Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 11 ஜூன், 2013

எம்.எல்.ஏ.,வும் போச்சு; எம்.பி.,யும் போச்சு: பாண்டியன் தலைமையில் இந்திய கம்யூ.,அவலநிலை

ராஜ்யசபா தேர்தலில், ஐந்து இடங்களில் அ.தி.மு.க., போட்டியிடும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பால், தேர்தல் களத்திலிருந்து இந்திய கம்யூ., கட்சி வெளியேற்றப்பட்டு உள்ளது. கடந்த இரு ஆண்டுகளில், ஒரு எம்.எல்.ஏ., ஒரு எம்.பி., இடங்களை, அ.தி.மு.க.,விடம், பாண்டியன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் இழந்துள்ளது என, அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

புதுக்கோட்டை எம்.எல்.ஏ.,வாக இருந்த முத்துக்குமரன் சாலை விபத்தில் இறந்ததைத் தொடர்ந்து அத்தொகுதிக்கு, இடைத் தேர்தல் நடந்தது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மீண்டும் வாய்ப்புத் தராமல், கூட்டணிக்கு தலைமை வகிக்கும், அ.தி.மு.க., வேட்பாளரை நிறுத்தி வெற்றியும் பெற்றது. ராஜ்யசாபாவில் பதவி முடிவுக்கு வரும், ஆறு எம்.பி.,க்களில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜாவும் ஒருவர். அந்த இடத்தைத் தக்க வைக்கவேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் தரப்பில் விரும்பினர். ஆனால், அந்த இடத்தில் அ.தி.மு.க., வேட்பாளரை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதனால், ராஜ்யசபா தேர்தலில், இந்திய கம்யூ., கட்சிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

ராஜ்யசபா தேர்தல்:
ராஜ்யசபா தேர்தலில் காலியாகும் 6 எம்.பி., இடங்களில், 5 இடங்களை வெற்றிபெற அ.தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளது. இதில், 4 இடங்களை தன்னிச்சையாகவும், ஒரு இடத்தை கூட்டணிக் கட்சிகளோடும் வெல்ல முடியும். கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில் வெல்லும் இடத்தை, இந்திய கம்யூ., கட்சிக்கு அளிக்க வேண்டும் என்பது கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில், இந்திய கம்யூ., கட்சியில், யார் போட்டியிடுவது என்பதும் விவாதத்துக்கு உள்ளானது. எம்.பி., பதவிக் காலம் முடியும், தேசிய செயலர் டி.ராஜாவை மீண்டும் எம்.பி.,யாக்க வேண்டும் என, ஒரு பிரிவினரும், மாநில செயலர் தா.பாண்டியனை எம்.பி.,யாக்க வேண்டும் என, மற்றொரு பிரிவினரும் வலியுறுத்தியதால், வேட்பாளரை முடிவு செய்வதில் பெரும் பின்னடைவு, கட்சியில் ஏற்பட்டது. அ.தி.மு.க.,வின் ஆதரவைப் பெற்ற பின், வேட்பாளரை முடிவு செய்யலாம் என, முடிவு செய்து, முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க, கட்சியின் மூத்த தலைவர் பரதன், சுதாகர் ரெட்டி ஆகியோர், சென்னையில் முகாமிட்டனர். ஆனால், இவர்களது சந்திப்பு நடக்கவில்லை . ஆனால், 5 எம்.பி., இடங்களிலும், அ.தி.மு.க.,வே போட்டியிடும் என்ற அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா நேற்று காலை வெளியிட்டார்.

யாருக்கு ஆதரவு:
இதுகுறித்து, இந்திய கம்யூ., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது: எங்களிடம், ராஜ்யசபா எம்.பி., தேர்வு செய்வதற்கான எம்.எல்.ஏ., பலம் இல்லை. கூட்டணிக் கட்சியின் ஆதரவுடன் தான் போட்டியிட முடியும். கூடுதல் எம்.எல்.ஏ.,க்களை வைத்திருக்கும் அ.தி.மு.க., தானே போட்டியிடுவதாக முடிவு செய்துவிட்டது. இதில், வேறு எந்தக் கருத்தையும் கூறுவதற்கில்லை. எங்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்காத நிலையில், அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஓட்டளிப்பதா என்பதை, கட்சி தான் முடிவு செய்யும். அதற்கு, இன்னும் கால அவகாசம் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக