Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 11 ஜூலை, 2013

சிறையில் இருந்தால் தேர்தலில் போட்டியிட முடியாது: சுப்ரீம் கோர்ட்

ஒரு நபர் சிறையிலோ அல்லது போலீஸ் கஸ்டடியிலோ இருந்தால், அந்த நபர் தேர்தலில் போட்டியிட முடியாது என சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே கிரிமினல் வழக்குகளில் தண்டிக்கப்படும் எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.,க்களின் பதவிகளைப் பறிக்க நேற்று உத்தரவு பிறப்பித்த நிலையில், இன்று அடுத்த அதிரடியை காட்டியுள்ளது சுப்ரீம் கோர்ட்.

கடந்த 2004ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடந்த போது, சிறையில் இருக்கும் நபர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும்படி, பாட்னா ஐகோர்ட், தேர்தல் கமிஷனை கேட்டுக்கொண்டது. இதற்கு பதிலளித்த தேர்தல் கமிஷன், தேர்தல் பணிகள் துவங்கி விட்டதால், போதிய கால அவகாசம் இல்லாத நிலையில், அதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்து விட்டது. இதையடுத்து, சிறையில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட பாட்னா ஐகோர்ட் தடை விதித்தது. பாட்னா ஐகோர்ட்டின் இந்த உத்தரவிற்கு சுப்ரீம் கோர்ட் அப்போது இடைக்கால தடை விதித்தது. பாட்னா ஐகோர்ட்டின் உத்தரவு சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக, சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், பாட்னா ஐகோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட், ஒரு நபர் ஓட்டளிப்பது என்பது அந்த நபருக்கு அளிக்கப்பட்டுள்ள சட்டரீதியான உரிமை. அந்த நபர் குற்ற வழக்கு ஒன்றில் சிக்கி சிறையில் இருந்தாலோ அல்லது போலீஸ் கஸ்டடியில் இருந்தாலோ அவர், தேர்தலின் போது ஓட்டளிக்க இயலாமல் போகிறது. அவ்வாறு ஓட்டளிக்க இயலாதவர், தேர்தலில் போட்டியிடவும் தகுதியில்லாத நபராகிறார். அத்தகைய நபர்களை சட்டம், தற்காலிகமாக தேர்தல் நடைமுறைகளில் இருந்து நீக்கி விடுகிறது. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், தேர்தலின் போது ஒரு நபர் சிறையிலோ அல்லது போலீஸ் கஸ்டடியில் இருந்தாலோ அவர் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்கிறார். இவ்வாறு சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு காரணமாக, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிக்கி, கடந்த ஓராண்டிற்கும் மேலாக சிறையில் இருக்கும் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. மேலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் இந்த தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக