Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 10 ஜூலை, 2012

இ-டாய்லெட் குற்றாலத்தில் .......

 "குற்றாலத்தில் "இ டாய்லெட்' வசதி வரும் 26ம் தேதி துவக்கப்படுகிறது' என தென்காசி எம்.எல்.ஏ.,சரத்குமார் கூறினார். குற்றாலத்தில் சீசன் களை கட்டி வருகிறது. இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் மெயின் அருவி, பழையகுற்றாலம் பகுதியை எம்.எல்.ஏ.,சரத்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 


மெயின் அருவி பகுதியை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க டவுன் பஞ்.,நிர்வாக அதிகாரியிடம் எம்.எல்.ஏ.,கூறினார். மேலும் மெயின் அருவிக்கு செல்லும் வழியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதை எம்.எல்.ஏ., பார்வையிட்டார். உண்மையிலேயே தூய்மையான குடிநீர் வழங்கப்படுகிறதா என குடிநீரை குடித்து பார்த்து சரத்குமார் ஆய்வு செய்தார்.


 பழைய குற்றால அருவிக்கு சென்று ஆய்வு நடத்திய எம்.எல்.ஏ.,விடம் அங்கு அடிப்படை வசதிகள் மேன்மைபடுத்தப்பட வேண்டும் என்பதை பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இதன் பின்னர் எம்.எல்.ஏ.,சரத்குமார் நிருபர்களிடம் கூறும் போது, ""குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உடனுக்குடன் செய்து கொடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் 26ம் தேதி "இ டாய்லெட்' வசதி குற்றாலத்தில் துவக்கப்படுகிறது. மெயின் அருவி அருகில் பெண்கள் துணிகளை துவைப்பதால் தண்ணீர் மாசுபடுகிறது. மேலும் பழைய துணிகள் ஆற்றில் விடப்படுகிறது. 

திங்கள், 9 ஜூலை, 2012

திமுக எம்.பிக்கு அதிமுக அரசு பதவி :கலைஞர் ராஜினாமா செய்யச்சொல்வாரா ?

  கடந்த 15 /06 /2012 அன்று தமிழக வக்ப் வாரிய உறுப்பினர்களாக தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகம்மது ஜான், எம்.எல்.ஏ. அப்துல்ரகீம், காங்கிரஸ் எம்.பி.  ஹாரூன், திமுக எம்.பி. ஜின்னா மற்றும் தமிழ்மகன் உசேன், பாரூக், தலைமை ஹாஜி (சன்னி) சலாஹுதீன் அய்யூப், தலைமை ஹாஜி மெஹ்திகான் ஆகிய 8 பேரை நியமித்து  தமிழக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

      அதிமுக அரசு திமுக காரர்களை பழி வாங்கி வருகிறது ,பொய் வழக்கு போடுகிறது என்றும் ,மக்களுக்கு நல்லாட்சி தரவில்லை என்றும் தினசரி திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டு வருகிறார் .சமீபத்தில் அதிமுக அரசை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டமும் திமுக நடத்தியது .திமுக வை குறை கூறிய மார்க்சிஸ்ட் செயலாளர் ராமகிருஷ்ணனுக்கு  அதிமுக வினரின் குறை கண்ணுக்குத் தெரியவில்லையா? என்று கேள்வி கேட்டுக்கூட கலைஞர் அறிக்கை வெளியிட்டுள்ளார் .
        இந்த சூழலில் ,திமுக வின் எதிரியாக திமுக வினரால் கருதப்படும் அதிமுக அரசு திமுக வின் மாநிலங்களவை உறுப்பினர் ஜின்னாவை   தமிழக அரசு வக்ப் வாரிய உறுப்பினராக நியமித்துள்ளது .அதிமுக வை ,அதன் ஆட்சியை சரமாரியாக எதிர்த்து வரும் திமுக தலைவர் கலைஞர் ஜின்னாவை அந்தபதவியை ஏற்க மறுக்கச்சொல்வாரா ?  என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் .

ஒரு ரூபாய்க்கு ஒரு பச்சைமிளகாய் :ஜெயா அரசு கவனம் செலுத்துமா ?

ஊட்டியில், மலைக் காய்கறிகளின் விலை, வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது; ஒரு பச்சை மிளகாய், ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஊட்டியில் உருளைக் கிழங்கு, பீட்ரூட், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், ஊட்டி அவரை, பச்சை மிளகாய் உட்பட காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. தும்மனட்டி, கூக்கல் தொரை, முத்தொரை பாலாடா, ஓல்டு ஊட்டி, பொரையரட்டி, நஞ்சநாடு, மணியட்டி உள்ளிட்ட கிராமங்களில், காய்கறி விவசாயம் நடக்கிறது.

உள்ளூர் மக்களின் தேவைக்கு மட்டுமின்றி,காய்கறிகள் மேட்டுப்பாளையம் சந்தைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் அனுப் பப்படுகின்றன.

ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெய்யும் கோடை மழை, இந்தாண்டு போதுமானதாக இல்லை; மேலும், கடந்த ஏப்ரல் மாதம், சில கிராமங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால், பல ஏக்கர் விவசாயப் பயிர்கள் நாசமாகின. இதனால், மகசூல் குறைந்து, கடந்தாண்டை விட, தற்போது 20 முதல் 40 சதவீதம் வரை, மலைக் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
ஊட்டியைச் சேர்ந்த மொத்த காய்கறி வியாபாரி ரியாஸ் கூறுகையில், ""ஊட்டியில், இம்முறை போதிய மழை பெய்யவில்லை; அதிகளவு நீர் தேவைப்படும் பச்சை மிளகாய், அவரை போன்றவற்றின் மகசூல், தண்ணீர் இல்லாததால் குறைந்துவிட்டது.

பச்சை மிளகாய் விலை, இதுவரை இல்லாதவாறு, கிலோ 80 முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது; ஒரு பச்சை மிளகாய் ஒரு ரூபாய் என்ற அளவில் விற்க வேண்டியுள்ளது. என்றார்.


 "நூறாண்டு சாதனை ஓராண்டில் "என்று மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து விளம்பரம் செய்யும் ஜெயா அரசு ,மக்களின் அத்தியாவசிய உணவுப்பொருள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமா ? என்பது தான் தமிழக மக்களின் கேள்வியாகும் .

ஞாயிறு, 8 ஜூலை, 2012

கேரளா உயர்நீதிமன்றம் ருசிகர தீர்ப்பு


"இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் சென்றால், அவர்களுக்கு பன்முறை எழுதும் (இம்போசிசன்) தண்டனையை, போக்குவரத்து போலீசார் வழங்குவதில் தவறில்லை. வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இதைச் செய்யலாம்' என, கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரளா, திருச்சூர் பூந்தோள் பகுதியைச் சேர்ந்த டாக்டர் பி.கே.லாசர் என்பவர், கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் (ஹெல்மெட்) அணியாமல் சென்றால், அவர்களிடம் பன்முறை எழுதும் (இம்போசிசன்) தண்டனையை போக்குவரத்து போலீசார் அளித்து வருகின்றனர். ஆனால், சட்டத்திலோ, போக்குவரத்து விதிகளிலோ இதுபோன்ற தண்டனை வழங்கலாம் என, குறிப்பிடப்படவில்லை.எனவே, பன்முறை எழுதுவது போன்ற சட்டத்தில் இல்லாத தண்டனைகளை போலீசார் வழங்குவது அதிகார எல்லையை மீறிய செயல் என, உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த மனு கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) மஞ்சுளா செல்லூர் மற்றும் நீதிபதி ஏ.எம்.ஷபீக் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் கூறுகையில், "இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிந்து தான் வாகனங்களை ஓட்ட வேண்டும். அதை மீறி, தலைக்கவசம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்காக, நான் இனிமேல் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்ட மாட்டேன் என்றும், மொபைல் போனில் பேசிக்கொண்டு வாகனத்தை ஓட்ட மாட்டேன் என்றும் பன்முறை எழுதச் சொல்லி தண்டனை அளிப்பதில் தவறில்லை.

இது போன்ற தண்டனைகள் ஒரு பகுதியில் மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் செயல்படுத்த வேண்டும். அப்போது தான் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து பலருக்கும் தெரிய வாய்ப்பு ஏற்படும். இது போன்ற செயல்களை போலீசார் ஏற்று செய்வதில் தவறேதும் இல்லை. இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் தெரிவித்தனர்.

சுயநலத்திலாவது சுரணை வந்ததே....!


வக்பு வாரிய உறுப்பினர் குறித்த விவகாரத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகம்மது ஜான், அரசுச் செயலாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
வக்பு வாரியம், கோடிக்கணக்கான சொத்துகளை நிர்வகித்து வருகிறது. இதற்கான உறுப்பினர்களாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகம்மது ஜான், எம்.எல்.ஏ. அப்துல்ரகீம், எம்.பி.க்கள் ஹாரூன்,  ஜின்னா மற்றும் தமிழ்மகன் உசேன், பாரூக், தலைமை ஹாஜி (சன்னி) சலாஹுதீன் அய்யூப், தலைமை ஹாஜி மெஹ்திகான் ஆகிய 8 பேரை நியமித்து 15.6.2012 அன்று தமிழக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நியமனத்தில் விதிமுறைகளைப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் சரியாகப் பின்பற்றவில்லை. இதனால் தகுதியில்லாதவர் கூட உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினரின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். விதிமுறைகளைப் பின்பற்றாமல் உறுப்பினர்களை நியமனம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்துச் செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி கே.சந்துரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கான பதில் மனுவை 2 வாரத்துக்குள் தாக்கல் செய்யுமாறு அமைச்சர் முகம்மது ஜான், அரசுச் செயலாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

தியாகத்தின் மரணத்தில் மர்மமா ?


 பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் மரணத்தில் தற்போது புதிய சந்தேகம் கிளம்பியுள்ளது. அவரை பொலோனியம் என்ற விஷம் கொடுத்து கொலை செய்திருக்கலாம் என்று ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உடலைத் தோண்டி ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாலஸ்தீன விடுதலைக்காக,தனது வாழ்நாள் முழுவதும்  போராடியவர் யாசர் அராபத். இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீனத்தை முற்றுகையிட்டிருந்த நிலையில், 75 வயதான அராபத் நோய்வாய்ப்பட்டதால் அவர் பிரான்ஸ் நாட்டு விமானம் மூலம் பாரிஸ் நகருக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அப்போது கோமா நிலைக்கு சென்ற அராபத் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி பாரிஸ் புறநகரில் உள்ள மருத்துவமனையில் இறந்தார். இவருடைய மரணத்தில் பாலஸ்தீன தலைவர்கள் சந்தேகப்பட்டனர். எனினும் கோமா நிலையில் அராபத் இறந்ததால், பிரேத பரிசோதனை ஏதும் செய்யப்படாமல் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதற்கிடையே அவரது மனைவி சுஹாவிடம் இருந்து அராபத்தின் உயிரியல் மாதிரிகளை ஆய்வு செய்து ஆய்வு அறிக்கையை சுவிட்சர்லாந்து நாட்டு ஆய்வகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அராபத் இறக்கும் போது அவரது உடலில் கொடிய விஷமான "பொலோனியம்' இருந்துள்ளது. ரஷ்ய உளவாளியான அலெக்சாண்டர் லிட்வினென்கோ என்பவர், லண்டன் ஓட்டலில் தேனீர் கோப்பையில் தடவப்பட்ட பொலோனியம் விஷத்தால் கொல்லப்பட்டார். இதே முறையில் தான் அராபத் உடலிலும் பொலோனியம் இருந்துள்ளது, என ஆய்வக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டார் என்பதை உறுதியாக நிரூபிக்க வேண்டுமென்றால், அவர் உடலை மீண்டும் தோண்டியெடுத்து தான் ஆராய்ச்சி செய்ய வேண்டும். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும், என கோரும் உரிமை அராபத்தின் மனைவி சுஹாவுக்கு மட்டுமே உள்ளது' என, சுவிட்சர்லாந்து நாட்டின் கதிர்வீச்சு இயற்பியல் துறை தலைவர் பிரான்காய்ஸ் புக்கட் தெரிவித்துள்ளார். இந்த தகவல் அல்-ஜசீரா தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது.
அரபாத் இறந்தபோது அவரை இஸ்ரேல் விஷம் வைத்துக் கொன்றுவிட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அவர் விஷம் வைத்துக் கொல்லப்படவில்லை என்று 2005 ம் ஆண்டு விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது
பொலோனியம் என்பது கதிரியக்கத் தனிமம் ஆகும். ஒரு தூசு அளவுக்கு இது உடலில் இருந்தால் கிட்னி, கல்லீரல் பாதிக்கப்பட்டு சில வாரங்களில் உயிர் பிரிந்து விடும். மேலும் இந்த கதிரியக்கத் தனிமத்தை சந்தையில் வாங்க முடியாது. அணு உலைகளிலிருந்துதான் பிரித்தெடுக்க முடியும். எனவே இந்த பொலோனியத்தை இஸ்ரேல் தான் அராபத்தின் உணவில் கலந்திருக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள ரமலாவில் அடக்கம் செய்யப்பட்ட, யாசர் அராபத்தின் உடலை மீண்டும் தோண்டியெடுத்து, பரிசோதனை செய்ய தயாராக இருப்பதாக பாலஸ்தீன நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாலஸ்தீன அதிபரின் தகவல் தொடர்பாளர் நபில் அபு தினே , "அராபத் மனைவி சுஹாவின் கோரிக்கையை ஏற்று ரமலாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அராபத்தின் உடலை மீண்டும் வெளியே எடுத்து பரிசோதிக்க தயாராக உள்ளோம்' என்றார்.

பெருமைக்கு படிப்பது அதிகரிப்பு :பொறியியல் பட்டதாரிகளில் 8 % பேர் மட்டுமே வேலைக்கு தகுதியானவர்கள்


கடந்த 2011ம் ஆண்டிற்கான பொறியியல் பட்டதாரிகளுக்கான, தேசிய வேலைவாய்ப்பு அறிக்கை, மத்திய தொலைத் தொடர்பு துறையால் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், பி.டெக்., படிப்போரில், 8 சதவீதம் மாணவர்கள் மட்டுமே வேலை பெறத் தகுதியானவர்கள் என, அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.டி., நிறுவனங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் தனியார் மென்பொருள் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று, நாடு முழுவதும் உள்ள, 250 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில், 2011 ஆம் ஆண்டு தொழில்நுட்ப பட்டம் பெற்ற, 55 ஆயிரம் மாணவர்களிடம் ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வில், மாணவர்களின் தொழில்சார்ந்த தொழில்நுட்ப அறிவு மற்றும் மென்திறன் ஆகியவை சோதிக்கப்பட்டன.இவற்றை கண்டறிய, மாணவர்களின் ஆங்கில மொழிப் புலமை, கணக்கிடும் திறமை, தர்க்கம் சார்ந்த சிந்தனை மற்றும் கணிப்பொறி புரோகிராம் எழுதும் திறமை ஆகியவை அளவுகோலாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
பெரிய மற்றும் நடுத்தர ஐ.டி., நிறுவனங்கள் வளாக நேர்காணலில், மென்திறன் மற்றும் தொழில்நுட்ப திறன்களில், பயிற்சி அளிக்க தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். இந்த பயிற்சி குறைந்தது, 3 முதல் 6 மாதங்கள் வரை நடக்கும். அதன் பின்னர், தான் அவர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர்.
இந்த ஆய்வில், ஐ.டி., முடித்து திரும்பும் மாணவர்களில், 17.5 சதவீத மாணவர்கள் மட்டுமே பயிற்சி அளிக்கும் அளவிற்கு தொழில்நுட்பத் திறன் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 46 சதவீத மாணவர்கள் தொழில்நுட்ப அறிவு குறைவு காரணமாகவும், 54 சதவீத மாணவர்கள் மென்திறன் குறைவு காரணமாகவும் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
டில்லியில் படித்த மாணவர்களில், 40 சதவீதம் பேருக்கும் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் படித்தவர்களில், 35 சதவீதம் பேருக்கு இரண்டாவது மூன்றாவது இடங்களிலும் உள்ளனர்.
தமிழ்நாட்டில், 525 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், 1.50 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் ஆண்டுதோறும் படிப்பை முடித்து வெளியே வருகின்றனர்.
தமிழ்நாட்டில் படித்தவர்களில், 10 சதவீத மாணவர்கள் மட்டுமே, ஐடி நிறுவனங்களில் பணி பெறக்கூடிய திறமை உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதித் திறனில் தமிழகம், 16வது இடத்தில் அதாவது கடைசியில் உள்ளது.ஆறு முக்கிய மெட்ரோ நகரங்களில், சென்னை மற்றும் புறநகரில் உள்ள மாணவர்கள் தான் கடைசி இடத்தில் உள்ளனர்.
மெட்ரோ நகரங்களில் டில்லியில் இருந்து ஐ.டி., படித்து வரும், 39.78 சதவீத மாணவர்களிடம் ஐ.டி., கம்பெனிகளில் பணி பெறுவதற்கான திறமை உள்ளது. கோல்கட்டா இரண்டாம் இடத்திலும், பெங்களூரு மூன்றாவது இடத்திலும் உள்ளது. சென்னை, 8.35 சதவீத திறனுடன் கடைசி இடத்தில் உள்ளது.
இதுகுறித்து, பிரபல மனிதவள நிறுவனம் மா பா கன்சல்டன்சி நிறுவன நிர்வாக இயக்குனர் லதா கூறியதாவது: கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் தரம் குறைந்தது இதற்கு முக்கிய காரணம். கல்லூரி முடித்த மாணவர்கள் பல தனியார் கல்லூரிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை உயர்ந்து அளவிற்கு, கல்வியின் தரம் உயர்த்தப்படவில்லை. மாணவர்களிடம் ஐ.டி., துறை குறித்து விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. எனினும், தென்னிந்தியாவில் ஓரளவு நல்ல நிலையில் தான் ஐ.டி., துறையினர் உள்ளனர். சேவைப்பணிகளான பி.பி.ஓ., பணிகளில் தான் நாம் பின்தங்கி உள்ளனர் என்ரு லதா கூறினார்.