Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 12 மே, 2013

இந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவ- மாணவிகள் ஆர்வம்


கலை- அறிவியல் கல்லூரிகளுக்கு இந்த ஆண்டும் மவுசு அதிகரித்துள்ளது. மாணவர்கள் அதிக அளவில் சேருகிறார்கள்.

என்ஜினீயரிங், எம்.பி. பி.எஸ், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட பல தொழிற்கல்வி படிப்புகளில் சேர விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மற்றொருபுறம் அரசு மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகளிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் இடையே கடந்த ஆண்டை விட ஆர்வம் அதிகரித்துள்ளது. அரசு கல்லூரிகளாக இருந்தால், மிகக்குறைந்த கட்டணத்தில் சேர முடியும். தனியார் கல்லூரிகளாக இருந்தால் விரும்பிய பாடத்தை சற்று கூடுதலாக பணம் செவழித்து படிக்கலாம்.

சென்னையில் பிரெசிடென்சி, ராணிமேரி, ஸ்டெல்லா மெரி, பாரதி, காயிதே மில்லத், எத்திராஜ், லயோலா, வைஷ்ணவ், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் சேர ஏழை, எளிய, நடுத்தர மாணவர்கள் தவிர வசதி படைத்தவர்களும் படையெடுக்கிறார்கள்.

கடந்த ஆண்டை போல இந்த வருடமும் பி.காம். படிப்பதற்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களும் பி.காம், பி.காம் ஹானர் படிப்புகளில் சேர விண்ணப்பம் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இதேபோல பி.ஏ.தமிழ், ஆங்கிலம், பி.எஸ்.சி, கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் அறிவியல், பி.சி.ஏ., போன்ற படிப்பு களை அதிக அளவில் தேர்வு செய்கிறார்கள்.

பொறியியல் படித்து விட்டு ஆயிரக்கணக்கானவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கின்ற நிலை உள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு தேர்வாணையிடம் மூலம் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும், வங்கி, ரெயில்வே மற்றும் சிவில் சர்வீஸ், தேர்வுகளை என்ஜினீயரிங், மருத்துவம் படித்த ஆயிரக்கணக்கானவர்கள் சமீப காலமாக எழுதி வருகிறார்கள். அரசின் உயர் பதவிகளுக்கு செல்லக்கூடிய இந்த தேர்வுகளை ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்து இருந்தால் எழுதலாம். ஆனால் என்ஜினீயரிங் படித்தவர்கள் பெருமளவில் எழுதுவது அவர்கள் வேலையில்லாமலும், குறைந்த ஊதியத்தில் வேலை பார்பபதையும் தெளிவாக காட்டுகிறது.

இதனால் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரிடையாக கலை, அறிவியல் பாடத்தை தேர்வு செய்து படித்தால் போட்டித் தேர்வு மூலம் ஏதாவது ஒரு அரசு பணியில் சேரலாம். மேலும் அத்துடன் ஆசிரியர் பயிற்சி (பி.எட்) படித்து முடித்தால் போட்டித் தேர்வு எழுதி ஆசிரியர் பணிக்கு செல்லலாம். இது தவிர ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற சிவில் சர்வீஸ் பணிகளுக்கும் பட்டப் படிப்பு அவசியம் என்பதால் மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரிகள் பக்கம் அதிகளவில் விரும்புகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக