Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 6 பிப்ரவரி, 2013

வருகிற கல்வியாண்டு முதல் எம்.ஏ., எம்.எஸ்.சி. படிப்பில் சேர இனி கவுன்சிலிங்


தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம் உள்பட 11 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த பல்கலைக்கழகங்களில் 62 அரசு கல்லூரிகள் 132 அரசு உதவி பெறும் கல்லூரிகள் 500-க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன.

மருத்துவம், பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் ஒற்றை சாளர முறையில் சேர்க்கப்படுகிறார்கள். அதுபோல கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளன.

உயர் கல்வி வணிக மயமாகும் சூழலில் இருந்து விடுபட ஒற்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கை அவசியம் என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கே.பாண்டியன் கூறினார்.

இந்த நிலையில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்து கொண்ட உயர்கல்வி மன்ற கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் துணைத்தலைவர் சந்தியா பாண்டியன் கலந்து கொண்டார். அவர் கூறியதாவது:-

முதல் கட்டமாக எம்.ஏ., எம்.எஸ்.சி. பட்ட மேற்படிப்புகளுக்கு ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வு நடத்தப்படும். படிப்படியாக இந்த கலந்தாய்வு முறை பட்டப்படிப்புகளுக்கும் (பி.ஏ., பி.எஸ்.சி.) விரிவாக்கப்படும்.

சென்னை பல்கலைக்கழகம் உள்பட 11 பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு பல்கலைக்கழக அளவிலும் ஒற்றை சாளர கலந்தாய்வு நடத்தப்படும். பொறியியல் படிப்புக்கு ஒரே ஒரு பல்கலைக்கழகம் மட்டும் உள்ளதால் மாநிலம் முழுவதும் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. ஆனால் கலை, அறிவியல் பிரிவில் 11 பல்கலைக்கழகங்கள் உள்ளதால் பல்கலைக்கழக அளவில் கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கான பரிந்துரையை தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் அரசுக்கு அனுப்பி உள்ளது. வருகிற கல்வியாண்டில் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.

வேலையில்லாத இளைஞர்களுக்கு பல்கலை கழக துணைவேந்தரின் ஆலோசனை


"தொழிற்சாலையில் பணிபுரிவதற்குரிய தகுதியான மாணவர்களை கல்லூரிகள் உருவாக்கவேண்டும். வேலை தேடும் மாணவர்கள் தகவல் தொடர்பு குறித்த அறிவை வளர்த்துக்கொள்வது அவசியம்,'' என்று பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் மீனா பேசினார்.

பாரதிதாசன் பல்கலை வணிகவியல், நிதித்துறையின் தொழிற்சாலை ஒருங்கிணைப்பு மையம், இந்திராகாந்தி கல்லூரி வேலைவாய்ப்பு சார்பில், 2 நாள் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.ஆடை வடிவமைப்பு, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட, 32 நிறுவனங்கள் பங்கேற்றன. மாநிலம் முழுவதும் இருந்து, பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த, 6,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

இவர்களில், 1,053 மாணவர் பணி நியமன ஆணைகளை பெற்றனர்.விழாவில், துணைவேந்தர் மீனா பேசியதாவது:பாரதிதாசன் பல்கலை இணைவுப்பெற்ற, எட்டு மாவட்ட கல்லூரி மாணவர்களுடன் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த, 7,000 மாணவர்கள் முகாமில் பங்கேற்றனர். தொழிற்சாலைகளும், தொழில் நிறுவனங்களும் தங்களுக்கு தேவையான திறன் வாய்ந்த பணியாளர்களை, இதுபோன்ற முகாம்களில் தேர்வு செய்வது தற்காலத்தின் சிறப்பு அம்சம்.

தொழிற்சாலையில் பணிபுரிவதற்குரிய தகுதியான மாணவர்களை கல்லூரிகள் உருவாக்கவேண்டும். வேலை தேடும் மாணவர்கள் தகவல் தொடர்பு குறித்த அறிவை வளர்த்துக்கொள்வது அவசியம். வேலைக்கு முயற்சிக்கும் கடைசி நேரத்தில் இதற்கென மெனக்கெடாமல், கல்லூரியின் முதலாம் ஆண்டிலேயே பயிற்சி எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், கல்லூரிச் செயலாளர் குஞ்சிதபாதம், பல்கலை வணிகவியல், நிதித்துறை செல்வம், கல்லூரி முதல்வர் வித்யாலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வேலைவாய்ப்பு பதிவு மூப்பு: புதுப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு


கடந்த இரண்டு ஆண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலக் கெடுவிற்குள் புதுப்பிக்க தவறியவர்கள் வரும் 28ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் புதுப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் ஆன்லைன் வழியாக ஒருங்கிணைக்கப்பட்டு www.tnvelaivaaippu.gov.inஎன்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் புதிய மனுதாரர்கள் கல்வித்தகுதி, பதிவு புதுப்பித்தல், கூடுதல் கல்வித்தகுதி பதிவு போன்ற பணிகளை ஆன்லைன் வழியாக பதிவு செய்து கொள்ளலாம். இதனால் போக்குவரத்து செலவு, காலவிரயம், அலைச்சல் மற்றும் பிற இன்னல்கள் தவிர்கப்படுகிறது.

ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஆகஸ்ட் 2011 முதல் ஜனவரி 2013 முடியவுள்ள புதுப்பித்தல் காலக்கெடுவிற்குள் புதுப்பிக்க தவறிய மனுதாரர்கள் 28.2.2013க்குள் ஆன்லைன் மூலம் புதுப்பிக்கலாம். இந்த புதுப்பித்தலுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வரவோ அல்லது மனுச் செய்யவோ தேவையில்லை.

வீட்டில் உள்ள இணையதள வசதி உடைய கம்ப்யூட்டரிலோ அல்லது ஏதேனும் இண்டர்நெட் மையங்களிலோ சிறப்பு சலுகை அடிப்படையில் புதுப்பிக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிட் விற்பனையை ஏன் நிறுத்தக்கூடாது? மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி


கடந்த 2006ம் ஆண்டு தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் ஆசிட் வீச்சை வழக்குகளை விசாரிக்க இந்திய குற்றவியல் சட்டத்தில் தனிப்பிரிவு உருவாக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ சிகிச்சையை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே ஏற்கவேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இம்மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் ஆசிட் வீச்சு தொடர்பாக மத்திய மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி தெரிவித்தனர். ஆசிட் வீச்சு சம்பவம் தொடர்பாக உறுதியான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்கவேண்டும் என்றும், ஆசிட் வீச்சில் பாதிக்கப்படுபவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை அதிகரிக்கப்படவேண்டும் எனவும் நீதிபதிகள் வலியுறுத்தினர். மேலும், மத்திய உள்துறை செயலர் தலைமையில் அனைத்து மாநில தலைமைச்செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படவேண்டும் என்றும், அதில் ஆசிட் விற்பனையை தடை செய்தல், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு, சிகிச்சை மற்றும் நிவாரணம் அளிப்பது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் விசாரணையின் போது, ஆசிட் வீச்சு தொடர்பாக இந்திய குற்றவியல் சட்டத்தின் திருத்தம் கொண்டு வரப்பட்டு, இந்த குற்றம் செக்ஷன் 326 (ஏ) மற்றும் (பி) ஆகியவற்றின் கீழ் வர வழிவகை செய்யப்படும் என மத்திய அரசு வக்கீல் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

பல நாடுகளில் காணப்படும், மிகச்சிறந்த தொழில் நுட்ப தரத்தை இந்தியாவின் கல்வி நிறுவனங்களில் காண முடியவில்லை : பிரதமர் வேதனை


 மத்திய பல்கலை கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாடு, டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற, பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது,

நம் நாட்டிலுள்ள கல்வி நிறுவனங்கள் எல்லாம், வெறும் பட்டதாரிகளை உருவாக்கும் மையங்களாக மட்டுமே செயல்படுகின்றன. சமூகத்தில் உள்ள வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில், பாடத் திட்டங்களை தயாரித்து, அதனடிப்படையில், பட்டதாரிகளை உருவாக்கும் நிலை காணப்படவில்லை. படித்த பாடம் ஒன்றாக இருக்கிறது; வேலைவாய்ப்பு வேறு மாதிரி உள்ளது. இது மிகவும் மோசமான நிலை; இதை சரி செய்ய வேண்டும்.உயர் கல்வி நிறுவனங்கள் நிறைய உள்ளன. ஆனால், அவற்றின் செயல்பாடுகள் எல்லாம், எதிர்பார்க்கும் அளவுக்கு திருப்தியாக இல்லை. இந்நிறுவனங்கள் சரிவர செயல்படாதது கவலை அளிப்பதாக உள்ளது.

மேம்படுத்த வேண்டியது அவசியம் :
உலக அளவில், சர்வதேச தர பல்கலை கழகங்கள் என, 200 பல்கலை கழகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த பட்டியலில், இந்திய பல்கலை கழகங்களில் ஒன்று கூட இடம் பெறவில்லை. பல நாடுகளில் காணப்படும், மிகச்சிறந்த தொழில் நுட்ப தரத்தையும், இங்குள்ள கல்வி நிறுவனங்களில் காண முடியவில்லை. இந்தியாவில், உயர் கல்வி நிறுவனங்களின் தரத்தை, மேம்படுத்த வேண்டியது அவசியம்; இதற்கு ஏற்ற வகையில், இந்நிறுவனங்களுக்கு, வசதிகள் இருக்க வேண்டும். குறிப்பாக, தன்னாட்சி அதிகாரங்களும், தேவைக்கு ஏற்ப முடிவு எடுக்கும் சுய அதிகாரமும், வழங்கப்பட வேண்டும். முன் எப்போதும் இல்லாத வகையில், 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், மத்திய அரசு சார்பில், 51 கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட்டன.

ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்., போன்ற உயர் கல்வி நிறுவனங்களும் இதில் அடங்கும். கடந்த, 2004ல், 17 ஆக இருந்த மத்திய பல்கலை கழங்கள் எண்ணிக்கை, 2010ல், 44 ஆக உயர்ந்துள்ளது. கோவாவை தவிர, அனைத்து மாநிலங்களிலும், மத்திய பல்கலை கழகங்கள் உள்ளன. உயர் கல்வி துறையில், அரசு அடுத்தடுத்து மேற்கொண்ட, தீவிர நடவடிக்கைகளால், நாடு முழுவதும், 19 ஆயிரம் கல்லூரிகள் பயனடைந்துள்ளன. இதனால், 25.9 கோடி மாணவர்கள், உயர் கல்வி பயிலும் சூழ்நிலை உருவாகியுள்ளது; இந்த நிலை மட்டும் போதாது. இந்த உயர் கல்வி நிறுவனங்களை, உலக தரத்திற்கு இணையானதாக மாற்ற வேண்டும். இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.

குமரி மாவட்டத்தில் வெயில் கடுமை வெப்ப நோய்கள் பரவுகிறது


குமரிமாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் அடித்து வருகிறது. கோடை காலத்தில் தான் இது போன்ற உச்சி வெயில் மண்டையை பிளக்கும் அளவு வெயில் வறுத்து எடுக்கும். ஆனால் தற்போதே உச்சகட்ட வெப்பநிலை காணப்படுகிறது. முதியவர்கள் தலைசுற்றி கீழே விழும் அளவுக்கு வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. காற்று கூட அனல் காற்றாக வீசுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் பகலில் வெயிலும் இரவில் பனியும் பொழிந்து வந்தது. தற்போது இரவு நேரம் பொழிந்த பனியும் குறைந்துள்ளது.கடும் வெயிலால் விவசாய பயிர்களுக்கும் அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. குமரி மாவட்டத்தில் சில பகுதிகளில் நெற்பயிரிட்டுள்ள விவசாயிகள் அறுவடை பணிகளை துவங்கியுள்ள நிலையில், பல பகுதிகளில் கடைமடை தண்ணீர் சரியாக பயிர்களுக்கு கிடைக்காததால் நெல்மணிகள் கருகும் நிலை காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.பேச்சிப்பாறையில் தற்போது 4.55 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. அதே நேரம் விவசாய தேவைக்காக பேச்சிப்பாறையில் இருந்து விநாடிக்கு 281 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால் அணைக்கு உள்வரத்தாக 61 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணியில் 32.25 அடி தண்ணீர் உள்ள நிலையில் அந்த அணையில் இருந்து விநாடிக்கு 103 கனஅடி தண்ணீர் வெளியேறிக்கொண்டிருக்கிறது. ஆனால் உள்வரவாக தண்ணீர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பேச்சிப்பாறையில் 25.10 அடியும், பெருஞ்சாணியில் 57.25 அடி தண்ணீரும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதுபோன்று சிற்றாறு 1ல் 5.25 அடியும், 2ல் 5.34 அடியும், பொய்கையில் 8அடியும், மாம்பழத்தாறில் 4.92 அடி தண்ணீரும் உள்ளது. கடந்த ஆண்டு பொய்கையில் 21.20 அடியும், மாம்பழத்தாறில் 54.12 அடியும் தண்ணீர் இருந்தது.தற்போது பருவமழை போதிய அளவு கைகொடுக்காததால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். குமரி மாவட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்களில் ஓரளவு தண்ணீர் உள்ளது. இருப்பினும் சுட்டெரிக்கும் வெயிலால் தண்ணீர் வற்றி வருகிறது. கோடைக்காலமான மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு இன்னும் இரு மாதங்கள் உள்ள நிலையில் குறைவான அணை நீர்மட்டமும், அளவுக்கு அதிகமான வெயிலும் விவசாயிகள், பொதுமக்களை கவலையடையச் செய்துள்ளது. கடும் வெயிலைத் தொடர்ந்து நாகர்கோவில், பார்வதிபுரம், சுங்கான்கடை, வில்லுகுறி, கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி, பூதபாண்டி, மார்த்தாண்டம், ஆசாரிபள்ளம், குளச்சல், தக்கலை, திருவட்டார், குலசேகரம், திங்கள்சந்தை, களியக்காவிளை பகுதிகளில் இளநீர், நுங்கு, தர்பூசனி போன்ற இயற்கை குளிர்பான பொருட்களின் விற்பனையும், பழ சர்பத் வியாபாரமும் அமோகமாக நடந்து வருகிறது. குமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் ரோட்டோரங்களில் விற்கும் இளநீர், தர்பூசனி, நுங்குகளை ஆர்வத்துடன் வாங்கி பருகி வருகின்றனர்.
எப்போதும் விட குறைவான தேங்காய் கிடைத்தாலும், கொப்பரைக்கேற்ற தட்ப வெப்பம் நிலவுவதால் அந்த வியாபாரத்தில் அதிக பணத்தை தைரியமாக விவசாயிகள் முதலீடு செய்கின்றனர். மேலும் கீரிப்பாறை, திருவட்டார், குலசேகரம் போன்ற பகுதியில் வழக்கத்தை விட குறைவான அளவிலேயே ரப்பர் பால் கிடைக்கின்றன. கோடைகாலத்தில் ரப்பர்களில் பால்குறைவதை போல் தற்போதே சூழல் நிலவுகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கிலோ 180க்கு விற்பனை செய்யபட்ட ரப்பர் இந்த ஆண்டு ரூ142க்கு விற்பனை செய்யபட்டு வருகிறது. மேலும் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக கருத்தும் நிலவுகிறது. ரப்பர் பாலின் விலை குறைவது போன்று ரப்பரின் விலையும் குறைந்து வருவதால் ரப்பர் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.

செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு தற்போது சுட்டெரிக்கும் வெயில் கைகொடுத்து வருகிறது. பனி, மழை போன்றவற்றால் ஏற்படும் இழப்பீடு ஏதும் இல்லாததால் செங்கல்சூளை உரிமையாளர்களும், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.குமரி மாவட்டத்தில் கோடை காலத்தில் வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து குஞ்சு பொரித்து பின்னர் தாய்நாட்டுக்கு திரும்புவது வழக்கம். அது போன்று வெளிமாவட்டங்களில் வசித்து வந்த பல வெளிநாட்டு பறவைகள் வெயிலின் தாக்கத்தால் குமரி மாவட்டத்தின் நீர்நிலை உள்ள பகுதியான இறச்சக்குளம், சுசீந்திரம், சுங்கான்கடை, கீரிப்பாறை உள்பட பல்வேறு இடங்களில் முகாமிட்டுள்ளன.குமரி மாவட்டத்தில் தற்போதைய தட்பவெப்பத்தால் பல்வேறு பகுதிகளில் வைரஸ் காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் வகையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீரை காய்ச்சி குடிக்குமாறு சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

கோடை கால நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க வழிமுறை :சுட்டெரிக்கும் வெயிலினால் ஏற்படும் உடல் உபாதைகள், அவதி போன்றவற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள டாக்டர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.உடலை இறுக்கிப்பிடிக்கும் ஆடைகளை அணிவதை தவிர்க்கவேண்டும். பெரும்பாலும் வேனல் காலங்களில் பருத்தி ஆடைகளையும், லூசான ஆடைகளையும் உடுப்பதே சிறந்தது. பொது இடங்களில் தும்மும்போது மற்றவர்கள் மேல் படாமல் தவிர்க்கவேண்டும். தும்மல் வரும்போது கர்ச்சீப்பால் முகத்தை பிடித்துக்கொள்ளவேண்டும். உணவு பழக்க முறையில் கவனம் செலுத்த வேண்டும். காய், கறிகள், பழவகைகள், வெள்ளரிபிஞ்சு அதிகமாக உண்பது நல்லது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். இளநீர், தயிர், மோர் போன்ற இயற்கை பானங்களை அருந்துவது உடலுக்கு நல்லது.வெயில் காலத்தில் தினமும் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும். தினமும் இரண்டு நேரம் குளிக்க வேண்டும். குழந்தைகளையும் இரு நேரம் குளிப்பாட்டவேண்டும். குழந்தைகளுக்கும் லூசான காட்டன் துணிகளை உடுத்தல் வேண்டும். மண்ணில் விளையாடாமல் கவனித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.வெயிலால் தற்போதே பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்னும் மூன்று மாதங்கள் தாக்குபிடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

உதவி கல்வி அலுவலரை கண்டித்து கடையநல்லூரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கடையநல்லூர் சரக கூடுதல் உதவி கல்வி அலுவலரின் ஆசிரியர் விரோத போக்கை கண்டித்து நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

பெண் ஆசிரியர்களை கண்ணியக்குறைவாக நடத்துவது மட்டுமின்றி மெமோ கொடுத்துவிடுவேன் என்று மிரட்டுவதாகவும், பள்ளி நிர்வாகம், தலைமையாசிரியர், ஆசிரியர்களிடையே ஒற்றுமையை சீர்குலைத்து வருவதாகவும், புத்தாண்டு, பொங்கல் போன்ற நாட்களில் 10 முதல் 20 டைரிகளை கேட்டு கட்டாயமாக வாங்குவதாகவும் தொடர்ந்து ஆசிரியர்கள் விரோத போக்கை கடைபிடித்து வருவதாக தெரிவித்து கடையநல்லூர் சரக கூடுதல் உதவி கல்வி அலுவலரை கண்டித்து நேற்று கடையநல்லூரில் அனைத்து ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நகர செயலாளர் முத்துசாமி, தமிழக ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் பால்துரை, தமிழ்நாடு தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்க தலைவர் சண்முகசுந்தரம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி வட்டார செயலாளர் மருதுபாண்டியன், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் மணிமாறன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில துணைச் செயலாளர் பழனிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜ், வாசு., ஈஸ்வரன், தென்காசி சரவணன் மற்றும் ஆசிரியர்கள் சார்லஸ், மோதிலால் உட்பட பலர் பேசினர்.கடையநல்லூர் சரக கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலரை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன. ஆர்ப்பாட்டத்தில் கடையநல்லூர் சரகம் மற்றும் தென்காசி, வாசுதேவநல்லூர், செங்கோட்டை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.