Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 21 அக்டோபர், 2013

சென்னையில் விடிய விடிய மழை: வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்

சென்னையில் நேற்றிரவும் இன்று காலையிலும் பெய்த இடைவிடாத மழை காரணமாக தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதில் பல வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

வளசரவாக்கம் மண்டலம் 11–ல் மதுரவாயல் 144–வது வார்டு பகுதியில் உள்ள அபிராமி நகர், காமாட்சி நகர், ஜெயராம் நகரில் உள்ள வீடுகளில் வாசல் வரை மழைநீர் தேங்கி கிடக்கிறது.

இதேபோல் 145–வது வார்டான செல்லியம்மன் நகரிலும் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இங்கு மழைநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் கிடப்பதால் மழைநீர் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதேபோல் கொளத்தூர், பாடிக்குப்பம், பேசின் பிரிட்ஜ், ராம்நகர், குபேரன் நகர் பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளது.

வியாசர்பாடி சி.கல்யாணபுரம், எம்.கே.பி.நகர், புரசைவாக்கம் நெடுஞ்சாலை, ஓட்டேரி, அயனாவரம், ஜாபான் ஆபிஸ் பகுதிகளிலும் மழை தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, நுங்கம்பாக்கம், வள்ளூவர் கோட்டம் மெயின் ரோட்டில் மழை நீருடன், சாக்கடை நீர் கலந்து ரோட்டில் ஓடுவதால் நடக்கவே அறுவெறுப்பாக உள்ளது.

வடபழனி பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கி கிடப்பதால் பஸ் நிலையத்திற்கு வர முடியாமல் மக்கள் ரோட்டிலேயே நின்று பஸ் ஏறி சென்றனர்.

இதேபோல் கோயம்பேடு சிக்னல், ஓட்டேரி ஜங்ஷன், அபிராமி தியேட்டர் அருகேயும் மழைநீர் தேங்கி கிடக்கிறது.

அம்பத்தூர் எஸ்டேட் ரோட்டில் பள்ளம்– மேடு தெரியாத அளவுக்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் லாரி சிக்கி நடுரோட்டில் கவிழ்ந்து கிடக்கிறது. இதனால் எஸ்டேட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.



பட்டறைவாக்கம், மேனாம்பேடு பகுதியில் மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் ரோட்டிலேயே மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் மக்கள் சகதியில் நடந்து வீட்டை விட்டு வெளியே வரும் அவல நிலை உள்ளது.

விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெரு, நடேசன் தெருக்களிலும் மழைநீர் வடியாததால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். ஒக்கியம் துரைப்பாக்கம் கிருஷ்ணா நகரில் மழைநீர் தேங்கியதால் கவுன்சிலர் எம்.எஸ்.பாஸ்கரன் ஜே.சி.பி. எந்திரத்தை வரவழைத்து மழைநீரை வடிய வைக்க முயற்சி மேற்கொண்டார்.

சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், மடிப்பாக்கம் பகுதிகளிலும் ஒருநாள் மழைக்கே ரோட்டுக்கு தண்ணீர் வந்ததால் மக்கள் கஷ்டப்பட்டு செல்ல முடிந்ததை பார்க்க முடிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக