Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

சாதியற்ற சமூக அமைப்பே முஸ்லிம் சமுதாயம் என்ற அடிப்படையில் மிஸ்ரா குழு பரிந்துரைக்கு சட்ட வடிவம் கொடுக்க வேண்டும் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக்


முஸ்லிம் சமுதாயத்தை சாதி பிரிவினைக்குள் அடக்க முனையாமல் சாதியற்ற சமூக அமைப்பு என்ற அடிப்படையில் ரங்கநாத் மிஸ்ரா குழுவின் பரிந்துரைக்கு சட்ட வடிவம் கொடுத்து செயல்படுத்த வேண்டுமென கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாடு 2012 செப்டம்பர் 8 சனிக்கிழமை கும்பகோணத்தில் தேசிய பொதுச் செயலாளர், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடபெற்றது.

தேசிய தலைவரும் மத்திய மனிதவள மேம்பாடு மற்றும் வெளியுறவுத்துறைஇணைஅமைச்சருமான இ.அஹமது சாகிப் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்ட இந்த பிரமாண்டமான மாநாட்டில் நிiவேற்றப்பட்ட தீர்மனங்கள் வருமாறு '

1. இடஒதுக்கீடு சமூக நீதியின் சின்னம்!
தமிழகத்தில் 69 சதவீதம் இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது. இதில் 3.5 சதவீதம் முஸ்லிம் சமுதாயப் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படுகிறது. இச் சதவீதம் போதியதன்று. இதனை குறைந்த பட்சம் ஐந்து சதவீதமாக உயர்த்தித் தர வேண்டுமென்னும் கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இந்நிலையில், அண்மையில் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்குத் தொடுக்கப்பட்டு அதன் விசாரணை 10.09.2012 ல் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற விருக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருப்பினும், தமிழகத்தில் 69 சதவீதம் இடஒதுக்கீடு மட்டுமின்றி, தமிழகத்தில் இடஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தைத் தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என்னும் கோரிக்கையை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து வலியுறுத்தும்.

ஒவ்வொரு மாநில அரசும், அந்தந்த மாநில நிலைமைக்கு ஏற்ப இடஒதுக்கீடு அளிப்பதற்குரிய அதிகாரம் மாநில அரசுக்கே இருக்க வேண்டும் என்னும் அடிப்படையை இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து உறுதி செய்ய வேண்டும்.

மாநில சுயாட்சிக்குக் குரல் கொடுப்பதும், மாநில அரசு இடஒதுக்கீட்டு அதிகாரம் பெறச் சட்டத்திருத்தத்துக்குக் கரம் கொடுப்பதும் சமூக நீதியில் நம்பிக்கையுள்ள அனைவரின் கடமையாகும் என்பதை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

அதேபோல, மத்திய அரசின் வேலை மற்றும் உயர்படிப்புகளில் இந்திய முஸ்லிம் சமுதாயத்துக்குக்கென ஒட்டு மொத்தமாக 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா குழுவின் பரிந்துரையை மத்திய அரசு உடனடியாக நடைமுறைப்படுத்தும் வகையில் அரசியல் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் இந்த மாநாடு வற்புறுத்துகிறது.

மத்திய அரசு, முஸ்லிம் சமுதாயத்தை அஷ்ரப், அஜ்லப், அர்ஸல் என்று சாதிப்பிரிவினைக்குள் அடக்க முனையாமல், சாதியற்ற சமூக அமைப்பே முஸ்லிம் சமுதாயம் என்னும் அடிப்படையில் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைக்குச் சட்ட வடிவு கொடுக்க வேண்டும் என்று இந்த மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

2. தமிழ்நாடு முஸ்லிம் கல்வி நிபுணர் குழுமம்
தமிழ்நாட்டில் இயங்கிவரும் 54957 துவக்கப்பள்ளி, உயர் நிலைப் பள்ளி மற்றும் மேனிலைப் பள்ளிகளில் முஸ்லிம் சிறுபான்மை யினரின் நிர்வாகத்தில் உள்ளவை நானூறுக்கும் குறைவானவை என்னும் அதிர்ச்சித் தகவல் சீரிய சிந்தனைக் குரியதாகும்.

இப்போது நடைபெற்றுவரும் பள்ளிகளில் பல பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டும் வருகின்றன என்பதும் யதார்த்த நிலையாகும்.

தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் குறைந்த பட்சம் மஸ்ஜிதை மையமாகக் கொண்டுள்ள ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத்திலும் ஒரு பள்ளிக் கூடமாவது உருவாக்கப்படுதல் அவசியமாகும்.

புதிய பள்ளிகளை அமைக்கவும், நடக்கும் பள்ளிகளின் தரம் உயர்த்தவும், பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்க்கவும், அவசியப்படின் நலிந்த பள்ளிக் கூடங்களை ஏற்று நடத்திடவும் ஆகிய கல்விப் பணிக்களுக்கென, தமிழகம் தழுவிய முஸ்லிம் கல்வி நிபுணர் குழுமம் உருவாக்குவது என இந்த மாநாடு முடிவு செய்கிறது.

சென்னைப் பல்கலை கழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் சாதிக், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் பீர் முஸ்தபா ஹுசைன் போன்ற கல்வியாளர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து கலந்தாலோசனை செய்து அவர்களின் ஒப்புதலுடன் இந்தக் கல்விக் குழுமத்தின் பட்டியலை வெளியிடுவது என்றும் முடிவு செய்யப்படுகிறது.

3. சுயநிதி பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள்
தமிழ் நாட்டில் இயங்கி வரும் சிறுபான்மை மற்றும் சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு அரசு ஊதியம் வழங்க வேண்டும் என்ற நீண்ட நாளைய கோரிக்கையை ஏற்று கடந்த அரசு 26.02.2011 அன்று வெளியிட்ட அரசாணைகளில் 11307 ஆசிரியர்கள் 648 பணியாளர்கள் ஆக 11955 பணியிடங்களை ஏற்று ஆண்டுக்கு 331 கோடி ரூபாய் அனுமதி வழங்கியிருந்தது. 1991 - 1992 க்குப் பிறகு சுயநிதியில் இயங்கும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளிகளுக்கு அரசு மான்ய உதவியுடன் பணியிடம் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு 31.05.1999 வரை மான்ய நிதி உதவியின்றி அரசால் அங்கீகரிக்கப்பட்டு தொடங்கப்பட்ட, நிலை உயர்த்தப்பட்ட, மற்றும் கூடுதல் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்ட பகுதி மான்ய உதவியின்றியும் முழுமையாக மான்ய உதவியின்றியும் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு தற்போதைய நடைமுறையில் உள்ள ஆணைகளின்படி மான்யத்துடன் பணியிடங்கள் அனுமதிக்கலாம் என்று அரசு முடிவு செய்து, �தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் சட்டம் 1973� ல் திருத்தம் வெளியிட முடிவு செய்து, தோராயமாக 965 தனியார் பள்ளிகளுக்கு சுமார் 4851 ஆசிரியர் பணியிடங்களும் 648 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் என 5499 பணியிடங்கள் 01.06.2011 முதல் அனுமதிக்கப்பட்டு, அரசுக்கு ஆண்டுக்கு 131 கோடியே 13 லட்சம் கூடுதல் செலவும் ஏற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல் 1990 - 1991 ம் ஆண்டுவரை தொடங்கப்பட்ட 476 சிறுபான்மை மற்றும் 467 சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளுக்கு கூடுதலாக தேவைப்படும் 6456 பணியிடங்கள் ரூ. 200 கோடி செலவில் அனுமதிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் 1999ம் ஆண்டுக்கு பிறகு தொடங்கப்பட்ட பள்ளிகளுக்கு பணியிடங்கள் அனுமதிப்பது தொடர்பாக அடுத்த கல்வியாண்டில் பரிசீலித்து முடிவெடுப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

ஆனால் இந்த அரசாணைகள் செயல்படுத்தப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது. இந்த அரசாணைகளை நடைமுறைபடுத்துமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

4. இந்தியா - இலங்கை நட்புறவு
இலங்கை, இந்தியாவின் அண்டை நாடு. இந்தியாவும் இலங்கையும் சார்க் அமைப்பில் இடம் பெற்றுள்ள நட்பு நாடுகள்.

இந்தஇரு நாடுகளிடையான விளையாட்டு, வர்த்தக, கலாச்சார உறவுகள் காலம் காலமாக இருந்து வருவதாகும்.

சமீப காலமாக இலங்கையிலிருந்து தமிழகம் வரும் சுற்றுலா மற்றும் ஆன்மீக பயணிகளை தாக்குவதும், விளையாட்டு வீரர்களை திருப்பி அனுப்புவதும், இலங்கை மக்களுக்கெதிராக வெறுப்புணர்ச்சியை வளர்க்கும் வகையில் நடந்து கொள்வதுமான செயல்கள் அதிகரித்து வருகின்றன.

இதனால் இரு நாட்டு உறவுகள் சீர்கெடும் நிலை ஏற்படச் செய்வது இரு நாடுகளுக்கும் நன்மை பயக்காது.

எனவே இலங்கை மக்களுக்கும் இந்தியர்களுக்குமிடையில் பகைமை உணர்வு ஏற்பட இடமளிக்கும் எத்தகைய செயலிலும் ஈடுபடவோ, ஈடுபட அனுமதிக்கவோ செய்யாமல் ராஜதந்திர அணுகுமுறையோடு காரியமாற்ற வேண்டுமென அனைவரையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

5. திருமணப் பதிவும் மத்திய அரசின் திருத்தச் சட்டமும்
இந்திய உச்ச நீதிமன்றம் சீமா அஸ்வானி குமார் வழக்கில் தீர்ப்புக் கூறிய போது, இந்தியாவில் நடைபெறும் எல்லாத் திருமணங்களையும் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்னும் வழிகாட்டுதலை 14.02.2006ல் அறிவித்தது.

அதன் தொடர்ச்சியாகத் தமிழகத்தில் கடந்த அரசு, திருமணப் பதிவு ( கட்டாய) சட்டம் கொண்டு வந்தது.

இந்தச் சட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு கூறிய திருமணப் பதிவு கட்டாயமாக்கப்பட்டது; ஆனால், கோர்ட்டு கூறிய எளிய, சுலபமான, எல்லாரும் அணுகக் கூடிய பதிவு முறை தமிழகத்தில் இல்லை என்பதை ஆய்ந்து, தமிழகத் திருமணச் சட்டத்தில் திருத்தம் வேண்டி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை எழுப்பியது.

திருமணப் பதிவை எளியமுறையில் யாரும் பதிவு செய்யும் வகையில் அமைப்பதற்கு, பிறப்பு இறப்பு பதிவாளர் பொறுப்பில் திருமணப் பதிவுப் பொறுப்பையும் வழங்குமாறு பிறப்பு இறப்பு பதிவுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டுமென்னும் கோரிக்கையை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றது.

நமது நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் மத்திய சட்ட அமைச்சர் மாண்புமிகு சல்மான் குர்ஷித் அவர்களிடம் நேரில் பேசி இந்தச் சட்டத் திருத்தத்தின் அவசியத்தை வலியுறுத்தி வந்தார். 

இதன் தொடர்ச்சியாக தற்போது மத்திய அரசு, 1969ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பிறப்பு இறப்பு பதிவு சட்டத்தில், திருத்தங்கள் கொண்டு வந்து, ��பிறப்புகள், திருமணங்கள் மற்றும் இறப்புகள் பதிவுச் சட்டம் 2012�� என்னும் பெயரில் மசோதா ராஜ்ய சபையில் தாக்கல் செய்திருக்கிறது. 

சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலைக் கருத்திற் கொண்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கோரிக்கையை ஏற்று, பிறப்பு இறப்பு பதிவுச் சட்டத்தில் திருமணப் பதிவையும் சேர்த்து சட்டத் திருத்தத்தை முன்மொழிந்துள்ள மத்திய சட்ட அமைச்சர் மாண்புமிகு சல்மான் குர்ஷித் அவர்களுக்கும் மத்திய அரசுக்கும் இந்த மாநாடு நன்றி தெரிவிக்கிறது.

ராஜ்ய சபாவில் இந்தச் சட்டத்தை நிறைவேற்றி, லோக் சபாவிலும் விரைவில் நிறைவேற்றும் முயற்சியை மத்திய அரசின் சட்டத்துறை மேற் கொள்ள வேண்டுமெனவும் இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.


6. ஆதிக்க சக்திகளின் அட்டூழியங்களுக்கு முடிவு வேண்டும்
இந்திய தேசத்தில் சட்ட ஒழுங்கைக் குலைத்தும், அமைதி கட்டுப்பாட்டைச் சிதைத்தும், மாநில மக்களுக்கிடையில் மோதலையும் புகைச்சலையும் உருவாக்கியும், இந்திய ஜனநாயக மரபுகளைச் சீரழித்தும், பாராளுமன்றத்தைத் தொடர்ந்து முடக்கியும் தேசத்தில் பாஸிச தத்துவத்தை நிலை நிறுத்தத் துடிக்கும் ஆதிக்க சக்திகளின் அரசியல் சூழ்ச்சிகளுக்கும் சூதுகளுக்கும் மக்கள் பலியாகிவிடக் கூடாது என்று இந்த மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

பாஸிசத்தின் உச்ச நிலையாக, வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமிலும் அதனைச் சுற்றியுள்ள மணிப்பூர், மிஜோராம், நாகலாந்து, இமாசல பிரதேசம் ஆகியவற்றிலும் பூர்வீகக்காலந்தொட்டு வாழையடி வாழையாக வாழ்ந்து வரும் முஸ்லிம் சிறுபான்மையினரை அந்நிய தேசத்தவர், வந்தேறிகள், பரதேசிகள், பிறதேசிகள் என்றெல்லாம் அவப்பெயர் சூட்டி, கலவரத்தைத் தூண்டி விட்டு, இலட்சக்கணக்கான மக்களை தமது ஊர் வீடுகளை விட்டுத் துரத்தியும், சுட்டுப் பொசுக்கியும், எரித்து நாசப்படுத்தியும் வரும் போக்கிற்கு உடனடியாக முடிவு கட்டும் வகையில் மாநில மத்திய அரசுகளின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது. 

7. சட்டப்படிப்புக்கு உதவி
தமிழக முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் சட்டக் கல்விக்கு ஆர்வம் மிகுந்திட வேண்டும் என்னும் எண்ணத்தில், பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஐவருக்கு அவர்களின் சட்டப்படிப்புக்கான முழுச் செலவையும் ஏற்று ஊக்கப்படுத்துவது என்றும், அதன் பொறுப்பை மாநாட்டு வரவேற்புக்குழு ஏற்பது என்றும் தீர்மானிக்கப்படுகிறது. 

8 காயிதெ மில்லத் பல்கலைக் கழகம்

இந்திய தேசிய விடுதலை வீரரும், அரசியல் சட்ட நிர்மாணியும், சமூக நல்லிணக்க நாயகரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாபெரும் தலைவருமாகத் திகழ்ந்து அனைவராலும் அனைத்து அரசியல் இயக்கங்களாலும் போற்றப்பட்டு வரும் காயிதெ மில்லத் அல்ஹாஜ் எம். முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் தமிழகத்தின் பிரதானமாகவும் நடு நாயகமாகவும் உள்ள பகுதியில்  காயிதெ மில்லத் பல்கலைக் கழகம் உருவாக்குவது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது.


9. தென்னக ரயில்வேக்கு வேண்டுகோள்
திருவாரூர் -சென்னை செல்லும் ரயில்கள் கும்பகோணம், தஞ்சை வழியாகச் செல்வதால் நூறு கிலோ மீட்டர் தூரம் அதிகப்படியாக பயணிக்க வேண்டியுள்ளதால் பயணிகளுக்கு ஏற்படும் அதிகப்படியான சிரமங்களைத் தவிர்த்திட, திருவாரூர்- சென்னை ரயில்களை மயிலாடுதுறை வழியாகச் செல்லும் முறையை நடைமுறைக்குக் கொண்டுமாறு தென்னக ரயில்வே நிர்வாகத்தை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

அதே போன்று, தென்காசி- திருநெல்வேலி அகல ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு வெகு நாட்களாகியும் இதில் ரயில்கள் இயக்கப்படாததால் தென் மாவட்ட மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர், எனவே தென்காசி- திருநெல்வேலி அகல ரயில் பாதையில் ரயில்கள் இயக்க தென்னக ரயில்வேயை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

மகாபலிபுரம்-அரக்கோணம், புதுச்சேரி வழியாக கடலூர் வரை அகல ரயில் பாதை துரிதமாக அமைத்து வளர்ந்து வரும் இப்பகுதியில் சுற்றுலா, வர்த்தகம் செழிக்க வாய்ப்பு ஏற்படுத்துமாறு தென்னக ரயில்வே இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

காரைக்காளிலிருந்து ஆக்கூர், சீர்காழி வழியாக சென்னைக்கு ரயில் இயக்குமாறு தென்னக ரயில்வேயை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது 10. முஸ்லிமாக மதம் மாறியவர்களுக்கு பிற்பட்ட வகுப்புச் சான்று

சாதிச் சான்றிதழ் கேட்டு வருவாய் துறையில் விண்ணப்பிக்கும்போது முஸ்லிமாக மதம் மாறியவர்களுக்கு """" இஸ்லாமாக மதம் மாறியவர்"" என்றே சான்று வழங்கப்படுகிறது.

இதனால் நியாயமாக கிடைக்க வேண்டிய பிற்பட்ட வகுப்பினருக்குரிய எந்த வாய்ப்பையும் பெற முடியாமல் போய்விடுகிறது.

எனவே மதம் மாறிய முஸ்லிம்களுக்கு பிற்பட்ட லெப்பை வகுப்பைச் சார்ந்தவர் என வருவாய்த்துறையினர் சான்றளிக்க ஆணை பிறப்பிக்குமாறு தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

11. பிற்பட்ட முஸ்லிம் வகுப்பினருக்கான சலுகைகளை கண்காணிக்க குழு
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் மாணவ மாணவியர்களுக்கான கல்வித் உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகள் முறையாக வழங்கப் படுவதில்லை என்ற புகார்கள் வருகின்றன.

எனவே தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கான சலுகைகள் முறையாக வழங்கப்படுகிறதா என வட்டாட்சியர் மூலம் கண்காணிக்கப்படுவதுபோல், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு கல்வி வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு, கல்வி உதவித் தொகைகள் உள்ளிட்ட சலுகைகள் முறையாக வழங்கப்படுகிறதா என கண்காணிக்க மாவட்டம்தோறும் கண்காணிப்புக்குழு ஏற்படுத்த வேண்டுமென தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

12. சிறுபான்மை தகுதிச் சான்று-முஸ்லிம் கல்வி நிறுவனங்களுக்கு 
நடைமுறையில் உள்ள கட்டாய கல்வி சட்டம் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் சுயாட்சியில் தலையிடுகிறது. 25 சதவீதம் இலவச கல்வியை மற்றவர்களுக்கு வழங்க வழி வகுக்கிறது.

உச்ச நீதி மன்றத்தை அணுகிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், சிறுபான்மை தகுதி சான்று பெற்ற சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு கட்டாய கல்விச் சட்டம் மற்றும் 25 சதவீத கல்வி செல்லாது என்ற தீர்ப்பை பெற்றுள்ளன எனவே இந்த தீர்ப்பை பயன்படுத்தி சிறுபான்மை கல்வி நிறுவன தகுதி சான்று விரைவாக பெற முஸ்லிம் கல்வி நிறுவனங்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

13. காரைக்காலில் அரசு மகளிர் கல்லூரி
புதுச்சேரி மாநிலத்தில் நாற்பது சதவீதத்திற்கு மேல் முஸ்லிம்கள் வாழும் காரைக்கால் மாவட்டத்தில் அம்மக்களுக்கு பயன்படும் வகையில் அரபி பாடதிட்டத்துடன் கூடிய அரசு மகளிர் கல்லூரி அமைக்க வேண்டுமென பதுச்சேரி மாநில அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. இந்து அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் புதுச்சேரி வக்ஃப் வாரியத்தை பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நலத்துறையின் கீழ் கொண்டுவரவும், வக்ஃப் வாரியத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு அதைச் செயல்படச்செய்யும்படியும் புதுச்சேரி மாநில அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

14. கரும்பு டன்னுக்கு ரூபாய் 3000ஆக உயர்த்தி தர வேண்டுதல்
பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கு இழப்பை ஈடுகட்டும் வகையில் கரும்பு டன்னுக்கு ரூ 3000/- ஆக உயர்த்தி தர வேண்டுமென்ற கரும்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை அரசு ஏற்று செயல்படுமாறு தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. முப்போகம் விளையும் தஞ்சை தரணியில் தண்ணீர் இல்லாததால் குறுவைப்பயிர் நடமுடியாத நிலையில் தாளடி பயிர் விதைத்து வருகின்றனர். இதனை காப்பாற்றும் வகையில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது 

சனி, 8 செப்டம்பர், 2012

மத நல்லிணக்கம் குறைந்துவருகிறது : பிரதமர் கவலை


டில்லியில் நடைபெற்ற, அனைத்து மாநில, போலீஸ் டி.ஜி.பி.,க்கள் மற்றும் ஐ.ஜி.,க்கள் மாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் நேற்று பேசியதாவது:

நம் நாட்டில், பல்வேறு இனங்கள், மொழிகள் மற்றும் கலாசார பழக்க வழக்கங்கள் இருந்தாலும், அதிலும் ஒற்றுமையாக இருப்பதே, நமது பலம். ஆனால், கடந்த சில மாதங்களாக, நாட்டின் வடகிழக்கு பகுதியில், வன்முறை மற்றும் கலவரம் தலைதூக்கியுள்ளது.இது, அனைவருக்குமே கவலை தரக்கூடிய விஷயம். இதன் தொடர்ச்சியாக, தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையில், சில சம்பவங்களும் நடைபெற்றன.மதங்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையில், நல்லதொரு இணக்கம் நிலவி வந்தது. ஆனால், சமீபத்திய சம்பவங்களால், அந்த மத நல்லிணக்கம் தேய்வது போலத் தெரிவது, மிகவும் கவலைக்குரிய விஷயம். இது, தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.மக்கள் மத்தியில், என்ன மாதிரியான உணர்வுகள் நிலவுகின்றன, அடிமட்டத்தில் என்ன தான் நடக்கிறது என்பதையெல்லாம், போலீசார் முழுமையாக புரிந்து வைத்திருக்க வேண்டும்.

பிரச்னையை ஏற்படுத்தும் நபர்களை, முன்கூட்டியே கண்டறிதல், சரியான நேரத்தில் பொருத்தமான சட்டத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற் றோடு சேர்த்து, அமைதி மற்றும் சமூக நல்லிணக்க சூழ்நிலையை, முன்கூட்டியே ஏற்படுத்துதலும் அவசியம்.இணையதளத்தை பயன்படுத்தியும், மொத்தமாக எஸ்.எம்.எஸ்., அனுப்பியும், வன்முறை மற்றும் வதந்தியைப் பரப்புவது, சமீப காலமாக, அரசாங்கத்திற்கு பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இந்தத் தொழில் நுட்பங்களை வன்முறையாளர்கள், எவ்வாறு கையாளுகின்றனர் என்பது பற்றிய முழு விவரங்களையும், போலீசார் தெரிந்து கொள்ள வேண்டும்.இந்தத் தொழில்நுட்பங்கள் வாயிலாக நடக்கும் தவறான பிரசாரங்களை, எவ்வாறு அடக்குவது என்பது மிகவும் அவசியம். இனி வரும் காலங்களில், மிகவும் சவாலாக இருக்கப்போகும் இந்த பிரச்னைகளை, திறமையுடன் அணுக, போலீசார் பயிற்சி பெற வேண்டும்.மாநிலங்கள் சிலவற்றிலும், அவற்றின் எல்லைப்புறங்களிலும், நக்சலைட்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. மாநிலங்களின் எல்லைகளில் உள்ள காடுகளை, நக்சலைட்கள், தங்களின் புகலிடமாக பயன்படுத்துகின்றனர். அவர்கள் வைக்கும் கண்ணி வெடிகளால், உயிர் பலிகளும் நிகழ்கின்றன. இதைத் தடுக்க, துணை ராணுவப் படையினர் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.நக்சலைட்கள் அபாயம் உள்ள மாநிலங்களில், மக்கள் தொகைக்கு ஏற்ப, போலீசாரின் எண்ணிக்கை இருக்க வேண்டும். போலீசாருக்குத் தேவையான அனைத்து ஆயுதங்களும் வழங்கப்பட வேண்டும்.

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

பாலுக்கு தவிக்கும் பச்சிளம் குழந்தைகள்- பள்ளிக்கு ஏங்கும் சிறுவர்கள்; நெருப்பைத் தேடும் பயங்கரவாத ஜென்மங்கள் ! - அதிர்ச்சி ரிப்போர்ட்


நள்ளிரவு 1.17 மணி (இன்று அதிகாலை) தொலைபேசியில் என்னை அழைத்தது அஸ்ஸாமில் இருந்து போனில் அழைத்தவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணியின் தமிழ்நாடு மாநில இணைச்செயலாளர் ஈரோடு முஹம்மது ஆரிப்! நான் என்ன ஏது என்று கேட்டபோது, இப்போதுதான் துப்ரி அகதி முகாமிலிருந்து நிவாரண உதவிகளை கொடுத்து விட்டு இருப்பிடம் திரும்பிக்கொண்டிருக்கிறோம் என்றார்.

பதற்றம் நிறைந்த பாது காப்பற்ற ஒரு பகுதியில் அதுவும் இந்த நேரத்திலா என ஆச்சரியத்தோடு நான் கேட்டபோது, """"அகதி முகாம்களில் கதறி துடிப்பவர்களை பார்த்த எங்களுக்கு உயிர் மேல் அக்கறையே இல்லாமல் போய்விட்டது"" என்றார்.

அஸ்ஸாம் கலவரத்தில் பாதிக்கப்பட்ட 4 லட்சம் முஸ்லிம்கள் 270 அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிவாரண உதவிகளை செய்து வருகிறது.

இந்த உதவிகளை நேரில் செய்வதற்காகத்தான் தமிழ்நாட்டிலிருந்து முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை செயலாளர் அய்யம்பேட்டை மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில், முஸ்லிம் லீக் இளைஞரணியின் மாநில செயலாளர் பள்ளப்பட்டி எம்.கே. முஹம்மது யூனுஸ், மாநில இணைச்செயலாளர் ஈரோடு முஹம்மது ஆரிப் ஆகியோர் சென்றுள்ளனர்.


நிவாரணப் பணிகள் குறித்து கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

நாங்கள் செல்வதற்கு ஒரு நாள் முன்பதாக அகதி முகாமில் நிவாரண உதவி செய்த போது அதைப் பெற வந்த 6 பேர் போடோ தீவிர வாதிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டு 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

இதை அறிந்தும் அல்லாஹ்வின் மீது தவக்கல் வைத்து நாங்கள் அந்த புனித காரியத்தில் இறங்கினோம். வேறு எந்த அமைப்புக்களாலும் இவ்வளவு இலகுவாகவும் , துணிச்சலாகவும் இறங்கி நிவாரண உதவி செய்ய முடிய வில்லை.

நாங்கள் நாற்பது பேர் கொண்ட குழுவாக செயல்பட்டோம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் டெல்லி குர்ரம் அனீஸ் உமர், தேசிய பொருளாளர் கர்நாடகத்தின் தஸ்தகீர் இப்ராஹீம் ஆகா, உத்திர பிரதேச மாநில பொதுச்செயலாளர் டாக்டர் மத்தீன், கேரள முஸ்லிம் யூத் லீக் தலைவர் சாதிக் அலி, ஜுபைர் குழுவினர் அஸ்ஸாம் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் என தாய்ச்சபையினர் இதில் முழுமையாக ஈடுபாடு கொண்டனர்.

இந்த அகதி முகாம்களில் பெரும்பாலனவை துப்ரி மாவட்டத்திலேயே அமைந்துள்ளன. அதில் 35 முகாம்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தத்து எடுத்துக் கொண்டது.

அஸ்ஸாமிலேயே மிகப் பெரிய முகாம் தமாரா ஹத் பகுதியில் உள்ள ஹாத்திதூரா கல்லூரியில் அமைந்ததுதான் துப்ரியிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த முகாமில் முப்பதாயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் முஸ்லிம்கள் மட்டுமின்றி இந்துக்களும் அடங்குவர்.

முகாம்களை எல்லாம் பார்வையிட்டு அங்கு தங்கியுள்ளவர்களிடம் முதலில் தேவைகளை கேட்டு குறிப்பெடுத்துக்கொண்டோம். அகதிகளில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகளும், சிறுவர்களுமே அவர்கள் எங்களிடம் கேட்டது சமைப்பதற்கு பாத்திரங்கள் பால் பவுடர் , பிஸ்கட், சோப்பு, துணி, மணிகள், இவைகள் தான்.

அவர்கள் கேட்டதை கவுகாத்தியில் நேரடியாக கொள்முதல் செய்து, நேரடியாகவே, கொண்டு வந்து, நேரடியாகவே விணியோகித்தோம். �நேரடி� என்று நாங்கள் அழுத்தி சொல்வதற்கு காரணம் தாய்ச்சபையின் மீது எந்த நம்பிக்கை வைத்து இந்த நிவராண உதவிக்கு சமுதாயம் வாரி வழங்கியதோ அந்தத் தொகையில் ஒரு பகுதி கூட வீனாகக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தோம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறோம் என்ற மன நிறைவு ஒரு புறம் இருந்தாலும் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒலி பெருக்கிகளில் இந்த நிவாரண உதவி இந்திய யூனியன் முஸ்லிம் லீகிலிருந்து தரப்படிகிறது என சொல்லிக் கொண்டே இருந்தது மன நிறைவை அதிகப் படுத்தியது.

ஆனால் என்னதான் உதவினாலும் அவர்கள் அத்தனை பேருமே கேட்டது, """"எங்களை எப்போது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்புவார்கள்�� என்ற கேள்விதான் அதை விட எங்களுக்கு பரிதாபமாக இருந்தது. சிறுவர்கள் எங்களிடம், """" பள்ளிக்கூடங்கள் திறக்காதா எதிக்கப்பட்ட புத்தகங்களுக்கு பதில் புதிதாக புத்தகங்கள் எல்லாம் தருவார்களா?"" என்ற அப்பாவித்தனமான கேள்விகள்தான். அதைவிட எங்கள் நெஞ்சை உருக வைத்தது, பேசத் தெரியாத பச்சிளம் குழந்தைகள் எங்களை வெறித்துப் பார்த்தது, அவர்கள் ஒட்டிய வயிறு பசியை சுட்டிக்காட்டியது கல்லையும் கரைய வைக்கும் காட்சிகள். பாலுக்கு ஏங்கும் அவர்களுக்கு பால் பவுடரும், அதை காய்ச்சி கொடுப்பதற்கு பாத்திரங்கள் வாங்குவதையுமே முதல கடமையாக கொண்டோம்

அரசாங்கம் எதையுமே செய்ய வில்லையா? எனக் கேட்கலாம் அரசு சார்பில் அரிசி,பருப்பு, எண்ணெய் வழங்கப்படுகிறது ஆனால் சமைத்து சாப்பிட பாத்திரங்களோ அடுப்பெரிக்க விறகோ இல்லை.

இவர்கள் வசித்த வீடுகள் எல்லாம் படு பாவிகளால் தீயில் கொடூரமாக எரிக்கப்பட்டன. ஆனால் சமைப்பதற்கு இவர்கள் நெருப்பைத் தேடி ஆலாய் பறப்பது வேதனையை வரவழைத்தது. 

யார் என்னதான் உதவி செய்தாலும் இந்த மக்கள் சொந்த இருப்பிடங்களுக்கு விரைந்து அனுப்பப்பட வேண்டும் அவர்கள் வாழ்வதற்கு ஆயுதப் பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும்.

அஸ்ஸாம் அகதி முகாம்களில் உள்ளவர்கள் கோரிக்கை எல்லாம் போடோலாந்து தேசிய கவுன்சிலை கலைக்க வேண்டும் போடோ தீவிரவாதிகளிடம் இருக்கும் ஆயுதங்களை பறிக்க வேண்டும் என்hதுதான்.

போடோ தீவிரவாதிகள் முஸ்லிம்களை துரத்தி அடித்ததோடு அவர்கள் வாழ்ந்த வீடுகள் அனைத்தையும் எரித்து விட்டனர். அந்த இடங்களையெல்லாம் புல்டோஸர் மூலம் தகர்த்திதுவிட்டனர். இதனால் அவர்கள் குடியுரிமை பெற்றதற்கான ரேஷன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுவரி என அனைத்து ஆவணங்களும் எரிந்து விட்டன.

இதை அவர்கள் மீண்டும் கேட்டால் வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் என மறுப்பார்கள் 60 ஆண்டுகாலம் அஸ்ஸாமில் நடப்பது இதுதான். அஸ்ஸாம் முஸ்லிம்களில் பெரும்பாலனவர்கள் மீன்பிடி தொழில் செய்பவர்கள், ஆற்றோரத்திலுள்ள செங்கள் சூழைகளில் கூலிகளாக வேலை செய்பவர்கள்.

பிரமாண்டமான பிர்ம்மபுத்திரா நதியில் அடிக்கடி பெருக்கெடுக்கும் வெள்ளத்தால் இவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படும்போதெல்லாம் அவர்களின் ஆவணங்களும் அழிந்து போய்விடுகின்றன. திருப்பிக்கேட்கும்போது வங்க தேசத்திலிருந்து வந்தவர்கள் என வழக்கமான குற்றமே இவர்கள் மீது சுமத்தப்படும்.

அஸ்ஸாம் முஸ்லிம்கள் அவரவர் இருப்பிடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டாலும் அவர்களுக்கு வீடு உள்ளிட்ட வசிப்பிடங்கள் செய்து கொடுக்கப்படவேண்டும். கல்வி, மார்க்க அறிவு, அவர்களுக்கு அத்தியாவசிய தேவை எனவே ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களின் கருணைப் பார்வை அஸ்ஸாம் முஸ்லிம்கள் மீது திரும்ப வேண்டுமென்பதே எங்கள் பயணத்தில் நாங்கள் தெரிந்து கொண்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும் மத்திய மனித வள மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான இ.அஹமது சாஹிப், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். அப்துர் ரஹ்மான் , இ.டி.முஹம்மது பஷிர் உள்ளிட்டோர் அடங்கிய குழு இந்த அகதி முகாம்களில் பார்வையிட்டு பணி தொடங்கி வைத்து முதல்வர் தருன் கோகாயைச் சந்தித்து பேசியதன் பலனாகவே நாங்கள் இந்த அளவிற்கு நிவராண பணி செய்ய முடிந்தது.

மாவட்ட நிர்வாகமும் வருவாய் அதிகாரிகளும் காவல் துறையும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர் நாங்கள் ஒரு காரில் மூவர் பயணம் செய்கிறோம் என்றால், எங்கள் காருக்கு முன்பும் பின்பும் ஏ.கே.47 ஏந்திய 12 காவலர்கள் பாதுகாப்புக்கு எப்போதும் உடன் வந்தனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மீது அரசும், காவல்துறையும், உளவு அமைப்புக்களும், கொண்டுள்ள நம்பிக்கை காரணமாக இத்தனை நாட்களாக நிவாரண பணி செய்ய முடிந்தது.

அஸ்ஸாம் முஸ்லிம்கள் சொந்த இருப்பிடம் திரும்பி நிம்மதியாக வாழ்கிறார்கள் என்ற செய்தி கிடைக்கும் வரை எங்கள் மனதில், அகதி முகாம்களில் அவர்கள் படும் அவலங்களே நிழலாடும்.

நேர்காணல் - காயல் மகபூப்


வியாழன், 6 செப்டம்பர், 2012

இளைய சமுதாயமே ! மாணவச் சமுதாயமே ! நம் நிலையை நாமே உயர்த்திட ,கும்ப கோணம் நோக்கி வா !


மத்திய அரசால் சிறுபான்மையின மக்களின் நிலையை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட சச்சார்  மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிசன்களின்  அறிக்கையில் இந்தியாவில் முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார நிலை குறித்து வெளியிட்ட தகவல்கள் மிகவும் அதிர்ச்சி தரக்கூடியதாகும்.
 முஸ்லிம்களின் கல்வியறிவைக் குறித்து "இந்தியா டுடே" ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வறிக்கை சமூகத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் நல்லதோர் முன்னெச்சரிக்கையாகும்.அந்த ஆய்வறிக்கையில் ,
  
"2001- ல் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இந்தியாவில் கல்வியறிவைப் பெறுவதில் முஸ்லிம்கள் மிகவும் பின் தங்கி இருக்கிறார்கள் என்பதைத்  தெரிவிக்கிறது. 1881- க்கு பிறகு அகில இந்திய அளவில் மேற்கொள்ளப் பட்ட கணக்கெடுப்புகளில் இது மிக விரிவானது (சமீபத்தில் வெளியாகியுள்ள ஸச்சார் அறிக்கை இக்கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டதே). 2001-லேயே இக்கணக்கெடுப்பு முடிந்துவிட்டாலும் பல தகவல்களை கணக்கெடுப்பு ஆணையம் இன்னமும் வெளியிடவில்லை.
இந்தியாவைப் பொறுத்தவரை எவரொருவர் தனது பெயரை எழுதவும், கையெழுத்திடவும் தெரிந்திருக்கிறாரோ அவரும் கல்வியறிவு பெற்றவர் என வகைப்படுத்தப்படுகிறார். இந்த குறைந்த பட்ச கல்வியறிவைக்கூட இந்தியாவில் உள்ள மொத்த முஸ்லிம்களில்  55% அளவினர்தான் பெற்றுள்ளனர். அதிலும் முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார், அஸ்ஸாம், ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நிலைமை படு மோசமானதாக இருக்கிறது.
நாட்டின் மொத்த முஸ்லிம்களில் 61 சதவீதத்தினர் இம்மாநிலங்களில்தான் இருக்கின்றனர். முஸ்லிம்கள் அதிகம் உள்ள மற்றும் படித்தவர்கள் அதிகமுள்ள கேரளாவிலும் கூட இதே நிலைதான். குஜராத் மற்றும் ஆந்திராவில்தான் ஏதோ சொல்லிக்கொள்ளும் அளவுக்கு முஸ்லிம்களின் கல்வி நிலை இருக்கிறது. கிராமம், சிறு நகரம், பெருநகரம் என எல்லா வகையிலும் மற்றவர்களோடு ஒப்பிடுகையில் முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கியே உள்ளனர். ஆரம்பக்கல்வியில் ஆரம்பிக்கும் இவ்வித்தியாசம் கல்வி நிலை உயர உயர அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 
மேலும் இதில் ஆண், பெண் வர்க்க பேதமும் பார்க்கப்படுகிறது. முஸ்லிம் ஆணுக்கு கிடைக்கும் கல்வி, முஸ்லிம் பெண்களுக்கு கிடைப்பதில்லை என்பதும் தெளிவாக்கப்பட்டுள்ளது. அதாவது ஆரம்பக் கல்வியில், பெருநகரம் மற்றும் சிறு நகரங்களில் கல்வியறிவு பெற்ற முஸ்லிம் ஆண்களை விட 18% குறைவாகவே பெண்கள் கல்வி பெறுகிறார்கள். கல்லூரி அளவில் உயரும்போது இது 48% அதிகரிக்கிறது. இப்படி எல்லா வகையிலும் கல்வியில் பின் தங்கியுள்ள முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர்களின் கல்வி விகிதத்தை அடைவதற்கு 2011-ம் ஆண்டிற்குள் 31 மில்லியன் முஸ்லிம்கள் கல்வி கற்கவேண்டும்" என்று கூறுகிறது .

சமீபத்தில் இராணுவம் மற்றும் காவல்துறையில் முஸ்லிம்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்க மத்திய அரசு தீர்மானம் எடுப்பதற்கு முயன்றபோது அனைத்து ஃபாசிஸ சக்திகளும் இணைந்து நாட்டுப் பாதுகாப்பை காரணம் காட்டி அதனை எதிர்த்தது நினைவுகூரத்தக்கது.
இன்னும் சொல்லப்படாத கணக்கெடுக்கப்படாத விவரங்கள் எத்தனையோ உள்ளன. 

   தமிழகத்தை பொருத்தவரை ,கடந்த திமுக ஆட்சியில் முஸ்லிம் சமுதாயத்தின் கோரிக்கையை ஏற்று 3.5 % இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது . பின்பு , அதனை சரியாக அதிகாரிகள் நிரப்பவில்லை என்று தகவல் வந்ததும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் கோரிக்கையை ஏற்று திமுக அரசு கண்காணிப்பு குழு அமைத்தது .முறையாக முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு நிறப்பப்படுகிறதா ? என்பது கண்காணிக்கப்பட்டது ; ஆனால் , நம்  சில துறைகளில் ஏற்படும் காலி இடங்களுக்கு அரசு நிரப்பும் போது முஸ்லிம்களை தேடும் நிலை ஏற்பட்டுள்ளது .

             இந்த நிலையில் ,நம் தாய் சபையாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் தீர சிந்தித்து ,இந்த நிலை இனி தொடரக்கூடாது ,கல்வி நிலையில் நம் சமுதாயம் இன்னும் முன்னுக்கு வர வேண்டியுள்ளது ,இதற்க்கு சமுதாய மக்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்தனர் .

      அதன் அடிப்படையில் ,எதிர்வரும் செப்டெம்பர் 08 - ஆம் நாள் கும்ப கோணத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கல்வி விழிப்புணர்வு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . ஏதோ ,முஸ்லிம் லீக்கினர் திடீர் என்று கட்சியை வலுப்பைபடுத்த இவ்வாறு நடத்துகிறார்கள் என்று இன்றைய தலைமுறையினர் நினைத்துவிடக்கூடாது .

 முஸ்லிம் லீக்கின் துவக்கமே ,முஸ்லிம்களின் கல்விநிலை முன்னேற்றத்திற்கும் ,இட ஒதுக்கீட்டிற்கும் தான் .அந்த இரண்டு நோக்கத்தை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டதால் தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்னை புதுக்கல்லூரி முதல் நெல்லை சதக்கத்துல்லா அப்பா கல்லூரிவரை தோன்றுவதற்கு காரணமாக இருந்தது .

                  எனவே ,முஸ்லிம்களின் கல்வி நிலை உயர ,மத்திய மாநில அரசுகள் நம் சமுதாயத்திற்கு வழங்கியுள்ள உரிமைகளை நாம் முழுமையாக பயன்படுத்திட வழிகாண நம் சமுதாயத்தை செம்மையோடு வழி நடத்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அழைக்கின்றது ,செப் -08 -இல் கல்வி விழிப்புணர்வு மாநாடு !
             
                 தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தி பெற்றிட , அகில இந்த அளவில் முஸ்லிம்களுக்காக மத்தியரசின் 10 % இட ஒதுக்கீடு கிடைத்திட ,வலுவான முறையில் மத்திய ,மாநில அரசுகளுக்கு நம் கோரிக்கை குரல் கேட்டிட , அழைக்கின்றது நம் இனமானப் பேரியக்கம் ,செப்-08 ,கும்பகோணத்தில் கல்வி விழிப்புணர்வு மாநாடு !

                             நாம் நடந்து வந்த பாதை என்ன ? இனி நாம் நடை போடும் பாதை எப்படி பட்டது ? நாம் எவ்வாறு நடந்து சென்றால் வெற்றி இலக்கை அடையலாம் ? என்ற கேள்விகளுக்கு விடை கண்டிட அழைக்கின்றது தாய் சபை செப்-08 கும்பகோணத்தில் கல்வி விழிப்புணர்வு மாநாடு !

          இளைய சமுதாயமே !  மாணவச் சமுதாயமே ! நம் நிலையை நாமே உயர்த்திட ,கும்ப கோணம் நோக்கி வா ! திணரட்டும் கும்பகோணம்! அறியட்டும் நம் நிலையை அரசாங்கம் ! 

-------------அபு ஆஸிமா
             
நன்றி : மணிச்சுடர் 

எதிர்கால தலைவர்களின் பரிதாப நிலை பாரீர் !


சென்னை கடற்கரை சாலையில் உள்ள மாநில கல்லூரி மாணவர் பேரவை தேர்தல் கடந்த 31-ந்தேதி நடந்தது. இதில் தலைவராக மாணவர் ஞானகார்த்திக் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜெயகிருஷ்ணன் தோல்வி அடைந்தார்.

மொத்தம் உள்ள 2106 வாக்குகளில் ஞானகார்த்திக் 1487 வாக்குகள் பெற்றார். முடிவு அறிவிக்கப்பட்டதும் ஞானகார்த்திக் ஆதரவு மாணவர்கள் வெற்றியை கொண்டாடினர். அப்போது தோல்வியடைந்த மாணவரின் ஆதரவாளர்களும், வெற்றி பெற்ற மாணவரின் ஆதரவாளர்களும் கல்வீச்சு நடத்தி மோதிக் கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை மாணவர்கள் கல்லூரிக்கு வந்தனர். ஆனால் 2-ம் ஆண்டு பிகாம். மாணவி செவ்வந்தி மரணம் அடைந்ததால் விடுமுறை விடப்பட்டது. இதுதெரியாமல் 2 பஸ்களில் மாணவர்கள் கல்லூரி முன் வந்து இறங்கினார்கள். அவர்கள் தேர்தல் வெற்றியை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அதே சமயம் கடற்கரை சர்வீஸ் சாலையில் திரண்டு இருந்த மாணவர்கள் பட்டாசு வெடித்த மாணவர்கள் மீது கல்வீசி தாக்கினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கல்லூரியில் இருந்து 3 கத்திகளையும் போலீசார் கைப்பற்றினர்.

இன்று காலையும் இருதரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாணவர் ஒருவருக்கு கத்தி குத்து விழுந்தது. மேலும் 2 பேர் காயமடைந்தனர். அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மன அழுத்தத்தை போக்குவதற்கான வழிமுறைகள்


பொதி சுமக்கும் காளையின் மீதுதான் அதிக பாரம் ஏற்றப்படும் இது உலக இயல்பு. எதையும் எளிதாக செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தாலும் கூடுதல் பாரங்கள் மன அழுத்தத்தை வளர்த்துவிடும். எனவே எல்லோரையும் திருப்திப்படுத்துவது என்பது இயலாத காரியம் என்பதால், செய்ய முடியாதவற்றையும் செய்ய விரும்பாதவற்றையும் நாசூக்காக மறுத்துச் சொல்வதே நல்லது.

மனதில் உருவாகும் அழுத்தம் வந்து படிகிற இடங்களில் ஒன்று கடைவாய் இணைப்புகள். பற்களை இறுகக்கடித்து, காதுக்குக்கீழ் சுட்டுவிரலால் அழுத்திக் கொண்டு, நீளமாக மூச்சிழுப்பதும், வாயைத் திறந்தபடி காற்றை வெளியே விடுவதும், அழுத்தத்தின் சுவடுகளை உடலில் தங்காமல் வெளியேற்ற மேலைநாட்டு ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருக்கின்ற வழி.

ஆழ்ந்த சுவாசத்தின் மூலம் இரத்தத்தில் பிராணவாயுவின் அளவு அதிகரிப்பதால் உங்கள் தசைகள் தளர்வுநிலை அடைகின்றன. மனம் இயல்புநிலை அடைகின்றது. அடிவயிற்றில் கையை லேசாக அழுத்திக்கொண்டு ஆழமாக சுவாசிப்பதன் மூலம் அடிவயிற்றின் அசைவுகளையும், உடலும் மனமும் தளர்வு நிலை அடைவதையும் கண்கூடாக உணரலாம்.

அமைதியான இடத்தில் அமர்ந்து கற்பனையாய் சிந்திப்பது பலனளிக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள். பூப்பூவாய்த் தூவும் வென்னீர் ஷவரின் கீழ் கண்மூடி நிற்பது போலவும், அதில் அழுத்தங்களும் பதட்டங்களும் அடித்துக் கொண்டு போவது போலவும் மனதுக்குள் ஒரு காட்சியை வரைந்து பார்க்கச் சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். அடைந்துகிடக்கும் உணர்வுகளை விடுவிக்கும் சக்தி திறந்தவெளிக்கு இருக்கிறது. 

அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் வெளியே வந்து, ஆகாயத்தை, அலையலையாய்ப் போகும் மேகங்களைப் பார்ப்பது பயன்தரும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள். எத்தகைய பதட்டத்தையும் தணித்து அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. இசையை கேளுங்கள் அல்லது வாய்விட்டுப் பாடுங்கள். உங்கள் இதயம் படபடவென்று அடித்துக்கொள்வதை அது கட்டுப்படுத்தும். 

நறுமணம் தரும் மலர்கள், எண்ணெய்கள் போன்றவற்றை நுகர்வதன் மூலம் மனதை மிக விரைவில் லேசாக்கிக் கொள்ளமுடியும். இரண்டு கைகளையும் பரபரவென்று தேய்த்து மூடிய கண்களுக்கு மேல் வைத்து, ஆழமாக சுவாசிக்கும்போதே அந்த உஷ்ணத்தையும் உள் வாங்குகிறபோது, புதிய உத்வேகம் உங்களுக்குள்ளேயே உருவாகும்.. வெறுப்பாக இருந்தால் வெந்நீர்க் குளியல் போடுங்கள். 

குளிக்கும் அளவு நிலைமையோ நேரமோ இல்லையென்றால் வெந்நீரில் கைகால்களையாவது கழுவுங்கள். இதம் செய்யும் ஆற்றல் வெந்நீருக்கு இருக்கிறது என்கிறார் அவர். வைட்டமின் பி, மற்றும் கால்ஷியம் போன்ற சத்துள்ள உணவுகளை உண்பவர்கள் எளிதாக மன அழுத்தத்திற்கு ஆளாக மாட்டார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

கார்போஹைட்ரேட் கொண்ட நொறுக்குத் தீனியை நொறுக்கினால் அதிலுள்ள செரிடானின் உங்கள் மனதை அமைதிப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நெஞ்சில் ஏதோ எண்ணங்கள் கனக்கத் தொடங்கிவிட்டால் கொஞ்சதூரம் நடந்துவருவது பயன்தரும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். 

வெளியே உலவுவதற்கு நேரம் ஒத்துழைக்காத நிலையில் அலுவலகத்துக்குள் அங்குமிங்கும் உலவுவது இடைக்கால நிவாரணம் போன்றது. மனதில் தோன்றும் கவலைகள் எல்லா நேரமும் உங்களை அரித்தெடுப்பதை அனுமதிக்காதிருக்க வழி உண்டு. கவலைகள் என்னவென்று பார்க்க சில மணி நேரம் ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் கவலைகளை ஆராய்ந்து அவற்றை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். 

பதற்றமான சூழலில் நுணுக்கமான விஷயங்களை நோக்கிக் குவியாமல் மனம் அலைபாயத் தொடங்கும். அப்போதெல்லாம், ஒரு சின்ன விஷயத்தை எடுத்துக்கொண்டு அதில் முழு கவனத்தை செலுத்துங்கள். உங்கள் மனம் இயல்பு நிலை அடைவதை உணர்வீர்கள். சோர்வு வரும்போது சுருண்டு படுக்கத்தான் மனது சொல்லும். 

முதுகுத்தண்டை நிமிர்த்தி நேராக, உட்காரும்போது இரத்த ஓட்டம் நன்கு நிகழ்ந்து உங்கள் சக்தியைப் பெருக்கும். மன அழுத்தம் மாறுவதற்கு வஜ்ராசனத்தில் அமருங்கள் என்று சொல்பவர்கள் நம் ஊர் யோகக்கலை வல்லுநர்கள் மட்டுமல்ல. வெளிநாட்டினரும் இதனை உறுதி படுத்துகின்றனர். 

குழந்தைபோல் மண்டியிட்டு கண்மூடி குதிகாலின் மீது சிறிது நேரம் அமருங்கள். அதுதான் வஜ்ராசனம். மெல்லக் குனிந்து முன் நெற்றியை நிலத்தில் பதியுங்கள். இதையே சில தடவைகள் செய்யுங்கள். மனமுருகும் பிரார்த்தனை, மன ஒருமை கொண்டு செய்யும் தியானம் இவையெல்லாம் மன அழுத்தத்தை விரட்டியடிக்கிற வல்லமை கொண்டவை என்கின்றனர் மனநல மருத்துவர்கள்

புதன், 5 செப்டம்பர், 2012

ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள இந்தியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்


ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள இந்தியர்களுக்கு ஒரு ஓய்வூதிய திட்டத்தை இந்த மாத இறுதியில் இந்திய அரசு செயல் படுத்த உள்ளதாக துபாயில் வெளியாகும் தினசரி நாளிதழ் ஒன்றின்  தேசிய ரிப்போர்ட் கூறியுள்ளது.

"மகாத்மா காந்தி பிரவாசி சுரக்ஷா யோஜனா" என்று அழைக்கப்படும் இத்திட்டம் இந்தியாவின் வெளிநாடு வாழ் மக்களுக்கான முதல் பாதுகாப்பு திட்டமாகும் .இத்திட்டம் தொழிலாளர்களுக்கு உதவும் திட்டமாகவும் ஓய்வு ஊதிய திட்டமாகவும் அமையும் .ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ஒருமில்லியன் இந்தியர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும் .அவர்கள்  Emigration Cheque Required (ECR ) பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும் .

இந்த திட்டத்தில் சேருபவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வருடத்திற்கு குறைந்தது ரூ. 5000 செலுத்த வேண்டும் .இதனில் ,இந்திய அரசு ரூ.1900 கூடுதலாக சேர்த்துக் கொள்ளும் .இந்த ஒய்வூதிய திட்டத்திற்கான அலுவலகம் துபாயிலும் ,அபுதாபியிலும் ஒவ்வொரு அலுவலகம் திறக்கப்படும் .