Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 4 மே, 2013

மாணவர்களுக்கு ஆங்கிலப் புலமை அவசியம்


மாணவர்களுக்கு ஆங்கிலப் புலமை அவசியம் என, தமிழ்நாடு உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் சிந்தியா பாண்டியன் கூறினார்.

 தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் மையம் சார்பில் திருநெல்வேலியில் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர்களுக்கான கருத்தரங்கு, பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

 மையத்தின் தலைமை செயல் அதிகாரி எம். சிவகுமார்
தொடக்கவுரையாற்றினார். நிகழ்ச்சியில் சிந்தியா பாண்டியன் பேசியதாவது:
 வருங்காலத்தில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாக இருக்கின்றன. இவற்றில் பணிபுரிய திறமை வாய்ந்தோராக மாணவர்களை உருவாக்க வேண்டியது கல்லூரிகளின் பொறுப்பு. மாணவர்களிடம் இருக்கும் திறமைகளைக் கண்டறிந்து அவற்றின் மூலம் வேலைவாய்ப்பைப் பெறும் வகையில் செயல்திட்டங்களை கல்லூரிகள் வகுக்க வேண்டும். அதற்கு பேராசிரியர்கள் துணையாக இருக்க வேண்டும்.
 தென் தமிழகத்திலுள்ள மாணவர்கள் ஆங்கில மொழிப் புலமையில் பின்தங்கியுள்ளனர். இதனால் பெரிய நிறுவனங்களில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போகிறது.
 எனவே ஆங்கிலத்தில் பேசும் திறனை மாணவர்களிடம் வளர்க்க வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. வருங்காலத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப மாணவர்களை இப்போதே தயார்படுத்த வேண்டும். தமிழகத்தில் உயர்கல்வி மேம்பாட்டுக்கு மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் உயர்கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வியில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.

உணவு பதப்படுத்தும் பயிற்சிகள்


தமிழ்நாடு அரசு தொழில் பயிற்சியை மேம்படுத்தும் வகையில் உணவு பதப்படுத்துதலில் உள்ள முக்கியதுவம் பற்றிய விரிவான  பயிற்சிகள் வழங்குவதோடு முறையாக கற்றுத்தரப்படுகின்றது.

ஜாம், ஜீஸ், சர்பத், பலவகையான ஊறுகாய்கள் மற்றும் மசாலா பொடிகள் தயாரித்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இப்பயிற்சி பல நிறுவனங்கள் இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் நடத்துகின்றனர். இந்த பயிற்சி ஒரு வாரக் கால பயிற்சியாக அளிக்கப்படுகிறது.

சமுதாய உணவு பதப்படுத்தும் பயிற்சி மையம், உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை (இந்திய அரசு), இராஜாஜி பவன், பெசன்ட் நகர் பஸ் நிலையம் எதிரே, சென்னை -98, தொலைபேசி - 24916004.

மேலும் இந்த பயிற்சியை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் குறைந்த கட்டணத்தில் உணவு பதப்படுத்துதல், மசாலா பொடிகள் உள்ளிட்ட அனைத்து கைத்தொழில்களும் இங்கு பயிற்சியளிக்கப்படுகிறது. சென்னை அருகே ஜி.எஸ்.டி ரோடு, காட்டுப்பாக்கத்தில் இரண்டு நாள் இலவச பயிற்சியாக நடத்துகிறது. தொலைபேசி - 044 26263484

தமிழ்நாடு முழுவதும் பல விவசாய கல்லூரிகளில் இப்பயிற்சிகள் நடத்தப்படுகிறது. மேலும் இப்பயிற்சிக்கான முழு விவரங்கள் அறிய www.tnau.ac.in

25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் கடும் ஏமாற்றம் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு

நெல்லையில் நேற்று நிருபர்களிடம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொது செயலாளர் இசக்கியப்பன் கூறியதாவது:தமிழகத்தில் 8ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் பெற்று வந்தனர். 2004ம் ஆண்ட முதல் 6,7, மற்றும் 8ம் வகுப்புகளுக்கு மாதம் 4 ஆயிரம் தொகுப்பூதியத்தில் இளநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

பின்னர் இவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டதால் ஏற்கனவே பணியாற்றி வந்த இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்திய பின்புதான் புதியதாக நியமிக்கப்பட்ட இளநிலை பட்டதாரி ஆசிரியர்களை கால முறை ஊதியத்தில் கொண்டு வர வேண்டும். ஆனால் அப்படி செய்யாததால் ஒரே பணி இரு வேறு ஊதிய விகிதம் என்ற நிலையில் உயர், மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

எனவே, இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வலியுறுத்தி தர்ணா, உண்ணாவிரத போராட்டம், மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இக்கோரிக்கை தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டதில் 10ம் தேதி நடக்கும் மானிய கோரிக்கைக்கு முன்பாக நல்ல தீர்வு காணப்படும் என்றார். எனவே, பட்டதாரி ஆசிரியர் தகுதியுடன் பணியாற்றும் அரசு, நகராட்சி, மாநகராட்சி, அரசுஉதவி பெறும் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாறள்றும் 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும். இதுசம்பந்தமாக பள்ளி கலி மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். இல்லையெனில் இதுசம்பந்தமாக மாநில அளவில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு கோர்ட்டில் வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வெள்ளி, 3 மே, 2013

மீன்வளஅறிவியல் (FISHERIES SCIENCE) படிப்புகள்


பிஷரி சயின்ஸ் பாடம், பல்வேறு உட்பிரிவுகளை உள்ளடக்கியது. ஓசனோகிராபி, இகாலஜி, உயிரியியல், பொருளாதாரம் போன்றவைகள் அடங்கும். கடல் வளத்தை காப்பதில் இவர்களது பங்கு முக்கியம். இந்தியாவில் 80 லட்சம் பேர் மீன்பிடி துறையில் ஈடுபட்டுள்ளனர்.
மீனவளத்தை பெருக்க பிஷரி சயின்ஸ் படித்தவர்களின் ஆலோசனைகள் தவிர்க்க முடியாதது. கடல் வாழ் உயரினங்களை காப்பதிலும் பிஷரி சயின்ஸ் படித்தவர்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும். இவர்கள் அக்குவா கல்சரிஸட், பார்ம் மேனேஜர், ஏற்றுமதியாளர், வர்த்தக மேலாளர் போன்ற பதவிகளை வகிக்க முடியும். நவீன மீன்பிடி தொழில்நுட்பங்களையும் இவர்கள் தெரிந்து கொள்வது கூடுதல் பலம்.

கல்வி தகுதி
பிளஸ்2 வில் உயரியியல் பாடத்தை தேர்ந்தெடுத்து படித்திருப்பது, அடிப்படைக் கல்வி தகுதியாக கருதப்படுகிறது. இளங்கலையில், பேச்சுலர் ஆப் சயின்ஸ் இன் பிஷரி (பி.எஸ்.சி., பிஷரி), பேச்சுலர் ஆப் பிஷரி சயின்ஸ்(பி.எப்.எஸ்சி.,) போன்ற பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. முதுநிலை பிஷரி சயின்ஸ் படிப்புகளும் உள்ளன. இதுதவிர டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளும் உள்ளன.

வேலை வாய்ப்பு
உலகின் பெரும் பகுதி கடலால் சூழப்பட்டுள்ளது. உலகளவில் கடல் சார் துறையில் ஏராளமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதால் அதனைச் சார்ந்த பிஷரி சயின்ஸ் படித்தவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு. இவர்களுக்கு வெளிநாடுகளிலும், அதிக வேலைவாய்ப்புகள் உள்ளது.

கல்வி நிறுவனங்கள்

1.சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிஷரீஸ் எஜூகேசன், மும்பை
2.காலேஜ் ஆப் பிஷரிஸ், பெர்காம்பூர், ஒரிசா
3.காலேஜ் ஆப் பிஷரிஸ், எர்ணாகுளம், கேரளா
4.சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிஷரிஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், கோல்கட்டா
5.ஆந்திரா பல்கலைக்கழகம், விஷாகப்பட்டினம்
6.காலேஜ் ஆப் பிஷரிஸ் சயின்ஸ், குஜராத்
7.காலேஜ் ஆப் பிஷரிஸ், பீகார்
6.மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி
7.தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்,    சென்னை

வெளிநாட்டு சிறைகளில் 6,569 இந்தியர்கள்


உலக நாடுகளின் சிறைகளில் 6,565 இந்தியர்கள் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.

வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம், கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கோரியிருந்த தகவலில், சுமார் 67 உலக நாடுகளில் 6,569 இந்தியர்கள் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். அதில் பாகிஸ்தானில் மட்டும் 254 இந்தியர்கள் சிறைபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சவுதி அரேபியாவில்தான் 1691 பேரும், குவைத்தில் 1161 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து (426), அமெரிக்கா (155), சீனா (157), வங்கதேசம் (62), ஆப்கானிஸ்தான் (28), பக்ரைன் (18), நேபால் (377) ஆகிய நாடுகளிலும் இந்தியர்கள் சிறைபட்டு உள்ளனர்.

TET, தகுதி மதிப்பெண்களை குறைக்க கோரிக்கை



"ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), குறைந்தபட்ச மதிப்பெண்களை குறைப்பது தொடர்பான கோரிக்கையை, முதல்வர் பரிசீலனை செய்து, முடிவை அறிவிப்பார்" என, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.

சட்டசபையில், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் பேசியதாவது: ஆசிரியர் தகுதி தேர்வில், இட ஒதுக்கீட்டு முறையை, சரியாக அமல்படுத்தவில்லை. டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற, குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என, இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது.

இதனால், 45 சதவீத மதிப்பெண்கள் எடுக்கும் ஆதி திராவிட தேர்வர்கள், 58 சதவீதம் மதிப்பெண்கள் எடுக்கும் பிற்படுத்தப்பட்ட தேர்வர்கள், தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது. பல மாநிலங்களில், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசும், தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும்.

அமைச்சர் பழனியப்பன்: இந்த கோரிக்கை, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அவர், உரிய முடிவை எடுத்து அறிவிப்பார்.

மத்திய அரசு பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு 7 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை


நலிவடைந்த நிலையில் உள்ள 8 பொதுத் துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேல் மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதில்:

ஹெச்எம்டி வாட்சஸ், ஹெச்எம்டி சினர் வாட்சஸ், ஹெச்எம்டி பேரிங்ஸ், திரிவேணி ஸ்ட்ரக்சுரல்ஸ், துங்கபத்ரா ஸ்டீல் புராடக்ட்ஸ், என்.இ.பி.ஏ., ஹிந்துஸ்தான் கேபிள்ஸ் மற்றும் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் ஆகிய 8 நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.

எனவே, கனரக தொழில் துறையின் கீழ் இயங்கும் இந்த பொதுத் துறை நிறுவனங்களின் செயல்பாட்டுக்கான நிதியை திரட்ட முடியாத சூழல் உள்ளது. இதனால், இதன் ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை.

ஊழியர்களின் சம்பள பாக்கியை வழங்குவதற்காக நலிந்த நிறுவனங்களுக்கு அவ்வப்போது, திட்டமில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான சம்பள பாக்கியை வழங்குவதற்காக ரூ.81.92 கோடி வழங்க மார்ச் மாதம் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

2012-13 நிதியாண்டில் கனரக தொழில் துறையின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களின் ஒட்டுமொத்த உற்பத்தி ரூ.56,506 கோடியாக அதிகரித்துள்ளது. 2011-12இல் இது ரூ.56,009 கோடியாக இருந்தது.