Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 26 மார்ச், 2013

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுக்க காத்திருக்கும் கோவை மக்கள்


மின்வெட்டு, வளர்ச்சித் திட்டங்களில் புறக்கணிப்பு, அதிகரித்து வரும் லஞ்சம், தண்ணீர்ப் பிரச்னை ஆகியவற்றின் காரணமாக, கோவை மக்களிடம் அதிருப்தியும், கோபமும் அதிகரித்து வருவதால், லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது, ஆளும்கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும்.தமிழகத்திலேயே மின்வெட்டால், அதிகபட்ச பாதிப்புக்குள்ளாகியிருப்பது கோவை மாவட்டம்தான். சென்னைக்கு அடுத்ததாக, அதிக தொழில் வளர்ச்சி பெற்ற இந்த மாவட்டத்தில் மின் வெட்டால் ஏற்படும் பாதிப்பையும், இழப்பையும் கணக்கிடவே முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது.

சென்னையில் 2 மணி நேரம் மட்டுமே மின் வெட்டை அமல் படுத்துவதைப்போல, கோவைக்கும் விலக்கு அளிக்க வேண்டுமென்ற கோரிக்கை, அரசின் காதுகளை எட்டவேயில்லை; இதனால், மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியை, முதல்வரிடம் உளவுத்துறை உட்பட யாரும் எடுத்துச் செல்வதாகத் தெரியவில்லை.இந்த கோபம் ஒரு புறம் புகைந்து கொண்டிருக்க, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கடந்த இரு ஆண்டுகளில், கோவையில் நடந்த வளர்ச்சிப் பணிகள் என்ன என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழத் துவங்கியுள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சியில், அவிநாசி சாலை விரிவாக்கம் துவங்கி, திருச்சி, மேட்டுப்பாளையம் சாலைகள் விரிவாக்கம், பாலங்கள் திறப்பு, டைடல் பார்க், புதிய குடிநீர்த் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம், மீன் மார்க்கெட், பூ மார்க்கெட், புது பஸ் ஸ்டாண்ட், புதிய பூங்காக்கள், நடைபாதைகள் என ஏராளமான வளர்ச்சிப் பணிகள்நடந்தன.

இவற்றைத் தவிர்த்து, காந்திபுரத்தில் பல அடுக்கு மேம்பாலம், மேற்கு புறவழிச்சாலைத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. அதற்கான அரசாணை மற்றும் அடுத்த கட்டப் பணிகள் தாமதமடைந்து வந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முந்தைய தேர்தல்களிலும், இந்த தேர்தலிலும் அ.தி.மு.க.,வை தொடர்ச்சியாக வெற்றி பெற வைத்ததற்காக, கோவைக்கென்று சில சிறப்புத் திட்டங்களை முதல்வர் ஜெ., நிறைவேற்றுவார் என்று கோவை மக்கள் எதிர்பார்த்தனர்; அதற்கேற்ப, காந்திபுரம் பாலத்துக்கு கூடுதல் நிதி, மேற்கு புறவழிச்சாலை, உக்கடம்-ஆத்துப்பாலம் என பல திட்டங்களையும் முதல்வர் அறிவித்தார்.
அவர், இந்த திட்டங்களை அறிவித்து இரு ஆண்டுகள் முடிவடையும் நிலையில், இந்த திட்டங்களிலும் எதுவுமே இன்னும் துவக்கப்படவே இல்லை; திட்ட அறிக்கை, மதிப்பீடு என்று நெடுஞ்சாலைத்துறையினர், பல காரணங்களை அடுக்கி வருகின்றனர்; ஆனால், எந்தப் பணியும் இப்போதைக்கு துவங்குவதற்கான அறிகுறி எதுவுமே தெரியவில்லை.

அதேபோல, ரயில்வே மேம்பாலங்கள், போத்தனூர்-கிணத்துக்கடவு அகல ரயில் பாதை, விமான நிலைய விரிவாக்கம் போன்ற வளர்ச்சிப் பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணியும், கடந்த இரு ஆண்டுகளாக ஆமை வேகத்தில்தான் நடந்து வருகிறது.

இதனால், இரு ஆண்டுகளில் எந்த வளர்ச்சித் திட்டங்களுமே முடிவுக்கு வரவில்லை. அதே வேளையில், மாநகராட்சியில் அதிகரித்துள்ள லஞ்சமும், குடிநீர் வினியோகம், தூய்மைப் பணி போன்றவற்றில் காட்டப்படும் பாரபட்சமும் மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. மாநகராட்சியில், கடந்த 2012-13 பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களே நிறைவேற்றப்படாத நிலையில், மீண்டும் அதே திட்டங்கள் அறிவிக்கப்பட்டது, அதிருப்தியை கோபமாக்கியது. உச்சக்கட்டமாக, தமிழக அரசின் பட்ஜெட், இந்த கோபத்தை கொந்தளிப்பாக மாற்றியுள்ளது.சென்னைக்கு 4 பாலங்களுக்கு 272 கோடியும், மதுரையில் இரு பாலங்களுக்கு 130 கோடி ரூபாயும் அறிவித்து விட்டு, கோவைக்கென்று எந்த திட்டத்தையும் அறிவிக்காமல் விட்டதே இதற்குக் காரணம். இங்குள்ள அமைச்சர் உட்பட ஆளும்கட்சி மக்கள் பிரதிநிதிகள் யாருமே, கோவையின் தேவையை முதல்வரிடம் எடுத்துச் சொல்லவில்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது.

எந்த நேரத்திலும், மத்தியில் ஆட்சி கவிழும்; தேர்தல் வருமென்ற நிலையில், கோவையில் தற்போதுள்ள சூழல், ஆளும்கட்சிக்கு சாதகமாக இல்லை என்பதோடு, வரும் தேர்தல் பெரும் சவாலாக இருக்குமென்பதும் உறுதி.ஆறுதல் பரிசுஈழத்தமிழர், விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்களைக் கொண்டு செல்வது போன்ற பிரச்னைகளில் அரசின் நிலைப்பாடு, விவசாயிகள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் ஆறுதல் பரிசாகத் தெரிந்தாலும், இது பெரும்பான்மையினரின் உணர்வாக தேர்தலில் பிரதிபலிக்குமா என்பது சந்தேகமே. இதெல்லாம் போதாதென்று, பருவமழை பொய்த்து, அணைகள் எல்லாம் வறண்டு, தண்ணீர்ப் பிரச்னை இப்போதே தலை விரித்தாடத் துவங்கியிருப்பதால், எதிர்வரும் கோடையைச் சமாளிப்பதே, அரசுக்கு இன்னொரு சவாலாக இருக்கலாம்; இந்த ஆண்டிலும் மழை பொய்த்தால்...ஆளும்கட்சி பாடு பெரும் திண்டாட்டம்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக