Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

ஆகஸ்டு 15 : தன் கல்லூரிப்படிப்பை தாய் நாட்டிற்காக துறந்த கண்ணியத்தலைவரை நினைவு கூறுவோம்

இந்திய இஸ்லாமியர்களின் உரிமையை பெற்றுத்தந்த தலைவராக  விளங்கியவர் `காயிதே மில்லத்' இஸ்மாயில் சாகிப்(ரஹ்). நீண்ட காலம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவராக இருந்து சமுதாயத்துக்கு உழைத்தவர். அரசியல், பொது வாழ்க்கை இரண்டிலும் மக்களின் ஆதரவை பெற்று விளங்கியவர். அன்பு, அடக்கம், ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடமாக திகழ்ந்தவர். 

தொகுதிக்கு நேரில் செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெறுகிற அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெற்றவர். அனைத்து கட்சியினரும் மதிக்க தக்க தலைவராக விளங்கினார். நேரு,இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சி பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார். இத்தகைய பெருமைக்குரிய இஸ்மாயில் சாகிப், திருநெல்வேலியை அடுத்த பேட்டை என்ற ஊரில் 1896 ம் ஆண்டு பிறந்தார். 

இவருடைய தகப்பனாரின் பெயர் மியாகான் ராவுத்தர். திருவாங்கூர் அரச குடும்பத்தினருக்கு துணிகள் விற்பனை செய்யும் வணிகராகவும், முஸ்லிம் மத தலைவர் (மவுலவி) ஆகவும் இருந்தார். இஸ்மாயில் சாகிப் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயார்தான் குர்ஆனும்,இஸ்லாமிய நடைமுறைகளையும் கற்றுக்கொடுத்தார். திருநெல்வேலியில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் படிப்பு முடிந்ததும் திருச்சி ஜோசப் கல்லூரியிலும், பிறகு சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும் படித்து பி.ஏ. பட்டம் பெற்றார். 

பட்டம் பெற 2 மாதம் இருந்தபோது, காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். 1920 ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார். அந்த ஆண்டில் திருநெல்வேலியில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கத் தீர்மானத்தை பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றினார். 1936 ம் ஆண்டு இஸ்மாயில் சாகிபு, முஸ்லிம் லீக் கட்சியில் சேர்ந்தார். 

1945 ம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார். 1948_ம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். 1946 முதல் 52 ம் ஆண்டு வரை பழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். 1952 ம் ஆண்டு முதல் 58 ம் ஆண்டு வரை டெல்லி மேல் சபை உறுப்பினராக பதவி வகித்தார். 

1962 ம் ஆண்டில் கேரளாவில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். அதன் பின் 1967, 1971 தேர்தல்களிலும் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். தொகுதிக்கு செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெற்றவர் இஸ்மாயில் சாகிப் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு தூரம் தொகுதி மக்களின் செல்வாக்கை பெற்றவர். 

இஸ்மாயில் சாகிப்பின் மனைவி பெயர் அமீதா பீவி.இவர் 1962 ம் ஆண்டில் காலமானார். இஸ்மாயில் சாகிப்பின் ஒரே மகன் மியாகான்.

 "காயிதே மில்லத்" இஸ்மாயில் சாகிபுக்கு 1972 மார்ச் 25 ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்றில் கடுமையாக வலி ஏற்பட்டது. இதனால் அவர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். குடல் புண் (அல்சர்) நோய்க்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

டாக்டர் யு.முகமது தலைமையில் 15 டாக்டர் கள் கொண்ட குழு சிகிச்சை அளித்தார்கள். 31 ந்தேதி காலை அவர் ரத்த வாந்தி எடுத்தார். கல்லீரலும் சரிவர வேலை செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து உணர்வு இழந்தார். உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது. டாக்டர்கள் இரவு பகலாக அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஏப்ரல் 4 ந்தேதி சிறுநீரகம் சரிவர இயங்கவில்லை. அதை சீராக்க ஒரு மணி நேரம் ஆபரேஷன் நடந்தது. ஆயினும் அவர் உடல் நிலை தேறவில்லை. 

தொடர்ந்து மோசம் அடைந்தது. முதல் அமைச்சர் கருணாநிதி, அமைச்சர்கள் சாதிக்பாட்சா, சி.பா.ஆதித்தனார், திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா. பெரியார் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரை பார்த்தனர். முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த சட்டமன்ற, பாராளு மன்ற உறுப்பினர்களும், பிரமுகர்களும் ஆஸ்பத்திரியிலேயே இருந்தனர். அன்றைய தினம் (4.4.1972) இரவு 10 மணி அளவில் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகியது. 

 முஸ்லிம் லீக் தொண்டர்களும் ,அரபிக் கல்லூரிகளின் மாணவர்களும்  அவரைச் சுற்றி அமர்ந்து "குர்ஆன்" ஓதினார்கள். நள்ளிரவு 1.15 மணிக்கு இஸ்மாயில் சாகிப் மரணம் அடைந்தார். உயிர் பிரியும்போது, அவருடைய மகன் மியாகான், மருமகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் அருகில் இருந்தனர். இஸ்மாயில் சாகிப் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து குரோம்பேட்டையில் உள்ள அவர் வீட்டுக்கு காரில் கொண்டு போகப்பட்டது. மரணம் அடைந்தபோது காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபுக்கு வயது 76. 

மறுநாள் (5 ந்தேதி) காலை பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்கு வசதியாக ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. கல்லூரியின் கலை அரங்கின் மத்தியில் ஒரு மேடை அமைத்து அதில் இஸ்மாயில் சாகிப் உடல் வைக்கப்பட்டது. உடல், முஸ்லிம் லீக் கொடியால் போர்த்தப்பட்டு இருந்தது. காலையில் இருந்தே மக்கள் ஆயிரக்கணக்கில் வந்து, இறுதி மரியாதை செலுத்தினார்கள். 

முதல் அமைச்சர் கருணாநிதி, காலை 8.25 மணிக்கு வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மற்றும் அமைச்சர்கள் நெடுஞ்செழியன், என்.வி.நடராசன், மாதவன், ப.உ.சண்முகம், சத்தியவாணிமுத்து அம்மையார், சாதிக்பாட்சா, சி.பா.ஆதித்தனார், ராசாராம், மன்னை நாராயணசாமி, ராமச்சந்திரன், ஓ.பி.ராமன், கண்ணப்பன் ஆகியோரும் மலர் மாலை வைத்தனர். பிற்பகலில் திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா.பெரியார் வந்து இறுதி மரியாதை செலுத்தினார். 

 பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், சபாநாயகர் மதியழகன், மேல்_சபை தலைவர் சி.பி.சிற்றரசு, தமிழரசு கழக தலைவர் ம.பொ.சிவஞானம், முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம், நீதிபதி இஸ்மாயில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பொன்னப்ப நாடார், ராஜாராம் நாயுடு ஆகியோரும் இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் புதுக்கல்லூரியில் உள்ள மசூதிக்கு இஸ்மாயில் சாகிப் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. 

அங்கு தொழுகை நடைபெற்றது. பிறகு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் புறப்படுவதற்கு முன் முதல் அமைச்சர் கருணாநிதியும், மற்ற அமைச்சர்களும் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்கள். ஊர்வலத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம் முதலிய வெளி மாநிலங்களில் இருந்து வந்த முஸ்லிம் லீக் பிரமுகர்கள் நடந்து சென்றனர். 

தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆரும் நடந்து போனார். ஊர்வலத்தில் போனவர்கள் எண்ணிக்கை லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் கேரள கல்வி மந்திரி முகமது கோயா, ஊராட்சி மந்திரி அவுக்காதல் குட்டிநகா, பொதுப்பணி மந்திரி திவாகரன், ரெவினிï மந்திரி பேபி ஜான், சபாநாயகர் மொகிதீன் குட்டி, புதுச்சேரி மந்திரி ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். 

ஊர்வலம் பீட்டர்ஸ் ரோடு, பெசன்ட் ரோடு வழியாக, திருவல்லிக்கேணி ஐரோட்டில் உள்ள வாலாஜா மசூதியை அடைந்தது. அங்கு இஸ்மாயில் சாகிப் உடல், முஸ்லிம் மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் நடந்தபோது கூடி இருந்தவர்கள் "அல்லாஹ் அக்பர்" என்று குரல் எழுப்பினார்கள். இஸ்மாயில் சாகிப் உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது. 

அதில் கருணாநிதி பேசுகையில் கூறியதாவது: 

"தனது 50 ஆண்டு கால வாழ்வில் 8 கோடி முஸ்லிம்களுக்காக உழைத்து பொற்கால மாக்கித் தந்தார். தமிழர்களுக்கு மட்டும் அல்ல  இந்தியர்களுக்கும் அவர் மறைவு மாபெரும் இழப்பு. இஸ்மாயில் சாகிப் மனிதருள் மாமணி. அடக்கம், அறிவு, ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடம். இஸ்மாயில் சமூகத்துக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் நீண்ட நெடுங்கால தொடர்பு இருந்து வருகிறது. 

எங்கள் அண்ணன் மறைவுக்கு பிறகு இஸ்மாயில் சாகிப் அண்ணனுக்கு அண்ணனாக திகழ்ந்தார். அவர் மறைந்து விட வில்லை. நெஞ்சத்தில் உறைந்து விட்டார். அவர் நம்மோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் உள்ளத்தில் இருக்கிறார்." 

இவ்வாறு கருணாநிதி கூறினார். 

கூட்டத்தில் கேரள அமைச்சர்கள் முகமது கோயா, திவாகரன், பாண்டிச்சேரி அமைச்சர் ராமசாமி, சபாநாயகர் மதியழகன், தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆர்., கேரள முஸ்லிம் லீக் தலைவர் தங்கல், இந்திய முஸ்லிம் லீக் செயலாளர் இப்ராகிம் சுலைமான் சேட், அப்துல் சமது, பீர்முகமது, திருப்பூர் மொய்தீன் மற்றும் பலர் பேசினார்கள். பாராளுமன்றம்  சட்டசபை அனுதாபம் இஸ்மாயில் சாகிப் மறைவுக்கு ஜனாதிபதி வி.வி.கிரி, தமிழக கவர்னர் கே.கே.ஷா, திராவிட கழக தலைவர் பெரியார், சுதந்திரா கட்சி தலைவர் ராஜாஜி, பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், கேரள முதல் மந்திரி அச்சுதமேனன் உள்பட ஏராளமான தலைவர்கள் அனுதாப செய்தி வெளியிட்டார்கள். 

டெல்லி பாராளுமன்றத்திலும், தமிழ்நாடு சட்டசபையிலும் அனுதாப தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எல்லா உறுப்பினர்களும் ஒரு நிமிடம் மவுனமாக எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள்.

தமிழகத்தில் பிறந்த பச்சை தமிழனாக சுற்றி வந்த பெருமகனார் காயிதே மில்லத் ( ரஹ்) அவர்கள் ,கேரளா மண்ணிலிருந்துதான் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டார்களே தவிரே ,தமிழ் நாட்டிலிருந்து ஒருமுறை கூட தேர்ந்தெடுத்து அனுப்பப்படவில்லை,என்பது தமிழகத்திற்கு ,குறிப்பாக தமிழக முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு கரும் புள்ளி என்பதை யாராலும் மறுக்க முடியாது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக