Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 6 செப்டம்பர், 2012

இளைய சமுதாயமே ! மாணவச் சமுதாயமே ! நம் நிலையை நாமே உயர்த்திட ,கும்ப கோணம் நோக்கி வா !


மத்திய அரசால் சிறுபான்மையின மக்களின் நிலையை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட சச்சார்  மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிசன்களின்  அறிக்கையில் இந்தியாவில் முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார நிலை குறித்து வெளியிட்ட தகவல்கள் மிகவும் அதிர்ச்சி தரக்கூடியதாகும்.
 முஸ்லிம்களின் கல்வியறிவைக் குறித்து "இந்தியா டுடே" ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வறிக்கை சமூகத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் நல்லதோர் முன்னெச்சரிக்கையாகும்.அந்த ஆய்வறிக்கையில் ,
  
"2001- ல் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இந்தியாவில் கல்வியறிவைப் பெறுவதில் முஸ்லிம்கள் மிகவும் பின் தங்கி இருக்கிறார்கள் என்பதைத்  தெரிவிக்கிறது. 1881- க்கு பிறகு அகில இந்திய அளவில் மேற்கொள்ளப் பட்ட கணக்கெடுப்புகளில் இது மிக விரிவானது (சமீபத்தில் வெளியாகியுள்ள ஸச்சார் அறிக்கை இக்கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டதே). 2001-லேயே இக்கணக்கெடுப்பு முடிந்துவிட்டாலும் பல தகவல்களை கணக்கெடுப்பு ஆணையம் இன்னமும் வெளியிடவில்லை.
இந்தியாவைப் பொறுத்தவரை எவரொருவர் தனது பெயரை எழுதவும், கையெழுத்திடவும் தெரிந்திருக்கிறாரோ அவரும் கல்வியறிவு பெற்றவர் என வகைப்படுத்தப்படுகிறார். இந்த குறைந்த பட்ச கல்வியறிவைக்கூட இந்தியாவில் உள்ள மொத்த முஸ்லிம்களில்  55% அளவினர்தான் பெற்றுள்ளனர். அதிலும் முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார், அஸ்ஸாம், ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நிலைமை படு மோசமானதாக இருக்கிறது.
நாட்டின் மொத்த முஸ்லிம்களில் 61 சதவீதத்தினர் இம்மாநிலங்களில்தான் இருக்கின்றனர். முஸ்லிம்கள் அதிகம் உள்ள மற்றும் படித்தவர்கள் அதிகமுள்ள கேரளாவிலும் கூட இதே நிலைதான். குஜராத் மற்றும் ஆந்திராவில்தான் ஏதோ சொல்லிக்கொள்ளும் அளவுக்கு முஸ்லிம்களின் கல்வி நிலை இருக்கிறது. கிராமம், சிறு நகரம், பெருநகரம் என எல்லா வகையிலும் மற்றவர்களோடு ஒப்பிடுகையில் முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கியே உள்ளனர். ஆரம்பக்கல்வியில் ஆரம்பிக்கும் இவ்வித்தியாசம் கல்வி நிலை உயர உயர அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 
மேலும் இதில் ஆண், பெண் வர்க்க பேதமும் பார்க்கப்படுகிறது. முஸ்லிம் ஆணுக்கு கிடைக்கும் கல்வி, முஸ்லிம் பெண்களுக்கு கிடைப்பதில்லை என்பதும் தெளிவாக்கப்பட்டுள்ளது. அதாவது ஆரம்பக் கல்வியில், பெருநகரம் மற்றும் சிறு நகரங்களில் கல்வியறிவு பெற்ற முஸ்லிம் ஆண்களை விட 18% குறைவாகவே பெண்கள் கல்வி பெறுகிறார்கள். கல்லூரி அளவில் உயரும்போது இது 48% அதிகரிக்கிறது. இப்படி எல்லா வகையிலும் கல்வியில் பின் தங்கியுள்ள முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர்களின் கல்வி விகிதத்தை அடைவதற்கு 2011-ம் ஆண்டிற்குள் 31 மில்லியன் முஸ்லிம்கள் கல்வி கற்கவேண்டும்" என்று கூறுகிறது .

சமீபத்தில் இராணுவம் மற்றும் காவல்துறையில் முஸ்லிம்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்க மத்திய அரசு தீர்மானம் எடுப்பதற்கு முயன்றபோது அனைத்து ஃபாசிஸ சக்திகளும் இணைந்து நாட்டுப் பாதுகாப்பை காரணம் காட்டி அதனை எதிர்த்தது நினைவுகூரத்தக்கது.
இன்னும் சொல்லப்படாத கணக்கெடுக்கப்படாத விவரங்கள் எத்தனையோ உள்ளன. 

   தமிழகத்தை பொருத்தவரை ,கடந்த திமுக ஆட்சியில் முஸ்லிம் சமுதாயத்தின் கோரிக்கையை ஏற்று 3.5 % இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது . பின்பு , அதனை சரியாக அதிகாரிகள் நிரப்பவில்லை என்று தகவல் வந்ததும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் கோரிக்கையை ஏற்று திமுக அரசு கண்காணிப்பு குழு அமைத்தது .முறையாக முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு நிறப்பப்படுகிறதா ? என்பது கண்காணிக்கப்பட்டது ; ஆனால் , நம்  சில துறைகளில் ஏற்படும் காலி இடங்களுக்கு அரசு நிரப்பும் போது முஸ்லிம்களை தேடும் நிலை ஏற்பட்டுள்ளது .

             இந்த நிலையில் ,நம் தாய் சபையாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் தீர சிந்தித்து ,இந்த நிலை இனி தொடரக்கூடாது ,கல்வி நிலையில் நம் சமுதாயம் இன்னும் முன்னுக்கு வர வேண்டியுள்ளது ,இதற்க்கு சமுதாய மக்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்தனர் .

      அதன் அடிப்படையில் ,எதிர்வரும் செப்டெம்பர் 08 - ஆம் நாள் கும்ப கோணத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கல்வி விழிப்புணர்வு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . ஏதோ ,முஸ்லிம் லீக்கினர் திடீர் என்று கட்சியை வலுப்பைபடுத்த இவ்வாறு நடத்துகிறார்கள் என்று இன்றைய தலைமுறையினர் நினைத்துவிடக்கூடாது .

 முஸ்லிம் லீக்கின் துவக்கமே ,முஸ்லிம்களின் கல்விநிலை முன்னேற்றத்திற்கும் ,இட ஒதுக்கீட்டிற்கும் தான் .அந்த இரண்டு நோக்கத்தை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டதால் தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்னை புதுக்கல்லூரி முதல் நெல்லை சதக்கத்துல்லா அப்பா கல்லூரிவரை தோன்றுவதற்கு காரணமாக இருந்தது .

                  எனவே ,முஸ்லிம்களின் கல்வி நிலை உயர ,மத்திய மாநில அரசுகள் நம் சமுதாயத்திற்கு வழங்கியுள்ள உரிமைகளை நாம் முழுமையாக பயன்படுத்திட வழிகாண நம் சமுதாயத்தை செம்மையோடு வழி நடத்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அழைக்கின்றது ,செப் -08 -இல் கல்வி விழிப்புணர்வு மாநாடு !
             
                 தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தி பெற்றிட , அகில இந்த அளவில் முஸ்லிம்களுக்காக மத்தியரசின் 10 % இட ஒதுக்கீடு கிடைத்திட ,வலுவான முறையில் மத்திய ,மாநில அரசுகளுக்கு நம் கோரிக்கை குரல் கேட்டிட , அழைக்கின்றது நம் இனமானப் பேரியக்கம் ,செப்-08 ,கும்பகோணத்தில் கல்வி விழிப்புணர்வு மாநாடு !

                             நாம் நடந்து வந்த பாதை என்ன ? இனி நாம் நடை போடும் பாதை எப்படி பட்டது ? நாம் எவ்வாறு நடந்து சென்றால் வெற்றி இலக்கை அடையலாம் ? என்ற கேள்விகளுக்கு விடை கண்டிட அழைக்கின்றது தாய் சபை செப்-08 கும்பகோணத்தில் கல்வி விழிப்புணர்வு மாநாடு !

          இளைய சமுதாயமே !  மாணவச் சமுதாயமே ! நம் நிலையை நாமே உயர்த்திட ,கும்ப கோணம் நோக்கி வா ! திணரட்டும் கும்பகோணம்! அறியட்டும் நம் நிலையை அரசாங்கம் ! 

-------------அபு ஆஸிமா
             
நன்றி : மணிச்சுடர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக