Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 24 மே, 2013

தேயிலைத்தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.224 எதிர்பார்ப்பு : தமிழக அரசின் அறிவிப்புக்கு காத்திருப்பு

ஐந்தாண்டுகளுக்கு பிறகு, தேயிலைத்தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.224 கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.தமிழகத்தில் வால்பாறை, நீலகிரி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு தேயிலை எஸ்டேட்டுகளில் 1.5 லட்சம் தோட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கோவை மாவட்டம் வால்பாறையில் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் உள்ளனர். குறைந்த சம்பளத்தில் வேலை செய்துவந்த இவர்களுக்கு, தமிழக அரசு கடந்த மாதம் 24ம் தேதி குறைந்தபட்சக்கூலியாக ரூ.185.50 என்று அறிவித்து அரசாணை பிறப்பித்துள்ளது.

இதற்கு மேல், முத்தரப்பு பேச்சு வார்த்தை மூலம் தொழிலாளர்களுக்கு அதிகப்படியாக கூலி உயர்வு வழங்க வேண்டும் என்பதற்காக கோவையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த புதிய சம்பளப்பேச்சு வார்த்தையில், அ.தி.மு.க., ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., ஆகிய மூன்று தொழிற்சங்கத்தை சேர்ந்த தலைவர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

கடந்த 2008ம் ஆண்டு அரசு அறிவித்துள்ள குறைந்தபட்சக்கூலியின் அடிப்படையில், தற்போது பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முறையான கணக்கீட்டின் படி குறைந்தபட்சக்கூலியாக ரூ.224 வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளாத தொழிற் சங்கங்கள் (எல்.பி.எப்., எல்.எல்.எப்., எச்.எம்.எஸ்., வி.சி., உள்ளிட்ட தொழிற்சங்கங்கள்) தமிழக அரசுக்கு மனு அனுப்பியுள்ளனர். இதனிடையே, தற்போது கோவையில் நடந்து வரும் முத்தரப்பு பேச்சு வார்த்தையில், தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.198 வழங்கவும், சம்பள ஒப்பந்தக்காலம் நான்கு ஆண்டுகளாக மாற்றவும், வேலைப்பளுவை குறைக்கவும் ஆலோசித்திருப்பதாக, இதில் கலந்து கொண்ட தொழிற்சங்கத்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் கொடிய வனவிலங்குகளின் மத்தியில், தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், ஏறி வரும் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டும், குறைந்தபட்சக்கூலியாக ரூ.224 அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக