Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 8 ஆகஸ்ட், 2012

தமிழக முஸ்லிம்களின் ஒரே நாளிதழுக்கு வெள்ளி விழா ஆண்டில் சர்வதேச அங்கீகாரம் !

துபையில் வருடந்தோறும் ரமலான் மாதத்தில் நடைபெற்று வரும் துபை சர்வதேச திருக்குர்ஆன் மாநாட்டினையொட்டி திருக்குர்ஆன் மனனப் போட்டி நடைபெற்று வருகிறது. 16 ஆவது ஆண்டாக நடைபெற்று வரும் இப்போட்டி கடந்த 27.07.2012 வெள்ளிக்கிழமை முதல் துபை சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஆடிட்டோரியத்தில் நடைபெற்று வருகிறது.

மணிச்சுடருக்கு சர்வதேச அங்கீகாரம்
துபை சர்வதேச திருக்குர்ஆன் மாநாடு குறித்த செய்திகளை சிறப்புற வெளியிட்டு வரும் ஊடகங்களுக்கு மாநாட்டின் நிறைவு நாளுக்கு முன்னதாக விருது வழங்கி கௌரவிப்படுத்துவது வழக்கம். இவ்வாண்டு திருக்குர்ஆன் மனனப் போட்டி குறித்த செய்திகளை சிறப்புற வெளியிட்டு வரும் மணிச்சுடர் நாளிதழுக்கு விருது வழங்கப்பட்டது.

இவ்விருதினை மணிச்சுடர் நாளிதழின் இயக்குநர்களில் ஒருவரும், அமீரக காயிதெமில்லத் பேரவையின் தலைவருமான குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி அவர்களிடம் விருது வழங்கும் குழுவின் தலைவர் இப்ராஹிம் பு மெல்ஹா வழங்கினார்.

துபை சர்வதேச திருக்குர்ஆன் மாநாட்டுக் குழு மணிச்சுடர் நாளிதழுக்கு வழங்கிய விருதினைப் பெற்ற குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி தெரிவித்ததாவது :

மணிச்சுடர் நாளிதழை சிராஜுல் மில்லத் மர்ஹும் அல்ஹாஜ் ஏ.கே. அப்துஸ் ஸமது சாஹிப் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் உலகெங்கிலும் வாழ்ந்து வரும் தமிழக முஸ்லிம் சமுதாயம் சமுதாயச் செய்திகளை அறிந்து கொள்ள உதவும் வகையில் நாளிதழின் அவசியத்தை உணர்ந்து ’உண்மை சொல்வோம் நன்மை செய்வோம்’ எனும் கருத்தினை மையமாகக் கொண்டு துவக்கினார்.
சிராஜுல் மில்லத்தின் மறைவுக்குப் பின்னர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மணிச்சுடர் நாளிதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்று சிறப்புற நடத்தி வருகிறார்.
மணிச்சுடர் நாளிதழின் வெள்ளி விழா ஆண்டாம் இருபத்தந்தாம் ஆண்டில் இவ்விருது கிடைத்துள்ளது இதன் சமுதாயப் பணிக்கு மட்டுமல்ல சர்வதேச அங்கீகாரமாகும் என்றார்.

இவ்விருதினை மணிச்சுடர் நாளிதழின் நிர்வாகத்திற்கும், நாளிதழ் வளர்ச்சியில் உறுதுணையாக இருந்து வரும் புரவலர்கள், விளம்பரதாரகள், செய்தியாளர்கள், ஏஜெண்டுகள் உள்ளிட்ட அனைவருக்கும் சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.
 
தகவல் :முதுவை ஹிதாயத் 

சுவர்க்கமும் நரகமும் செய்த தர்க்க வாதம்

சுவர்க்கமும் நரகமும் ஒரு முறை தர்க்கவாதத்தில்இறங்கின.
நரகம் நவின்றது: “உன்னத தலைவர்களும் பிரபல பிரமுகர்களும் வீற்றிருப்பது என்னிடம்தான்!”
தன்னிடம் தங்கியிருக்க வருபவர்களின் சமூக அந்தஸ்தைக் கண்டு அகங்கரித்து நரகம் இவ்வாறு சொன்னது. சக்கரவரத்திகளும், பிரபுக்களும், தலைவர்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தனர்.
தன்னிடம் தங்கியிருக்க வருபவர்களை நோக்கியது சுவர்க்கம். அறிமுகமில்லாதவர்களும், ஊரில் இருக்கிற இடமே தெரியாதவர்களும், ஊரில் அவர்களைக் காணவில்லையென்றால் அவர்கள் எங்கே சென்றார்கள் என்று கேட்கப்படாதவர்களும், ஊரில் இருந்தால் கூட ஒரு நிகழ்ச்சிக்கும் அழைக்கப்படாதவர்களும்தான் சுவர்க்கத்தில் இருந்தனர்.
சுவர்க்கம் சொன்னது: “எனக்கு என்ன ஆனது? மக்களில் பலஹீனமானவர்களும், ஒடுக்கப்பட்டவர்களும் தானே இங்கே இருக்கிறார்கள்!”
இந்த விவாதத்தில் அல்லாஹ் குறிக்கிட்டான்.
சுவர்க்கத்திடம் அல்லாஹ் கூறினான்:”நீ என்னுடைய கருணை! என்னுடைய அடிமைகளில் நான் தேர்ந்தெடுத்தவர்களுக்கு உன் வழியாககருணை புரிவேன்.”
நரகத்திடம் அல்லாஹ் இவ்வாறு நவின்றான்: “நீ என்னுடைய தண்டனை! என்னுடைய அடிமைகளில் நான் தேர்ந்தெடுத்தவர்களுக்கு உன் வழியாக நான் தண்டனை கொடுப்பேன்.”
வாழ்க்கையில் ஏற்படும் தோல்வியின் இறுதி உருவம்தான்  நரகம். அங்கீகாரமும், புகழும் தனக்கு உள்ளது என்ற எண்ணம், இருள் கொண்ட மனங்களில் திமிரையும் பெருமையையும் உண்டு பண்ணும். இத்தகைய தீய எண்ணங்கள் இறுதித் தோல்விக்கு ஒரு மனிதனை இழுத்துச் செல்லும் என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
நூஹ் நபி (அலை) அவர்களின் சமூகத்தில் பெரும்பாலோர் அவர்களை நிராகரித்தனர். அடித்தட்டு மக்களாகிய தொழிலாளிகள் சிலர் மட்டும்தான் அவர்களைப் பின்பற்றினர். இந்த நிலையைச் சுட்டிக்காட்டி நிராகரிப்பாளர்கள் நூஹ் நபியை கேலி செய்தனர். ஏகடியம் பேசி எக்களித்தனர். நாங்கள் உம்மை விசுவாசிக்கவா? தரம் தாழ்ந்த ஒரு சிலரல்லவா உம்மோடு இருக்கிறார்கள் என்று அவர்கள் நையாண்டி பேசினர்.
அவர்களைப் பார்த்து அமைதியாக நூஹ் நபி அவர்கள் கூறினார்கள்: “என்னை பின்பற்றுபவர்கள் என்ன தொழில் செய்கின்றார்கள் என்று பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அவர்களது கணக்குகளை பார்க்க வேண்டியது அல்லாஹ் ஒருவன்தான். எனது பணி எத்தி வைப்பது ஒன்றே”
இது நூஹ் நபி (அலை) அவர்களுக்கு மட்டும் நேர்ந்த அனுபவமல்ல. விறகு வெட்டிகளும், துணி துவைப்பவர்களும் இன்னும் இது போன்ற தொழில் செய்பவர்களும் தான் ஈஸா (அலை) அவர்களிடம் சீடர்களாக இருந்தார்கள். மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்த முஹாஜிர்களை இரண்டாவது குடிமக்களாக சித்தரிக்க முனைந்தார்கள் முனாஃபிக்குகள். அல்லாஹ் அவர்களது சூழ்ச்சிகளுக்கு பதிலடி கொடுத்தான்.
வாழ்க்கையின் யதார்த்தங்களை அனுபவித்தறிந்த சாதாரண மக்கள்தான் இறைவனின் கட்டளைகளை ஏற்று நன்மையின் முன்வரிசையில் நிற்பார்கள்.
--கே.எஸ்.அப்துல் காதர்
     சவூதி அரேபியா

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

மீண்டும் துணை ஜனாதிபதியாக ஹமீது முஹம்மது அன்சாரி


தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும்  ஹமீது முஹம்மது  அன்சாரியின் பதவிக் காலம் வருகிற 10-ந்தேதியோடு முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடந்தது.
காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக அமீது அன்சாரி மீண்டும் களமிறங்கினார். அவரை எதிர்த்து பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த்சிங் போட்டிட்டார். பாராளுமன்றத்தின் இரு அவைகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிக்கக்கூடிய இத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள 63-ம் எண் அறையில் செய்யப்பட்டிருந்தன.
காலை 10 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. 

மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே அன்சாரி முன்னணியில் இருந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் அன்சாரி 490 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரைத் எதிர்த்து போட்டியிட்ட ஜஸ்வந்த் சிங் 238 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 8 வாக்குகள் செல்லாதவையாகும்.
இந்த வெற்றியின் மூலம்  ஹமீது முஹம்மது அன்சாரி 2-வது முறையாக துணை ஜனாதிபதியாகிறார். இதற்கு முன் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இரண்டு முறை துணை ஜனாதிபதியாக இருந்துள்ளார்.
வெற்றி பெற்ற அன்சாரி 14-வது துணை ஜனாதிபதியாக 11-ம் தேதி பதவியேற்கிறார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். துணை ஜனாதிபதி பதவியில் அன்சாரி 2017-ம் ஆண்டு வரை நீடிப்பார்.

 நாட்டின் குடியரசு துணைத் தலைவராக 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹமீத் அன்சாரி சிறந்த கல்வியாளராக- எழுத்தாளராக பன்முகத் திறமை கொண்டவர்..
உத்தரப்பிரதேசத்தில் உள்ள காசிப்பூர்தான் சொந்த ஊர். ஆனால் இவர் பிறந்தது கொல்கத்தாவில். 1937ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி பிறந்த ஹன்சாரியின் மாமா முக்தார் அகமத் அன்சாரி காங்கிரஸ் கட்சியில் 1927-ம் ஆண்டு தலைவராக இருந்தார்.
1961ல் இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று வெளியுறவுத் துறையில் பணியில் சேர்ந்தார். ஆஸ்திரேலியாவிற்கான இந்திய தூதர், ஐக்கிய அரபு நாடுகள், ஆப்கானிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கான இந்திய தூதர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர் அன்சாரி. ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்த பிரதிநிதியாகவும் இருந்தார் அன்சாரி.
1984-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார்..மேலும் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 2000-ம் ஆண்டு மே மாதம் முதல் 2002 மார்ச் வரை துணை வேந்தராகப் பணியாற்றினார். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியாமில்லா இஸ்லாமிய பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கவுரவ பேராசிரியராகவும் பணியாற்றினார். தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவராகவும் இருந்தவர் அன்சாரி.
மேற்காசிய விவகாரங்களில் மிகுந்த ஆர்வமுடைய அன்சாரி, பாலஸ்தீனம் உட்பட பல்வேறு மேற்காசிய நாடுகளின் வெளியுறவு விவகாரங்கள் குறித்துப் புத்தகங்கள் எழுதியுள்ளார். ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்ட முன்வரைவு மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது அதன் மீதான விவாதத்தை நள்ளிரவு வரை நீட்டித்து, பின், வாக்கெடுப்பு நடத்தாமலேயே அவையைக் கால வரையின்றி ஒத்திவைத்தார் அன்சாரி. இதற்காகத்தான் ஹமீத் அன்சாரியை மீண்டும் குடியரசு துணைத் தலைவராக்கியிருப்பதாக கூறப்படுவதும் உண்டு.

நெல்லையில் தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம்

நெல்லை மாநகரில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஆழ்குழாய் கிணறுகளும் வறண்டு வருவதால் தண்ணீருக்காக மக்கள் தவிக்கின்றனர். தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் பருவ மழை தொடர்ந்து பொய்த்து வருகிறது. மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்யும் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் நீர்மட்டம் குறைந்து விட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பாபநாசம் அணையில் 80 அடி முதல் 90 அடி வரை தண்ணீர் நிரம்பி காணப்படும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்டதால் அணையில் 35 அடி தண்ணீரே உள்ளது. இந்த தண்ணீரை கொண்டு குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்ய வேண்டியிருப்பதால் முறை வைத்தே தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நெல்லை மாநகருக்கு குடிநீர் விநியோகிக்கும் சுத்தமல்லி, மணப்படைவீடு, திருமலைக்கொழுந்துபுரம்   நீரேற்று நிலையங்களுக்காக ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகளுக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துவிட்டது. இதனால் நெல்லையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகள் முழுமையாக நிரம்புவதில்லை. குறிப்பாக என்ஜிஓ காலனி, பெருமாள்புரம், தியாகராஜநகர், கேடிசிநகர் போன்ற பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் பாதியளவு தண்ணீர்கூட நிரம்புவதில்லை. மேற்கண்ட பகுதிகளில் 4 நாள் 5 நாளைக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

மாநகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, பரணிநகர், கொக்கிரகுளம் உள்ளிட்ட ஆற்றங்கரையோரப்பகுதி மக்களும் குடிநீருக்காக மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே குடிநீர் பிரச்னையை தீர்க்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து கவுன்சிலர் ஜோசப் கூறியதாவது: என்ஜிஓ காலனி பகுதியில் 5 நாளைக்கு ஒரு முறையே குடிநீர் வழங்கப்படுகிறது. லாரி தண்ணீரும் சரியாக கிடைக்கவில்லை. நெல்லை மாநகர பகுதியை சுற்றி முன்பு வயல்வெளிகள் அதிகம் இருந்தன. இதனால் நிலத்தடிநீர் போதிய அளவு கிடைத்தது. தற்போது வயல்வெளிகள் எல்லாம் கட்டிடங்களாக மாறிவிட்டன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து ஆழ்குழாய் கிணறுகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டன. குறிப்பாக என்ஜிஓ காலனி, பெருமாள்புரம் பகுதிகளில் 300 அடி ஆழம்வரை ஆழ்குழாய் கிணறு அமைத்தாலும் தண்ணீர் கிடைக்கவில்லை.
நிலத்தடி நீர் குறைந்து வருவதால் எதிர்காலத்தில் தண்ணீர் உப்புத்தன்மையாக மாறவும் வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாநகராட்சி உரிய திட்டங்களை தீட்டினால்தான் குடிநீர் பஞ்சத்தில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

மக்கமாநகரில் இஸ்லாமிய நாடுகளின் அவசர உச்சி மாநாடு


புனித நகரமான மக்காவில் இம்மாதம் ஆகஸ்ட் 15, 16 ஆகிய தேதிகளில் அவசரமாக நடைபெறும் இஸ்லாமிய உச்சி மாநாட்டிற்கு ஈரான் அதிபர் அஹமதி நிஜாத்திர்க்கு இரு புனித பள்ளியின் காவலரும், சவூதி அரேபிய அரசருமான அப்துல்லாஹ் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார் என செய்தி நிறுவனமான SPA தெரிவித்துள்ளது,

அது பற்றி ஈரான் அதிபருக்கு சவூதி மன்னர் கடிதம் எழுதியதாக நேற்று அறிவித்துள்ளது, இந்த அழைப்பு முஸ்லிம் உலகில் மிகப்பெரிய பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது, இந்த மாநாடு சாதாரண மாநாடு அல்ல, முஸ்லிம் நாடுகளின் ஒற்றுமை, ஒற்றுமையை வலுப்படுத்துதல் மற்றும் தற்போது முஸ்லிம் உலகம் சந்தித்து வரும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட உள்ளது,

இம்மாநாட்டின் அறிவிப்பை தொடர்ந்து உலக நாடுகளின் கவனம் சவூதியை நோக்கியே திரும்பியிருந்தது. மேலும் ஈரானுக்கான அழைப்பில் மேலும் மத்திய கிழக்கில் பரபரப்பு தொற்றிவிட்டது,

இந்த மாநாட்டில் பல்வேறு முஸ்லிம் நாடுகள் மற்றும் OIC யை சேர்ந்த 57 உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது,

பி.இ., பி.டெக் முடித்தவர்களுக்கு கொச்சி ஷிப்யார்டு -ல் பயிற்சி பணி

கொச்சின் ஷிப்யார்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பயிற்சி பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: எக்சிக்யூட்டிவ் டிரெய்னி

காலியிடம்: 14

கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், சிவில் ஆகிய ஏதேனும் ஒரு துறையில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ., பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 27க்குள் இருத்தல் வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 24.08.2012
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cochinshipyard.com இணையதளத்தை பார்க்கவும்.

சென்னை உயர்நீதி மன்றத்தின் 150 ஆண்டுகால வரலாறு

சென்னை உயர் நீதிமன்றம் கட்டப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த நிலையில் 150வது ஆண்டு விழா செப்டம்பர் 8ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.


இவ்விழாவில் குடியரசுத் துணைத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.இந்த சூழலில் அதன் வரலாற்றை நாம் அறிந்து கொள்ளவது அவசியம் .



ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனியை சென்னையில் தொடங்கியபொழுது, 1640-ல் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டியவுடன், வழக்குகளை விசாரிப்பதற்கென "சவுல்ட்ரி' என்று சொல்லப்படுகின்ற சத்திர நீதிமன்றம் தொடங்கப்பட்டு, அங்கு சிவில், கிரிமினல் வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

1688-ல் மேயர் நீதிமன்றம், 1739-ல் கச்சேரி நீதிமன்றம், 1798-ல் ரிக்கார்ட் நீதிமன்றம் என்று பலவகையான சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்களை ஆங்கிலேயர்கள் அமைத்தனர். 1801-ல் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்றாலும், சுப்ரீம் கோர்ட் ஆப் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு 60 ஆண்டுகாலம் பதிவில் இருந்தது.

1861-ல் விக்டோரியா மகாராணி சென்னை, கல்கத்தா, பம்பாயில் உயர் நீதிமன்றங்களை அமைக்க உத்தரவிட்டார். முறையாக 150 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1862 ஆகஸ்ட், 15-ல் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தொடங்கப்பட்டது. இதில் என்ன வேடிக்கை என்றால், இந்த நீதிமன்றம் தொடங்கப்பட்டு 85 ஆண்டுகளுக்குப் பின் அதே ஆகஸ்ட் 15-ல் இந்தியா விடுதலை பெற்றது.

தற்போதுள்ள நீதிமன்றக் கட்டடத்துக்கான பணி 1888-ல் தொடங்கப்பட்டது. முதல் தலைமை நீதிபதியாக கோலி கார்மன் ஸ்காட்லாண்ட் நைட் தலைமையில் ஐந்து நீதிபதிகள் இந்த நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டனர். வழக்குகளில் ஆஜராவதற்காக வக்கீல்கள் மற்றும் "அட்டர்னி அட் லா' என்ற தகுதி பெற்றவர்களை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்தனர்.
அப்போதைய மெட்ராஸ் உயர் நீதிமன்றம் ராஜாஜி சாலையிலுள்ள சிங்காரவேலர் மாளிகை, கஸ்டம்ஸ் ஹவுஸ் ஒட்டிய பகுதியில் செயல்பட்டது. தற்போதைய பாரிமுனையில் உள்ள உயர் நீதிமன்றத்தின் இந்த அற்புதக் கட்டடம் கட்ட நான்கு ஆண்டுகள் ஆனது. இங்கு கட்டடப் பணிகள் ஆரம்பிப்பதற்கு முன் அங்கிருந்த சென்னகேசவப் பெருமாள், மல்லீஸ்வரர் ஆலயங்கள் பூக்கடை காவல் நிலையம் அருகில் மாற்றி அமைக்கப்பட்டன.

இங்குதான் முதன்முதலாக சென்னைக்கு கலங்கரை விளக்கம் அமைந்தது. ஜே.டபிள்யு. பிசிங்டனின் வடிவமைப்பில், ஹென்றி இர்வின், ஜெ.எச். ஸ்டீபன் போன்றோர்களின் முயற்சியில், இந்தோ - சாராசனிக் முறையில் இன்றைய இந்த கம்பீரக் கட்டடம் எழுந்தது. அதற்கான அன்றைய மொத்த செலவு 12 லட்சத்து 98 ஆயிரத்து 163 ரூபாய்.

ஜூலை 12, 1892 அன்று காலை 10 மணி அளவில் சென்னை மாகாண கவர்னர் பாரிமுனை வர, அங்கிருந்து அவர் உயர் நீதிமன்ற வளாகத்துக்குப் பிரதான வாயில் வழியாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். தலைமை நீதிபதியாக இருந்த சர் ஆர்தர் காலின்ஸ் மற்றும் சக நீதிபதிகள் அவரை வரவேற்று, திறப்பு விழா நடக்கும் நீதிமன்ற அரங்குக்கு அழைத்துச் சென்றனர். அங்கு உச்ச நீதிமன்றச் சாவியை பொதுப்பணித் துறைச் செயலர் கவர்னரிடம் முறைப்படி வழங்க, அதை கவர்னர் தலைமை நீதிபதியிடம் ஒப்படைத்தார்.

பிரமிக்கச் செய்யும் இந்தக் கட்டடத்தைக் கண்டு செஞ்சி ஏகாம்பர முதலியார் உயர் நீதிமன்ற அலங்கார சிந்து என்று பாடி, அதை 1904-ல் பூவிருந்தவல்லி க. துளசிங்க முதலியாரால் வெளியிடப்பட்டது. அந்த அலங்கார சிந்துவில் குறிப்பிட்ட வரிகள்:
""அண்டா போல் ஒரு கூண்டு சண்டமாக கட்டி
அடுத்தகத்திலும் பெருங்க கொடத்தைபோல வெகுகூட்டி
கண்டவர் பிரமிக்க கலசமதிலே மாட்டி
கண்கள் சிதறும்படி தங்கத்திலூட்டி...''
1916-ல் செப்டம்பர் 22-ல் எம்டன் என்ற ஜெர்மானியக் கப்பல் நீதிமன்றத்தின் மீது குண்டு வீசியதில் சுற்றுச் சுவர்கள் சேதமடைந்தன. அதுகுறித்து பதிவுகள் இன்றைக்கும் இந்தக் கட்டடத்தின் வடகிழக்கு மூலையிலுள்ள ராஜாஜி சிலை அருகில் மதில்சுவரில் கல்வெட்டாக உள்ளன. இரண்டாம் உலகப் போரின்போது இந்த நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு அதன் கோப்புகள் கோவைக்கும் அனந்தப்பூருக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. சிலகாலம் கோவையில் சென்னை உயர் நீதிமன்றப் பணிகள் நடைபெற்று, போர் அச்சம் தணிந்தபின் தி.நகரில் உள்ள ஆங்கிலோ - இந்தியப் பள்ளியில் உயர் நீதிமன்றம் சிலகாலம் தனது பணிகளைச் செய்தது.

இப்படி நீண்ட வரலாறு கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் பல செய்திகள், நிகழ்வுகள், கம்பீரமான கட்டடங்கள் போன்றவை மட்டுமல்லாமல், நீதியை நிலைநாட்டிய மெத்தப்படித்த, நுண்மான் நுழைபுலம் கொண்ட நீதிபதிகள், ஆற்றலும் பேரறிவும் பெற்ற வழக்குரைஞர்கள் இந்த வளாகத்தில் கம்பீரமாக உலவியது பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்து, தெரு விளக்கில் படித்த திருவாரூர் முத்துசாமி ஐயர்தான், ஆங்கிலேயர் காலத்தில் 1878-ல் முதல் இந்திய நீதிபதியாக அமர்ந்தார். நாடு விடுதலை பெற்றவுடன் டாக்டர் ராஜமன்னார் 1948-லிருந்து 1966 வரை நீதிபதியாக இங்கு அமர்ந்தது நீதித்துறையில் ஒரு மறுமலர்ச்சி காலம்.

உலகில் இரண்டாவது பெரிய நீதிமன்ற வளாகத்தைக் கொண்டுள்ள இங்கு நடந்த வழக்குகளில் பல பரபரப்பான தீர்ப்புகளும், நியாயங்களும் வழங்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட்டது. இந்த நீதிமன்றத்தின் மூலம் அரசியலமைப்புச் சட்டக் கூறில் 15 திருத்தங்கள் பெற வழிவகுத்தது. வ.உ.சி. ஆயுள் தண்டனை வழக்கு, வாஞ்சிநாதன் வழக்கு, தியாகராஜ பாகவதர் - என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்குகள் என வரலாற்றுப் புகழ்பெற்ற நூற்றுக்கணக்கானவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்.
சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து நீதிபதிகள் பதஞ்சலி சாஸ்திரி, கே.சுப்பாராவ், ஏ.எஸ்.ஆனந்த், கே.ஜி.பாலகிருஷ்ணன் போன்றோர் இந்தியாவின் தலைமை நீதிபதிகளாக ஆனார்கள். இங்கிருந்து உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதிகளாகச் சென்றவர்களில் டி.எல். வெட்கட்ராமய்யர், அழகிரிசாமி, பி.எஸ்.கைலாசம், இரத்தினவேல் பாண்டியன், வி.இராமசாமி, வரதராசன், எஸ்.நடராசன், எஸ்.மோகன், கே.வேங்கடசாமி, ஏ.ஆர்.இலட்சுமணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

கடந்த 1962-ல் இதன் நூற்றாண்டு விழா கொண்டாடும்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த டி.எல்.வெங்கட்ராமய்யர் கர்நாடக இசைப் பாடல் பாட, அன்றைய பப்ளிக் பிராசிக்யூட்டர் வி.பி.ராமன் தனது 38 -வது வயதில் வயலின் வாசிக்க ஓர் அரிய இசை நிகழ்ச்சி அப்போது நடந்தது. நீதிபதி டி.எல். வெங்கட்ராம ஐயர், இசைப் பேரரசி டி.கே. பட்டம்மாளுக்கு முத்துசாமி தீட்சிதரின் கீர்த்தனைகளைக் கற்றுத்தந்த ஆசான் ஆவார்.
அன்றைய நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் தமிழ் இலக்கியம், இசை, கலை, சமூக மேம்பாடு என்று சகல துறையிலும் சிறந்து விளங்கினர். திருக்காட்டுப்பள்ளியில் பிறந்த நீதியரசர் சிவசாமி ஐயர் கல்விக்கு ஆற்றிய பணிகள் ஏராளம்.

ரசிகமணி டி.கே.சி.யின் சகா, நீதிபதி மகராசன், நீதிபதி மு.மு.இஸ்மாயில் போன்றோர் தமிழுக்கு ஆற்றிய பணிகள் ஏராளம். இன்றைக்கும் மகராசனால் தமிழாக்கம் செய்யப்பட்ட ஷேக்ஸ்பியரின் "கிங் லியர்' படிக்கப் படிக்கத் திகட்டும்.
நீதிபதி மு.மு. இஸ்மாயில் தலைமையிலான குழுவால் தயாரித்து வெளியிடப்பட்ட சென்னை கம்பன் கழகத்தின் கம்பராமாயணப் பதிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பைபிள் தாளில் அச்சிடப்பட்ட அந்த கம்பராமாயணப் பதிப்பு பலராலும் இன்று பொக்கிஷமாகப் பாதுகாக்கப்படுகிறது.

நெல்லை மாவட்டத்துக்குப் போனால், உயர் நீதிமன்ற மகாராஜாவைத் தெய்வத்துக்கு இணையாகப் பேசுவதுண்டு. ஒரு சமயம் திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் பயணிக்கும்பொழுது செய்துங்கநல்லூரில் டீக்கடை விளம்பரப் பலகையில் "ஐகோர்ட் மகாராஜா துணை' என்று போடப்பட்டிருந்தது. அதுகுறித்து, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த மகராஜனை குறிப்பதுதானா இது என்று கேட்டபோது, "ஒரு சிலர் ஆம்; அது அவரைக் குறிப்பதுதான்' என்றனர். ஆனால், அதுகுறித்த தெளிவான கருத்தை அறிய முடியவில்லை. இப்படியாக கிராமப்புறத் தரவுகளிலிருந்து உயர் நீதிமன்றத்தை எவ்வளவு பூஜிக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள முடிகிறது.
வி.கே. திருவேங்கட ஆச்சாரியார் அட்வகேட் ஜெனரலாக இருந்தபொழுது, காமராசர் முதல்வராக இருந்தார். ஒரு முக்கிய வழக்கு குறித்து எனக்குத் தெளிவுபடுத்துங்கள் என்று ஒரு முதலமைச்சரைத் தன் வீட்டுக்கே வரவழைத்தவர்தான் வி.கே.டி. அந்த அளவு தங்கள் தரத்தைப் பாதுகாத்து, வழக்கறிஞர் தொழிலுக்கு நற்பெயரைப் பெற்றுத் தந்தவர்கள் அவர்கள்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரலாகப் பணியாற்றிய ஜான் புரூஸ் நார்டனின் புதல்வர் ஏர்லி நார்டனைப் பற்றிச் சொல்ல வேண்டும். இவர் இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்று, பின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பணியாற்றினார்.
இவர் பின்னாளில் தன்னை இந்திய தேசிய காங்கிரஸில் இணைத்துக் கொண்டதோடு, அதன் சட்டதிட்டங்களை வகுப்பதிலும் பங்கேற்றவர். ஆங்கிலேயர்கள் இவரை தேசத் துரோகி என்று குறிப்பிட்டனர். உடனே நார்டன், அநீதியை எதிர்ப்பதும், எந்த ஒரு நாட்டுக்கும் தங்களின் சொந்த விஷயங்களை நிறைவேற்றுவதில் அவர்களுக்கு உரிமை வேண்டும் என்று கோருவதால் தேசத் துரோகி என்று கூறினால், நான் அப்படிப்பட்ட தேசத் துரோகியாக இருக்க விரும்புகிறேன் என்றார்.

÷வங்காளம் பிளவுபட்டபோது அதனை எதிர்த்து நடைபெற்ற அன்னிய பொருள் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. அதனை ஒடுக்க அரசு பலவகையிலும் முயன்றது. அப்போது மசாபூர் மாவட்ட நீதிபதி கிங்ஸ்போர்ட் பத்திரிகையாளர்களை சிறையில் அடைத்தார். மேலும், போலீஸாரிடம் வாதம் செய்தான் என ஒரு சிறுவனுக்கு சவுக்கடி கொடுத்தார்.

அந்தச் சிறுவன் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ஆங்கிலேயர் இருவர் மாண்டனர். இச்செயலுக்கு மேலும் பலர் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு, மகான் அரவிந்தரும் அதில் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அனைவரும் அலிப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர்.

அப்போது சென்னையில் இருந்த ஏர்லி நார்டனை அந்த வழக்கில் ஆஜராவதற்காக ஆங்கிலேய அரசு அழைத்துச் சென்றது. அதற்காக நார்டனுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,000 வக்கீல் பீஸ் வழங்கப்பட்டது. அப்போது அது பெரிய தொகை. இவரும் அந்த வழக்கில் ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக வாதாடினார் என்பதுதான் இங்கு குறிப்பிடத்தக்கது.
இத் தகவல்களை மகான் அரவிந்தர் தனது "சிறைச்சாலையில் எனது நாட்கள்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை, மந்தைவெளியில் உள்ள ஒரு தெருவுக்கு இவ்வாறு இரு முகங்களைக் காட்டிய நார்டனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஒருபக்கம் இந்த வலிமை மிகுந்த உயர் நீதிமன்றத்துக்கு எதிராகத் தாக்குதலும் நடந்தேறின. சட்டமன்றத்துக்கும், நீதிமன்றத்துக்கும் பிரச்னைகள் ஏற்படும்பொழுது பலதரப்பான விவாதங்களும் விமர்சனங்களும் நடந்தேறின.

குறிப்பாக, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அழகிரிசாமியை அட்வகேட் ஜெனரலாக நியமித்தபோதும், அதன்பின் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நில ஆர்ஜித வழக்கில் நீதிபதி சத்தியதேவ் தீர்ப்பு குறித்து சட்டமன்றத்தில் விவாதித்தபொழுதும், சட்டப்பேரவைத் தலைவராக பி.எச். பாண்டியன் இருந்தபொழுது நீதிபதி சிங்காரவேல் ஒரு கிரிமினல் வழக்கில் வழங்கிய தீர்ப்பை சட்டமன்றத்தில் ரத்து செய்தபோதும் - நீதித்துறையின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களைப் பொருள்படுத்தாமல் உயர் நீதிமன்றம் அயராது தனது பணிகளைத் தொடர்ந்தது.

வழக்குரைஞர்கள் தங்களுடைய கடமைகளையும், பெருமைகளையும் விட்டுக்கொடுக்காமல், ஆங்கிலத்தில் Noble Profession, Learned Friend  என்று வழக்குரைஞர்களைக் குறிப்பிடுவதற்கு ஏற்றவாறு அந்தப் பண்புகளைக் கட்டிக்காத்த பாரம்பரியம் இந்த நீதிமன்றத்துக்கு உண்டு.
ஏர்லி நார்டனைக் குறிப்பிட்டதுபோல, வழக்குரைஞர்களாக இருந்த சி.பி. ராமசாமி ஐயர், டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரி, அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், ராஜா ஐயர், எஸ். மோகன் குமாரமங்கலம், வி.கே. திருவேங்கட ஆச்சாரியார், கேசவ அய்யங்கார் (பராசரனுடைய தந்தையார்), வி.எஸ். எத்திராஜ், பராசரன், வி.பி. ராமன், கே. குட்டி கிருஷ்ண மேனன், எம்.கே. நம்பியார், சி.ஆர். பட்டாபிராமன், கோவிந்தசாமிநாதன், ஜி.ராமசாமி, என்.டி.வானமாமலை, கே.கே. வேணுகோபால், எஸ். செல்லசாமி, டி. செங்கல்வராயன், பி.ஆர்.டோலியே இப்படி கீர்த்தி பெற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வரலாறு படைத்தனர் என்று சொல்வதைவிட, நீதித்துறையைத் தமிழகத்தில் மேம்படச் செய்தவர்கள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

இந்த நீதிமன்றத்தில் உலாவியவர்களில் மத்திய-மாநில அமைச்சர்கள், ஆளுநர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு முக்கிய பொறுப்புகளைப் பெற்றவர்களும் உண்டு.
இன்றைய சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 60 ஆக உள்ளது. அதில் 40 நிரந்தர நீதிபதிகள், 17 பேர் கூடுதல் நீதிபதிகளாவர். நீண்டகால போராட்டத்துக்குப் பின், நீதிபதி ஜஸ்வந்த் சிங்கின் பரிந்துரைக்குப் பின், 1985-லிருந்து வலியுறுத்தப்பட்டு தற்போது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை 12 நீதிபதிகளோடு செயல்படுகிறது.
முதலில் தொடங்கிய மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா ஆகிய மூன்று உயர் நீதிமன்றங்களும், அதே பேரில்தான் இன்றைக்கும் அழைக்கப்படுகின்றன. அந்த நகரங்களின் பெயர்கள் சென்னை, மும்பை, கொல்கத்தா என்று மாற்றப்பட்டாலும் இன்னும் நீதிமன்றங்களின் பெயர்கள் மாற்றப்படவில்லை.

இவையாவும் சார்ட்டட் ஐகோர்ட் என்று வழங்கப்படுகின்றன. இந்த மூன்று உயர் நீதிமன்றங்களுக்கும் மற்ற நீதிமன்றங்களைவிட சில அதிகாரங்கள் கூடுதலாக உள்ளன.

அதாவது, எல்.பி.ஏ. என்று சொல்லக்கூடிய Letters Patent Appeal என்ற இரண்டாவது மேல் முறையீடு என்ற சிறப்பதிகாரம் உண்டு. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்குகளை நடத்த வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் அதுவும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் நிலுவையிலேயே உள்ளது.
இப்படியான வரலாற்றுப் பதிவுகள் சென்னை உயர் நீதிமன்றத்துக்குப் பல உள்ளன. சாமானியர்களுக்கு நீதியை வழங்குகின்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆளுமைக்கு நாம் தலை வணங்குவோம். அதனுடைய நீதி பரிபாலனம் எந்நாளும் ஜனநாயகத்துக்கு வலு கூட்டட்டும்.
நன்றி : தினமணி