Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 4 ஆகஸ்ட், 2012

உலக வரலாற்றில் ஒரு பொற்கால ஆட்சி !

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது குடிமக்கள் நிலையை அறிவதற்காக நகர்வலம் செல்லும் வழக்கம் உடையவர்கள்.

அப்போது மதினா நகரெங்கும் பஞ்சம் நிலவி வந்தது. நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட அனனவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதில் உமர் (ரலி) அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள்.

ஒருநாள் இரவு நேரத்தில் கலிஃபா அவர்கள் தமது உதவியாளர் அஸ்லம் என்பாருடன் மதினாவின் புறநகர்ப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு குடிசையிலிருந்து விளக்கு வெளிச்சமும் குழந்தைகளின் அழுகுரலும் வரக் கண்டார்கள்.

கலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது, அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள். கலிஃபா உமர் (ரலி) அவர்கள், அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று அவருக்கருகில் சென்றார்கள்.

அந்தப் பெண்மணி உமர் (ரலி) அவர்களை பார்த்ததில்லை என்பதால் வந்திருப்பவர் கலிஃபா என்பதை அறியவில்லை.

உமர் (ரலி): “குழந்தைகள் ஏன் அழுது கொண்டிருக்கின்றன?”

பெண்மணி: “அவர்கள் பசியோடிருக்கின்றார்கள். அதனால்தான் அழுகிறார்கள்”
உமர் (ரலி): “அடுப்பில் என்ன இருக்கிறது?”

பெண்மணி: “அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன்.

. இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத கலிஃபா உமர் அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்”.

அப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன கலிஃபா உமர் (ரலி) அவர்களின் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக! உமது துன்பமான நிலைமையை உமர் எப்படி அறிவார்?” என்று வினவினார்.

“முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் உமர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார் அந்தப் பெண்மணி.

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் விரைந்து நகருக்குத் திரும்பி உடனே பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும் எடுத்து வைத்தார்கள். கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டார்கள். சாக்குப்பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து, அதைத் தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள்.

அவர்களின் உதவியாளர் அஸ்லம் பதறியவாறு, “இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே!” என்றார். உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “என்ன? நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான்தானே? அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும்!”

அஸ்லம் மிகவும் தயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார். அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் உமர் (ரலி) அவர்கள். அஸ்லமும் அவர்களை பின்தொடர்ந்து சென்றார்.

குடிசையை அடைந்த உமர் (ரலி) அவர்கள் மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த சட்டியிலிட்டு கிளறினார்கள். அருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அவர்களின் அடர்ந்த தாடிக்குள் புகை படிந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள். மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள். வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த உமர் (ரலி) அவர்களின் முகமும் மலர்ந்தது.

உமர் (ரலி) அவர்கள் அப்பெண்மணியிடம் ‘அக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா’ என வினவினார்கள். அந்தக் குழந்தைகளின் தந்தை இறந்து விட்டதாகவும் அவர்களுக்கு ஆதரவளிக்க வேறு யாரும் இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார். வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப் போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!

உண்மையில் கலிஃபா பதவிக்கு உமரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர்”. அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது கலிஃபா உமர் (ரலி) அவர்கள்தாம் என்பதை அம்மாது இன்னும் அறிந்து கொள்ளவில்லை!

உமர் (ரலி) அவர்களும் ‘தாம் இன்னார்’ என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீர் கலிஃபாவை சந்திக்கும்போது அங்கே என்னை கண்டு கொள்வீர்” என்றார்கள்.

கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் அதன் பின்னர் மதினா திரும்பினார்கள். செல்லும் வழியில் தன் உதவியாளரிடம் சொன்னார்கள், “அஸ்லம், நான் ஏன் அங்கே அமர்ந்திருந்தேன் தெரியுமா? அக்குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்த நான் அவர்கள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடுவதையும் சிறிது நேரம் பார்க்க விரும்பினேன். அதனால்தான்.”

வீரத்திற்குப் பெயர் பெற்ற உமர் (ரலி) அவர்கள், கருணையுள்ளம் உடையவராகவும் குடிமக்கள் மேல் அக்கறை கொண்ட பொறுப்பான தேசத் தலைவராகவும் விளங்கினார்கள்.

மின் வாரியத்தில் "ஹெல்பர்" பணியிடங்கள் :சீனியாரிட்டி பட்டியல் வெளியீடு


தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில் ஹெல்பர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு சீனியாரிட்டி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு மின் வாரியம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள ஹெல்பர் பணிக் காலியிடங்களுக்கு நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உத்தேச சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட்டு வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐயில் (என்.டி.சி) வயர்மேன் அல்து எலக்ட்ரீசியன் (ஐ.டி.ஐ வயர்மேன் அல்லது எலக்ட்ரீசியன்) படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு 1.7.2012 அன்று பொது வகுப்பினர் 30 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 32 வயதுக்குள்ளும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை விட அதிக கல்வித் தகுதி கொண்ட பி.சி, எம்.பி.சி, எஸ்.சி, எஸ்.டி வகுப்பினருக்கு வயது வரம்பு கிடையாது.
சீனியாரிட்டியை பொறுத்தவரை முன்னுரிமையற்றவர்கள் பிரிவில் ஆதிதிராவிடர் பெண்கள் - 13.7.2012, ஆதிதிராவிடர் பொது - 6.12.2000, அருந்ததியினர் - 27.1.2012, பழங்குடியினர் பெண்கள் - 12.5.2012, பழங்குடியினர் பொது - 30.10.2008, மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பெண்கள் - 16.7.2012, மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பொது - 16.1.2001, பிற்பட்ட முஸ்லிம் வகுப்பினர் பெண்கள் - 18.5.2012, பிற்பட்ட முஸ்லிம் வகுப்பினர் பொது - 28.6.2005, பிற்பட்ட வகுப்பினர் பெண்கள் - 30.7.2012, பொது வகுப்பினர் பெண்கள் - 3.2.2012, பிற்பட்ட வகுப்பினர் மற்றும் அனைத்து பொது வகுப்பினர் - 26.12.2001 வரை பதிவு செய்துள்ளவர்கள் பரிந்துரைக்கப்படுகின்றனர்.
முன்னுரிமை சான்று பதிவு செய்துள்ளவர்கள் 30.7.2012 வரை பரிந்துரைக்கப்படுகின்றனர். இந்த சீனியாரிட்டிக்குள் ஐ.டி.ஐயில் (என்.டி.சி), வயர்மேன் அல்லது எலக்ட்ரீசியன் (ஐ.டி.ஐ என்.டி.சி) வயர்மேன் அல்லது எலக்ட்ரீசியன்) பதிவு செய்துள்ளவர்கள் தங்கள் பெயரை வெப்சைட்டில் பார்த்து கொள்ளலாம்.
உரிய கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் சீனியாரிட்டி இருந்தும் தங்கள் பெயர் இடம் பெறவில்லை என தெரிந்தால் அவர்கள் மட்டும் எதிர்வரும் 6ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரிடம் நேரில் ஆஜராகி விண்ணப்பிக்கலாம்.
மேலும் ஐ.டி.ஐயில் வயர்மேன் அல்லது எலக்ட்ரீசியன் கல்வித் தகுதியை பதிவு செய்துள்ளவர்கள்  வேலைவாய்ப்பு அடையாள அட்டையை நகல் எடுத்து பரிசீலித்து கொள்ள வேண்டும் என்று திருநெல்வேலி
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் மகாலட்சுமி தெரிவித்தார்.

கோழிப்பண்ணை தொழிலுக்கு அரசின் தாராள உதவி


 புதிய கால்நடை மருந்தகங்கள், விவசாயிகள், சுயவிருப்பத்தில் கோழிப் பண்ணைகள், நாட்டுக் கோழிப்பண்ணைகள் அமைக்க, 28.35 கோடி ரூபாய் ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டார். தென்மாவட்ட விவசாயிகளும், காஞ்சிபுரம் உட்பட வட மாவட்ட விவசாயிகளும் கோழிப்பண்ணை அமைக்க, இந்தத் திட்டம் உதவிடும்.

மருந்தகம்! இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில், கிராமப்புற மக்களின் நன்மைக்காக, அவர்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே, நடப்பாண்டில், 20 புதிய கால்நடை மருந்தகங்கள், ஆறு கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். கோழி வளர்ப்புத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய விழுப்புரம் மண்டலம் மற்றும் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சங்கரன் கோவில் மண்டலம் என, இரு புதிய கோழி பண்ணை தொகுப்பு மண்டலங்கள் உருவாக்கப் படுகின்றன.

இந்த மண்டலங்களில், ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், அவர்கள் சுயவிருப்பம் மற்றும் தகுதிக்கேற்ப, 1,000 முதல், 5,000 கறிக்கோழிகள் கொண்ட பண்ணைகள் அமைத்துக் கொள்ள வசதியாக, 20.31 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டு உள்ளது. இந்த நிதியின் மூலம், ஒவ்வொரு மாவட்டத்திலும், 230 கோழிப் பண்ணைகள் அமைக்க திட்டமிடப் பட்டு உள்ளது.

நாட்டு கோழி :திண்டுக்கல், தர்மபுரி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், திருச்சி, வேலூர் ஆகிய 16 மாவட்டங்களில், நாட்டுக் கோழி வளர்ப்பை ஊக்கப்படுத்த, 2.4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், ஒவ்வொரு மாவட்டத்திலும், குறைந்த பட்சம் 250 கோழிகள் கொண்ட, 35 பண்ணைகள் அமைக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

அர்த்தமுள்ள வரவேற்பு


நரிக்குறவ சமுதாயத்தில் பிறந்து மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த மாணவர் ராஜபாண்டிக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் தடபுடலாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நரிக்குறவ இனத்தை சேர்ந்தவரான ராஜபாண்டி, பிளஸ்-2 தேர்வில் 1167 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். ராஜபாண்டிக்கு மருத்துவம் படித்து ஏழை, எளியோருக்கு சேவை புரிய வேண்டும் என்ற உயரிய லட்சியம் இருந்து வந்தது.
மருத்துவக்கல்லூரிக்கான கட்-ஆப் மார்க் 197.75 அவர் பெற்றிருந்தார். இதைத்தொடர்ந்து கடந்த மாதம் சென்னையில் நடந்த மருத்துவ கல்லூரி கவுன்சிலிங்கில், மாணவர் ராஜபாண்டிக்கு தஞ்சை மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது.
நரிக்குறவ இனத்தை சேர்ந்த அவருக்கு அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தார். இருப்பினும் கட்டணத்தை நினைத்து அவர் பெரும் கவலை அடைந்தார்.
இதையடுத்து நடிகர் ஜீவா ராஜபாண்டிக்கு ரூ.30 ஆயிரம் வழங்கி உதவி செய்தார். அதேபோல தூத்துக்குடியை சேர்ந்த ஒரு டாக்டர் ரூ.20 ஆயிரமும், கோவையை சேர்ந்த சமூக சேவகர், டாக்டர் முத்துலட்சுமி உள்ளிட்டோரும் மாணவர் ராஜபாண்டிக்கு பண உதவி அளித்தனர்.
இதையடுத்து நம்பிக்கை பெற்ற ராஜபாண்டி கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி முதலாமாண்டுத் தொடக்க விழா கல்லூரி கலையரங்கில் நடந்தது. அப்போது ராஜபாண்டிக்கு மூத்த மாணவர்கள் வரவேற்பு கொடுத்து அவரை மகிழ்வித்தனர் கைகுலுக்கியும், வாழ்த்துகள் கூறியும் அவர்கள் வரவேற்றது ராஜபாண்டியை நெகிழ வைத்தது.
அதேபோல கல்லூரி டீன் உமாதேவியும் ராஜபாண்டிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அன்னை கதிஜா (ரலி )

எவ்விதச் சலனமுமின்றி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முதல் மனிதராகிய கதீஜா (ரலி) அவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக நபி (ஸல்) அவர்களோடு தோளோடு தோள் நின்று உழைத்தார்கள். அவர்களின் தஃவாக் களத்தில் தன்னையும் பங்காளியாக இணைத்துக் கொண்டார்கள். தமது செல்வத்தையெல்லாம் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காகவும் பிரச்சாரப் பணிக்காகவும் தியாகம் செய்தார்கள். இவ்வாறு இஸ்லாத்திற்காக
 உடலாலும் பொருளாளும் உள்ளத்தாலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்கள். கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புப் பற்றி ஏராளமான நபி மொழிகள் காணப்படுகின்றன. அவற்றிற் சில வருமாறு:

உலகிற் சிறந்த பெண்மணி


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “இவ்வுலகிற் சிறந்த பெண் மர்யம் (அலை) ஆவார். இவ்வுலகிற் சிறந்த மற்றொரு பெண் கதீஜா (ரலி) ஆவார்” [அறிவிப்பவர்: அலி (ரலி), ஆதாரம்: புகாரி 3432, முஸ்லிம் 4815].
கதீஜா (ரலி) அவர்களின் குடும்பத்தினரை நபி (ஸல்) அவர்கள் மதித்து நடந்தார்கள்

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “கதீஜா (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பின் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களிடம் வருவதற்கு கதீஜா (ரலி) அவர்களின் சகோதரி ஹாலா பின்த் குவைலித் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். அவருடைய குரல் கதீஜா (ரலி) அவர்களின் குரலைப் போன்று இருந்ததால் கதீஜா (ரலி) அவர்கள் அனுமதி கோருகிறார்கள் என்று எண்ணி நபி (ஸல்) அவர்கள் மகிழ்ச்சியுற்றார்கள். பிறகு அவருடைய சகோதரி என்று தெரிந்த போது ‘என் இறைவனே! இவர் ஹாலா’ என்று கூறினார்கள். இதனைக் கேட்ட நான் பொறாமைப்பட்டேன். ‘காலத்தால் அழிக்கப்பட்ட பல் விழுந்த குறைஷிக் கிழவிகளில் ஒருவரையா இவ்வளவு நினைவு கூருகிறீர்கள். நிச்சயமாக அவர்களை விடச் சிறந்த ஒருவரை அல்லாஹ் உங்களுக்குத் தந்துள்ளான்’ என்று கூறினேன்” [நூல்: புகாரி 382, முஸ்லிம் 4824].
மற்றுமொரு அறிவிப்பில், “‘அல்லாஹ் உங்களுக்கு வயது முதிர்ந்தவர்களையும் சிறிய வயதினரையும் கொடுத்துள்ளான்’ என்று நான் கூறியபோது நபி (ஸல்) அவர்கள் கோபமுற்றார்கள். அப்போது நான், ‘உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பியவன் மீது ஆணையாக! இதன் பிறகு அவர்களைப் பற்றி நல்லதைத் தவிர வேறு எதையும் கூற மாட்டேன்’ என்று கூறினேன்” என்றுள்ளது. [அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: அஹ்மத், தபரானி]

கதீஜா (ரலி) அவர்களின் நேசர்களை நபி (ஸல்) அவர்கள் மதித்தல்
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் கதீஜா (ரலி) அவர்கள் மீது பொறாமைப்பட்டதுபோல எவர்மீதும் நான் பொறாமைப்பட்டதில்லை. நானோ அவர்களைப் பார்த்ததுகூடக் கிடையாது. எனினும் நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களை அதிகமதிகம் நினைவுகூருவார்கள். ஒரு ஆட்டை அறுத்தால் அதைப் பங்கிட்டு கதீஜா (ரலி) அவர்களின் தோழிகளுக்கும் அனுப்பி வைப்பார்கள். சில நேரங்களில் நான் எரிச்சல் பட்டு “உங்களுக்கு உலகத்தில் கதீஜாவை விட்டால் வேறு பெண்களே இல்லையா” என்று கேட்பேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அந்தப் பெண்மணி இன்னின்னவாறு இருந்தார்” என்று அவர்களின் நற் பண்புகளைக் கூறுவார்கள். மேலும், “அப்பெண்மணியின் மூலம்தான் எனக்குக் குழந்தைகளும் கிடைத்தன” என்றும் கூறுவார்கள். [புகாரி: 3818]

கதீஜா (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் ஸலாம் கூறல்


ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! இதோ கதீஜா. அவர் தன்னுடன் குழம்பு, உணவு, பானம் ஆகியவை நிறைந்த பாத்திரத்தை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அவருக்கு என் சார்பாகவும் அவரின் இறைவன் சார்பாகவும் ஸலாமை எடுத்துச் சொல்லுங்கள். சொர்க்கத்தில் அவருக்கு சச்சரவு, துன்பங்கள் இல்லாத, முத்தாலான மாளிகையுண்டு என்ற நற்செய்தியையும் சொல்லுங்கள்” என்று கூறினார். [அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி 3820, 7497, முஸ்லிம் 4817]

சுவனத்தைக் கொண்டு நன்மாராயம்


நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களைப் பற்றி அதிகம் நினைவு கூர்ந்தால் நபி (ஸல்) அவர்களின் வேறு எந்த மனைவியின் மீதும் பொறாமைப்படாதளவு நான் கதீஜா (ரலி) அவர்கள் மீது பொறாமைப்படுவேன். அவர்கள் இறந்து மூன்று ஆண்டுகள் கழிந்து என்னை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்தார்கள். அல்லாஹ்வும் ஜிப்ரீல் (அலை) அவர்களும் கதீஜா (ரலி) அவர்களுக்குச் சுவர்க்கத்தில் முத்து மாளிகை யுண்டு என்ற நற்செய்தியை அவருக்குத் தெரிவியுங்கள் என்று கட்டளையிட்டார்கள். [அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 3817, முஸ்லிம் 4820]


மரணம்


நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்க்கையில் 10 வருடங்கள் வாழ்ந்து தமது 65 ஆம் வயதில் கி.பி. 621 இல் மரணித்தார்கள். அதே ஆண்டில்தான் இஸ்லாத்தை ஏற்காவிட்டாலும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கைக்குப் பெரும் துணையாக இருந்த அவரது சிறிய தந்தை அபூ தாலிப் அவர்களும் மரணித்தார்கள். சிறிய தந்தையினதும் ஆருயிர் மனைவி கதீஜா (ரலி) அவர்களினதும் மரணத்தால் நபி (ஸல்) அவர்கள் சொல்லொணாத் துயரத்திற்காளானார்கள். நபி (ஸல்) அவர்கள் மட்டுமன்றி இஸ்லாமிய உலகமே சோகத்தில் மூழ்கியது.

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

கலவரத்தால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாமிய முஸ்லிம்களுக்கு உதவி செய்ய IUML நிவாரணக்குழு அமைப்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகிகள் மற்றும் கட்சி யின் சட்ட திட்ட திருத்தக் குழு ஆகியவற்றின் கூட்டுக் கூட்டம் ஆக.1-ந்தேதி புது டெல்லி ரபீ மார்க்கில் உள்ள அரசியல் சட்ட அரங்கில் நடை பெற்றது. கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய வெளியு றவுத் துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரு மான இ. அஹமது சாஹிப் தலைமை தாங்கினார். 


அசாம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்க ளுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக நிதி திரட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச்செய லாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர் களை அமைப்பாளராக கொண்டு 7 பேர் அடங்கிய ஒரு குழுவை புதுடெல்லி யில் கூடிய தேசிய நிர்வா கிகள் குழு அமைத்துள்ளது. நிவாரண உதவிகளுக்காக தாராளமாக நிதியுதவி அளிக்கும்படி அக் கூட்டத் தில் வேண்டுகோள் விடுக் கப்பட்டுள்ளது. 


கீழ்க்கண்டவர்களை கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அசாம் கலவர நிவாரண கமிட்டியை அமைக்க இந்த கூட்டம் முடிவெடுக் கிறது. 

1. பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர், தேசியச் செயலாளர் - அமைப்பாளர். 

2. இக்பால் அஹமது - தேசிய துணைத் தலைவர் - உறுப்பினர் 

3. ஈ.டி. முஹம்மது பஷீர் எம்.பி.,- உறுப்பினர் 

4. கே.பி.ஏ. மஜீத் - கேரள மாநில பொதுச் செயலாளர் - உறுப்பினர் 

5. பி.வி.. அப்துல் வஹாப், முன்னாள் எம்.பி., - உறுப்பினர் 

6. தஸ்தகீர் இப்ராஹீம் ஆகா, தேசிய பொருளாளர் - உறுப்பினர் 

7. குர்ரம் அனீஸ் உமர், தேசியச்செயலாளர் - உறுப்பி னர் 

அசாமில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய நிவாரண உதவிகள் வழங்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைத்துள்ள அசாம் நிவாரண நிதிக்கு தாராளமாக பொருளு தவி வழங்கும்படி வேண்டு கோள் விடுக்கப்படுகிறது. 


நிவாரண நிதி அளிக்கவிரும்புவோர் 
காசோலை எடுக்கவேண்டிய முகவரி :
`IUML - ASSAM RELIEF FUND ' என்ற பெயரில் 
இந்தியன் வங்கி ஹார்பர் கிளை 
சென்னை - 1 


காசோலை அனுப்ப வேண்டிய முகவரி :
காயிதே மில்லத் மன்ஸில்
36, மரைக்காயர் லெப்பை தெரு,
 சென்னை - 600 001

10 லட்சம் குழந்தைகள் பட்டினி

ஆப்பிரிக்காவில் மேற்கு பகுதியில் சினேகல் என்ற நாடு உள்ளது. இங்கு சமீபகாலமாக விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது. இதனால் இங்குள்ள மக்களால் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. உணவு பொருட்களை விலை கொடுத்து வாங்க முடியாமல் பெரும்பாலும் பட்டினியாக கிடக்கிறார்கள். 

சுமார் 10 லட்சம் குழந்தைகள் பட்டினியால் உடல் மெலிந்து நோய்வாய்ப்பட்டு இருப்பதாக ஐ.நா.சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நாட்டில் மட்டும் அல்லாமல் அருகில் உள்ள மாலி, நைஜர், சாட், முரிட்டோனியா ஆகிய நாடுகளில் இதே போன்ற நிலைமை நிலவுகிறது. 

இந்த நாடுகளில் மட்டும் 18 லட்சம் பேர் போதிய உணவு இல்லாமல் பட்டினி கிடப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது. இந்த நாடுகளில் இருக்கும் அரசுகளின் நிர்வாக திறமையின்மை காரணத்தினால் தான் இந்த நிலைமை ஏற்பட்டு உள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். 

பட்டினியை தவிர்க்க உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க உதவ  வேண்டும் என மற்ற நாடுகளை ஐ.நா.சபை கேட்டுக் கொண்டு உள்ளது.