Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 6 நவம்பர், 2012

தமிழக அரசு 12 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்: லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு ?


தமிழக தொழில்துறை வரலாற்றில், முதல் முறையாக, 12 நிறுவனங்கள், 20 ஆயிரத்து 928 கோடி ரூபாய் முதலீடு செய்யும் ஒப்பந்தங்கள் ஒரே நாளில் கையெழுத்தாகி உள்ளன. இதன் மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த, 12 நிறுவனங்கள் புதிதாக தொழில் துவங்கவும், ஏற்கனவே உள்ள தொழில்களை விரிவுபடுத்தவும் தமிழக அரசுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. இதற்கான விழா, சென்னையில் நேற்று நடந்தது.

விழாவில், முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: நாட்டில் பொருளாதார தாராளமய கொள்கையை, அமல் செய்த பின், தமிழகம் தான், முதன் முதலில், 1992ல் பொருளாதார கொள்கையை அறிவித்தது. இதன் மூலம், தமிழகத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கு, வலுவான அடித்தளம் போடப்பட்டது.  இன்று, ஆட்டோமொபைல் தொழிலில், உலகின் முக்கிய கேந்திரமாக, தமிழகம் விளங்க இதுவே காரணம்.

துரதிஷ்டவசமாக, 1996ம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இல்லாமல் போய்விட்டது. 2001ம் ஆண்டு, மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த போது, தொழில் வளர்ச்சிக்கு உகந்த சூழலை ஏற்படுத்தினோம். 2003ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட தொழில் கொள்கை மூலம், தமிழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் துறையில், பெரும் புரட்சியே ஏற்பட்டது.

நோக்கியா, பாக்ஸ்கான், பிளக்ஸ்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்கின. இன்று, உலகின் மொபைல் போன் உற்பத்தியில், சென்னை முன்னணியில் உள்ளது. இதற்கு, 1992 மற்றும் 2003ல் அறிவிக்கப்பட்ட தொழில் கொள்கைகளே காரணம். தொழில் கொள்கை 2012 விரைவில் வெளியிடப்பட உள்ளது.

கடந்த, 18 மாதங்களில் மட்டும், ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 706 கோடி ரூபாய் அன்னிய முதலீடு வந்துள்ளது. அன்னிய முதலீடு என்பது, இருபுறமும் கூர்மையுள்ள கத்தி போன்றது. அதை கவனமாக கையாள வேண்டும். ஆனால், சிறு வணிகத்தில் அன்னிய முதலீட்டை மத்திய அரசு அனுமதித்துள்ளதை தமிழக அரசு ஏற்கவில்லை.

சூரிய சக்தி உற்பத்தி குறித்த கொள்கையை ஏற்கனவே வெளியிட்டுள்ளோம். இவையெல்லாம் தமிழகத்தின் பொருளாதாரத்தை முதல் இடத்துக்கு கொண்டு செல்லும். இவ்வாறு, ஜெயலலிதா பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக