமாட்டம்  இருக்குமா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். அதனடிப்படையில் கொலையாளிகள்குறித்து துப்புதுலக்கும் நடவடிக் கையில் போலீசார் தீவிர மாக ஈடுபட்டுள்ளனர்.

கொலை யாளிகளை கண்டுபிடிக்க ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.  தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பரபரப்பு பள்ளிக்கு சென்றமாணவி கற்பழித்து கொலை செய்யப் பட்ட சம்பவம் கிளாக்குளம், தாதன்குளம் கிராமங்களில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 டெல்லியில் பேருந்தில் நடந்த கொடுஞ்செயலான கற்பழிப்பு சம்பந்தமாக போராட்டம் நடத்தும் ,கூப்பாடு போடும் கூட்டத்தார்களுக்கு தமிழகத்தில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட இந்த ஏழை சிறுமியின் கொலை ஒரு பொருட்டாக தெரியவில்லையோ என்று தமிழக மக்கள் பேசிக்கொள்கின்றனர் .